நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#73
தான் அந்த வீட்டிற்கு வேண்டாத விருந்தாளி என்று யுகேந்திரன் நடந்துகொண்ட விதத்திலேயே தெரிந்தது. நீ ஏன் வந்தாய்? என்று அவனது பார்வை கேள்வி கேட்டது.

அவன் வாய் திறந்து கேட்க மாட்டான். வனிதாமணியும் கேட்க மாட்டார். அந்த அளவிற்கு நாகரிகம் அற்றவர்கள் அல்ல.
அதனால்தான் அவள் நினைத்ததை அவளால் செயல்படுத்த முடிகிறது.
அவர்கள் வீட்டில் தானும் ஒருத்தி என்று மற்றவர்கள் பார்வையில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள அவள் இது மாதிரி எல்லாம் செய்ய வேண்டியிருக்கிறது.

வந்திருந்தவர்களை கவனிக்க ஆரம்பித்தார் வனிதாமணி.

மறுமுறை அவர் பலகாரம் செய்யும்போது யுகேந்திரனும் கிருஷ்ணவேணியும் அவருக்கு உதவி செய்யக் கிளம்ப சமையல் அறையே ஒரே அமளி துமளியானது.

பொன்னிக்கும் சாருலதாவை பிடிக்கவில்லை. அவள் வரும்போதெல்லாம் பொன்னியை வேலைக்காரி என்றுதான் பார்ப்பாள்.

ஆனால் அந்த வீட்டினர் அப்படி பார்க்கமாட்டார்கள். வனிதாமணி தனது சகோதரி போன்றுதான் அவளை நடத்துவார்.

பிள்ளைகள் இருவரும் பொன்னியம்மா என்றுதான் அழைப்பர். அதே மாதிரி அழைத்த கிருஷ்ணவேணியைப் பிடித்துவிட்டது.

ஆனால் சாருலதா இப்போதும் அலட்டலாய் நடந்துகொண்டது அவளுக்குப் பிடிக்கவில்லை.

தாங்கள் வாங்கி வந்த புத்தாடைகளை வனிதாணியின் வசம் தகப்பனும் மகனும் ஒப்படைத்துவிட்டனர்.

வனிதாமணியிடம் ரவிச்சந்திரன் யார் யாருக்கு என்னென்ன மாதிரி ஆடை வாங்க வேண்டும் என்று கேட்டுக்கேட்டு மகேந்திரனிடம் சொல்ல அவன்தான் தேர்ந்தெடுத்தான்.

அனைவரையும் அழைத்து வாங்கி வந்திருந்த புத்தாடைகளை அவரவர்க்கு கொடுத்தார் வனிதாமணி.

சாருலதாவும் கூடவே சென்றிருந்தாள். அவள் தனக்கென்று சுடிதாரை எடுத்திருந்தாள். கிருஷ்ணவேணிக்கு பட்டுப்புடவை எடுத்து வரச்சொல்லியிருந்தார் வனிதாமணி. இது தெரியாமல் சுடிதார் எடுத்துவிட்டோமே என்று அதன்பிறகு சாருலதா வருந்தினாள். இருந்தாலும் மாற்றினாள் மகேந்திரன் ஏதாவது நினைத்துக்கொள்வானோ? என்று அத்துடன் விட்டுவிட்டாள்.
காலையில் படையல் போட்டுவிட்டு நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்துவிட்டு வந்தவர்களிடம் புத்தாடைகளில் மஞ்சள் வைத்துக் கொடுத்தார் வனிதாமணி.
அனைவரும் அணிந்து வர காலை உணவு உண்டனர்.

மகேந்திரன் தனக்கு பட்டு வேட்டி சட்டை எடுத்திருந்தான்.

யுகேந்திரன் தனக்கு இடுப்பில் வேட்டி நிற்காது என்று முன்பே சொல்லியிருந்ததால் அவனுக்கு பேண்ட் சட்டைதான்.

