நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#20
“சரி. களைப்பா இருக்கு. நான் வர்றேண்ணா.”

சொன்னவாறே யுகேந்திரன் தனது அறைக்குச் சென்றுவிட்டான்.
மகேந்திரனின் மனம் அவனை இடித்துரைத்தது. சிறிவனான யுகேந்திரன் தன்னை விட பெரியவனாய் மாறிவிட்ட ஒரு பிரமிப்பு.
பெற்றோரை இழந்து வாடும் ஒரு சின்னப்பொண்ணை தன் வார்த்தைகளால் நோகடித்துவிட்டேனே என்று தன்னையே நொந்துகொண்டான்.

தனது அறைக்குச் சென்றவன் எதிர் அறையைப் பார்த்தான். அது சாத்தியிருந்தது. அவளைப் பார்த்தாலும் எப்படி மன்னிப்புக்கேட்பது? அவனது சுயமரியாதை அவளிடம் இறங்கிப் போவதில் அவனுக்கு விருப்பமில்லை. அப்போதிருந்தே மற்றவர்களிடமிருந்து விலகியிருந்தே பழகிவிட்டதால் சட்டென இறங்கிப்பழக முடியவில்லை.
அறைக்குள் நுழைந்து படுத்தவனுக்கு உறக்கம் எளிதில் வரவில்லை.
காலையில் எழுந்த உடனே மீண்டும் அவளது நினைப்புதான் அவனுக்குள். குளியல் அறைக்குள் சென்று புத்துணர்வுடன் வெளியில் வந்தான்.

காலைப் பானத்திற்காக அறையை விட்டு வெளியில் வந்தவனின் பார்வை தானாக எதிர் அறைக்குப் போனது.
அப்போது அறைக்கதவு திறந்தது. ஆவலுடன் நிமிர்ந்தவனின் முகம் கூம்பியது. அவள் நிமிர்ந்தே பாரவில்லை. வேண்டுமென்றே தவிர்த்துவிட்டுதான் செல்கிறாள் என்று புரிந்தது.
ஒரு பெண்ணின் பார்வைக்காக தான் காத்திருக்கிறோமா என்ற நினைவு அவனை வெட்கப்பட வைத்தது. அதுவும் தம்பி விருப்பப்பட்டு அழைத்து வந்த பெண்.

கீழே சென்றான். அங்கே அவள் தம்பியுடன் கலகலப்புடன் பேசிக்கொண்டிருந்தாள். எப்படியோ அவள் மனம் தேறிவிட்டாள். அத்துடன் தான் அவளைத் திட்டியதைப் பற்றியும் யாரிடமும் சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால் அவன் தன்னிடம் சண்டைக்கு வந்திருப்பான்.

அப்போது அவள் நல்லவளாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

நல்லவளாய் இருந்தால் தேவலாம். இல்லை என்றால் அவள் மேல் இத்தனைப் பாசம் வைத்திருக்கும் தம்பி ஏமாந்து போய்விடுவான். இந்த வீட்டின் செல்லப்பிள்ளை.

அவனைக் கண்டதும் அவள் இருக்கையை விட்டு கிளம்பிவிட்டாள்.

“யுகா. கொஞ்சம் தோட்டத்தில் நடந்துட்டு வர்றேன்.”

“ஏய். இது என்ன பழக்கம்?”

அவள் புரியாமல் பார்த்தாள்.

“என்னை விட்டுட்டு நீ மட்டும் போறே? இரு நானும் வர்றேன்.”

இருவரும் இணைந்து நடப்பதை பார்த்துக்கொண்டு இயலாமல் அமர்ந்திருந்தான் மகேந்திரன்.

தன்னைக் கண்டுவிட்டுதான் அவள் எழுந்து சென்றுவிட்டாள் என்று அவனுக்குப் புரிந்தது.

யுகேந்திரன் அவளிடம் ஏதேதோ பேசிக்கொண்டே வந்தான். அவள் அவனைப் பிரியத்துடன் பார்த்தான். ஒரு வார்த்தை கூட அவன் அவளது கவலையை நினைவு படுத்துவது போல் பேசவில்லை,

நடந்தது போதும் என்று அவன் சோர்ந்து போய் சொல்லும் வரையில் நடந்தனர்.

“போடா சோம்பேறி.” என்று அவன் முதுகில் தட்டினாள்.

இருவரும் உள்ளே நுழைந்தனர்.

“என்ன இரண்டு பேரும் வந்துட்டீங்களா? போய் குளிச்சுட்டு வாங்க. சாப்பிடலாம்.”

