25-12-2023, 12:08 AM
திமிருக்கு மறுபெயர் நீதானே...!
3
நான் அந்த பயத்துடன் அருகில் இருந்த தினேஷிடம் பேசினேன்.
"மச்சி! மதுமிதா என்னைய முறைச்சு பாத்துட்டு இருக்குறா! எனக்கு ரொம்ப பயமா இருக்குடா!"
"டேய் விக்ரம்! இப்ப அவள பாக்காம பாடத்தை கவனி!" என்று அறிவுறுத்தினான்.
எனக்கும் அதுதான் சரி என்று பட்டது. அதனால் அவளை மறந்து வகுப்பை கவனிக்க தொடங்கினேன்.
அதன்பிறகு வந்து ஆசிரியர்களும் என்னையே புகழ்ந்து பேசினார்கள்.
அவள் எதுவுமே பேசாமல் கோபத்துடன் இருந்தாள்.
அதனால் அவளை நான் திரும்பிக்கூட பார்க்காமல் பாடத்தை மட்டுமே கவனித்துக்கொண்டு இருந்தேன்.
தொடர்ந்து நான்கு வகுப்புகள் நடந்து முடிந்ததும் உணவு இடைவேளை வந்தது.
எங்கு சென்று சாப்பிடலாம் என தினேஷிடம் கேட்டேன்.
"கிரவுண்ட் பக்கத்துல நிறையா பெஞ்ச் இருக்கும் அங்கே போலாம்!"
அருகில் இருந்த கார்த்தியும் வெங்கட்டும் எங்களுடன் வருவதாக கூறினார்கள். உடனே சாப்பிடுவதற்கு எல்லோரும் கிளம்பினோம்.
அப்போது! பெண்கள் பகுதியில் இருக்கும் யாருக்கோ சைகை மூலம் கிரவுண்ட் செல்கிறோம் என்று தினேஷ் கூறிவிட்டு எங்களுடன் வந்தான்.
"டேய் தினேஷ்! யார்கிட்ட பேசுற?"
"நம்ம கிளாஸ்ல இருக்குற ரெண்டு பொண்ணுங்க என்னோட பிரண்ட்ஸ்டா! எப்பவும் நாங்கல்லாம் ஒன்னாதான் உக்காந்து சாப்பிடுவோம்! அதான் அவங்களையும் கிரவுண்டுக்கு வர சொன்னேன்" என்று கூறிவிட்டு நடந்தான்.
எனக்கு இப்போது அந்த பெண்களுடன் அமர்ந்து எப்படி சாப்பிட போகிறேன் என்கிற பயம் தொற்றிக்கொண்டது.
என்னுடைய கூச்சத்தை பற்றி இனியும் மறைத்து எந்த பயனும் இல்லை என்று புரிந்தது.
தினேஷிடம் இதை கூறலாம் என்று முடிவு செய்தேன்.
கார்த்தியும் வெங்கியும் முன்னே சென்றுக்கொண்டிருந்தனர்.
அவர்களுக்கு சற்று பின்னால் நடந்து சென்ற தினேஷை வழி மறித்து பேசத்தொடங்கினேன்.
"மச்சி! உன்கிட்ட ஒன்னு சொல்லணும்டா!"
"என்னடா சொல்லணும்?”
"எனக்கு பொண்ணுங்ககிட்ட பேசி பழக்கம் இல்லைடா! உன்னோட பிரண்ட்ஸ் அதான் அந்த ரெண்டு பொண்ணுங்களும் வந்தா நான் எப்படி உக்காந்து சாப்பிடுறது?"
நான் முகத்தை பாவமாக வைத்துகொண்டு கேட்டேன்.
"ஏன்டா! மதுமிதாவ பாக்குறப்போ மட்டும் பல்லை இளிச்சுக்கிட்டு பாத்தே! ஆனா இப்ப வந்து இப்படி அப்பாவி மாதிரி நிக்கிறே!" என்று சிரித்தான்.
"டேய் மச்சி! அது வேற இது வேற!”
நான் கூச்சத்துடன் தரையை பார்த்துக்கொண்டு சொன்னேன்.