20-12-2023, 09:25 PM
திமிருக்கு மறுபெயர் நீதானே...!
2
ஓர் நகரத்தில் இருக்கும் பள்ளியில் இறுதித்தேர்வு முடிந்து மாணவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் தேர்வு அறையைவிட்டு கூட்டம் கூட்டமாக வெளியில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது அந்த கூட்டத்திற்குள் இருந்த ஒருவன் மிகவும் பதட்டத்துடன் அனைவரையும் இடித்துக்கொண்டு வேகமாக ஓடினான்.
எதற்காக இவன் இப்படி ஓடுகிறான் என்று புரியாமல் எல்லோரும் கோபத்துடன் திட்டினர். அவன் அதையெல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாமல் அவர்கள் எல்லோரையும் தாண்டி வேர்க்க விருவிருக்க பள்ளி மைதானம் இருக்கும் இடத்திற்கு ஓடி வந்தான்.
இப்போது அவனுடைய வேகத்தை சற்று குறைத்துக்கொண்டு மெதுவாக நடந்து வண்டிகள் நிறுத்தும் இடத்திற்கு சென்றான்.
அங்கே நிறுத்தப்பட்டிருக்கும் ஒரு மிதிவண்டியை பிடித்துக்கொண்டு பயங்கரமாக மூச்சு வாங்கினான்.
சில நொடிகளில் அவனுடைய மூச்சு சீரானது. பிறகு முகத்தில் வழிந்த வேர்வை துளிகளை கைக்குட்டையால் துடைத்துவிட்டு பயத்துடன் அங்கேயே நின்றான்.
ஏன் இப்படி மூச்சிரைக்க ஓடிவந்தேன் என்று யோசித்துக்கொண்டு இருப்பீர்கள்.
அதை சொல்வதற்கு முன் என்னை பற்றியும் கடந்த இரண்டு வருடங்களாக என்னுடைய வாழ்வில் நடந்த சம்பவங்கள் பற்றியும் கூறுகிறேன் கேளுங்கள்.
என் பெயர் விக்ரம்.
எங்கள் வீட்டில் தாய், தந்தை மற்றும் நான் என மூவர் மட்டுமே.
நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் சொந்த ஊரான சேலத்தில்.
என்னுடைய தந்தை அங்கே இருக்கும் ஒரு அரசு அலுவலகத்தில் வேலை பார்த்தார். அம்மா என்னையும் வீட்டையும் கவனித்துக்கொண்டார்கள்.
வீட்டிற்கு ஒரே பிள்ளை என்ற காரணத்தால் என்னை மிகவும் பாசத்துடன் வளர்த்தனர். அதனால் நான் கேட்பது அனைத்தும் எந்த விதமான எதிர்ப்பும் இல்லாமல் உடனுக்குடன் கிடைத்தது.
மேலும் எந்த மனச்சிதறலும் இல்லாமல் படிப்பில் மட்டுமே முழு கவனமும் செலுத்தினேன். இப்படியே என்னுடைய வாழ்கை நல்லபடியாக சென்று கொண்டிருந்தது.
சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்பு, நான் பத்தாம் வகுப்பு தேர்வில் பள்ளியிலேயே முதல் மாணவனாக தேர்ச்சிப்பெற்றேன்.
வீட்டில் அம்மா அப்பா இருவருக்கும் மகிழ்ச்சி. இருந்தாலும் மாவட்ட அளவிலாவது முதல் மாணவனாக வந்திருக்கலாம் என்று கொஞ்சம் கவலை அடைந்தனர்.
மேல்நிலை இரண்டாம் ஆண்டில் நடக்கும் இறுதி தேர்வில் இதை விட நல்ல மதிப்பெண் எடுக்கிறேன் என உறுதியளித்தேன். அது அவர்களுக்கு கொஞ்சம் மகிழ்ச்சியை தந்தது.
பிறகு அதே ஊரில் பதினொன்றாம் வகுப்பில் சேர்ந்து நன்றாக படித்தேன்.
அந்த வருடமும் சிறப்பாக படித்து நல்ல மதிப்பெண்கள் எடுத்த வேளையில் எனது தந்தை பரப்பரப்பாக வீட்டிற்குள் நுழைந்தார். என்னவென்று அம்மாவும் நானும் விசாரித்தோம்.