கண்ணாமூச்சி ரே ரே
#21
“ஹ்ம்ம்.. இப்போ கண்ணை திறந்து பாருங்க..!!” ஆதிரா கட்டிமுடித்துவிட்டு சொன்னாள். உடனே கண் திறந்து பார்த்த சிபி,

“வாவ்வ்வ்வ்..!!!” என்று கடிகாரத்தை பார்த்து ஆச்சரியமடைந்தான்.

“பிடிச்சிருக்கா..??” ஆதிரா பெருமிதமாக கேட்டாள்.


7

“ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு..!!”

“ம்ம்..!! வாட்ச் கட்ட மாட்டேன்.. வாட்ச் கட்டுறதே எனக்கு பிடிக்காதுன்னு சொல்லிட்டு திரிவிங்கள்ல..?? இனிமே பாக்கலாம்.. கட்டுறிங்களா.. இல்ல கழட்டி போடுறிங்களான்னு..??” ஆதிரா குறும்பாக சொல்லவும்,

“ஹாஹா..!! கழட்டவே மாட்டேன்.. கைலையே போட்டுக்குறேன் போதுமா..??” சிபி சிரிப்புடன் சொன்னான். உடனே,

“அதுசரி.. என்ன இது.. திடீர்னு வாட்ச்லாம்..??” என்று நெற்றியை சுருக்கியவாறு கேட்டான்.

“இது என்னோட கிஃப்ட்..!!”

“கிஃப்ட்டா..?? எதுக்கு..??”

“ம்ம்.. இன்னைக்கு என்ன நாள்னு ஞாபகம் இருக்கா..??”

“என்ன நாள்..??” சிபி குழப்பமாக தலையை சொறிந்தான்.

“ரொம்ப யோசிக்காதிங்க.. இன்னைக்கு பிப்ரவரி 14th.. வேலன்டைன்ஸ் டே..!! லவ் பண்றவங்களுக்கு இந்த மாதிரி ஏதாவது கிஃப்ட் வாங்கி குடுத்து.. நம்மளோட லவ்வை அவங்களுக்கு எக்ஸ்ப்ரஸ் பண்ற நாள்..” என்று படபடவென சொல்லிக்கொண்டே வந்த ஆதிரா பட்டென நிறுத்தி,

“ஐ லவ் யூ அத்தான்..!!” என்று கண்களிலும் குரலிலும் காதல் பொங்க சொல்லி முடித்தாள்.

சிபி அப்படியே உருகிப் போனான்.. அவனும் கண்களில் வழிகிற காதலுடன் மனைவியையே பார்த்துக்கொண்டிருந்தான்..!! சில வினாடிகள்..!! அப்புறம் என்ன நினைத்தானோ.. படக்கென தனது விரலில் போட்டிருந்த அந்த மோதிரத்தை கழற்றி எடுத்தான்..!!

“நீ கண்ணலாம் மூட வேணாம்.. கையை மட்டும் நீட்டு..!!” என்றவாறு,

“ஹையோ.. அ..அத்தான்.. என்ன இது..??” என்று ஆதிரா அதிர்ந்து கொண்டிருக்கையிலேயே, அவளுடைய விரல் பிடித்து அந்த மோதிரத்தை மாட்டி விட்டான்..!!

“இன்னைக்கு வேலன்டைன்ஸ் டே-னு எனக்கு சத்தியமா ஞாபகம் இல்ல ஆதிரா.. அப்படியே ஞாபகம் இருந்திருந்தாலும் உனக்கு ஏதாவது கிஃப்ட் வாங்கி வச்சிருப்பேனான்றதும் சந்தேகந்தான்.. அதுலாம் எனக்கு தோணாம கூட போயிருக்கலாம்.. பட்..” ஆதிரா மாதிரியே படபடவென பேசிய சிபி பட்டென நிறுத்தி,

“ஐ லவ் யூ ஆதிரா..!!” என்று அதே காதல் பொங்குகிற குரலில் சொல்லி முடித்தான்.

கணவனின் செய்கையில் இப்போது ஆதிரா அப்படியே உருகிப் போனாள்.. அந்த மோதிரத்தையே பெருமிதமாக பார்த்தவள், அப்புறம் சிபியை ஏறிட்டு காதலும் கண்ணீரும் தளும்புகிற விழிகளுடன் பார்த்தாள்..!!

“எ..என்னத்தான் இது..?? நான் கிஃப்ட் தந்தேன்றதுக்காக.. நீங்களும் ஏதாவது தரணும்னுலாம் அவசியம் இல்ல..!!”

“அப்படி இல்லடா.. உனக்கு எதாவது தரணும்னு எனக்கே தோணுச்சு.. அதான்..!!”

“அதுக்காக..?? கைல போட்ருந்ததை கழட்டி தரணுமா..??”

“ஹாஹா.. என்ன பண்றது.. கிஃப்ட் ஷாப் போறதுக்கு இப்போ எனக்கு டைம் இல்லையே..?? பட் ஒன்திங்..”

“என்ன..??”

“இந்த ரிங் எனக்கு ரொம்ப பிடிக்கும்..!! இப்போ இது உன்கிட்ட இருக்குறதுல.. எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்..!!”

8

புன்னகையுடன் சொல்லிவிட்டு, சிபி ஆதிராவையே ஆசையாக பார்த்தான்.. அவளும் கணவனையே வைத்த கண் வாங்காமல் காதலாக பார்த்துக் கொண்டிருந்தாள்..!! அப்போதுதான் சிபிக்கு திடீரென அந்த ஆசை வந்தது.. படக்கென ஆதிராவை அருகே இழுத்து அவளுடைய உதடுகளுடன் தனது உதடுகளை பொருத்திக் கொண்டான்.. அழுத்தமாக ஒரு ஈரமுத்தம் பதித்தான்..!! அவளை அணைக்க நகர்ந்தபோது.. காரின் கூரையினின்று தொங்கிக்கொண்டிருந்த அந்த காதல் கிளிகளின் பொம்மையை.. அவனது கை தட்டிவிட.. அந்தக்கிளிகளும் இப்போது அருகே நகர்ந்து மூக்குரசி முத்தமிட்டுக் கொண்டன..!!

“ம்ம்.. கெளம்பலாம் ஆதிரா.. டைமாச்சு..!!” முத்த ஈரத்தை சுவைத்துக்கொண்டே சிபி சொன்னான்.

“ம்ம்.. சரித்தான்..!!”

ஆதிராவும் நாணம் விலகாமலே சொல்லிவிட்டு.. காரை ஸ்டார்ட் செய்தாள்.. கியர் மாற்றி ஆக்சிலரேட்டரை மிதிக்க, கார் வேகமெடுத்து சாலையில் ஓட ஆரம்பித்தது..!! மிதமான வேகத்திலேயே வண்டியை செலுத்தினாள் ஆதிரா..!! ஹன்சூர் ரோட்டை தாண்டி மைசூர் பேலஸை அடைந்ததும்.. வலது புறம் செல்கிற அந்த அகலமான சாலையில் வண்டியை திருப்பினாள்..!! உடனே ஆக்சிலரேட்டரை அழுத்தி வேகத்தை கூட்டினாள்..!!

அதே நேரத்தில்.. அங்கிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில்.. அதே சாலையின் குறுக்காக அமைந்திருந்த அந்த மேம்பாலத்தில்..

சர்ரென்று விரைந்து சென்ற அந்த பேருந்தில் இருந்து.. ஒரு உணவுப் பொட்டலம் வெளியே தூக்கி எறியப் பட்டது..!! எங்கிருந்து வந்தன என்று தெரியாமலே ஒரு பெரிய காகக்கூட்டம் பறந்து வந்து.. உடனடியாய் அந்த உணவுப் பொட்டலத்தை சூழ்ந்து கொண்டன..!! ‘கா.. கா.. கா..’ என்று கரைந்து சப்தமிட்டுக்கொண்டே.. அந்த பொட்டலத்தை கொத்தி கொத்தி குதற ஆரம்பித்தன..!! ஒரே ஒரு காகம் மட்டும்.. அந்த கூட்டத்துடன் சேராமல்.. தனித்து.. அந்த உணவைப் பற்றிய எந்த அக்கறையும் இல்லாத மாதிரி.. மேம்பாலத்தின் கைப்பிடி சுவரில் அமர்ந்தவாறு.. சாலையை நோட்டமிட்டுக் கொண்டிருந்தது.. சட்டென இப்போது பறக்க ஆரம்பித்தது..!!

“பிடிச்சிருந்ததா..??” சிபி குறும்பாக கேட்டான்.

“எது..??”

“முத்தம்..!!”

“ம்ம்.. பிடிச்சிருந்தது..!!” ஆதிரா நாணத்துடன் சொன்னாள்.

“அப்போ.. இன்னொன்னு..??” கேட்டுக்கொண்டே சிபி ஆதிராவின் தோளில் கைபோட,

“ஐயோ விடுங்கத்தான்..!!”

சிணுங்கிய ஆதிரா ஒருகணம் சாலையில் இருந்து பார்வையை விலக்கி, மீண்டும் சாலையை பார்த்தாள்..!! அதே கணத்தில்.. காரை நோக்கி பறந்து வந்த காகம்.. தனது இறக்கைகள் இரண்டையும் அகலமாக விரித்தவாறு ‘படீர்ர்ர்ர்’ என கார்க்கண்ணாடியில் வந்து மோதி.. தனது கூரிய அலகால் அந்த கண்ணாடியை ‘ச்சிலீர்ர்ர்ர்’ என்று ஒரு கொத்து கொத்தியது..!!

அவ்வளவுதான்..!! ஆதிரா பக்கென அதிர்ந்து போனாள்.. ‘ஆஆஆவ்வ்’ என்று கத்தினாள்.. குபீர் என்று ஒரு பய சிலிர்ப்பு அவளுக்குள்.. குழம்பிப்போனவள் ஸ்டியரிங்கை சரக்கென வளைத்தாள்.. ப்ரேக்குக்கு பதிலாக ஆக்சிலரேட்டரை அழுத்தமாக மிதித்தாள்..!! கார் சர்ரென உச்சபட்ச வேகத்துடன் சீறியது.. அதேவேகத்தில் சாலையில் இருந்த வேகத்தடையில் ஏறவும், ஜிவ்வென மேலே பறந்தது.. பத்து மீட்டர் தூரம் பாய்ந்து சென்று, ஒருபக்கமாக சாய்ந்தவாக்கில் தரையில் போய் விழுந்தது.. அப்படியே தரதரவென தார்ச்சாலையில் சறுக்கிக்கொண்டு போய்.. சாலையோரமாக நின்ற மரத்தின் மீது ‘டமார்ர்ர்ர்’ என்று மோதி நின்றது..!!

சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் ஒருகணம் ஸ்தம்பித்து போனார்கள்.. என்ன நடந்தது என்று விளங்கவே அவர்களுக்கு சிறிது நேரம் பிடித்தது..!! ‘அச்சச்சோ’ என்று பதறியடித்துக் கொண்டு காரை நோக்கி ஓடினார்கள்..!!

கசக்கிப் போட்ட காகிதமாய் கார் உருக்குலைந்து போயிருந்தது.. காரை சுற்றி குபுகுபுவென ஒரே கரும்புகை.. கண்ணாடிகள் கற்கண்டு துகள்களாய் சிதறிப் போய் கிடந்தன..!! கார் ஒருபக்கமாக சாய்ந்து ஓய்ந்து போயிருக்க.. நான்கு சக்கரங்கள் மட்டும் இன்னும் ஓயாமல் சுழன்று கொண்டே இருந்தன..!! டாஷ்போர்டுக்கு மேல் தொங்கிய அந்த காதல் கிளிகள்.. இப்போது ரத்தத்தில் தோய்ந்து போய் ஊசலாடிக் கொண்டிருந்தன..!!

VLUU L200 / Samsung L200

அத்தியாயம் 3

அடுத்த நாள் காலை.. அதிகமாய் ட்ராஃபிக் இல்லாத மைசூர் காந்தராஜ் சாலை..!! அந்த சாலையில்.. அகலமாகவும் உயரமாகவும் எழுந்து நிற்கிற அப்பல்லோ மருத்துவமனை.. அந்த மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவை சார்ந்த அமைதியான ஒரு அறை..!!

