நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#33
“அதனால் என்னம்மா? இத்தனை நாட்கள் என் சாப்பாட்டை சாப்பிட்டு சாப்பிட்டு நாக்கே செத்து போயிருந்தது. இப்பதான் உன் மூலமா எனக்கு விடிவுகாலம் பொறந்திருக்கு. அதுக்குதான் எனக்கு பொண்ணு வேணும்னு ஆசைப்பட்டேன். ஆனால் இரண்டு கட்டைத்தடியன்கள் தான் பொறந்திருக்காங்க.”

என்று செல்லமாய் சலித்துக்கொண்டார்.
“அம்மா. இதெல்லாம் ரொம்ப அதிகம். உனக்கு உன்னோட சமையல் அலுத்துப்போச்சுன்னு சொல்லியிருந்தா நாங்க சமையல் வேலைக்கு ஆள் வைத்திருப்போம். அதை விட்டுட்டு எங்களை குறை சொல்லக்கூடாது. நீ என்னண்ணா சொல்றே?”
என்று தன் அண்ணனையும் கூட்டு சேர்த்தான். அவனிடம் கேட்காமலே இருந்திருக்கலாம் என்பதுபோல் அவனது வழக்கமான மௌனத்தைக் கண்டு தன்னையே நொந்துகொண்டான்.

எப்படி அவனால் பேசாமல் அமைதியாக இருக்க முடிகிறது. தன்னால் அப்படி இருக்க முடியலையே. என்று யோசித்தான்.

“ரொம்ப யோசிக்காதே. அப்புறம் மூளை சூடாகி வழிஞ்சிரப்போகுது.”

அவன் காதருகில் முணுமுணுத்தாள் கிருஷ்ணவேணி.

அவளைப் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்பைச் சிந்தினான்.

அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.

பெரியவர்கள் இருவரும் சாப்பிட ஆரம்பித்த உடனே அவளது சமையலை பாராட்டிவிட்டனர்.

யுகேந்திரனுக்கோ சொல்ல வேண்டாம். அவனுக்க எப்போதும் அவள் மீது தனியான அன்பு உண்டு. அந்த அன்பில் அவள் தண்ணியை ஊற்றி சாதம் கொடுத்திருந்தாலும் ஆகா ஓகோ என்றுதான் புகழ்ந்திருப்பான்.

மகேந்திரன் மட்டும் ஒன்றும் சொல்லவில்லை. அங்கே வேறு யாரும் இல்லாத மாதிரி அமைதியாக சாப்பிட்டுவிட்டு எழுந்து சென்றுவிட்டான்.

அவளுக்கு ஒரு மாதிரியாகப் போய்விட்டது.

இதுவரைக்கும் யாருக்கும் சமைத்துப்போடும் சந்தர்ப்பம் அவளுக்கு அதுவரைக்கும் வாய்த்ததில்லை.
இப்போது அவர்கள் குடும்பத்தை தனதாக நினைத்துக்கொண்டு அவள் சமைத்திருக்கிறாள். அது அவனுக்குப் பிடிக்கவில்லையோ? அவளுக்குச் சந்தேகமாக இருந்தது.

எப்போதும் சாப்பிட்டு முடித்துவிட்டாலும் அவன் மற்றவர்கள் எழுந்திரிக்கும் வரையில் எழுந்து செல்லமாட்டான்.


இப்போது பாதியிலேயே எழுந்துவிட்டான் என்றால் அவள் உரிமை எடுத்துக்கொண்டு சமைத்தது அவனுக்குப் பிடிக்கவில்லை என்றுதானே அர்த்தம்.

அவளது முகவாட்டத்தை உணர்ந்த யுகேந்திரன் அவளது கரத்தினை ஆறுதலுடன் தட்டினான்.

அவனுக்குத் தெரியுமளவிற்கா தனது மனம் தெரிந்துவிட்டது.

சாப்பிட்டு முடித்துவிட்டு சமையல் மேசையை ஒதுங்க வைத்துவிட்டு தங்கள் அறைக்குத் திரும்பினர்.