மகேந்திரனை முதன் முதலில் வேட்டி சட்டையில் பார்த்த கிருஷ்ணவேணி மனம் தடுமாறினாள்.

கூடவே சாருலதா வந்திருப்பதை பார்க்கும்போது அவனுக்கு அவள் மேல் பிடித்தம் இல்லாமலா போகும் இடத்திற்கெல்லாம் அழைத்துக்கொண்டு செல்கிறான் என்று மனதில் தோன்றியது.

அதனால் தேவை இல்லாமல் மனதில் எந்த எண்ணமும் வளர்த்துக்கொள்ள வேண்டாம் என்று தனக்குத்தானே கடிவாளம் போட்டுக்கொண்டாள்.

எப்படியாவது இந்த ஒரு வருட படிப்பை எந்தப் பிரச்சினையும் இல்லாமல் முடித்துவிட்டு அவர்கள் வீட்டை விட்டு கிளம்பிவிட வேண்டும் என்று உறுதிகொண்டாள்.

அதன் பிறகு அவளுக்கு உள்ள பிரச்சினைகள் வேறு எதைப் பற்றிய சிந்தனையையும் அவளை அண்டவிடாது.

பெருமூச்சு விட்டாள்.

“கிருஷ்மா. பார்த்து. நான் பறந்து போயிருவேன் போல.”

யுகேந்திரனின் கிண்டல் குரல் அவளுக்கு சிரிப்பை வரவழைத்தது.

அவன் முதுகில் செல்லமாய் தட்டினாள்.

இருவருமே சிரித்துக்கொண்டிருக்கையில் மகேந்திரனும் சாருலதாவும் அருகே வந்தனர்.

அப்போது அவர்களைப் பார்த்துக்கொண்டிருந்த மகேந்திரனின் முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் தெரியவில்லை.

குலதெய்வம் கோயிலுக்குப் போய்விட்டு வந்துவிடலாம் என்று வனிதாமணி சொன்னதால் அனைவரும் கிளம்பி வந்திருந்தனர். எப்போது ஊருக்கு வந்தாலும் குலதெய்வம் கோயிலுக்குச் செல்வதை வனிதாமணி வழக்கமாக்கிக் கொண்டிருந்தார்.

அவர்களைப் பார்த்து பூசாரி மகிழ்ச்சியுடன் வரவேற்றார்.

வனிதாமணி பூஜைக்குரிய சாமான்களை அவரிடம் கொடுத்தார். அவரும் வாங்கிக்கொண்டு உள்ளே சென்று பூஜை செய்ய ஆரம்பித்தார்.

தீபாராதனை காட்ட அனைவரும் கண்களில் ஒற்றிக்கொண்டனர்.

பிரகாரத்தைச் சுற்றி விட்டு வந்து சற்று அமர்ந்தனர்.

அதற்குள் வந்திருந்த மற்றவர்களுக்கும் பூஜை செய்து முடித்துவிட்டு வந்திருந்த பூசாரி அவர்களிடம் சாவதானமாய் பேச வந்தார்.

“இந்தப் பொண்ணுதான் நம்ம புள்ளையாண்டானுக்குப் பார்த்திருக்கிற பொண்ணா? நன்னா லட்சணமா இருக்கா.” என்று அவர் கிருஷ்ணவேணியைப் பார்த்து சொல்லிவிட மற்றவர்களுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

மற்றவர் மறுத்துச்சொல்லட்டும் என்று அடுத்தவரைப் பார்த்திருந்தனர். அடுத்தவர்கள் எதுவும் மறுத்துச்சொல்லாமல் தாங்கள் சொல்வது சரிவராது என்று மீண்டும் யாரும் பேசவில்லை.
சாருலதாவிற்குள் சுறுசுறுவென்று கோபம் ஏறியது.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 04-04-2019, 05:51 PM



Users browsing this thread: 38 Guest(s)