நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 16 - ராசு
[Image: nivv.jpg]
Quote:கதைக்குள் செல்வதற்கு முன் ஒரு நிமிடம்….
யுகாவின் முடிவைப் பற்றி அத்தியாயத்தின் இறுதியில் விளக்கம் கொடுத்திருக்கிறேன். அது வரை கோபப்படாமல் தயவுசெய்து பொறுமையாக படிக்கவும்.

கிருஷ்ணவேணி திடுக்கிட்டு படுக்கையில் எழுந்தமர்ந்தாள்.

உடல் முழுவதும் வியர்த்து வடிந்திருந்தது.
‘ச்சே! என்ன ஒரு கெட்ட கனவு.’
‘ஏன் இப்படி ஒரு கனவு எனக்கு வரவேண்டும்?’
கண்களைச் சுழற்றினாள்.
அவளது அறையில் அவள் படுத்திருக்கவில்லை.
‘வேறு எங்கோ படுத்திருக்கிறேன். அதனால்தான் தேவையில்லாத கனவெல்லாம் வந்திருக்கிறது.’
‘கனவென்றாலும் நிஜம் போல். இது என்ன?’
‘அதுவும் யுகாவுக்கு இப்படி ஆவதுபோல்.’
அவள் பார்வையை சுற்றுமுற்றும் சுழற்றினாள்.
அங்கே அவளையே பரிதாபமாய் பார்த்தபடி சாருமதி அமர்ந்திருந்தாள். அவள் கன்னங்களில் கண்ணீர் கோடுகள்.
“மதிக்கா.” தீனமான குரலில் அழைத்தாள்
அவளிடம் வாய் திறந்து எதையும் கேட்கும் தைரியம் அவளுக்கில்லை.

சாருமதியின் கண்ணீரே எதையோ அவளுக்கு உணர்த்துவது போல் தோன்றியது.

சாருமதி எதையுமே சொல்ல வேண்டியிருக்கவில்லை. வெளியில் இருந்து வந்த ஒப்பாரியே அவளுக்கு உண்மையை உரைத்தது.

கண்களில் கேள்வியுடன் அவள் மீண்டும் சாருமதியைப் பார்த்தாள்.

அவளுக்கு இப்போது பொங்கிய அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அறையை விட்டு வெளியில் வந்தாள் கிருஷ்ணவேணி. அவளைத் தடுக்கும் எண்ணம் சாருமதிக்கு இல்லை. இன்னும் சிறிது நேரத்தில் யுகாவின் இறுதிப்பயணம் ஆரம்பமாகப்போகிறது.

அதற்குள் அவனைப் பார்க்க வேண்டியவர்கள் பார்த்துவிட வேண்டும். அதுவும் கிருஷ்ணவேணி யுகேந்திரன் மீது எத்தனைப் பிரியம் வைத்திருக்கிறாள் என்று அவளுக்குத் தெரியும்.

கிருஷ்ணவேணி யுகேந்திரன் இருந்த இடத்திற்கு வந்தாள்.

அவன் ஏதோ உறங்குவது போன்றே படுக்கவைக்கப்பட்டிருந்தான்.

வனிதாமணி கதறி அழவில்லை. ஏதோ அரற்றலுடன்தான் படுத்துக்கொண்டிருந்தார்.

அவர் கண்கள் எங்கோ வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தன.

‘இப்படியே இருந்தா எப்படிப்பா? ஆக வேண்டியதைப் பார்க்கனும்ல.’

சாருலதாவின் அப்பா மகேந்திரன் அருகில் வந்து கேட்டார்.

அவன் ஏதுமறியாத குழந்தை போன்று மலங்க விழித்தவாறு அவரைப் பார்த்தான்.

“தூக்கு போட்டுக்கிட்டது போலீசுக்கு தெரிய வந்தா உடம்பைக் கூறு போடாம விடமாட்டாங்க. அவனை நல்லபடியா வழியனுப்பி வைக்க வேண்டாமா?”

அவர் பேசியதும் அதிர்ச்சியுடன் நிமிர்ந்துபார்த்தாள் கிருஷ்ணவேணி.

‘தூக்கு போட்டு யுகா செத்தானா?’

‘தற்கொலையா செய்துகொண்டான்?’

