நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#15
அந்த கற்றுக்கொள்ளல் மனம் வேறு எந்த பக்கமும் திரும்பாது அவளுக்கு நிம்மதியைத் தந்தது.

மற்றவர்கள் எதையோ எதிர்பார்த்து பழகுகிறார்கள் என்று தெரிந்த பிறகு தனது நட்பு வட்டத்தை கவனத்துடன் கையாண்டாள். தன்னைப் பற்றிய எதையும் மற்றவர்களிடம் பகிர யோசித்துதான் செய்வாள்.
அவளை யோசிக்க விடாமல் நட்பு கொள்ள செய்தது யுகேந்திரன் மட்டும்தான்.
அவளது வட்டத்தை விட்டு அவளை வெளிக்கொணர்ந்தவன் அவனே.
அவனது கலகலப்பு இப்போது அவளையும் தொற்றிக்கொண்டது. அவனுடன் பழக ஆரம்பித்த இந்த இரண்டு வருடங்கள்தான் அவள் தன் வயதுப்பெண்ணுக்குரிய சூட்டிகையுடன் இருப்பதே.

இப்போதும் அவனது அந்த அன்புதான் அவளை இந்த வீட்டில் வந்து இருக்க வைத்திருக்கிறது.
அவளைப் பற்றி புரிந்தவன் இந்த ஒரு வருடமாவது அவள் குடும்பத்தில் இருக்கும் சந்தோசத்தை அனுபவிக்க வேண்டும் என்று அவள் மறுத்தும் விடாமல் அவனது அன்னையிடமும் பேசி அவளை இங்கே வரவழைத்துவிட்டான்.
அதுவும் வனிதாமணியின் அன்பு அவளுக்கு தனது பெற்றோரை நினைவுபடுத்தியது.

அவர்கள் இருந்திருந்தால் தனக்கு இந்த நிலைமை வந்திருக்காதே என்று இப்போது நினைக்கும்போது அவளை அறியாமல் கண்ணீர் வழிந்தது.
அவளுக்கு தாயன்பின் சுவையை ருசிக்க மனம் விரும்பியது. அதனால் இங்கே கிளம்பி வந்துவிட்டாள்.
மகேந்திரன் அப்படி பேசிவிட்டு சென்ற பிறகு கீழே செல்ல மனம் இல்லாமல் மீண்டும் அறைக்குள் நுழைந்தவள் கட்டிலில் அமர்ந்துதான் இதை எல்லாம் யோசித்துக்கொண்டிருந்தாள்.

அவளது அன்பிற்கு மகேந்திரன் பூசிய வர்ணம் அவளது மனதைக் காயப்படுத்தியது.

கீழே உணவு மேசைக்கு வந்த மற்றவர்கள் அவளுக்காக காத்திருந்தனர்.

மற்றவர்களை அவள் வேண்டுமென்றே காக்க வைக்கிறாள் என்று அதுவேறு அவள் மீது அவனுக்கு கோபத்தை வரவழைத்தது.

ஒருவேளை தான் நடந்துகொண்டதை நினைத்து வருத்தப்படுகிறாளோ என்று யோசித்தான்.

‘நான் ஏன் அப்படி நடந்துகொண்டேன். என்ன? என்னைப்பார்த்து சிரித்தாள். அதற்கு சின்னதாக பதில் புன்னகையை கொடுக்காமல் இப்படி தேள் கொடுக்காய் என்னை பேச வைத்தது எது? அவளைப் பார்க்கும்போது எல்லாம் ஏதோ ஒருவித பயம் என்னை ஆட்டுவிக்கிறதே? தொழிலில் மற்றவர்கள் என்னைக் கண்டு ஆடிப்போய் இருக்கிறார்கள். என்னை ஒருத்தி ஆட்டி வைக்கிறாளே.’

“என்ன யுகா? இன்னும் கிருஷ்ணாவைக் காணலை.”

அன்னையின் குரல் அவனது சிந்தனையைக் கலைத்தது.

“இதோ பார்க்கிறேம்மா.”

சொன்ன யுகேந்திரன் இரண்டிரண்டு படிகளாகத் தாவிச் சென்றான்.

