நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#11
இதில் சிரிக்க என்ன இருக்கிறது என்ற எரிச்சலுடன் தனது அறைக்குச் சென்றான். உடை மாற்றி கீழே சென்றான்.

வந்த அன்றே அவனைக் கூத்தடிக்க நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டாளா? இந்த அம்மா அதை பெருமையாக வேறு சொல்லிக்கொள்கிறார்களே?
அவனுக்குக் கோபமாக வந்தது. மனம் கேட்காமல் நீச்சல் குளத்திற்கு சென்றான்.
அங்கே குளத்தில் யாரையும் காணவில்லை.
மனம் சற்றே ஆறுதலடைந்தது.
ஆனால் அம்மா அவர்கள் அங்கேதானே நிற்பதாக கூறினார்கள்.
அவனது கேள்விக்கு விடையாக கிருஷ்வேணியின் குரல் கேட்டது. கூடவே யுகேந்திரனின் குரலும் கேட்டது. பார்த்தால் அவர்கள் இருவருடன் தோட்டக்கரனும் இருந்தான்.
மூவரும் தோட்டத்தை சீர்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். தம்பியை அப்படி பார்க்கும்போது அவனுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.
அரைக்கால்சட்டையும் கையில்லா பனியனும் அணிந்துகொண்டு யுகேந்திரன் சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
அத்துடன் தோட்டக்காரனும் அவள் ஏவுவதை எல்லாம் செய்துகொண்டிருந்தான்.
‘மகாராணி மற்றவர்களை ஏவிவிட்டு என்ன செய்கிறார்களாம்?’
மனதிற்குள்ளேயே கருவிக்கொண்டு தேடிப்பார்த்தான்.

அவளும் சும்மா இருக்கவில்லை.

சுடிதாரின் ஷாலை குறுக்காகப் போட்டுக்கொண்டு கீழே முடிச்சிட்டிருந்தாள்.

அவளால் முடிந்த பூந்தொட்டிகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள். அத்துடன் மற்ற இருவரையும் வேலை வாங்கிக்கொண்டிருந்தாள்.

தோட்டம் ஓரளவு சீராகியிருந்தது.

அவர்களைப் பற்றி தவறாக நினைத்ததற்காக மனதிற்குள்ளேயே மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.

யுகேந்திரன் அவனைப் பார்த்துவிட்டான்.

“ஹாய் அண்ணா. இங்கே வா.”

அவனும் அவர்கள் அருகே சென்றான்.

“என்ன இன்னிக்கு இத்தனை சீக்கிரம் வந்துட்டே? அத்துடன் என்னை தேடி வந்திருக்கே? பார்த்தியா? ஐயா எத்தனை வேலை செய்யறேன்னு?”

பீற்றிக்கொண்டான்.

“இத்தனை நாட்கள் இந்த வேலை எல்லாம் செய்ததில்லையே? இன்னிக்கு இது என் தம்பிதானா என்று சந்தேகம் எனக்கு சந்தேகமாக இருக்கிறது.”

“சரி. போதும் இன்னிக்கு வேலை பார்த்தது. வாங்க போகலாம்.”

அதற்கு மேல் அவர்களும் வேலை பார்க்க விருப்பமில்லாமல் வீட்டிற்குள்ளே வந்தனர்.

வனிதாமணி சூடாக பலகாரம் செய்து வைத்திருந்தார்.

அவர்கள் தங்கள் அறைக்குச் சென்று கைகால் கழுவிவிட்டு வந்து சாப்பிட அமர்ந்தனர்.

கலகலப்பான சூழ்நிலையாக இருந்தது. அனைவரும் பேசிக்கொண்டு இருக்க மகேந்திரன் மட்டும் அமைதியாக இருந்தான்.
அது கிருஷ்ணவேணிக்கு என்னவோ போல் இருந்தது.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 27-02-2019, 05:34 PM



Users browsing this thread: 31 Guest(s)