‘அது எப்படி முடியும்?’

‘தற்கொலையே தப்பு என்கிறவன் எப்படி அதை செய்திருக்க முடியும்?’

தனக்குள் முனகியவள் வாய்விட்டும் சொன்னாள்.

“யுகா கண்டிப்பா தற்கொலை செய்திருக்கமாட்டான்.”

“அவனைப் பத்தி தெரிஞ்ச யாருமே அதை ஒத்துக்கமாட்டாங்கதாம்மா. ஆனால் தற்கொலை செய்துக்கிறதுக்காக ரொம்ப நேரம் எடுத்துக்க வேண்டாம்மா. ஒரு வினாடி போதும். அந்த ஒரு வினாடி சாகனும்னு முடிவெடுத்துட்டா வேற எதுவுமே ஞாபகத்துக்க வராது.” சாருமதியின் தந்தை அவளை சமாதானப்படுத்த முயன்றார்.

“இல்லை அங்கிள். என்னால் நம்ப முடியலை.”

“எனக்கும் புரியுதும்மா.”

“நாம போலீஸ்ல சொல்லலாம் அங்கிள்.”

“நீ சின்னப் பொண்ணும்மா. அதான் புரியாம பேசறே? முதல்ல யுகேந்திரன் சாகறதில் யாருக்கு லாபம்னு பார்ப்பாங்க. அப்புறம் அவங்களை கைது பண்ணுவாங்க.”

“அப்படியே செய்யட்டும் அங்கிள். அப்பதான் யுகாவோட சாவுக்கு காரணமானவங்க தண்டிக்கப்படுவாங்க.”

“உனக்கு இன்னும் புரியலையாம்மா. அப்புறம் போலீஸ் மகேந்திரனைத்தான் கைது செய்வாங்க.”

அவள் புரியாமல் அவரைப்பார்த்தாள்.



“ஏன் அங்கிள்?”
“இந்த சொத்துக்கெல்லாம் மகேந்திரனும், யுகேந்திரனும்தான் வாரிசுகள். இப்ப யுகேந்திரன் இல்லைங்கிற நிலைமையில் எல்லாம் மகேந்திரனுக்குத்தான் போகும். இந்த சொத்துக்காக மகேந்திரன்தான் தன் தம்பியைக் கொன்னு தற்கொலைன்னு சொல்லிட்டான்னு போலீஸ் சொல்லும். அவனைக் கைது செய்யும். அவன் தப்பே செய்யலைன்னு நிரூபணமாகி வருவதற்குள் எல்லாம் கடந்து போயிருக்கும். ஏற்கனவே ஒரு பையனை இழந்து தவிக்கிற பெத்தவங்க இன்னொருவனையும் இழக்கனுமா?”
அவள் அதிர்ந்து போனாள்.

‘மகேந்திரன் தன் தம்பியைக் கொன்னான்னு சொல்வாங்களா?’
அவன் தன் தம்பி மேல் எத்தனை அன்பு வைத்திருக்கிறான் என்று எனக்குத் தெரியும். ஆனால் போலீசில் அதை நம்பவில்லை என்றால்.
அவனைக் கைது செய்துவிட்டால்? அதை யுகாவின் ஆத்மா கூட விரும்பாது.

அதற்காக யுகா தற்கொலை செய்துகொண்டான் என்று எப்படி ஏற்றுக்கொள்வது?

அவள் தனக்குள் பேசி முடிவெடுப்பதற்குள் அங்கே யுகேந்திரனின் இறுதிப்பயணம் ஆரம்பமானது.

“அத்தை. நீங்க சொல்லுங்க அத்தை. வேண்டாம்னு சொல்லுங்க அத்தை. யுகா தற்கொலை செய்துக்கிறவனா? அவன் அப்படிப்பட்ட கோழை இல்லை அத்தை.”

அவளது குரல் வனிதாமணியின் செவியை எட்டியதா இல்லையா என்றே தெரியவில்லை.

அப்படியே சிலை போன்று அமர்ந்திருந்தார்.

வாய் மட்டும் முணுமுணுத்துக்கொண்டே இருந்தது.

‘நான் உன்னை தனியா விட்டுட்டுப் போயிருக்கக் கூடாது.’

