நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#52
“அது நான் இருக்கிற வரைக்கும் நடக்காது மணிம்மா. நான் பார்த்துக்கிறேன். என்னோட அம்மாவிற்கு என்னை அறிமுகப்படுத்த வேண்டும் என்று தோணவே தோணாது. இதுவே மூத்த மகனா இருந்திருந்தா இந்நேரம் சொல்லியிருப்பாங்க.”

என்று குறைபட்டுக்கொண்டே அவனும் அவரது காலில் விழுந்தான்.
அவர் நெகிழ்ந்துபோனார். அவனையும் ஆசிர்வதித்து உச்சி முகர்ந்தார்.

அவன் மணிம்மா என்று அழைத்தது அவருக்குப் பிடித்திருந்தது. அவன் எப்போதாவது வனிதாமணியையும் வனிம்மா என்றுதான் அழைப்பான்.

“ஏன் வனி பிள்ளைக்கு ஓரவஞ்சனை பண்றே?” என்று மணிமேகலை அவரிடம் கடிந்துகொண்டார்.

“அதெல்லாம் இல்லை மணி. இவன் வேணும்னே வம்பிழுப்பான். சொல்லப்போனா இவனைத்தான் நான் அதிகம் கவனிக்கிறதே. நீ கிருஷ்ணாகிட்ட வேண்டுமானாலும் கேட்டுக்கோ.”

“போனாப் போயிட்டு போறாங்க மணிம்மா. அவங்களை மன்னித்து விட்டுவிடலாம். இப்ப சொல்லுங்க. உங்களுக்கு எத்தனை பசங்க. அவங்களை எல்லாம் அழைச்சுட்டு வந்திருக்கீங்களா?”

“இல்லைப்பா.”

“நீங்க அவசியம் எங்க வீட்டுக்கு குடும்பத்தோட வரனும். அம்மா ரொம்ப சந்தோசப்படுவாங்க. அவங்களை இத்தனை கலகலப்பா நான் இன்னிக்குதான் பார்க்கிறேன்.”

அவரும் அதற்குச் சம்மதித்துவிட்டு பிரியாவிடை பெற்றார். தனது தோழியைப் பார்த்த சந்தோசம் வனிதாமணியின் முகத்தில் நிலைத்திருந்தது.

அவர்கள் கிளம்புவதைப் பார்த்துவிட்டு சாருமதி தலையசைத்து விடைகொடுக்க சாருலதா அவர்களுடன் தொற்றிக்கொள்ள விரைந்து வந்தாள். அவளைக் கண்டுகொள்ளாமல் காரை எடுக்கச் சொல்லி யுகேந்திரன் சொல்லிவிட ஓட்டுநரும் எடுத்து விட்டார்.

முன்னிருக்கையில் அவன் அமர்ந்துகொள்ள பின்னே வனிதாமணியும் கிருஷ்ணவேணியும் அமர்ந்துகொண்டனர்.

கிண்டலாகச் சிரித்துக்கொண்டே சாருலதாவிற்கு கையாட்டி விடைபெற்றான் யுகேந்திரன்.

அதைக் கண்டதும் அவள் முகம் கருத்தது. மனதிற்குள் கருவிக்கொண்டாள்.
“அவளைக் கண்டா ஒதுங்கிப்போக வேண்டியதுதானேடா? அவகிட்ட எல்லாம் எதுக்கு வம்பு வச்சிக்கிறே?”

வனிதாமணி அவனைக் கடிந்துகொண்டார்.


“நானாம்மா வலியக்க அவகிட்ட சண்டைக்குப் போறேன். அவ விடமாட்டேங்கிறாளேம்மா. மதிக்கா மாதிரி அவளும் இருந்தா நான் ஏன்மா அவகிட்ட பிரச்சினைக்குப் போறேன். வரும்போது கொஞ்சம் கூட மரியாதை இல்லாம முன்பக்கம் அண்ணாவோட பக்கத்தில் ஏறி உட்கார்ந்தா பார்த்தியாம்மா. நம்ம வீட்டில் உரிமை கொண்டாடறதுக்கு அவ யாரும்மா?”

பொரிந்து தள்ளிவிட்டான்.

அவருக்கும் அவன் சொல்வது எல்லாம் தெரிந்துதான் இருந்தது. சிறியவள் தவறு செய்தாள் என்றால் பெரியவர்களிடம் சொல்லி கண்டிக்கச் சொல்லலாம். இங்கே சாருலதா செய்யும் எல்லாமே அவளது பெற்றோர் அறிந்திருந்தனர். சொல்லப்போனால் அவர்களது எண்ணத்தைதான் அவள் செயல்படுத்திக்கொண்டிருக்கிறாள் எனும்போது அவளைப் பற்றி யாரிடம் கூறி கண்டிக்கச் சொல்ல முடியும்.

“ஏன் அத்தை? சாருக்காவைப் பிடிக்கலைன்னா மதிக்காவை யுகாவோட அண்ணாக்கு கல்யாணம் செய்து வைக்கலாம்ல. அவங்களும் அவர் மேல் விருப்பப்படறாங்கன்னு தெரியுது. தப்பா இருந்தா என்னை மன்னிச்சிடுங்க.”

“நீ ஒன்னும் தப்பா சொல்லலைம்மா. மதி நல்லவள்தான். ஆனால் அவ வந்தா அவ குடும்பமும் இங்கே நுழைஞ்சுடும். எந்த உரிமையும் இல்லாதப்பவே சொந்தத்தைக் காரணம் காட்டி அவங்க பண்றது தாங்கலை. உரிமை கிடைச்சுடுச்சுன்னா என்ன பண்ணுவாங்களோ தெரியலையே.”

“எப்படி அத்தே அம்மாவும் பையனும் சொல்லி வைத்த மாதிரியே பேசறீங்க?”

என்று அவள் ஆச்சர்யப்பட்டாள்.

வீடு வந்து சேர வனிதாமணி அவர்களுக்கு இரவு வணக்கம் சொல்லிவிட்டு தனது அறைக்குச் சென்றுவிட்டார்.

யுகேந்திரனும் அவளிடம் விடைபெற்று சென்றுவிட கிருஷ்ணவேணி தனது அறைக்குச் சென்றாள்.

மகேந்திரனின் அறையில் விளக்கெரிந்தது. அறைக்கதவும் சிறிது திறந்திருந்தது. இன்னும் உறங்கவில்லை போலும் என்று தனது அறைக்குள் நுழைந்தாள்.

அதன் பிறகுதான் அறையில் தண்ணீர் இல்லாதது தெரிந்தது. சரி எடுத்து வரலாம் என்று அறையை விட்டு வெளியில் வந்தாள்.

அப்போது மாடியில் இருந்து மகேந்திரன் வந்துகொண்டிருந்தான். அவன் அவளைக் கவனிக்கவில்லை.



தலையைக் கையால் பிடித்தவாறே வந்துகொண்டிருந்தான்.
தனது அறைக்குள் நுழைந்து கதவைத் தாளிட்டான்.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 26-03-2019, 10:43 AM



Users browsing this thread: 16 Guest(s)