ஆதிரா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்..!! அவளுடைய மார்புகள் சீராக ஏறி இறங்கிக் கொண்டிருந்தன.. அவளது தலையில் பலத்த அடிபட்டிருக்க வேண்டும்.. தலையை சுற்றி பெரிதாக ஒரு பேண்டேஜ்..!! முகத்தில் காணப்பட்ட சிறுசிறு சிராய்ப்புகள்.. இன்னும் கவனிக்கப்படாமலே விடப்பட்டிருந்தன..!! அவளுடைய இடதுபுற மார்புப் பிரதேசத்தில் இருந்து கிளம்பி சென்ற ஐந்தாறு எலக்ட்ரோடுகள்.. மேஜையில் வைக்கப்பட்டிருந்த ECG மானிட்டரின் பின்புறமாக சென்று முடிவடைந்தன..!! ஆதிராவின் இதயத்துடிப்பு வீதத்திற்கு ஏற்ப.. அந்த ECG மானிட்டர் பச்சை நிற அதிர்வலைகளை உருவாக்கிக் கொண்டிருந்தது.. ‘கீங்க்.. கீங்க்.. கீங்க்..’ என்ற சப்தத்தோடு..!!

மூன்று கால்களில் நின்ற அந்த ஸ்டீல் ஸ்டாண்டின், விரிந்திருந்த இரண்டு கைகளுள் ஒன்றில்.. ப்ளாஸ்டிக் சலைன் பாட்டில் தலைகீழாக தொங்கிக் கொண்டிருந்தது..!! அதிலிருந்து சொட்டு சொட்டாக இறங்கிய நிறமற்ற திரவம்.. குழாய் வழியிறங்கி ஆதிராவின் வலதுகை நரம்புக்குள் நேரடியாக பாய்ந்து கொண்டிருந்தது..!! தீருகிற நிலையை அந்த திரவம் இப்போது அடைந்திருக்க.. வேறொரு புதிய சலைன் பாட்டிலை மாற்றினாள், ஆதிராவை கவனித்துக் கொள்கிற கன்னட நர்ஸ்..!! நாஸில் திறந்து திரவ ஓட்டத்தை சீராக்கியவள்.. எதேச்சையாக ஆதிராவின் முகத்தை ஏறிட்டபோதுதான்.. அவளுக்கு இப்போது விழிப்பு வந்திருப்பதை கவனித்தாள்..!!

“வெல்கம் பேக் ஆதிரா.. குட் மார்னிங்..!!” என்றாள் புன்னகையுடன்.

ஆதிரா அவளுக்கு ஒரு உலர்ந்த புன்னகையை சிந்த முயன்று தோற்றாள்.. களைத்துப் போயிருக்கிறாள் என்பது அவளுடைய கண்களிலேயே தெளிவாக தெரிந்தது..!! உடலின் சக்தி முழுவதும் உறிஞ்சப்பட்டுப் போனது மாதிரியான ஒரு உணர்வு அவளுக்குள்..!! இமைகளை திறந்தும் மூடியும் திறந்தும் மூடியும்.. அப்படியே மலங்க மலங்க ஒரு பார்வை பார்த்தாள்..!! பிறகு.. உதடுகளை பிரித்து ஏதோ சொல்ல முயன்றாள்.. ஆனால் சப்தம் வெளிவராமல் போகவும்..

“ஏனு..??” ஆதிராவை கேட்டாள் அந்த நர்ஸ்.

ஆதிரா இப்போது விழிகளை ஒருமுறை அழுத்தமாக மூடி திறந்து.. மூச்சுக்காற்றை சற்றே தாராளமாக உள்ளிழுத்து வெளியேற்றி.. உடலில் எஞ்சியிருந்த ஆற்றலை எல்லாம் உதடுகளுக்கு தருவித்து..

“அம்மா..” என்றாள் ஈனஸ்வரத்தில்.

“ஓ.. அம்மா வெளில இருக்காங்க.. பாக்கணுமா..??”

“ம்ம்ம்ம்..!!”

“சரி.. வர சொல்றேன்.. பேசுங்க..!! பட்.. ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்காதிங்க..!!”

கனிவாக சொன்ன நர்ஸ், இதமான ஒரு புன்னகையை சிந்திவிட்டு, நிதானமாக திரும்பி நடந்தாள்.. அந்த அறையை விட்டு வெளியே வந்தாள்.. நீளமாக விரிந்திருந்த வராண்டாவை இப்படியும் அப்படியுமாய் பார்வையால் அலசினாள்..!! சற்று தூரத்தில் கிடந்த ஒரு மர இருக்கையில்.. பூவள்ளியும் தணிகை நம்பியும் கவலை தோய்ந்த முகத்துடன் காட்சியளித்தனர்..!! நடந்து அவர்களை நெருங்கியவள்..

“அவங்க கண்ணு முழிச்சுட்டங்க.. உங்களை பாக்கனும்னு சொல்றாங்க..!!” என்றாள்.

அவள் அவ்வாறு சொன்னதுமே.. பூவள்ளிக்கும் தணிகை நம்பிக்கும் முகத்தில் ஒருவித மலர்ச்சியும், சந்தோஷமும்..!! படக்கென இருக்கையில் இருந்து எழுந்தவர்கள்.. ஒருவர் முகத்தை ஒருவர் ஒருமுறை திரும்பிப் பார்த்துக் கொண்டார்கள்..!! பூவள்ளி கணவனின் கையை சற்றே ஆறுதலுக்கென பற்றிக்கொண்டாள்..!!
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#22
“அ..அவகிட்ட நாங்க பேசலாமா..??” தடுமாற்றமான குரலில் கேட்டார் தணிகை நம்பி.

“நீங்க பேசலாம்.. ஆனா.. அவங்களை அதிகமா பேச விடாதிங்க.. ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ண கூடாது..!!”

“இ..இல்லமா.. பண்ணல..!! பா..பாத்துக்குறோம்..!!”


10

“அவங்க நல்லா ரெஸ்ட் எடுக்கணும்.. சீக்கிரம் பாத்துட்டு வெளில வந்துடுங்க.. சரியா..?? டாக்டர் வந்தா திட்டுவாரு.. அதுக்குத்தான் சொல்றேன்..!!”

“ம்ம்.. சரிம்மா.. தேங்க்ஸ்..!!”

நர்சுக்கு ஒரு நன்றியை உதிர்த்துவிட்டு.. தணிகை நம்பியும் பூவள்ளியும் அவசரமாக அந்த அறைக்குள் நுழைந்தனர்.. ஆதிராவின் முகத்தை ஒருவித பரிதவிப்புடன் தேடினர்..!! காய்ந்த கொடியாய் துவண்டு போய் கிடந்த ஆதிராவை பார்த்ததுமே.. பூவள்ளியின் விழிகளில் முணுக்கென்று கண்ணீர் பூத்துக் கொண்டது..!!

“அம்மாஆஆ..!!” என்று ஆதிரா பரிதாபமாக அழைத்தவிதம், பூவள்ளியின் அழுகையை அதிகமாக்கவே செய்தது.

“ஆதிராஆஆ..!!”

தழதழத்த குரலில் சொன்ன பூவள்ளி.. அவசரமாய் ஆதிராவை நெருங்கி அவளுடைய கையை ஆதரவாக பற்றிக் கொண்டாள்..!! பூவள்ளிக்கு பின்புறமாக வந்து நின்ற தணிகை நம்பி.. மகளின் முகத்தை கவலையுடன் பார்த்தவாறே.. மனைவியின் தோள் பற்றி ஒரு நம்பிக்கை அழுத்தம் கொடுத்தார்..!!

“எ..என்னம்மா ஆச்சு எனக்கு..??” ஆதிரா களைப்புடன் பேசினாலும், அவளுடைய வார்த்தைகளில் இப்போது ஒரு தெளிவு வந்திருந்தது.

“ஒ..ஒன்னும் ஆகலடா.. ஒன்னும் இல்ல உனக்கு..!! எ..எல்லாம் சரி ஆய்டும்..!!” பூவள்ளியிடமோ ஒருவித பதற்றம்.

“எ..எப்படி அடிபட்டுச்சு.. எ..எதாச்சும் ஆக்சிடன்டா..??”

ஆதிரா அவ்வாறு முனகலாக கேட்க.. பூவள்ளியும் தணிகை நம்பியும் சற்றே குழப்பமாக நெற்றியை சுருக்கினார்கள்..!! பிறகு.. அந்த குழப்பத்தை பொருட்படுத்தாது, பூவள்ளி மகளுக்கு பதில் சொன்னாள்..!!

“ஆ..ஆமாண்டா.. நீயும் சிபியும் கார்ல போறப்போ.. ஒ..ஒரு சின்ன ஆக்சிடன்ட்..!! ப..பயப்படுறதுக்குலாம் ஒன்னும் இல்ல ஆதிரா.. சீக்கிரம் சரி ஆய்டும்னு டாக்டர் சொல்லிட்டாங்க.. நீ தெம்பா இரும்மா..!!”

“ஓ..!! அ..அத்தானுக்கு..??” கவலையுடன் கேட்ட ஆதிராவின் கண்களில் ஒரு கலக்கம்.

“சி..சிபிக்கா..?? சிபிக்கு ஒன்னும் இல்லடா.. சின்ன அடிதான்..!! நல்லா இருக்கான்.. மருந்து வாங்க போயிருக்கான்.. இப்போ வந்துருவான்..!!”

என்று பூவள்ளி சொன்னதும்.. ஆதிராவிடம் அந்த கலக்கம் மறைந்து முகத்தில் ஒருவித நிம்மதி படர்ந்தது.. இமைகளை ஒருமுறை மூடி திறந்தாள்..!! அப்புறம்.. அந்த அறையை சுற்றி ஒருமுறை பார்வையை சுழற்றினாள்.. சுழற்றிவிட்டு அம்மாவை ஏறிட்டு கேட்டாள்..!!

“எ..எத்தனை நாளாச்சு..??”

“ஒ..ஒருநாள்தான்டா ஆகுது.. நே..நேத்து காலைலதான்..!!” சொல்லும்போதே பூவள்ளிக்கு கண்களில் நீர் தளும்பியது.

“ஹ்ம்ம்ம்ம்..!!!!!” ஆதிரா நீளமாக ஒரு பெருமூச்சு விட்டாள். பிறகு முகத்தை ஒருமாதிரி வேதனையுடன் சுருக்கியவாறே,

“கால் ரொம்ப வலிக்குதும்மா..!!” என்றாள்.

11

பூவள்ளிக்கு இப்போது அழுகை முட்டிக்கொண்டு வந்தது.. துக்கம் கட்டுப்படுத்த வாயை பொத்திக் கொண்டாள்.. மகளின் கால்களை ஒருமுறை திரும்பி பார்த்தாள்..!! ஆதிராவின் வலது முழங்காலுக்கு கீழே ஒரு கட்டு போடப்பட்டிருந்தது.. உருக்குலைந்த காரின் ஏதாவது ஒரு ஸ்டீல் தகடு ஏற்படுத்திய வெட்டுக்காயமாக இருக்க வேண்டும்..!! அவளுக்கு அளிக்கப்பட்டிருந்த பெயின் கில்லர் இப்போது சற்று செயலிழக்க ஆரம்பிக்கவும்.. அந்த இடத்தில் இருந்து வேதனை கிளம்ப ஆரம்பித்திருக்க வேண்டும்..!!

“ரொம்ப வலிக்குதாடா..??”

“ம்ம்ம்ம்..!!”

“கொஞ்சம் பொறுத்துக்கோம்மா.. சீக்கிரம் சரி ஆய்டும்.. என்ன..!!”

ஆறுதலான வார்த்தைகளை தவிர வேறொன்றும் இல்லை பூவள்ளியிடம்.. மகளின் தலையை இதமாக தடவிக் கொடுத்தாள்..!! ஆதிரா இப்போது அசதி தோய்ந்த கண்களுடன் அப்பாவை ஏறிட்டு பார்த்தாள்.. அவ்வாறு பார்த்ததுமே அவளுடைய முகத்தில் ஒரு சிறிய மலர்ச்சி..!!

“டி-ஷர்ட் உங்களுக்கு நல்லா இருக்குப்பா..!!” என்றாள் மெலிதான புன்னகையுடன்.

ஆதிரா திடீரென அவ்வாறு சொல்வாள் என்று தணிகை நம்பி எதிர்பார்த்திரவில்லை.. ஒருகணம் திகைத்தவர், தான் அணிந்திருந்த டி-ஷர்ட்டை ஒருமுறை தலைதாழ்த்தி பார்த்தார்.. பிறகு மகளின் முகத்தை ஏறிட்டு, தடுமாற்றமாக சொன்னார்..!!

