நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#12
ஏற்கனவே யுகேந்திரன் தனது அண்ணனைப் பற்றி சொல்லியிருக்கிறான்தான். அவனுக்கு தான் அங்கே வந்தது பிடிக்கவில்லையோ என்ற சந்தேகம் அவள் மனதில் உறுத்தியது.

ஆனாலும் யுகேந்திரன் அந்த அளவிற்கு கேட்டுக்கொண்ட பிறகுதான் அவள் அவர்கள் வீட்டில் தங்க சம்மதித்ததே. அவனது தாயோ சொல்ல வேண்டாம். என்று அவள் ஒருத்தி இருக்கிறாள். மகனது தோழி என்று தெரிந்ததோ அன்றிலிருந்தே அவள் மேல் பிரியத்தைக் கொட்டுபவர்.
அவரும் மிகவும் ஆர்வமாக இருந்ததால்தான் அவள் இங்கே வரச்சம்மதித்ததே.
ரவிச்சந்திரனும் அவளைத் தன் குடும்பத்தாரோடு பார்த்திருக்கிறார். அப்போது அவளைப் பற்றி யார் என்ன என்று கூட தெரியாமல் அவளிடம் பிரியமாக நடந்தகொண்டிருக்கிறார்.
மகேந்திரன் என்றுமே தனது மனதை வெளிக்காட்டிக்கொள்ளமாட்டான் என்று அவர்கள் பேச்சிலிருந்தே தெரிந்தது.
இருந்தும் அவனும் மற்றவர்கள் போல் தன்னுடன் பிரியமாகப் பேச வேண்டும் என்று ஆசையாக இருந்தது.

தனது குடும்பத்தாரைப் பற்றிய நினைவுகள் கலங்களாகத்தான் தெரிகின்றது. இப்போது கூட இருக்கும் உறவினர்களோ அவளிடம் உண்மையான பாசம் வைத்தவர்கள் கிடையாது. அவளுக்கு என்னவானாலும் அவர்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தால் போதும்.
அவள் உண்மையான பாசத்திற்காக ஏங்கும்போதுதான் யுகேந்திரனின் நட்பு கிடைத்தது.
அவனுக்கு அவளிடம் இருந்து வேறு எதுவும் தேவை இருக்கவில்லை. அவனுக்கும் உண்மையான அன்புதான் தேவையாய் இருந்தது.

படிப்பை முடிக்கப் போகும் இந்த ஒரு வருடத்திற்குள்ளாவது தான் ஒரு சந்தோசமான சூழ்நிலையில் இருந்தாக வேண்டும்.
அப்போதுதான் படிப்பை முடித்த பிறகு தான் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளை சந்திக்கும் வலு கிடைக்கும்.

கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.

அவளுக்கு பெரும்பாலும் அழுவது பிடிக்காது. ஆனால் சில நேரங்களில் அளவுக்கு அதிகமான அன்பைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.
“என்னம்மா கிருஷ்ணா? உனக்கு இங்கே பிடிச்சிருக்கா?”
“ரொம்ப பிடிச்சிருக்கு மாமா.”
“ஆமா. இப்ப உள்ள பிள்ளைங்க எல்லாம் ஆன்ட்டி அங்கிள்னு கூப்பிடறதைதான் பெருமையா நினைக்கிறாங்க. நீ என்னன்னா அத்தை மாமான்னு கூப்பிடறே?”
“நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்த பொண்ணு மாமா. அத்தோட அத்தை கண்டிப்பா என்னை ஆன்ட்டின்னு கூப்பிடாதேன்னு சொல்லிட்டாங்க.”
“அப்ப நீ அவளை முதன் முதல்ல இன்னிக்குதான் பார்க்கிறேன்னு நினைச்சேன். அப்படியில்லையா?”
“இல்லை மாமா. அத்தை எங்க கல்லூரிக்கு வரும்போது பார்த்திருக்கிறேன். அப்புறம் கோயிலுக்கு வரும்போது யுகா அழைச்சுட்டு வந்திருக்கான். அப்பதான் என்கிட்டே சொல்லியிருக்காங்க.”
“அப்பதான் என்னோட போனில் பேச வைச்சிருக்காங்களா?”
“ஆமா மாமா.”
மகேந்திரனுக்கு தான் என்னமோ தனிமைப்படுத்தப்பட்ட மாதிரி தோன்றியது. ஒரு சின்னப் பெண் விசயத்தில் தன்னை தனிமைப்படுத்திவிட்டார்களே.
இப்போது அவள் இங்கே வந்து தங்க வேண்டும் என்று சொன்ன போது கூட அவள் ஒரு பெண் என்று தன்னிடம் கூறவில்லை. தான் மட்டும் அந்த கல்லூரி நாள் விழா அன்று அவள் யார் என்று தெரிந்துகொண்டிருக்கவில்லை என்றால் அந்த சாருமதி மாதிரி தனக்கும் அதிர்ச்சியாகதான் இருந்திருக்கும்.