“ஏய் மெதுவா போடா.”
பின்னேயே வனிதாமணி கத்தினார். அதற்குள் அவன் சென்றுவிட்டான்.

இன்னும் சின்னப்பிள்ளை மாதிரியே நடந்துக்கிறான்.”


வனிதாமணி சிரித்தார். ரவிச்சந்திரனும் சிரித்துக்கொண்டார்.

தம்பி இந்த வேகத்தை படிப்பிலும், தொழிலிலும் காட்டியிருந்தால் இந்நேரம் முன்னேறியிருப்பான் என்று அவனுக்குத் தோன்றாமலில்லை.

“கிருஷ். என்னடா பண்றே? அங்கே எல்லாரும் உனக்காக காத்துக்கிட்டிருக்காங்க. நீ இங்கேயே இருந்தா எப்படி சாப்பிடறது?”

கேட்டுக்கொண்டே வந்தவன் அவளது கண்களில் கண்ணீரைக் கண்டதும் பதறிப்போனான்.

“என்னாச்சுடா? ஏன் அழறே?”

அவன் கேட்ட பிறகுதான் தான் அழுதிருக்கிறோம் என்ற உணர்வு வந்தது.

அவசர அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டவள் “நான் அழலையே” என்றாள்.      

“அப்புறம் என்ன கண்ணில் தூசி விழுந்துடுச்சா?”

அவனிடம் இருந்து எதையும் மறைக்க முடியாது. அவளைப் பற்றி நன்கு உணர்ந்தவன் அவன்.

“அம்மா, அப்பா நினைவு வந்துருச்சு.”

அவனுக்கு அவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. ஒரே நேரத்தில் இரண்டு பேரையும் இழந்துவிட்டு உண்மையான அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறாள். அவளது சொந்தங்களும் புறக்கணித்துவிட்டனர்.

அவளைத் தோளோடு சேர்த்தணைத்துக்கொண்டான்.

“அம்மா அப்பா நினைவு வந்தா அழனுமாடா? நீ அழுதா அவங்க ஆத்மா எத்தனை வருத்தப்படும்.”

வருத்தப்படாமல் அவங்களோடு இருந்த சந்தோசமான தருணங்களை நினைவுபடுத்திக்கொள் என்றும் அவனால் தேற்ற முடியவில்லை.

அவளுக்கு நினைவு தெரியும் முன்னே அவர்கள் இந்த உலகை விட்டு மறைந்துவிட்டார்கள்.

அவன் வந்து தேற்றியதும்  ஏற்கனவே பெற்றோர் இருந்திருந்தால் என்று தனது நிலையைப் பற்றி வருந்திக்கொண்டிருந்தவள் இப்போது அந்த ஏக்கம் மனதைத் தாக்க அவளை அறியாமல் அழ ஆரம்பித்துவிட்டாள்.

“ப்ளீஸ்டா. அழாதே.”

அவளது துயரத்தை தனதாக உணர்ந்து தேற்றும் தோழனின் தேறுதல் வார்த்தைகள் அவளை ஆறுதல் படுத்தின.

அத்துடன் அவளுக்காக அனைவரும் கீழே சாப்பிடாமல் காத்திருக்கிறார்கள் என்று சொன்னதும் அவளுக்கு நினைவு வந்தது.

அவன் இதற்காகவும் தன்னை தவறாக நினைக்கப்போகிறான். வேண்டுமென்றே அவர்களைக் காக்க வைத்ததாக எண்ணுவான்.



அவனுக்காக இல்லை என்றாலும், பெரியவர்கள் என்ன பாவம் செய்தார்கள். அத்தை காலையில் இருந்து வீட்டில் உழைக்கிறார் என்றால், மாமா தனது தொழிலைக் கவனித்துவிட்டு வந்திருக்கிறார்.
அவர்கள் இருவரும் நேரத்தில் சாப்பிட்டு ஓய்வு எடுக்க வேண்டும். அத்துடன் யுகேந்திரன் பசி தாங்க மாட்டான். அவன் சாப்பாட்டு பிரியன் வேறு.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 28-02-2019, 01:13 PM



Users browsing this thread: 35 Guest(s)