“ஆ..ஆமாம்.. ஆமாம்மா.. ந..நல்லாருக்கு..!!”

அவர் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே.. அவருக்கு பின்புறமாக பார்வையை வீசிய ஆதிரா.. முகத்தில் ஒரு புதுவித வெளிச்சம் பிறந்தவளாய்..

“அ..அத்தான்..!!” என்றாள்.

உடனே, பூவள்ளியும் தணிகை நம்பியும் தலையை திரும்பி பின்பக்கமாக பார்த்தார்கள்..!! அறை வாசலில்.. கண்களில் நீரும், கைகளில் மருந்துப்பையுமாக சிபி நின்றிருந்தான்.. அவனுடைய இடது நெற்றியில் ஒரு பிளாஸ்திரி.. முகத்தில் ஆங்காங்கே ரத்த தீற்றல்கள்..!! தூரத்திலிருந்தே சிலவினாடிகள் ஆதிராவை பார்த்துக் கொண்டிருந்தவன்.. இப்போது அவசரமாய் நகர்ந்து இவர்களை நெருங்கினான்..!! கையிலிருந்த மருந்துப்பையை டேபிளில் வைத்துவிட்டு.. ஆதிராவின் கரமொன்றை பற்றிக்கொண்டான்..!!

“ஆதிராஆஆ..!!” காதலும் தவிப்புமாய் சொன்னான்.

“உ..உங்களுக்கு ஒன்னும் ஆகலையே..??” கவலையும் கனிவுமாய் கேட்டாள் ஆதிரா.

“இ..இல்லடா.. எனக்கு ஒன்னும் இல்ல.. ஜஸ்ட்.. நெத்தில சின்ன அடி.. அவ்வளவுதான்..!!”

விலாப்பகுதியின் வெட்டுக்காயத்தை மனைவியிடம் சொல்லாமல் தவிர்த்து விட்டிருந்தான் சிபி.. தனக்கு ஏற்பட்டிருக்கிற காயம் அவளுடைய கவலையை அதிகரித்து விடக் கூடாது என்பதே அவனது எண்ணமாக இருந்தது..!! ஆதிரா இப்போது நீளமாக ஒரு நிம்மதி பெருமூச்சை வெளிப்படுத்தினாள்..!!

12

சிபி அவளுடைய கையை பற்றியிருந்தது அவளுக்கு இதமாக இருந்தது.. அதே சமயம் அவளுக்குள் ஒரு ஆச்சர்ய உணர்வும் ஓடியது.. ‘அத்தானுக்கு தன்மீது இத்தனை பிரியமா..?’ என்பது மாதிரியான ஆச்சர்யம்..!! தனது கையைப் பற்றியிருந்த சிபியின் கையை பார்த்தாள்.. அவன் கையில் அணிந்திருந்த கடிகாரத்தின் மீது ஆதிராவின் பார்வை நிலைத்தது..!! உடனே இன்னுமொரு ஆச்சரியத்துக்கு உள்ளானவள்..

“எ..என்னத்தான்.. வாட்ச்லாம் கட்டிருக்கிங்க..?? உ..உங்களுக்குத்தான் வாட்ச் கட்டுறதே பிடிக்காதே..??”

என்று திக்கி திணறி கேட்க, சிபி மெலிதாக அதிர்ந்தான். ஆதிராவின் முகத்தை குழப்பமாக ஒரு பார்வை பார்த்தான்..!!

“எ..என்ன சொல்ற ஆதிரா.. நீ..நீதான எனக்கு இந்த வாட்ச் ப்ரசன்ட் பண்ணின..??”

“நானா..????”

இப்போது ஆதிராவின் முகத்தில் ஒரு சிறு அதிர்ச்சி..!! தலைக்குள் குடைச்சல் எடுப்பது மாதிரி ஒரு உணர்வு அவளுக்கு.. அவஸ்தையாக முகத்தை சுளித்தவள், அப்படியே கண்களையும் நெற்றியையும் சுருக்கிக் கொண்டாள்..!! அவளுடைய பேச்சிலும், கேள்விகளிலும் மற்ற மூவரும் சற்றே குழம்பிப் போயிருந்தனர்.. அந்த குழப்பத்தின் ரேகைகள் படர்ந்திட்ட முகத்துடன், அவளையே அசைவில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தனர்..!!

இப்போது.. ஆதிரா மூடிய விழிகளை மெல்ல திறந்தாள்.. சுற்றி நின்ற மூவரையும் மருள மருள ஒரு பார்வை பார்த்தாள்..!! பிறகு அந்த பார்வையை, அறையை சுற்றி ஒருமுறை அலைபாய விட்டாள்.. அப்புறம் திடீரென ஞாபகம் வந்தவளாய் அப்பாவிடம் திரும்பி கேட்டாள்..!!

“தாமிரா எங்கப்பா.. காணோம்..??”

அவ்வளவுதான்..!! மற்ற மூவரும் இப்போது ஒரு உச்சபட்ச அதிர்ச்சியை உள்வாங்கினார்கள்..!! மூவருக்குள்ளும் ஒரு கலவர உணர்வு ஜிவ்வென்று ஓட.. ஆதிராவின் முகத்தையே ஒருவித மிரட்சியுடன் பார்த்தார்கள்..!! ஆதிராவும் என்னவென்று புரியாமல் அவர்களுடைய முகத்தையே மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டிருந்தாள்..!! ஓரிரு வினாடிகள்.. அவர்களிடம் இருந்து எந்த பதிலும் வராமல் போகவும்,

“சொல்லுங்கப்பா.. தாமிரா எங்க போயிருக்கா..?? எ..எனக்கு அடிபட்டது அவளுக்கு தெரியாதா..??”

என்று ஆதிராவே திரும்பவும் கேட்டாள்..!! மகளின் கேள்விக்கு பதில் சொல்லாமல்.. அவளுடைய முகத்தை திகைப்பாக பார்த்த பார்வையையும் மாற்றிக்கொள்ளாமல்.. மருமகனை திணறலாக அழைத்தார் தணிகை நம்பி..!!

“சி..சிபி..!!”

“எ..என்ன மாமா..??” சிபியும் மிரட்சி நீங்காத விழிகளுடன் தணிகை நம்பியை திரும்பி பார்த்தான்.

“டா..டாக்டரை வர சொல்லுப்பா..!!”

தணிகை நம்பி சொல்லவும், ஒருவித தடுமாற்றத்துடனே சிபி எழுந்துகொண்டான்.. ஆதிராவை பார்த்தவாறே அறை வாசலுக்கு நகர்ந்தான்..!! எதுவும் புரியாத ஆதிரா அப்பாவை திரும்ப திரும்ப கேட்டுக் கொண்டிருந்தாள்..!!

“எ..என்னப்பா ஆச்சு.. சொல்லுங்கப்பா..!! எ..என்னாச்சு..??”
Like Reply
#23
அதன்பிறகு ஒருவாரம் கழித்து..!! அப்பல்லோ மருத்துவமனையின் நரம்பியல் துறையை சார்ந்த கட்டிடத்தில் ஒரு அறை..!! அறைக்கு வெளியே அறையப்பட்டிருந்த மரப்பலகையில்.. Dr. Sannidhanam, MBBS, MD, DM (Neurology) என்கிற எழுத்துக்கள் வெண்ணிறத்தில் பளிச்சிட்டன..!!


10

அறைக்கு உள்ளே கிடந்த சுழல் நாற்காலியில்.. மூளை மற்றும் நரம்பியல் நிபுணர் சந்நிதானம் அமர்ந்திருந்தார்.. கைகளை மடித்து டேபிளில் ஊன்றி, நாற்காலியில் இருந்து முன்னுக்கு வந்திருந்தார்..!! டேபிளுக்கு இந்தப்பக்கம் கிடந்த இரண்டு நாற்காலிகளில்.. சீரியஸான முகத்துடன் சிபியும், தணிகை நம்பியும் அமர்ந்திருந்தனர்.. டாக்டர் சொல்கிற விஷயங்களை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தனர்..!!

“நீங்க என்ன படிச்சிருக்கீங்க மிஸ்டர் சிபி..??” டாக்டர் சிபியை கேட்டார்.

“பி.எஸ்.ஸி விஷுவல் கம்யுனிகேஷன்..!!”

“எந்த காலேஜ்..??”

“ஆதித்யா இன்ஸ்டிட்யூட்..!!”

“ஹ்ம்ம்..!! த்ரீ இயர்ஸ் கோர்ஸ்ல..??”

“எஸ்..!!”

“காலேஜ்ல முதல்நாள் அனுபவம் உங்களுக்கு எப்படி இருந்தது.. அதைப்பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்..!!”

டாக்டர் அவ்வாறு கேட்கவும், சிபி சற்றே நிதானித்தான்..!! திடீரென எதற்காக இதைப்பற்றி கேட்கிறார் என்று மனதுக்குள் எழுந்த கேள்வியை அலட்சியம் செய்தவாறே.. கல்லூரியின் முதல்நாள் ஞாபங்களை மனதுக்குள் ஒருங்கிணைத்து.. ஒருசில வினாடிகளுக்கு பிறகு மெலிதான குரலில் ஆரம்பித்தான்..!!

“ஆக்சுவலா.. ஃபர்ஸ்ட் டே நான் லேட்டாத்தான் காலேஜுக்கு போனேன் டாக்டர்..!! நல்லா ஞாபகம் இருக்கு.. கே.ஆர்.எஸ்.ரோட்ல அன்னைக்கு சரியான ட்ராஃபிக் ஜாம்..!! நான் காலேஜ் போறப்போ.. இன்டக்சன் ப்ரோக்ராம் அல்ரெடி ஸ்டார்ட் ஆகியிருந்தது..!! எங்க ப்ரொஃபஸர் ஒருத்தர் தாமரைக்கண்ணன்னு.. அவர்தான் ஸ்பீச் குடுத்துட்டு இருந்தாரு.. அவர்ட்ட மன்னிப்பு கேட்டுட்டு ஹாலுக்குள்ள என்டர் ஆனேன்..!! என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட் பரிதியை அப்போத்தான் ஃபர்ஸ்ட் டைம் பார்த்தேன்.. அவன் உக்காந்திருந்த பெஞ்ச்லருந்து நகர்ந்து.. எனக்கு இடம்..” சிபி சொல்லிக்கொண்டிருக்கையிலேயே அவனை இடைமறித்த டாக்டர்,

“அன்னைக்கு நீங்க என்ன கலர் ஷர்ட் போட்டிருந்திங்கன்னு ஞாபகம் இருக்கா..??” என்று திடீரென கேட்க, சிபியிடம் படக்கென ஒரு திகைப்பு.

“அ..அது.. அது… அ..அன்னைக்கு..”

என்று பதில் சொல்ல திணறினான்.. அன்று அவன் அணிந்திருந்த சட்டையின் நிறத்தை நினைவுகூர்கிற முயற்சியுடன் நெற்றியை சுருக்கிக்கொண்டான்..!!

“ஹாஹா.. ரொம்ப யோசிக்க வேணாம்..!! இட்ஸ் ஓகே.. விடுங்க..!!”

புன்னகையுடன் சொன்ன டாக்டர்.. சிபியின் கண்களையே சிலவினாடிகள் கூர்மையாக பார்த்தார்..!! சிறிது இடைவெளிக்கு பிறகு மிகத்தெளிவான குரலில் மீண்டும் பேச ஆரம்பித்தார்..!!

“See.. ஞாபக மறதின்றது quite natural.. எல்லாருக்குமே இருக்குறதுதான்..!! லைஃப்ல நடந்த எல்லா சின்ன சின்ன விஷயங்களும், ஒருத்தனுக்கு அப்படியே ஞாபகத்துலயே இருக்க ஆரம்பிச்சா.. அவன் சீக்கிரமே மனநிலை சரியில்லாதவனா மாறிடுவான்..!! தேவை இல்லாத விஷயங்களை அப்பப்போ மறந்துடுறது.. மனசுக்கும் மூளைக்கும் ரொம்ப ரொம்ப நல்லது..!!”

“ம்ம்..!!”

11

“அம்னீஷியாவும் அந்த மாதிரிதான்.. ஒருவித ஞாபக குறைபாடு..!! என்ன ஒன்னு.. நேச்சுரலா ஏற்படவேண்டிய ஞாபக மறதி.. உங்க வொய்ஃபுக்கு தலைல அடிபட்டதன் மூலமா.. ஆக்சிடண்டலா ஏற்பட்டிருக்கு.. அவ்வளவுதான்..!! இதுல பயப்படுறதுக்குலாம் எதுவும் இல்ல..!!”