வனிதாமணி கூற இருவரும் தலையாட்டிவிட்டு சென்றனர்.

மகேந்திரனும் ரவிச்சந்திரனும் கிளம்பி வந்துவிட அவர்களுக்கு நேரமாகிவிட்டது என்று அவர்களுக்கு காலை உணவைக்கொண்டு வந்து கொடுத்தார்.
இரவு உணவு மட்டும்தான் அவர்கள் அனைவரும் சேர்ந்து சாப்பிட முடியும். அதுவும் யுகேந்திரன் விடுமுறை நாட்களில் தாமதமாகத்தான் கிளம்பிவருவான். அவனுக்கும் உணவு கொடுத்துவிட்டுதான் அவர் சாப்பிடுவார். வீட்டில் மற்ற வேலைகளுக்கு ஆட்கள் இருந்தாலும் சமையல் மட்டும் அவர்தான் செய்வார்.

யுகேந்திரன் குளித்துவிட்டு வர அவனிடம் சொல்லிக்கொண்டு இருவரும் சென்றுவிட்டனர்.


அவன் போய் கிருஷ்ணவேணியை அழைத்து வந்தான்.

“அம்மா. இன்னிக்கு காலையில் என்ன சாப்பாடு?”

“தோசை.”

“அய். அப்ப நான்தான் தோசை சுட்டுத்தருவேன்.”

என்ற அறிவிப்புடன் சமையல் அறைக்குள் நுழைந்தான்.

அவள் செல்வதற்குள் அவன் தன் வேலையை ஆரம்பித்துவிட்டான்.

பின்னேயே வந்த வனிதாமணி தானும் அடுப்பை பற்ற வைத்து இன்னொரு தோசைக்கல்லை வைத்து தோசை ஊற்ற ஆரம்பித்தார்.

“என்னத்தை? அவன்தான் ஊத்தித்தர்றேன்னு சொல்றானே? நீங்களும் ஏன் தோசை ஊத்தறீங்க?”

“எனக்குப் பயம்மா. அதுதான்,”

“பயமா? எதுக்குத்தே?”

“அவன் தோசை ஊத்தினான்னா நான் சாப்பிட்டுக்கிட்டே இருப்பேன். அந்த பயத்தில்தான் நானே ரெண்டு தோசை ஊத்திச் சாப்பிட்டுவிடலாம்னு வந்துட்டேன்.”

“ஹேய் யுகா. நீ அவ்வளவு நல்லாவா தோசை ஊத்துவே?”

“இன்னிக்குத்தான் பார்க்கப் போறியே?”

அவன் சட்டைக் காலரை பெருமையுடன் இழுத்துவிட்டுக்கொண்டான்.

“கிழிச்சான்மா. ஒரு தோசையை அரை மணி நேரம் ஊத்துவான். மெல்லிசா ஊத்தி அதில் கால் லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி, மொறு மொறுன்னு வர்ற வரைக்கும் நாம எவ்வளவு  கெஞ்சினாலும் எடுத்துத் தர மாட்டான். அதற்குள் முதல்ல சாப்பிட்ட தோசை செரித்திருக்கும். பிறகு இன்னொரு தோசை சாப்பிட்டு அரை மணி நேரம் காத்திருக்கனும். பின்னே நான் சாப்பிட்டுக்கிட்டேதானே இருக்கனும்.”

அவர் சொன்ன விதத்தில் அவளுக்குச் சிரிப்பு வந்தது.



எந்த அளவுக்கு அவனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

அவன் முதுகில் தட்டினாள். அவன் அசடு வழிய சிரித்தான். அம்மா திடீரென்று காலை வாரி விடுவார் என்று அவன் நினைக்கவில்லை.

“நகரு. இன்னிக்கு நான் தோசை ஊத்தித் தர்றேன். பெரிசா பீத்திக்கிட்டு வந்துட்டான். அத்தை நீங்க இருங்க. நான் செய்யறேன்.”


அவள் தோசை ஊற்றிக்கொடுக்க அங்கிருந்த மேடையில் இருந்த காலியான இடத்தில் ஏறி அமர்ந்துகொண்டே தட்டில் அவள் கொடுத்த தோசையை உண்டான்.
வனிதாமணியும் அங்கேயே அமர்ந்துவிட்டார். கலகலவென எதை எதையோ சின்னவர்கள் பேசிக்கொண்டேயிருக்க வனிதாமணி அதை ஆவலுடன் பார்த்துக்கொண்டே சாப்பிட்டார்
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 05-03-2019, 10:34 AM



Users browsing this thread: 28 Guest(s)