அவள் பின்னேயே அவனும் வந்துவிட்டான்.

“கிருஷ்மா. நீ கண்டதையும் நினைச்சு குழப்பிக்காதே.”

“நான் சமைச்சது உன் அண்ணாவுக்கு விருப்பமில்லை.”

வருத்தமுடன் கூறினாள்.

“அப்படியெல்லாம் இல்லை. அப்படி அவன் நினைத்திருந்தால் சாப்பிடவே வந்திருக்கமாட்டான். எப்போதும் போல அவன் இன்னிக்கும் நல்லா சாப்பிட்டான்.”

“நீ எனக்காக சொல்றே?”

“நான் பொய் சொல்லலை. நம்பு. இப்ப தூங்கி ஓய்வெடு. சாயங்காலம் சந்திக்கலாம்.”

கேந்திரன் மொட்டை மாடியில் நின்றிருந்தான்.

அவனுக்கு பௌர்ணமி நிலவைப் பார்க்க பிடிக்கும். அதனால் வந்துவிட்டான்.

எப்போதும் போல் அவன் நிலவைத்தான் ரசிக்க ஆரம்பித்தான்.

திடுக்கிட்டான்.

அங்கே நிலவு மறைந்து கிருஷ்ணவேணி முகம் தெரிந்தது.

இன்று மட்டுமல்ல. அவளைச் சந்தித்த நாளிலிருந்தே அழகான எதை பார்த்தாலும் திடுக்கென்று அவளது முகம்தான் அவன் கண் முன்னே வந்து நிற்கிறது.

முன்பு தம்பிக்குத் தெரிந்தவள் என்ற எண்ணம் மட்டுமே. ஆனால் இப்போது அவளை அவன் வீட்டிற்கே கூட்டிக்கொண்டு வந்த பிறகு தம்பிக்கு அவள் மீது நாட்டம் இருக்குமோ என்ற சந்தேகம். அதுவும் அவளிடம் அவன் காட்டும் அதீத அன்பைக் கண்டதும் அந்த சந்தேகம் உறுதியாகிவிட்டது.

இப்போதும் அவள் முகமே தனக்கு நினைவுக்கு வந்தால் அது தம்பிக்கு தான் செய்யும் துரோகம் என்று தன்னைத்தானே காறி உமிழாத குறையாய் திட்டிக்கொள்கிறான்.

இருந்தும் அவனது மனம் அவன் கட்டுபாட்டை இழந்துவிடுகிறது.

இரவு சாப்பிட நேரம் ஆகிவிட்டதால் வனிதாமணி யுகேந்திரனிடம் மற்றவர்களை கூப்பிடச் சொன்னார்.

தந்தையிடம் சொல்லிவிட்டு மேலே வந்தான். அறையில் மகேந்திரனைக் காணவில்லை. அவனது வழக்கம் தெரிந்ததால் கிருஷ்ணவேணியையும் அழைத்துக்கொண்டு மாடிக்குச் சென்றான். அங்கே மறுபக்க சுவரில் சாய்ந்திருந்த வண்ணம் நின்றிருந்த மகேந்திரனை பௌர்ணமி வெளிச்சத்தில் கண்டதும் கிருஷ்ணவேணி திகைத்து நின்றாள்.

சில கதைகளில் ஆசிரியர்கள் கதாநாயகனை கிரேக்க சிற்பம் போல் நின்றான் என்று வர்ணித்திருப்பார்கள். அப்படி ஒன்று உண்டென்றால் அவர்கள் இப்போது மகேந்திரனைப் பார்த்தாலும் அப்படித்தான் வர்ணித்திருப்பார்கள் என்று தோன்றியது.

அவனது அந்த தோற்றம் அவள் அனுமதியில்லாமல் மனதில் ஆழப்பதிந்தது.

அது தவறு என்று அறிவு எடுத்துரைத்தது. இறுதியில் மனமே வென்றது.
இனி,,,
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 13-03-2019, 12:05 PM



Users browsing this thread: 17 Guest(s)