15-12-2018, 08:41 PM
![[Image: AP18345005092892_20339.jpg]](https://image.vikatan.com/cinema/2018/12/15/images/AP18345005092892_20339.jpg)
கடலுக்குள் இருக்கும் அண்டர்வாட்டர் உலகின் முக்கிய நாடான அட்லான்டிஸின் ராணி அட்லானா. நிலத்தில் வாழும் சாதாரண லைட்ஹவுஸ் கீப்பர் ஒருவருடன் காதல் வயப்பட்ட அவளுக்கு ஆர்தர் கரி எனும் மகன் பிறக்கிறான். நிலப்பரப்பின் மனிதர்களும், கடலின் உள்ளே வாழும் மனிதர்களும் அமைதியுடன் ஒற்றுமையாக வாழலாம் என்பதற்குச் சாட்சியமாக தங்களின் மகன் இருப்பான் என்று பெற்றோர்கள் நினைக்கையில் அட்லானா தன் கணவனையும் மகனையும் பிரிய நேர்கிறது. இதனிடையே வளர்ந்து இளைஞனாக, அக்வாமேனாக சாகசங்கள் செய்யும் ஆர்தரை தேடி வருகிறாள் மெரா என்ற மற்றொரு கடல் சாம்ராஜ்ஜியத்தின் இளவரசி. அட்லான்டிஸின் அரியணையை கொடுங்கோல் அரசன் ஆர்ம் இடமிருந்து மீட்டு அரசனாக ஆர்தர் அமரவேண்டும் என்று கூறுகிறாள். ஆர்ம் வேறு யாருமல்ல, அட்லானாவின் இரண்டாவது கணவனுக்குப் பிறந்த மகன். ஆர்தர் என்ன செய்யப் போகிறான்? அரியணையை மீட்கிறானா? அரசனாக அமர்கிறானா?
`அக்வாமேன்' எனும் சூப்பர்ஹீரோவின் கதை `தோர்', `வொண்டர்வுமன்' போன்ற படங்களைப் போல இரண்டு உலகங்களில் நடக்கும் கதை. நிலப்பரப்பில் சிறிது நேரம், ஆழ்கடல் ஆழத்தில் பல நேரம் எனக் கதை நீள்கிறது. இதனாலேயே படம் 3D-க்கென எழுதப்பட்ட படமாகிறது. ஐமேக்ஸ் திரையில் இன்னும் அழகாக இருக்கிறது. ஆழ்கடலில் நாம் பார்த்திராத உயிரினங்கள், பிரமிப்பூட்டும் வாழிடங்கள் என வேறு ஓர் உலகத்துக்கு நம்மைக் கூட்டிச் செல்கிறது படம்.