“புரியுது டாக்டர்..!!”

“முக்கியமான ஒரு விஷயத்தை நீங்க நல்லா புரிஞ்சுக்கணும்.. மூளைன்றது ரொம்பவே காம்ப்ளிகேட்டட் சமாச்சாரம்..!! நம்மளோட அஞ்சு புலன்கள்ல இருந்து வர்ற உணர்வுகளை ஞாபகங்களா கன்வர்ட் பண்றதா ஆகட்டும்.. அதை நினைவடுக்குகள்ல ஸ்டோர் பண்றதா ஆகட்டும்.. தேவையற்ற நினைவுகளை சப்-கான்ஷியஸ் மைண்ட்க்கு ட்ரான்ஸ்ஃபர் பண்றதா ஆகட்டும்.. தேவைப்படுறப்போ மறுபடியும் அந்த நினைவுகளை ரெகவர் பண்றதா ஆகட்டும்.. It’s all a kind of magic..!! எவ்வளவோ ஆராய்ச்சிக்கு அப்புறமும்.. மூளையை யாரும் இன்னும் முழுசா புரிஞ்சுக்க முடியலைன்னுதான் சொல்லியாகணும்..!!”

“ம்ம்..!!”

“மருந்து மாத்திரையால அம்னீஷியாவை குணப்படுத்த முடியாது.. மன அமைதிதான் அந்த ஞாபகங்களை திரும்ப கொண்டுவர முடியும்..!!”

“ம்ம்..!!”

“கடந்த ஒருவருஷமா நடந்த சம்பவங்கள்தான், உங்க வொய்ஃபோட மெமரில இருந்து அல்மோஸ்ட் சுத்தமா துடைச்சு எடுக்கப்பட்டிருக்கு.. அதுக்கு முந்தி நடந்ததெல்லாம் அவங்களுக்கு நல்லாவே ஞாபகம் இருக்கு..!! மறந்து போன இந்த விஷயங்கள் எல்லாம்.. கண்டிப்பா அவங்களோட சப்-கான்ஷியஸ் மைண்ட்ல இருக்கும்..!! அதை திரும்ப அவங்களுக்கு நினைவுபடுத்த சில தெரபிலாம் இருக்கு.. அது வொர்க்கவுட் ஆகலாம்.. ஆகாமலும் போகலாம்..!! ஆனா.. என்னைக்கேட்டா.. அவங்க இப்போ இருக்குற நிலைமைல அதெல்லாம் தேவை இல்லைன்னுதான் சொல்லுவேன்..!! இப்போதைக்கு அவங்களோட ஒரே தேவை.. கம்ப்ளீட் ரெஸ்ட்தான்.. மனசுக்கும், உடம்புக்கும்..!!”

”பு..புரியுது..!!”

“இந்த மாதிரி ஞாபகங்கள் தொலைஞ்சு போனதுல அவங்க ரொம்பவே கன்ஃப்யூஸ்டா இருக்காங்க..!! என்னன்னு சொல்ல முடியாத மாதிரி ஒரு பயம்.. என்ன நடந்துச்சுன்னு தெரிஞ்சுக்குறதுல ஒரு அவசரம்..!! அந்த மாதிரி அவசரத்துக்கு இடம் குடுக்காம.. அவங்க மனசு அமைதியா இருக்குறது ரொம்ப முக்கியம்..!! நீங்கதான் அதையெல்லாம் நல்லா புரிஞ்சு அவங்களை கவனிச்சிக்கணும்..!!”

“கண்டிப்பா டாக்டர்..!!”

” ஹ்ம்ம்.. உங்களுக்கு மேரேஜ் ஆகி எத்தனை நாளாச்சுன்னு சொன்னிங்க..??”

“நாற்பது நாள் ஆகுது..!!”

“இன்னும்.. ஹனிமூன் அந்த மாதிரிலாம் எங்கயும் தனியா போகல..??”

“இ..இல்ல டாக்டர்.. எங்கயும் போகல..!!”

“Then, this is the right time..!! அவங்களை எங்கயாவது வெளியூர் கூட்டிட்டு போங்க.. மனசுக்கு ப்ளசன்ட்டா இருக்குற மாதிரி ஏதாவது ஒரு இடம்.. அமைதியா பசுமையா ஏதாவது ஒரு சூழல்.. கொஞ்ச நாள் அவங்க அங்க இருக்கட்டும்..!! அவங்களோட சப்-கான்ஷியஸ் மைண்ட்ல இருக்குற விஷயங்கள், கான்ஷியஸ் மைண்ட்க்கு திரும்பவர.. அந்த மாதிரியான மெண்டல் ரெஸ்ட் ரொம்ப ஹெல்ப் பண்ணும்..!! ஒரு பூ மலர்ற மாதிரி அது தானா இயல்பா நடக்கணும்.. ‘அதை ஞாபகப் படுத்துறேன்.. இதை ஞாபகப் படுத்துறேன்’னு நீங்களா அவங்களுக்கு ஓவர் ஸ்ட்ரெஸ் குடுக்காதிங்க..!! புரியுதா..??”

“புரியுது டாக்டர்.. I will take care of her..!!”

“குட்..!! வேற ஏதாவது உங்களுக்கு டவுட் இருக்கா..??”

அவ்வளவுதான் தான் பேச நினைத்தது என்பதை.. அந்தக் கேள்வியின் மூலம் உணர்த்தினார் சந்நிதானம்..!! ஆதிராவை அணுகுகிற முறை பற்றி மேலும் தங்களுக்கு இருந்த சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்று.. சிபியும் தணிகை நம்பியும் அந்த அறையை விட்டு கிளம்ப.. அதன்பிறகும் சிறிது நேரம் எடுத்துக் கொண்டனர்..!!

12

அறையை விட்டு வெளியே வந்தவர்கள்.. இறுக்கமான முகத்துடனே இணைந்து நடைபோட்டனர்..!! ஆதிராவை அட்மிட் செய்ந்திருந்த வார்ட்.. அந்தக் கட்டிடத்திலேயே இன்னொரு மூலையில் இருந்தது..!! அந்த வார்டை அடைந்து.. அவள் அனுமதிக்கப்பட்டிருந்த தனியறைக்குள் நுழைந்தனர்..!! ஏதோ ஒரு சூனியத்தை வெறித்துக் கொண்டிருந்த ஆதிராவும்.. மகளின் முகத்தை கவலையுடன் பார்த்தவாறு அமர்ந்திருந்த பூவள்ளியும் பார்வையில் பட்டனர்..!! ஆதிராவின் தலையில் இப்போது பேண்டேஜ் இல்லை.. நெற்றியில் மட்டும் ஒரு ப்ளாஸ்திரி..!!

“டாக்டரை பாத்தாச்சு.. கெளம்பலாம்..!!”

தணிகை நம்பி சொன்னதும்.. படுக்கையில் இருந்து படக்கென எழுந்து கொண்டாள் பூவள்ளி..!! ஆதிராவோ, அப்பாவின் வார்த்தைகள் ஓரிரு வினாடிகள் கழித்தே காதில் விழுந்த மாதிரி.. மிக பொறுமையாக எழுந்து நின்றாள்..!! அருகில் சாய்ந்திருந்த வாக்கிங் ஸ்டிக்கை கையில் எடுத்து.. அதன் உதவியுடன் ஒரு காலை மட்டும் இழுத்து இழுத்து நடக்க ஆரம்பித்தாள்..!!

நால்வரும் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தார்கள்.. தயாராக நின்றிருந்த டாக்ஸியில் ஏறிக் கொண்டார்கள்..!! சிபி ட்ரைவர் சீட்டுக்கு அருகில் அமர்ந்து கொண்டான்.. மற்ற மூவரும் பின்சீட்டில்..!! டாக்ஸி கிளம்பியது.. மருத்துவமனை வளாகத்தை விட்டு வெளியே வந்ததும், சற்றே வேகம் எடுத்து விரைந்தது..!! சிறிது நேரம் சாலைப் போக்குவரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஆதிரா.. பிறகு ஏதோ ஞாபகம் வந்தவளாய் அப்பாவிடம் திரும்பி கேட்டாள்..!!

“இப்போ எங்கப்பா போறோம்..??”

“நம்ம வீட்டுக்கு போறோம்மா..!!”

“அகழிக்கா..??” ஆதிரா அவ்வாறு கேட்கவும், மற்ற மூவரிடமும் மெலிதான ஒரு திகைப்பு.

“இ..இல்லம்மா.. இங்க.. மைசூர்ல இருக்குற வீட்டுக்கு..!!”

பூவள்ளியே சமாதானமான குரலில் மகளுக்கு பதில் சொன்னாள்..!! அடர்த்தியான மரங்களை இருபுறமும் ஏந்தியிருந்த அந்த தார்ச்சாலையில் கார் சென்றுகொண்டிருக்க.. ஆதிரா இப்போது இமைகள் இரண்டையும் மூடி பின்சீட்டில் தலை சாய்த்துக் கொண்டாள்..!!

பூவள்ளிக்கும் தணிகை நம்பிக்கும் அகழிதான் பூர்வீகம்..!! செல்வத்துக்கு சற்றும் குறைவில்லாத குடும்பத்தில் பிறந்தவர்கள் இருவரும்..!! பூவள்ளி புவனகிரியின் வழித்தோன்றல்.. தணிகை நம்பி அந்த ஊரிலேயே இன்னொரு செல்வந்தரின் ஆண்வாரிசு..!! நாற்பது வருடங்களுக்கும் மேல் அகழியிலேயே வாழ்வை கழித்திருந்தவர்கள்.. ஒருவருடம் முன்பாக மைசூருக்கு இடம்பெயருகிற மாதிரியான குடும்ப சூழல்..!! அத்தகைய சூழல் உருவாக காரணமென ஆதிராவின் தங்கை தாமிராவுக்கு நேர்ந்ததை சொல்லலாம்..!!

ஆனால்.. அந்த நிகழ்வெல்லாம் ஆதிராவுக்கு இப்போது நினைவில் இல்லை..!! வந்து ஒருவருடம் ஆகப் போகிறது.. மைசூரையே புது ஊர் போல வெறிக்க வெறிக்க பார்க்கிறாள்..!! விபத்து மயக்கத்தில் இருந்து ஆதிரா விழித்து எழுந்ததும்.. அப்பா அணிந்திருந்த டி-ஷர்ட்டை பார்த்து அவள் வியப்புற்றதற்கு காரணம் இருக்கிறது.. மைசூர் வந்த பிறகுதான் தணிகை நம்பி டி-ஷர்ட் எல்லாம் அணிகிறார்.. அகழியில் இருக்கையில் அந்தப்பழக்கம் அவருக்கு இல்லை..!!

கால்மணி நேர பயணத்துக்கு பிறகு.. காரின் வேகம் கொஞ்சம் கொஞ்சாய் குறைந்து.. இளஞ்சிவப்பு நிற வெளிப்பூச்சுடன் காணப்பட்ட அந்த இரண்டடுக்கு வீட்டின் முன்பாக சென்று நின்றது..!!

“வீடு வந்துடுச்சும்மா..!!”

பூவள்ளி சொன்னதை தொடர்ந்து நால்வரும் காரில் இருந்து இறங்கினார்கள்..!! தரையில் அழுத்தமாக ஊன்றிய வாக்கிங் ஸ்டிக்குடன் நின்ற ஆதிரா.. தலையை மெல்ல நிமிர்த்தி வீட்டை ஒரு பார்வை பார்த்தாள்..!! மைசூரை வெறித்தபோது அவள் உணர்ந்த அதே அந்நியத்தன்மையை.. ஒரு வருடமாக அவள் வாழ்ந்த இந்த வீட்டை பார்க்கையிலும் உணர்ந்தாள்..!!

“என்ன ஆதிரா அப்படி பாக்குற..?? இது உன் வீடு.. உரிமையா உள்ள வா..!!”

இயல்பாக சொன்னவாறே.. சிபி ஆதிராவின் தோள் மீது கைபோட்டு இதமாக அணைத்துக் கொண்டான்..!! அவன் அவ்வாறு அணைத்துக் கொண்டதுமே.. ஆதிரா ஒரு புதுவித கூச்சத்துடன் நெளிந்தாள்.. காணாமல் போன அவளுடைய நினைவுகளில் கணவனின் நெருக்கம் தொடர்பான நினைவுகளுமே அடக்கம்.. அதனாலேயே அவளிடம் அந்த கூச்சம்..!!
Like Reply
#24
அவளது மனநிலையை உடனடியாய் புரிந்து கொண்ட சிபி.. தனது கையை அவளிடம் இருந்து விலக்கிக்கொண்டான்..!!

