இரவு,
‘ஜோதிலட்சுமி’ மளிகைக் கடை என்று முகப்பில் மாட்டியிருந்த பச்சைக் கலர் போர்டுக்குக் கீழே, ஷட்டரில் கட்டிவிடப் பட்ட புது எழுமிச்சம் பழம் தொங்கிக் கொண்டிருந்த கடைக்குள் ஜோதிலட்சுமி கல்லாவில் உட்கார்ந்திருந்தாள்.
ஒரு பெண்மணி அந்தம்மாவிடம் ஏதோ சொல்லி வாங்கிக் கொண்டிருந்தாள்.
வினோத்தைப் பார்த்ததும் ஒரு புன்னகையைக் காட்டிவிட்டு வியாபாரத்தைக் கவனித்தாள் அந்த அம்மாள்.
வினோத் ஒதுங்கி நின்றான். தெருவை வேடிக்கை பார்த்தான்.
அந்தப் பெண்மணி பொருள் வாங்கிக் கொண்டு நகர்ந்ததும் ஜோதிலட்சுமி முன்பாகப் போய் நின்றான் வினோத்.
“இப்பதான் வந்தியா?” அணிந்திருந்த கண்ணாடியை கொஞ்சமாக தூக்கி விட்டுக் கொண்டு கேட்டாள்.
“ஆமாங்க” மெலிதாகப் புன்னகைத்தான், “சிகரெட் குடுங்க”
அவன் முகத்தைப் பார்த்துவிட்டு சிகரெட் பாக்கெட்டை எடுத்தாள்.
“எத்தனை வேணும்?”
“ரெண்டு குடுங்க”
இரண்டு சிகரெட்டுக்களை உறுவிக் கொடுத்தாள்.
“காலைல எப்படி போயி அந்தப் புள்ளைய அப்படி அடிச்சு தூக்கின?” எனக் கேட்டவளை சங்கடத்துடன் பார்த்தான்.
லேசாகப் புன்னகைத்தபடி சொன்னான்.
“வேலைக்குத்தான் போனங்க. அதுவும் மெதுவாத்தான் போனேன். ஆனா அந்தப் புள்ளை.. திடுதிப்புனு வீட்டுக்குள்ளருந்து ஓடி வந்து நேரா வண்டில மோதிருச்சு. யாரு சொன்னாங்க உங்களுக்கு?”
“இங்கதான நடந்துச்சு.. நம்ம வீதில? தெரியாமயா போயிரும். ஒண்ணும் அடி கிடி படலதானே?”
“அந்த பொண்ணுக்கு கைல லேசா செராய்ச்சுருச்சு. அது ஒண்ணுதான். வேற எங்கயும் அடி படல. நானும் கொஞ்சம் பயந்துட்டேன். என்னடா இது வம்புன்னு.. நல்லவேளையா அந்தப் பொண்ணே அது மேலதான் தப்புன்னு ஒத்துகிச்சு. இல்லேன்னா தர்ம அடி கெடைச்சிருக்கும்”
“அப்படி எல்லாம் கை வெச்சுர முடியுமா யாராவது? மேல கை வெச்சா நான் சும்மா விட்றுவனா? எங்கயா இருந்தாலும் யாரையும் மேல கை வெக்க மட்டும் விட்றாத. அடிபட்டாக் கூட ஆஸ்பத்ரி கூட்டிட்டு போயி ஆகற செலவை பாத்துக்கலாம். அடி மட்டும் வாங்கக் கூடாது” என்றாள்.
நல்லவேளை நான் வாங்கிய ஒன்றிரண்டு அடிகளை அவளுக்கு யாரும் சொல்லவில்லை. இல்லாவிட்டால் அதற்கும் சேர்த்து இவளிடம் திட்டு வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டான்.
கடைக்கு வந்த இன்னொரு அறைப் பையனும் ஒரு சிகரெட்டை வாங்கிப் பற்றவைத்துக் கொண்டு வினோத்திடம் கேட்டான்.
“பாஸ் என்ன.. காலைல ஆக்ஸிடெண்ட் ஆகிருச்சுனு கேள்விப் பட்டேன்”
“ஆமா பாஸ்.. அதை ஏன் கேக்கறீங்க.. இன்னிக்கு என் நேரமே செரியில்ல. அதுவா ஓடி வந்து வண்டில மோதிருச்சு”
ஜோதிலட்சுமி, “அவ கடைக்கு வருவா. வரட்டும்.. புடிச்சு நல்லா ஏத்தியுடறேன்” என்றாள்.
“அது அடிபட்டதும் ஒரு நிமிசம் எனக்கு கை காலமெல்லாம் வெடவெடனு நடுங்கிப் போச்சுங்க. ஒண்ணு கெடக்க ஒண்ணு ஆகியிருந்தா என்னாகறது?”
“இப்பெல்லாம் வண்டில ஏகப்பட்ட விபத்து நடக்குது. எதுக்கும் கொஞ்சம் வண்டியை பாத்து ஓட்டு” என்றாள்.
“ஆமாங்க.. ஆனா பாருங்க.. நாம என்ன கவனமா இருந்தாலும் நடக்கற விபத்து எப்படியும் நடந்துருது”
“சரி விடு.. அதைவே நெனைச்சுட்டிருக்காத. நாளைக்கு கோயமுத்தூர் போவதானே?” என்று கேட்டாள்.
“ஆமாங்க. ஆபீஸ் போய்ட்டுதான் வெளிய கிளம்புவேன். ஏங்கமா?”
“ஒரு வேலை செய்யணும் நீ”
“சொல்லுங்க? என்ன வேலை?”
“நம்ம கார்த்திகாவைப் போய் பாக்கணும். அவளுக்கு அடுத்த வாரத்துல பொறந்த நாள் வருது. அதுக்கு ஒரு பொடவை எடுத்து வெச்சுருக்கேன். நான் போயும் குடுக்க முடியாது. அவளும் இப்ப வர முடியாதுங்கறா.. அவ புருசனுக்கும் இந்தப் பக்கம் வர்ற வேலை இல்லையாம். இந்த தறுதலைகிட்ட அக்கா வீட்டுக்கு போய் குடுத்துட்டு வந்தர்றானு சொன்னா நான் போக மாட்டேன். எனக்கு காலேஜ் இருக்கு பரீட்சை இருக்குங்கறான். சரி நீ அடிக்கடி அந்தப் பக்கம் போற ஆளுதானே? அதான் உன்கிட்டயே குடுத்துரலாம்னு முடிவு பண்ணிட்டேன். நான் அவகிட்ட போன்ல சொல்லிக்கறேன்”
“சரிங்க. குடுத்துர்றேன். என்ன.. ஆபீஸ் போயி மீட்டிங்கை அட்டன் பண்ணிட்டுதான் அவங்க வீட்டுக்கு போக முடியும்”
“ஒண்ணும் பிரச்சினை இல்ல. சாயந்திரமா போய் குடுத்தேன்னாக்கூட போதும். சொல்லிர்றேன் அவகிட்ட”
“செரிங்க”
“காலைல வேலைக்கு போறதுக்கு முன்னாடி வா.. கொஞ்சம் பணமும் தரேன் குடுத்துரு. பொறந்த நாளன்னைக்கு பசங்களுக்கு ஸ்கூல் இருக்கும். அவளால இங்க வர முடியாது”
“செரிங்க” என்றான் வினோத்.