நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#71
ஏன் இந்த தேவையில்லாத கோபம்?

அவன் காரை கொண்டு போய் கல்லூரி மைதானத்தில் நிறுத்தும்போதே கிருஷ்ணவேணி ஒருவனிடம் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்துவிட்டான்.
அதுவும் அவன் அவள் கைகளைப் பற்றிக்கொண்டிருந்தான்.
அதைக் கண்டதுமே அவனுக்குள் சினம் மூண்டது.

அவனைக் கண்டதும் அவள் தன்னை பெயர் சொல்லிக் கொண்டு எதிலிருந்தோ தப்பித்து வருவது போல் தெரியவும் அவன்தான் அவளிடம் வம்பிழுத்திருக்கிறான் என்று புரிந்துகொண்டான்.

அத்துடன் அவள் அவனது கரத்தையும் பற்றிக்கொண்டாள்.

அவள் அவனை நோக்கி ஓடி வரவும் முரளி தயங்கிப் பின்வாங்கி முகம் கருக்க நின்றவன் அவர்கள் காரை நோக்கி நடக்க ஆரம்பித்த போது மகேந்திரன் மீண்டும் அவனைத் திரும்பிப் பார்த்த பார்வையில் அப்படியே அங்கிருந்து ஓடிவிட்டான்.

அதைக் கண்டிராத அவள் அவன் மீண்டும் வந்துவிடுவானோ? என்ற பயத்தில் மகேந்திரனின் கரத்தைப் பிடித்தவள் விடாமலே கார் வரைக்கும் வந்துவிட்டாள். அவன்தான் காரின் முன்பக்க கதவைத் திறந்து அவளை அமரச் செய்தான்.

எல்லாம் நன்றாகத்தான் போயிற்று.

அவள் மீண்டும் அவனை சார் என்று அழைத்து தன்னைவிட்டு அந்நியப்படுத்தியது கண்டு அவனுக்கு அவள் மீது சினம் உண்டானது. அந்தக் கோபத்தை கார் ஓட்டுவதில் காண்பித்தான்.

இப்போது நினைக்கும்போது தனக்கு என்னவாயிற்று என்று தன்னையே நொந்துகொண்டான்.

ஒரு சின்னப் பெண் தன்னை இப்படி ஆட்டுவிக்கிறாளே? என்று மனம் ஆயாசப்பட்டது.

அவளை வீட்டிற்கு வருவதற்கு அனுமதி அளித்ததோ தவறோ என்று எண்ண ஆரம்பித்தான்.

ஒருவன் அவளது கையைப் பற்றியதே தன்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவனை அடித்து துவம்சம் செய்யும் வேகம் வந்தது. அவனும் ஓடிவிட்டான். அத்துடன் தன் கையைப் பற்றிய அவளை விலக்கவும் தோன்றாமல்தான் அவன் காரை எடுத்துக்கொண்டு கிளம்பியதே.
இப்போது தம்பியும் அவளிடம் நெருங்கினால் அப்படிதான் கோபம் உண்டாகுமோ என்று தன்னையே சந்தேகித்தான்.
இல்லை. என் தம்பிக்குப் பிரியமானவளிடம் ஒருவன் தவறாக நடந்தான் என்ற கோபம்தான். ‘ என்று தன் மனதையே ஏமாற்றிக்கொண்டான்.

நாட்கள் விரைந்தன.

தீபாவளி நெருங்கியது.

அவர்களுக்கும் சேர்ந்தாற்போன்று விடுமுறையும் வர மிகவும் சந்தோசத்துடன் காணப்பட்டனர்.

எப்போதும் தீபாவளி பொங்கல் என்றால் தனது குடும்பத்துடன் வனிதாமணி தங்கள் கிராமத்திற்குச் சென்றுவிடுவார்.

அதில் மட்டும் யாரும் தலையிடுவதை அவர் விரும்ப மாட்டார்.

அவருக்கு கிராமம்தான் பிடித்தம்.

கணவரின் தொழில் நிமித்தமே அவர் பட்டணத்துவாசியானார்.

அவர் தனக்கென்று எதையும் கேட்பதில்லை. அதனால் இந்த விசயத்தில் ரவிச்சந்திரன் எந்த மறுப்பும் சொன்னதில்லை.

அதுவே அவர்கள் வாழ்க்கையில் வாடிக்கையாகிப்போனதால் பிள்ளைகளுக்கும் பழகிப்போய்விட்டது.

வேலையிருப்பதால் மகேந்திரனும் ரவிச்சந்திரனும் தீபாவளிக்கு முதல்நாள் வருவதாகச் சொல்ல மற்றவர்கள் கிளம்பினர்.

கிருஷ்ணவேணிக்கு யுகேந்திரனின் சொந்தக்கிராமத்தை மிகவும் பிடித்துவிட்டது.

அதுவும் வீட்டிற்குப் பின்னேயே வயல். அதில் பயிரிட்டிருந்தனர். அந்தப் பசுமை அப்படியே மனதில் பதிந்துவிட்டது.

“யுகா. எனக்கு உங்க கிராமம் ரொம்பவே பிடிச்சிருக்கு.”

“நீயும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவதானே?”

“ஆமா. ஆனால் எனக்கு அங்கே பிடிக்கிறதுக்கு என்ன இருக்கு? தனிமைதான்.”

விரக்தியுடன் சொன்னாள்.

“அம்மா. தாயே. தெரியாமல் கேட்டுட்டேன். உன்னை அழுகாச்சி மூஞ்சா என்னால் பார்க்க முடியாது. தயவு செய்து கருணை காட்டு.”

“சரி. போயிட்டு போ. கருணை காட்டறேன்.”

அவள் பெரிய மனதுடன் அத்துடன் விட்டுவிட்டாள்.

அங்கே இருந்த பொன்னி என்கிற பெண்மணியை அவளுக்கு மிகவும் பிடித்துவிட்டது.

அவள்தான் மற்ற நேரங்களில் அந்த வீட்டை பராமரிப்பது.



அவளது கணவன் இறந்துவிட்டான். பிள்ளைகளும் இல்லை. போக்கிடம் இல்லாமல் சிரமப்பட்ட அவளிடம் தங்குவதற்கு இடம் கொடுத்து விவசாயத்தையும் பார்த்துக்கொள்ளும் பொறுப்பையும் கொடுத்துவிட்டனர்.
அதனால் அவள் நிம்மதியாக காலத்தைக் கழிக்கிறாள். அந்த நன்றி எப்போதும் அவளுக்கு உண்டு.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 04-04-2019, 05:47 PM



Users browsing this thread: 4 Guest(s)