“பார்த்து வா ஆதிரா..!!”

என்று புன்னகையுடன் சொல்லிவிட்டு முன்னால் நடந்தான்..!! கணவன் நடந்து செல்வதையே ஆதிரா ஒரு காதல் பார்வை பார்த்தாள்.. கழுத்தில் தொங்கிய தாலியை ஒருமுறை பெருமிதமாக பார்த்துக் கொண்டாள்.. கால் தந்த வேதனையை உதடுகடித்து பொறுத்தவாறே வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தாள்..!!


13

யாருடைய வாழ்விலுமே திருமணம் என்பது ஒரு முக்கியமான நிகழ்வு.. அந்த நிகழ்வே ஆதிராவின் நினைவில் இருந்து தொலைந்து போயிருந்தது..!! அம்னீஷியாவால் பாதிக்கப்பட்டவளிடம் அவளுக்கு திருமணமாகிவிட்ட செய்தியை பூவள்ளி உரைத்தபோது.. அதிர்ந்துதான் போனாள் முதலில்..!! நம்பிக்கை அற்றவளாய் மாங்கல்யத்தையே மலங்க மலங்க பார்த்தாள்..!! ஆனால்.. அது அவளுக்கு ஒருவித இன்ப அதிர்வாகத்தான் இருந்தது.. சிறு வயதில் இருந்தே சிபி மீது அவளுக்கு இருந்த காதல்தான் அதன் காரணம்..!!

“பெரியவளாகி என்ன பண்ணப் போற..??” வீட்டுக்கு வரும் உறவினர்களின் கேள்விக்கு,

“ஐ.ஏ.எஸ் படிச்சு கலக்டர் ஆகப் போறேன்..!!” என்று குட்டி தாமிரா பதில் சொன்னால்,

“அத்தானை கட்டிக்கிட்டு பொண்டாட்டியாகப் போறேன்..!!” என்பாள் எட்டு வயது ஆதிரா.

தாய்தந்தையரை இழந்து தாய்மாமாவின் வீட்டில் தஞ்சம் புகுந்திருந்த சமயத்தில்.. தாரை தாரையாய் கண்ணீர் வடித்துக்கொண்டே இருப்பான் சிறுவன் சிபி..!! அந்நிய உணர்வோடு அனைவரையும் மிரட்சியாக பார்ப்பான்.. ஆறுதலாய் அவனுடைய கண்ணீர் துடைக்க நீளும் ஆதிராவின் கரங்கள்..!!

“அழாதீங்க அத்தான்.. உங்களுக்குத்தான் நாங்கல்லாம் இருக்கோம்ல..??”

அப்போதிருந்தே அவன் மீது ஒரு பரிவு கலந்த பாசம்.. பள்ளியில் அவன் முதல் மாணவனாக திகழ, அவன் மீது ஒரு மதிப்பு..!! தாமிராவை அவர்களுடன் சேர்த்து கொண்டு.. மூவரும் ஒருவர் கையை அடுத்தவர் பற்றி வளையம் அமைத்துக்கொண்டு.. ஆகாயத்தை அண்ணாந்து பார்த்து..

“கிறுகிறு மாம்பழம்.. கிய்யா கிய்யா மாம்பழம்..!! கிறுகிறு மாம்பழம்.. கிய்யா கிய்யா மாம்பழம்..!!”

என்று திரும்ப திரும்ப பாடியவாறே கிறுகிறுவென சுழலுவார்கள்..!! தலை சுற்றலை தாக்கு பிடிக்கமுடியாமல் தரையில் சரிந்து.. மல்லிகைச் சிதறலாய் மூவரும் வெள்ளைச் சிரிப்பை சிந்துவார்கள்..!! ஆதிராவுக்கு அப்போது சிபி மீது ஒரு சினேக உணர்வு பிறக்கும்..!!

அவனது பெண்மைத்தனமான வட்ட முகத்தில்.. அரும்பு மீசை வளர ஆரம்பித்த சமயத்தில்.. அவனிடம் மிளிர்ந்திட்ட அந்த வசீகரம்.. ஆதிராவின் மனதை சொக்கிப்போக வைக்கும்..!! பட்டப் படிப்புக்கென சிபி வெளியூர் பயணிக்கையில்.. அவனுக்கு அருகிலேயே இருந்திட முடியாதா என்பது போல.. இவளுக்குள் ஒரு ஏக்க உணர்வு எழும்..!! பரீட்சை விடுமுறைக்கென அவன் அகழி திரும்பியிருக்கையில்.. அவனுக்கு அருகிருக்க இவளுக்கு வாய்ப்பிருந்தும்.. இயல்பாக நடந்திட முடியாத மாதிரியாய் ஒருவித வெட்க உணர்வு..!!

இப்படி எல்லாவித உணர்வுகளும் அவளுக்குள் கொஞ்சம் கொஞ்சமாய் சேர்ந்து.. அவள் வளர வளர, அந்த உணர்வுகளும் அவளுடனே வளர்ந்து.. அவள் பருவம் எய்திய காலத்தில் ஒரு அசுர உருவம் கொண்டு அவளுக்குள் நின்றது.. அந்த உருவத்திற்கு காதல் என்றே நாம் பெயரிட வேண்டும்..!! சிபியிடம் இதுவரை வெளிப்படையாக சொல்லாவிடிலும்.. சிறுவயதில் இருந்தே அவன் மீதான காதலை அவள் வளர்த்து வந்தது என்னவோ நிஜமான நிஜம்..!!

அந்த காதலால்தான்.. நினைவில் இல்லையென்றாலும், அவனுடனான திருமணத்தை அவளால் இனியதொரு அதிர்வாக எடுத்துக் கொள்ள முடிந்தது..!! அதே காதலால்தான்.. மருத்துவமனையில் இருந்து திரும்பிய அன்றைய இரவில்.. இருவரும் ஒருபடுக்கையை பகிர்ந்துகொள்ள நேர்ந்த சமயத்தில்.. தயக்கத்துடன் அவன் முதலில் இவளது கை பற்றிக் கொள்ள.. தானாகவே இவள் பிறகு அவனது மார்பில் தலை சாய்த்துக் கொண்டாள்..!!

ஆனால்.. தனக்கு திருமணம் நடந்த விஷயத்தை போல.. தங்கையின் விஷயத்தை அவ்வளவு எளிதாக ஆதிராவால் எடுத்துக்கொள்ள முடியவில்லை..!! காலில் தைத்த முள், நடக்க நடக்க இன்னும் ஆழமாக உள்ளிறங்குமே.. அதேமாதிரி.. அந்த விஷயம் நாளாக நாளாக அவளுடைய புத்தியில் ஆழமாக ஆணி திருகிக் கொண்டிருந்தது..!!

14

“தா..தாமிராக்கு என்னம்மா ஆச்சு.. சொல்லும்மா..!!” தவிப்புடன் தாயிடம் கேட்டாள் ஆதிரா.. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த சமயத்தில்..!!

“எ..என்னாச்சுன்னு தெரியலடா.. காணாம போயிட்டா..!! எங்க போனான்னே தெரியாம.. மாயமா மறைஞ்சு போயிட்டா..!!”

“என்னம்மா சொல்ற நீ..?? எ..எப்படி.. எப்படி திடீர்னு காணாம போவா..??”

ஆதிராவின் கேள்விக்கு பூவள்ளியால் உடனடியாக பதில் சொல்ல முடியவில்லை.. ஆதங்கத்துடன் இவளையே ஒரு பார்வை பார்த்தாள்.. அப்படியே கண்களை சுருக்கி நெற்றியை பிசைந்தாள்.. உள்ளத்தில் எழுந்த துக்கத்தை உதடுகள் கடித்து அடக்க முயன்றாள்.. அதையும் மீறி அவளுடைய கண்களில் கண்ணீர் தளும்பியது..!!

“சொல்லும்மா.. என்ன நடந்துச்சுன்னு சொன்னாத்தான எனக்கும் தெரியும்..??” ஆதிரா பொறுமையில்லாமல் கேட்க,

“குறிஞ்சி அவளை கொண்டு போய்ட்டாடி.. போதுமா..??” பூவள்ளி வெடுக்கென்று சொன்னாள்.

குறிஞ்சி என்ற பெயரை கேட்டதுமே ஆதிராவின் முகத்தில் குப்பென்று ஒரு திகைப்பு.. அம்மாவின் முகத்தையே மிரட்சியான விழிகளுடன் பார்த்தாள்.. குரல் தெளிவில்லாமல் குழறலாக கேட்டாள்..!!

“கு..குறிஞ்சியா..????”

“ஆமாம்..!! நம்ம வனக்கொடியே கண்ணால பாத்திருக்கா.. அவதான் உன் தங்கச்சியை கடைசியா பாத்தவ..!! அங்க தொட்டு இங்க தொட்டு.. கடைசில நம்ம தாமிராவையும்..!!”

கண்களில் வழிந்த நீரை துடைத்துக்கொண்டே சொன்னாள் பூவள்ளி..!! வனக்கொடி என்பது, அகழியில் அவர்களுடைய வீட்டில் பணிபுரியும் ஐம்பது வயது பணிப்பெண்.. சிபி, ஆதிரா, தாமிரா என மூவரையும் சிறு வயதில் இருந்தே கவனித்துக் கொண்டவள்..!!

“அம்மா..!!”

“சொல்லுடா..!!

“எ..என்ன நடந்துச்சுன்னு எனக்கு கொஞ்சம் தெளிவா சொல்லேன்.. ப்ளீஸ்..!! வனக்கொடி என்ன பாத்தாங்க..??”

ஆதிரா அவ்வாறு கேட்கவும், பூவள்ளி நீளமாக ஒரு பெருமூச்சை சிந்தினாள்.. சில வினாடிகள் அமைதியாக இருந்தாள்.. பிறகு தொண்டையை ஒருமுறை செருமிக்கொண்டு மெல்ல பேச ஆரம்பித்தாள்..!! அவள் பேச பேச.. ஆதிரா முகத்தில் பலவித உணர்ச்சிகளுடன்.. அவற்றையெல்லாம் கவனமாக கேட்டுக் கொண்டாள்..!!

பூவள்ளி பேசி ஓய்ந்த பிறகும்.. அவள் சொல்ல நினைத்ததெல்லாம் சொல்லி முடித்த பிறகும்.. ஆதிராவின் மனம் அவள் சொன்ன விஷயங்களையே நெடுநேரம் அசை போட்டுக் கொண்டிருந்தது..!! நம்புவதற்கே கடினமான ஒரு சில விஷயங்கள்.. நானும் இதைத்தான் இத்தனை நாளாய் நம்பியிருந்தேனா என்று அவளுக்குள் ஒரு கேள்வி வேறு..!! எந்த ஒரு முடிவுக்கும் தெளிவாக அவளால் வர இயலவில்லை..!!

“வனக்கொடி சொன்னதை கேட்டுட்டு நாம சும்மா இருந்துட்டோமா.. தாமிராவை தேடி கண்டுபிடிக்க எதுவும் பண்ணலயா..??”

“என்ன பண்ணிருக்கனும்னு சொல்ற..??”

“போலீஸ்ல..??”

“எல்லாத்தையும் மறந்துட்டியா நீ..?? போலீஸ்லயும்தான் கம்ப்ளயின்ட் பண்ணினோம் ஆதிரா..!! அவங்களாலயும் எதும் செய்ய முடியல.. வனக்கொடியை துருவி துருவி கேள்வி கேட்டதோட சரி..!!”

அதற்கு மேலும் அம்மாவை துருவி துருவி கேட்க ஆதிராவுக்கு இஷ்டம் இல்லை.. அமைதியாக ‘ம்ம்’ கொட்டினாள்..!!

“ம்ம்..!!”

15

“ஏதோ நம்ம கெட்ட நேரம்.. தாமிராவை இழந்துட்டோம்.. அங்கயே இருந்து உன்னையும் இழந்துடுவோமோன்னு எங்களுக்கு பயம் வந்துடுச்சு.. அதான்டா எல்லாரும் சிபியோட கெளம்பி மைசூர் வந்துட்டோம்..!!”

“ம்ம்..!!”

மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகும்.. சில நாட்கள்.. ஆதிராவுக்கு புத்தி குழப்பமாகவும், மன அழுத்தமாகவுமே கழிந்தன..!! ஒருவருடமாக வாழ்ந்த வீட்டின் ஒவ்வொரு மூலையையும்.. புதிதாக பார்ப்பது போலவே மிரட்சியுடன் பார்த்தாள்..!! வீட்டில் அவளுடைய பொருட்களை வைத்திருந்த இடமெல்லாம் மறந்து போயிருந்தன.. விரலில் முளைத்திருந்த சிபி அளித்த மோதிரம் வித்தியாசமாக காட்சியளித்தது..!! பேஸ்ட், ப்ரஷ், சோப்பு, உள்ளாடைகள் முதற்கொண்டு.. எதை தேடிக் கண்டுபிடிப்பதானாலும் அம்மாவின் துணை தேவைப்பட்டது..!!

“மதியம் வந்துடுவேன்.. எதாவதுனா கால் பண்ணு..!!”

வேலை விஷயமாக வெளியில் கிளம்பியிருந்த சிபி.. ஆதிராவின் கையில் ஒரு செல்ஃபோனை திணிக்க.. அவள் அந்த செல்ஃபோனை இப்படியும் அப்படியுமாய் புரட்டி புரட்டி பார்த்தவாறே.. கணவனிடம் குழப்பமாக கேட்டாள்..!!

“யா..யாரோட ஃபோன் இது..??”

“உன்னோடதுதான்டா..!!”

“நா..நான்.. நான் நோக்கியால வச்சிருந்தேன்.. இது..??”

“ஓ.. அதுவும் மறந்து போச்சா..?? அந்த ஓல்ட் மாடல் நோக்கியாவை ஒரு வருஷம் முன்னாடியே நீ தொலைச்சுட்ட.. மைசூர் வந்ததுல இருந்து இந்த மொபைல்தான் யூஸ் பண்ணிட்டு இருக்குற..!! இது லேட்டஸ்ட் ஸ்மார்ட்ஃபோன்.. டச் ஸ்க்ரீன்..!!”

“ம்ம்..!! இதென்ன இவ்ளோ பெருசா இருக்கு.. இதை எப்படி அன்லாக் பண்றது..??”

பரிதாபமாக கேட்ட மனைவியை பார்க்க.. சிபிக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை..!! வெளியில் செல்ல தயாராக இருந்தவன்.. அப்படியே ஆதிராவின் அருகில் அமர்ந்து.. மேலும் ஐந்து நிமிடங்கள் செலவழித்து.. அந்த செல்ஃபோனை இயக்கும் முறை பற்றி அவளுக்கு விளக்கி முடித்தே கிளம்பினான்..!!

இந்த மாதிரியான மறதி குழப்பம் ஒருபுறம் இருக்க.. வேறு மாதிரியான மன அழுத்தம் இன்னொரு புறம்..!! அகழி பற்றியும் அவளுடைய தங்கை பற்றியுமான நினைவுகளே அந்த மாதிரியான அழுத்தத்துக்கு காரணம்..!! எவ்வளவு நேரந்தான் மாத்திரையின் வீரியத்தில் மயங்கி கிடப்பது..?? விழித்திருக்கையில் எல்லாம் பலவித சிந்தனைகளுடன்.. அவளுடைய மனம் ஒருவித அழுத்தத்திலேயே தத்தளித்தது..!!

மர்மமான முறையில் மனிதர்கள் காணாமல் போவது.. அகழிக்கும் புதிதல்ல.. ஆதிராவுக்கும் புதிதல்ல..!! நூறு வருடங்களாகவே அகழியில் இது மாதிரியான சம்பவங்கள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.. ஆதிராவும் அதுபற்றியெல்லாம் நிறையவே கேள்விப் பட்டிருக்கிறாள்..!! குழந்தைகள்.. இளம்பெண்கள்.. இல்லத்தரசிகள்.. சில முதியவர்கள் கூட.. திடீர் திடீரென காணாமல் போய்விடுவார்கள்..!! காணாமல் போன நபர்களில் இதுவரை ஒருவரைக் கூட காவல்துறையால் மீட்டுக் கொடுக்க இயலவில்லை..!!

குறிஞ்சிதான் இதற்கெல்லாம் காரணம் என்பது அகழி மக்களின் அசைக்கமுடியாத நம்பிக்கை..!! நூறு வருடங்களாக.. அடுத்தடுத்து வந்த சந்ததியினருக்கு.. குறிஞ்சியின் கதை ஒட்டுமொத்தமாக திரிக்கப்பட்டே உரைக்கப்பட்டிருந்தது..!! புவனகிரியும், அகழி மக்களும் குறிஞ்சிக்கு இழைத்த அநீதி சுத்தமாக மறைக்கப்பட்டிருந்தது..!! குறிஞ்சி என்பவள் ஒரு பில்லி சூனியக்காரி எனவும்.. அவளுடைய சித்து விளையாட்டுக்களால் ஊருக்கு பல இன்னல்கள் நேர்ந்தது எனவும்.. ஆத்திரமடைந்த ஊர்மக்கள் அவளை தீயிட்டு கொளுத்தினர் எனவும்.. அப்படியும் அடங்காமல் இன்னும் ஆவியாக அலைகிறாள் எனவும்தான்.. இப்போதிருக்கிற அகழி மக்கள் குறிஞ்சியின் கதையை அறிவர்..!!

“செவப்பு அங்கி போத்திருப்பா.. உச்சந்தலைல இருந்து உள்ளங்கால் வரை அங்கிதான்.. நடக்குறாளா மெதக்குறாளா கூட தெரியாது..!! இங்க நிக்கிற மாதிரி இருக்கும்.. கண்ணு மூடி கண்ணு தெறக்குறதுக்குள்ள அங்ங்ங்க நிப்பா..!!”

“காட்டுக்குள்ள உக்காந்து தனியா அழுதுகிட்டு இருந்தா.. கைல ஏதோ கொழந்தை கணக்கா இருந்துச்சு.. அதை கொஞ்சிக்கிட்டே அழுதுகிட்டு இருந்தா..!!”

“சிங்கமலை உச்சில நின்னவ.. சிரிச்சுக்கிட்டே தலைகுப்புற ஆத்துல குதிச்சுட்டாளப்பா..!! என் ரெண்டு கண்ணாலயும் பாத்தேனப்பா..!!”

“தாகமா இருக்கு தண்ணி குடு.. தாகமா இருக்கு தண்ணி குடுன்னு.. பின்னாடியே வந்தா..!! நான் கொடத்தை கீழ போட்டுட்டு திரும்பிகூட பாக்காம ஒரே ஓட்டமா ஓடியாந்துட்டேன்..!!”

இதுபோல.. குறிஞ்சியை கண்ணால் பார்த்த கதைகளும் ஊருக்குள் ஏராளம்.. ஆதிராவும் அந்தக்கதைகளில் பலவற்றை அறிவாள்..!!
Like Reply
#25
ஆதிராவின் பரம்பரையிலும் கூட அந்த மாதிரி சம்பவங்கள் நிறைய நடந்திருக்கிறன.. ஐந்து தலைமுறைகளாக இதுவரை ஏழு பேர் என்ன ஆனார்கள் என்று தெரியாமலே காணாமல் போயிருக்கிறார்கள்.. தாமிரா இப்போது எட்டாவது ஆள்..!!

இவையெல்லாம் அல்லாமல் ஆதிராவின் கொள்ளுப்பாட்டி இன்னொரு கதை சொல்வாள்.. குறிஞ்சியிடம் போராடி தனது குழந்தையை மீட்டு வந்த கதை.. அதாவது பூவள்ளியின் அப்பா குழந்தையாக இருக்கையில்..!!


16

“வெள்ளன நாலு அஞ்சு மணி இருக்கும்.. நல்ல உறக்கம் எனக்கு.. திக்குன்னு நெஞ்சுக்குழி அடிச்ச மாதிரி இருந்துச்சு.. திடீர்னு முழிச்சு பாத்தா.. பக்கத்துல புள்ளைய காணோம்.. தூரத்துல குறிஞ்சி போயிட்டு இருந்தா..!!”

“எங்க இருந்துதான் எனக்கு அப்படி ஒரு துணிச்சல் வந்துச்சோ.. நாம செத்தாலும் பரவால, நம்ம புள்ளையை அவளுக்கு காவு குடுக்க கூடாதுன்னு நெனச்சேன்..!!”

“விடாம அவளை வெரட்டிக்கிட்டே போயி.. அவ வீடு வரை போயி மல்லு கட்டி.. புடிவாதமா என் புள்ளையை புடுங்கிட்டு வந்தேன்..!!

“நாம பயப்பட பயப்படத்தான்டி பேய்க்கு பலம்.. எதுத்து நின்னமுன்னா எந்த பேயா இருந்தாலும் பணிஞ்சுதான் ஆகணும்..!! அப்படி எதுத்து நின்னுதான் உன் தாத்தனை நான் மீட்டுக் கொண்டாந்தேன்..!! அதனால.. பயத்தை விடுங்க மொதல்ல.. பயந்தான் பேயை விட பெரிய சனியன்..!!”

தானும் தாமிராவும் சிறுமிகளாக இருந்தபோது.. தைரியம் ஊட்டுகிற மாதிரி கொள்ளுப்பாட்டி சொன்ன கதை.. ஆதிராவுக்கு இப்போது நினைவுக்கு வந்தது..!!

கொள்ளுப்பாட்டியின் அந்த போதனைகள் எல்லாம் கடுகளவும் அப்போது ஆதிராவின் புத்தியில் ஏறவில்லை..!! அவளுக்கு ஏனோ துணிச்சல் என்பது.. ஆரம்பம் முதலே தூரத்து உறவாகவே இருந்தது..!! தூங்கும்போது கூட முகம் வரைக்கும் இழுத்துப் போர்த்திக்கொண்டே தூங்குவாள்..!! கையில் டார்ச்சுடன் அவளுடைய போர்வைக்குள் புகும் தாமிரா.. முகத்தை கோணலாக வைத்துக்கொண்டு.. அதை அக்காவுக்கு வெளிச்சமுமிட்டு காட்டியவாறு..

“பே…..!!!!!!!!!!!!!!!!!” என்று பெரிதாக கத்துவாள்.

“ஆஆஆஆஆஆ..!!” என்று பயத்தில் அலறி துடிப்பாள் ஆதிரா.

“பேயி.. பிசாசு..!!!” என்று தங்கையை வண்டை வண்டையாக திட்டுவாள்

“ஹாஹாஹாஹா..!!”

தாமிரா குலுங்கி குலுங்கி சிரிப்பாள்.. அக்காவை இந்த மாதிரி சீண்டுவதில் ஏனோ அவளுக்கு ஒரு அலாதி ப்ரியம்..!! பருவ வயது வந்த பிறகும் கூட.. பலமுறை அந்த மாதிரி பயந்தும் கூட.. அதே ட்ரிக்குக்கு திரும்ப திரும்ப அலறுவாள் ஆதிரா..!! அவ்வளவுதான் அவளுடைய துணிச்சலும் வீரமும்..!!

ஆனால்.. தாமிரா அப்படியல்ல.. இயல்பிலேயே மிக தைரியம் வாய்ந்தவளாக இருந்தாள்..!! அவளுடைய தைரியமும்.. அந்த தைரியம் தந்த துடுக்குத்தனமும்.. எல்லா சூட்சுமங்களை அறிந்து கொள்ள நினைக்கிற அவளுடைய ஆர்வமும்.. அந்த ஆர்வத்தினால் வீட்டிலுள்ள பொருட்கள் எதையாவது போட்டுடைப்பதும்..!!

“சர்க்கஸ்க்காரியா பொறக்க வேண்டியவ என் வயித்துல பொறந்து என்னை சாவடிக்கிறா..!!”

சிறுவயதில் தாமிராவை பூவள்ளி இந்தமாதிரித்தான் அவ்வப்போது கடிந்து கொள்வாள்..!! தாமிராவின் சுட்டித்தனமும் அவள் செய்கிற சேட்டைகளும்.. அடியையும் திட்டையுமே அவளுக்கு அடிக்கடி வாங்கித்தரும்..!! அமைதியும் அடக்கமும் ஒன்றாக உருவான ஆதிராவையே.. அனைவருக்கும் தாமிராவை விட அதிகமாக பிடித்து போகும்..!!