என்னை ஏன் அந்நியப்படுத்தி விட்டார்கள். நான் அவர்களிடம் எந்த அளவிற்கு பாசமாக இருக்கிறேன். என் பாசம் அவர்களுக்குப் ஏன் புரியாமல் போயிற்று.


‘ச்சே. எல்லாம் இந்த கிருஷ்ணாவால்தான் உண்டாயிற்று. இத்தனை நாட்கள் இல்லாமல் நான் இப்படி எல்லாம் யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.’

“போய் குளித்துவிட்டு வாங்க. சாப்பிடலாம்.”

வனிதாமணி கூறினார்.

“ஆமாம்மா. எனக்கு இன்னிக்கு ரொம்ப பசி.”

யுகேந்திரன் கூறியபடியே தனது அறைக்கு ஓடினான்.

கிருஷ்ணவேணி எந்த அறைக்குச் செல்லப்போகிறாள் என்று பார்த்தவாறு நின்றிருந்தான் மகேந்திரன்.

அவள் நேரே அவனது எதிர் அறைக்குள் சென்று நுழைந்தாள்.

“அம்மா. அவள் ஏன் அங்கே போகிறாள்?”

“நீதானேப்பா சொன்னே, பார்க்கிறவங்க குறை சொல்ற அளவுக்கு விட்டுடக் கூடாதுன்னு. யுகா சின்னப் பையன். நீ கொஞ்சம் பொறுப்பா அவங்களைப் பார்த்துப்பேன்னுதான் அவளை அந்த அறையில் தங்க வைத்தேன்.”

அவன் எந்தப் பதிலும் சொல்லாமல் தனதறைக்குச் சென்றான்.

தாய் தன் மீது வைத்த நம்பிக்கையை நினைத்து சந்தோசப்படுவதா வருந்துவதா? என்று அவன் மேலேயே சந்தேகம் கொண்டான்.

குளித்துவிட்டு வெளியில் செல்ல கதவைத் திறந்த போது எதிர் அறையும் திறந்தது. அவள் என்ன மாதிரி கோலத்தில் வந்து நிற்கப்போகிறாளோ? என்று அவன் பயந்த மாதிரி இல்லாமல் எளிமையான கைத்தறி சுடிதார் அணிந்து கதவைத் திறந்தாள்.

அவர்கள் இருவர் மட்டுமே அந்த இடத்தில் இருந்தனர்.

வேறு யாரும் இல்லை. மரியாதை நிமித்தம் அவள் அவனைப் பார்த்து சிரித்தாள்.
அந்த சிரிப்பு அவனுள் ஏதோ மாற்றத்தை உண்டு பண்ணியது. அவன் அவளையேப் பார்த்துக்கொண்டிருந்தான்.

Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 27-02-2019, 05:35 PM



Users browsing this thread: 16 Guest(s)