இதைத்தான் அவர் நீண்ட நேரமாக சொல்லிக்கொண்டேயிருக்கிறார்.

யிற்று. எல்லாம் முடிந்து போயிற்று.

வந்திருந்த கூட்டம் எல்லாம் கலைந்து போய் வீட்டில் உள்ளவர்களும் முக்கியமான உறவினர்களும் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
மதிய வேளையில் தன்னிடம் பேசிவிட்டு வந்தவன் இப்போது இந்த உலகிலேயே இல்லை என்பதை அவளால் நம்பக்கூட முடியவில்லை.
ஒருவேளை நீண்ட நேரமாக இந்தக் கனவு தொடர்கிறதோ?

நான் கண்விழிக்கும்போது யுகா வந்து சிரித்துக்கொண்டே நிற்பானோ?

அப்படி மட்டும் நடந்துவிட்டால் எப்படியிருக்கும்?

நான் இனி யுகாவை விட்டு ஒருகணமும் பிரிய மாட்டேன். அவனைக் கண்போல் பாதுகாப்பேன்.

யுகா. இது கனவாக இருக்க வேண்டும்.

நீ வந்துடுடா. என்னால் நீ இல்லாத நிலையைக் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

அப்படியே புலம்பியபடியே தரையில் சரிந்திருந்தவளை ஒரு மென்மையான கரங்கள் எழுப்பியது.

நிமிர்ந்து பார்த்தாள்.

சாருமதி நின்றிருந்தாள்.

“அக்கா.”

மீண்டும் கதறியழ ஆரம்பித்தாள்.

“கிருஷ்ணா. நீ இப்படியே அழுதுக்கிட்டிருந்தா அத்தையை யார் பார்த்துப்பா. அவங்க வேற என்னவோ மாதிரி நடந்துக்கிறாங்க. நீதான் கூட இருந்து பார்த்துக்கனும்.”

“அத்தை. அத்தைக்கு என்னாச்சு?”

“நம்மாலேயே யுகாவோட மறைவைத் தாங்கிக்க முடியலை. அவங்களால் மட்டும் எப்படி முடியும்?”

சாருமதி கேட்க அந்த உண்மை கிருஷ்ணவேணியைத் தாக்கியது.

வனிதாமணிக்கும் யுகேந்திரனுக்கும் தாய் மகன் என்ற உறவைத் தாண்டியும் ஒருவித நட்புணர்வு இருந்தது. அப்படியிருக்கையில் அவரால் தனது மகனின் இழப்பை எப்படி தாங்கிக்கொள்ள முடியும்?

அவனது வீட்டினர் மட்டுமல்ல.

யாரெல்லாம் அவன் கூட பழகினார்களோ? அவர்கள் யாருக்குமே அவனது இழப்பு வருத்தத்தைத்தான் தரும். அந்த அளவிற்கு மிகவும் அன்பானவன் அவன்.

அவள் எழுந்து வனிதாமணியைக் காண சென்றாள்.

அவர் எங்கோ வெறித்துப்பார்த்தபடி அமர்ந்திருந்தார். வாய் மட்டும்

‘நான் உன்னை தனியா விட்டுட்டுப் போயிருக்கக் கூடாது.’

என்று முணுமுணுத்துக்கொண்டேயிருந்தது.

யுகேந்திரன் தலையை வலிக்கிறது என்று சொல்லி அவரை டீ போட அனுப்பி வைத்துவிட்டு இந்த முடிவிற்கு வருவான் என்று அவர் நினைத்துப் பார்க்கவில்லை.

அவனைப் பிணமாகப் பார்த்த போது அவருக்கு கிடைத்த அதிர்ச்சி எத்தகையது என்று வார்த்தையால் விவரிக்க முடியாது.

“அத்தை.”

கிருஷ்ணவேணி அழுகுரலில் அழைக்க அவர் நிமிரவேயில்லை. தனியுலகத்தில் இருந்தார்.



சாருமதி அவள் தோளைத் தொட்டாள்.
“கிருஷ்ணா. யுகா உனக்கு மிகப்பெரிய கடமையைக் கொடுத்துட்டுப் போயிருக்கான். நீதான் இந்த வீட்டை பழைய படி மாத்தனும்.”
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 14-05-2019, 08:16 PM



Users browsing this thread: 28 Guest(s)