17

அடுத்தவர்கள் பார்வைக்கு தொல்லை தரும் பிள்ளையாக தாமிரா தோன்றியபோதும்.. ஆதிராவுக்கோ அவள் எப்போதுமே அன்புமிகு தங்கை.. சிறுவயதில் இருந்தே அவளுடன் அத்தனை ஒட்டுதல்.. அவளுக்கும் அக்கா மீது அத்தனை பாசம்..!! அவர்களுடைய பாசப்பிணைப்பை பற்றிய நினைவுகளே.. இப்போது ஆதிராவின் மனதில் அடிக்கடி ஓடிக்கொண்டிருந்தன..!! தங்கைக்காக ஏங்கினாள்.. அவள் காணாமல் போன உண்மையை தாங்க முடியாமல் தவித்தாள்..!!

தாமிராவை பற்றி நினைத்தாலே ஆதிராவுக்கு உடனடியாய் உள்ளத்தில் தோன்றுவது.. அவளுடைய கள்ளங்கபடம் இல்லாத வெள்ளை சிரிப்பும்.. கண்ணை சிமிட்டி அவள் பார்க்கிற குறும்பு பார்வையும்தான்..!! அப்புறம்.. அவளுடைய விளையாட்டுத்தனமும்.. அவள் ‘Game or Shame..??’ என்று கேட்கிற ஸ்டைலும்..!! இரண்டு கைகளையும் விரித்து முகத்துக்கு முன்பாக வைத்துக் கொள்வாள்.. ஒரு உள்ளங்கை அவள் பக்கமாக திரும்பியிருக்கும்.. இன்னொரு உள்ளங்கை எதிரிருப்பவரின் பக்கமாக திரும்பியிருக்கும்..!! இரண்டு கைகளுக்கும் நடுவிலிருக்கும் இடைவெளியில் ஒற்றைக்கண்ணால் பார்த்து.. அந்தக் கண்ணையும் வெடுக்கென வெட்டியவாறு கேட்பாள்..!!

“Game or Shame..??”

முதன்முறையாக அந்த மாதிரி அவள் கேட்டது கூட ஆதிராவுக்கு இப்போது நினைவிருக்கிறது.. அப்போது தாமிராவுக்கு எட்டுவயது.. ஆதிராவுக்கு பத்து வயது..!! இருவரும் அகழியில் உள்ள தங்கள் தாய்வழி தாத்தாவின் வீட்டில்.. பழைய பொருட்கள் அடைத்து வைத்திட்ட அறையில் விளையாடுகையில்.. ஒரு மரபொம்மையை கண்டெடுத்தனர்.. மாத்ரியோஷ்கா என்று அழைக்கப்படுகிற ரஷ்ய நாட்டில் தயாரான மரபொம்மை..!!

வித்தியாசமான பொம்மை அது.. பொம்மை என்று ஒருமையில் கூட சொல்ல இயலாது.. பொம்மைகள் என்று சொல்ல வேண்டும்.. ஒன்றுக்குள் ஒன்றாக அமைந்த ஒரே மாதிரியான எட்டு பொம்மைகள்.. அளவில் மட்டும் ஒன்றோடொன்று மாறுபட்டிருக்கும்..!! பெரிய பொம்மையை திறந்தால் உள்ளே ஒரு சிறிய பொம்மை.. அந்த பொம்மையை திறந்தால், அதனுள்ளே அதைவிட சிறிய பொம்மை.. அந்த மாதிரி மொத்தம் எட்டு பொம்மைகள்..!!

அந்த பொம்மையை இருவருக்குமே பிடித்திருந்தது.. அதை யார் வைத்துக் கொள்வது என்று இருவருக்கும் சண்டை.. ‘நான்தான் முதலில் பார்த்தேன்.. நான்தான் முதலில் பார்த்தேன்..’ என்று இருவருமே வாக்குவாதம் செய்துகொண்டார்கள்..!! அப்போதுதான் தாமிரா திடீரென அவ்வாறு சொன்னாள்.. அவளுக்கே உரித்தான அந்த பிரத்தியேக பாணியுடன்.. கைகள் இரண்டையும் முகத்திற்கு முன்பாக உயர்த்தி பிடித்து..!!

“Game or Shame..??”

“Game or Shame-ஆ..?? அப்படினா..??”

“நான் ஒரு கேம் வைப்பேன்.. அதுல நீ ஜெயிச்சா.. இந்த பொம்மையை நீயே வச்சுக்கோ.. தோத்துட்டா நான் வச்சுப்பேன்..!!”

“கேம் சரி.. அதென்ன ஷேம்..??”

“கேம் வெளையாட நீ வரலனா.. ‘பயந்தாங்கொள்ளி பயந்தாங்கொள்ளி’ன்னு நான் உன்னை கேலி பண்ணுவேன்.. அது உனக்கு ஷேம்..!! ஹாஹாஹாஹா..!!” சொல்லிவிட்டு தாமிரா கலகலவென சிரித்தாள். அப்புறம் அந்த சிரிப்புடனே அக்காவை பார்த்து,

“இப்போ சொல்லு.. Game or Shame..??” என்று கேட்டாள்.

“Game..!!” ஆதிராவும் வீராப்பாக சொன்னாள்.

கேம் என்ன என்பதை அடுத்த நாள் சொல்வதாக தாமிரா சொன்னாள்.. அன்று அந்த பொம்மையை எடுத்த இடத்திலேயே திரும்ப வைத்துவிட்டார்கள்..!! அடுத்த நாள்.. அதுபற்றிய நினைவே இல்லாமல் ஆதிரா இருந்த சமயத்தில்.. தாமிரா அவள் முன்பு திடீரென தோன்றி கத்தினாள்..!!

“Game or Shame..??”

“Game..!!” ஆதிராவும் பதிலுக்கு கத்தினாள்.

18

“தலை போனா மறைக்கும்.. இடை போனா குறைக்கும்.. கால் போனா குதிக்கும்..!!”

“என்ன சொல்ற.. எனக்கு புரியல..!!”

“தலை போனா மறைக்கும்.. இடை போனா குறைக்கும்.. கால் போனா குதிக்கும்..!!”

ஆதிராவின் கேள்விக்கு பதில் சொல்லாமல்.. தாமிரா திரும்ப திரும்ப அதையே சொல்லிக் கொண்டிருந்தாள்..!! ஆதிராவுக்கு சில வினாடிகள் எதுவும் புரியவில்லை.. அதன் பிறகு அவளுடைய மூளையில் பளிச்சென ஒரு மின்னல் வெட்ட.. முகத்தில் ஒரு மலர்ச்சியுடன் வீட்டுக்குள் ஓடினாள்..!! தாமிராவும் தமக்கையை பின்தொடர்ந் து ஓடினாள்..!!

அந்த நீண்ட வராண்டாவை ஆதிரா சிட்டாக கடந்தாள்.. அகலமான ஒரு மரத்தூணை சரக்கென சுற்றி திரும்பினாள்.. விரிந்திருந்த முற்றத்தை தாண்டி பாய்ந்தாள்.. வீட்டின் பின்வாசலை ஒட்டியிருந்த அறைக்குள் புயலென புகுந்தாள்..!! அவளுக்கு பின்னே ஓடிவந்திருந்த தாமிராவும் வாசலில் வந்து நின்றாள்..!!

அறைக்குள் அந்த மரக்குதிரை நின்றிருந்தது.. ஆதிராவும் தாமிராவும் வழக்கமாக ஏறி விளையாடுகிற குதிரை.. ஓடாமல் நகராமல் ஒரே இடத்தில் அவர்கள் சவாரி செய்கிற குதிரை..!! அந்த குதிரையை நெருங்கிய ஆதிரா.. அதன் வயிற்றுப் பகுதியில் இருந்த திறவை பிடித்து வெளியிழுத்தாள்..!! உள்ளே அந்த மரபொம்மை காட்சியளித்தது..!!!!

முகத்தில் ஒரு மலர்ச்சியுடன், ஆதிரா திரும்பி தங்கையை பார்த்தாள்.. அவளுடைய முகத்திலும் ஒரு பிரகாசம்.. புன்னகைத்தாள்..!! பொம்மையை வெளியே எடுத்தாள் ஆதிரா.. எடை குறைவாக இருப்பது தெளிவாக தெரிந்தது..!! பொம்மையின் உடலை பற்றி திருக.. அது படக்கென திறந்து கொண்டது..!! உள்ளே மற்ற பொம்மைகளை காணோம்.. ஒரே ஒரு துண்டு சீட்டு..!! சீட்டை பிரித்து படித்தாள்..!!

“நாலு மூலை நாடக சாலை..
நடுவிலிருக்கும் பாடகசாலை..!!
ஆடும் பெண்கள் பதினாறு..
ஆட்டி வைப்பவர் ரெண்டு பேரு..!!”

படித்து முடித்தவள் தங்கையை நிமிர்ந்து பார்க்க.. அவள் கன்னத்தில் குழிவிழ அழகாக சிரித்தாள்..!! அப்படி சிரித்தவாறே..

“Game or Shame..??” என்று மீண்டும் கத்தினாள்.

“Game..!!!!” ஆதிரா அலறிக்கொண்டே விருட்டென எழுந்து ஓடினாள்.

தங்கையை கடந்து வெளியேறியவள்.. தாத்தாவின் அறைக்கு விரைந்தாள்..!! அங்கிருந்த சொக்கட்டான் விளையாட்டு பொருட்கள் அடங்கிய பெட்டியை திறந்து பார்க்க.. அடுத்த பொம்மை கிடைத்தது..!! அந்தப் பொம்மைக்குள் இன்னொரு துண்டு சீட்டு.. அதில்.. மூன்றாவது பொம்மையை கண்டறிவதற்கான குறிப்பு அடங்கிய ஒரு விடுகதை..!!

இப்படியே ஒவ்வொரு பொம்மையாக கண்டுபிடித்து.. எட்டு பொம்மைகளையும் தன் வசமாக்கிக் கொண்டாள் ஆதிரா..!! அவளை கட்டிக்கொண்டு அக்காவின் வெற்றிக்காக தாமிராவும் பூரித்து போனாள்..!!

அதன் பிறகு.. ஆதிராவும் தாமிராவும் பருவக் குமரிகளாக ஆனபிறகும் கூட.. இந்த மாதிரி நிறைய விளையாடி இருக்கிறார்கள்..!! ஏதோ ஒரு பொருளை இருவரும் விரும்பும்போதோ.. ஏதோ ஒரு விஷயத்திற்காக இருவரும் வாதிடும்போதோ.. இந்த மாதிரி ‘Game or Shame..??’-தான்..!! விதவிதமான சூழ்நிலைகள்.. விதவிதமான விளையாட்டுக்கள்..!! எல்லா விளையாட்டுகளிலுமே மாறாத ஒரே விஷயம் என்ன தெரியுமா..?? அது.. ஆதிராவின் வெற்றிதான்..!!

இப்போது நினைத்து பார்க்கையில் ஆதிராவுக்கு ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது..!! கிட்டத்தட்ட எல்லா விளையாட்டுக்களிலுமே.. ஆதிரா ஜெயிக்க வேண்டும் என்பதற்காக.. அப்போது ஆதிராவின் அறிவுக்கு கூட எட்டாத வகையில்.. தாமிரா சில தந்திரங்கள் புரிந்திருக்கிறாள் என்று..!! அந்த விடுகதைகளின் விடைகளை எல்லாம் அக்கா நன்கறிவாள் என்பது.. தாமிராவுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்க வேண்டும்..!! அக்காவை சீண்டுவது மட்டுமல்ல.. அவளை ஜெயிக்க வைத்து பார்ப்பதிலும் தாமிராவுக்கு ஒரு அலாதி ப்ரியம்..!!

ஒவ்வொரு போட்டியிலும் வெல்லும்போதும்.. ஆதிரா அடைகிற ஆனந்தத்துக்கு அளவே இருக்காது..!! தாமிரா அந்தப் பொருளை விட்டுக் கொடுத்திருந்தால் கூட.. ஆதிராவுக்கு அந்த அளவு மகிழ்ச்சி இருந்திருக்காது.. தானே கஷ்டப்பட்டு, தானே வென்று, தனதாக்கிக் கொண்ட பொருள் என்று.. அந்தப் பொருளின் மீது இன்னும் அதிகமான பிடித்தமும்.. எனக்கு சொந்தமானது என்ற உரிமையும் அவளுக்கு பிறக்கும்..!! ‘என்னதான் இருந்தாலும் இது தங்கை நமக்கு விட்டுக் கொடுத்த பொருள்தானே?’ என்ற நினைவு எப்போதும் ஆதிராவுக்குள் எழாது..!! அந்த மாதிரியான தந்திரம் தாமிராவுடையது..!!
[+] 1 user Likes ju1980's post
Like Reply
#26
Intha vilaiyate thamiravai kandupidika uthavuma illa kanamal ponavanga ponavangathana. Really amazing story bro. Akka thangachi pasam athan mela kadhal vetkam innum neraiya. Aduthu ennanu neraiya karpanai oduthu bro still waiting for ur call.
Like Reply
#27
(17-04-2022, 11:55 AM)Destrofit Wrote: Intha vilaiyate thamiravai kandupidika uthavuma illa kanamal ponavanga ponavangathana. Really amazing story bro. Akka thangachi pasam athan mela kadhal vetkam innum neraiya.  Aduthu ennanu neraiya karpanai oduthu bro still waiting for ur call.

karuthuku nanri nanba... Namaskar Namaskar Namaskar
Like Reply
#28
ஆதிராவுக்கு தங்கையின் மீதான அன்பு இப்போது உள்ளத்துக்குள் குபுகுபுவென ஊற்றெடுத்து ஓடியது..!! ‘எத்தனை அன்பிருக்க வேண்டும் அவளுக்கு என் மேல்..?? இந்த மாதிரி ஒரு தங்கை கிடைக்க நான் என்ன புண்ணியம் செய்திருக்க வேண்டும்..?? இப்படி என்னவானாள் என்று புரியாமல் தொலைந்து போனாளே..??’


13

ஆதிராவுக்கு இப்போது திடீரென இன்னொரு நினைவு..!! ‘என்னிடம் எத்தனை விளையாட்டு வைத்திருக்கிறாள்.. ஆனால்.. அவளுக்கு முதன்முறையாக விளையாட்டு என்று ஒன்றை சொல்லி தந்ததே நான்தானே..??’ என்பது மாதிரியான நினைவு..!! அந்த நினைவு இப்போது அவளுடைய மனதில் படமாய் விரிந்தது..!!

“கண்ணாமூச்சி ரே ரே..
கண்டுபுடி ரே ரே..
ஊளமுட்டையெல்லாம் நீ தின்னுட்டு..
நல்ல முட்டையெல்லாம் கொண்டு வா..!!”

பாடி முடித்த ஆதிரா, முகத்தை மூடியிருந்த கைகளை விலக்கி, கண்கள் திறந்து பார்த்தாள்.. உடனே அவளிடம் ஒரு மெலிதான அதிர்ச்சி..!! ஓடி ஒளியாமல், இன்னும் தன் எதிரே நின்று கொண்டிருந்த குட்டித் தங்கையை குழப்பமாக பார்த்தாள்..!!

“என்னாச்சு தாமிரா.. போய் ஒளிஞ்சுக்கோ.. போ..!!”

“எனக்கு கண்ணாமூச்சி பிடிக்கலக்கா..!!” தாமிரா பரிதாபமாக சொன்னாள்.

“பிடிக்கலையா.. ஏன்..??”

“பயமா இருக்கு..!!”

“என்ன பயம்..??”

“நீ என்னை கண்டுபிடிக்கலைன்னா.. அப்புறம் நான் தொலைஞ்சு போயிடுவேனே..??”

மழலைக்குரலில் தாமிரா அவ்வாறு சொன்னபோது.. ஆதிரா படக்கென சிரித்துவிட்டாள்..!!

“ஹாஹாஹாஹா..!!”

தாமிரா அவ்வாறு சொன்ன தோரணையை நினைத்துப் பார்க்கையில் இப்போதும் கூட ஆதிராவுக்கு சிரிப்பாக வந்தது..!! ஆனால்.. அந்த சிரிப்பு முடிவதற்கு முன்பே.. அன்று அவள் தங்கைக்கு சொன்ன பதில், கூடவே ஞாபகத்துக்கு வரவும்.. அவளுடைய முகத்தில் பட்டென ஒருவித இறுக்கம்..!! தங்கையை சமாதானப்படுத்தி விளையாட வைக்க.. அன்று ஆதிரா சொன்ன வார்த்தைகள்.. இப்போது அவளது காதுக்குள் மீண்டும் மீண்டும் ரீங்காரமிட்டன..!!

“பயப்படாத தாமிரா.. அக்கா இருக்கேன்ல..?? உன்னை கண்டு பிடிக்கிற வரை அக்கா தேடிக்கிட்டே இருப்பேன்..!!”

“உன்னை கண்டு பிடிக்கிற வரை அக்கா தேடிக்கிட்டே இருப்பேன்..!!”

“தேடிக்கிட்டே இருப்பேன்..!!”

“தேடிக்கிட்டே இருப்பேன்..!!”

14

அத்தியாயம் 5

மேலும் ஒரு வாரம் கழித்து.. மைசூரில் இருந்து ஊட்டி செல்கிற மலைப்பாதை..!! பாதையின் ஓரமாக அந்த புத்தம்புது வெண்ணிற ஸ்கார்ப்பியோ பார்க் செய்யப்பட்டிருந்தது..!! வண்டிக்குள் ஆதிரா அமர்ந்திருந்தாள்.. பழுப்பு நிறத்தில் ஒரு சால்வை போர்த்தியிருந்தாள்..!! கையிலிருந்த காகித தம்ளரை அவ்வப்போது உயர்த்தி.. உதடுகள் பதித்து தேநீர் உறிஞ்சிக் கொண்டிருந்தாள்..!! அவளுடைய பார்வை முழுவதும்.. தூரத்தில் தெரிந்த ஒரு போர்டின் மேல் கூர்மையாக நிலைத்திருந்தது..!!

அகலமான தார்ச்சாலையின் அந்தப்புறமாக ஜீன்ஸ் அணிந்திருந்த சிபி நின்றிருந்தான்..!! அவனுடைய கையில்.. எடை மிகுந்திருந்த, மூக்கு நீண்டிருந்த ஒரு கேமரா..!! சாலையோரமாய் வளர்ந்திருந்த பச்சை செடிகளில் வந்தமர்ந்திருந்த பட்டாம்பூச்சிகளை படம் பிடித்துக் கொண்டிருந்தான்..!! அந்த பட்டாம்பூச்சிகளின் மேனியில் ஜொலித்த வர்ணஜாலமும்.. அதனை தனது கேமராவுக்குள் கேப்சர் செய்துவிட்ட சந்தோஷமும்.. சிபியின் முகத்தை பரவசத்தில் ஆழ்த்தியிருந்தன..!!

“ஆதிராஆஆ.. இங்க பாரேன்..!!”

திரும்பி பார்த்து கத்தினான் சிபி.. ஆதிராவிடம் இருந்து பதில் வராமல் போகவும், காரை நோக்கி மெல்ல நடந்தான்..!! மனைவியை நெருங்கியவன் காரின் ஜன்னலுக்கு கொஞ்சமாய் குனிந்தவாறே.. உற்சாகம் மட்டும் சற்றும் குறையாமல் சொன்னான்..!!

“அங்க வந்து அந்த பட்டாம்பூச்சிலாம் பாரு ஆதிரா.. எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா..?? நானும் அப்படியே பட்டாம்பூச்சியா மாறிடலாம் போல ஆசையா இருக்கு..!!”

அவன் அவ்வளவு உற்சாகமாக சொல்லியும், அதன்பிறகு ஓரிரு வினாடிகள் கழித்தே ஆதிரா கவனம் கலைந்தாள்..!! அதற்குள் சிபியும் ஆதிராவின் பார்வை சென்ற திசையை நோக்கி.. அவளுடைய எண்ண ஓட்டத்தை உடனடியாய் புரிந்து கொண்டிருந்தான்..!! இமைகளில் ஒருவித படபடப்புடன் கணவனை திரும்பி பார்த்த ஆதிரா.. தடுமாற்றமான குரலிலேயே கேட்டாள்..!!

“எ..என்ன.. என்ன சொன்னிங்க..??”

சிபி இப்போது சலிப்பாக ஒரு பெருமூச்சை உதிர்த்தான்.. ஆதிராவுக்கு பதில் ஏதும் சொல்லாமல், அமைதியாக காருக்குள் ஏறி அமர்ந்தான்.. கையில் இருந்த கேமராவை பின்சீட்டில் விட்டெறிந்தான்..!! மனைவியிடம் திரும்பி.. சற்றே எரிச்சலான குரலில் சொன்னான்..!!

“நீ என்ன நெனைக்கிறேன்னு எனக்கு புரியுது ஆதிரா.. தயவு செஞ்சு அந்த நெனைப்பெல்லாம் உடனே கட் பண்ணிடு..!!”

“ஏ..ஏன்த்தான் அப்படி சொல்றீங்க..??”

“நாம ஊட்டி போறோம்னு வீட்ல சொல்லிட்டு வந்திருக்கோம் ஆதிரா..!!”

“அதனால என்ன.. ஊட்டி போக வேணாம்னு நான் சொல்லவே இல்லையே..?? டூ வீக்ஸ் ட்ரிப்.. அஞ்சு நாள் அகழில இருப்போம்.. அப்புறம் பத்து நாள் ஊட்டி.. அதுக்கப்புறம் மைசூர்..!!”

“புரிஞ்சுக்காம பேசாதடா..!! உன்னை அகழிக்கு கூட்டிப் போறதுல எனக்கு சுத்தமா இஷ்டம் இல்ல..!! ஊட்டிக்கு போகலாம்னு கெளம்பி வந்துட்டு.. இப்போ என்ன இது திடீர்னு நடுவுல..??” சிபி எரிச்சலாக கேட்கவும், ஆதிரா தலையை பிடித்துக் கொண்டாள்.

“என்னால முடியலத்தான்..!! எனக்கு தாமிரா நெனைப்பாவே இருக்கு..!!”

“ப்ளீஸ் ஆதிரா..!! ஏற்கனவே ஒருவருஷம் ஆச்சு.. அவ நெனைப்புலயே இந்தமாதிரி நீ இருந்துட்ட.. ஒரு வருஷம்.. எல்லாம் பண்ணி பாத்தாச்சு..!! இப்போ திரும்பவும் ஆரம்பிக்காத.. கஷ்டமா இருக்கு எனக்கு..!!”

“எப்படி-த்தான் என்னால முடியும்..?? எப்படியோ போகட்டும்னு எப்படி என்னால இருக்க முடியும்..?? தாமிராக்கு என்னாச்சுன்னு எனக்கு தெரியணும்.. மறந்து போனதுலாம் எனக்கு திரும்ப ஞாபகத்துக்கு வரணும்..!! இதுலாம் அகழி போனாத்தான் நடக்கும்..!! ப்ளீஸ்த்தான்.. என்னை புரிஞ்சுக்கோங்க..!!” அழுகையுடன் கெஞ்சினாள் ஆதிரா. அவளுடைய கெஞ்சல் சிபியை சற்றே அசைத்து பார்த்தது

15

“அகழிக்கு போனாமட்டும் உனக்கு அதுலாம் ஞாபகம் வந்துடும்னு எந்த உத்திரவாதமும் இல்லடா..!!”

“தெரியும்.. பரவால.. போய்த்தான் பாக்கலாமே..??”

“மாமாக்கு தெரிஞ்சா டென்ஷன் ஆயிடுவாரு..!! அகழிக்கு உன்னை கூட்டிப் போனது தெரிஞ்சா.. அவ்வளவுதான்..!!”

“அப்பாவுக்கு தெரிய வேணாம்-த்தான்.. நாமளா போயிட்டு வரலாம்.. அங்க இருந்து ஃபோன் பண்றப்போ ஊட்டில இருக்குறதாவே சொல்லிடலாம்..!! அதையும் மீறி அப்பாக்கு தெரிஞ்சிடுச்சுனா.. அவரை நான் சமாளிச்சுக்குறேன்..!! ப்ளீஸ்த்தான்..!!”

“எனக்கு பயமா இருக்கு ஆதிரா..!!”

“என்ன பயம்..?? அந்த குறிஞ்சி என்னையும் தூக்கிட்டு போயிடுவான்னா..?? அப்படிலாம் எதுவும் நடக்காதுத்தான்..!! அஞ்சு நாள்ல என்ன ஆகிடப் போகுது..?? அதுவும்.. நீங்க என் கூடவே இருக்குறப்போ..?? ம்ம்..??”

“வே..வேணாம் ஆதிரா..!!” பலவீனமாக ஒலித்தது சிபியின் குரல்.

“ப்ளீஸ்த்தான்.. ப்ளீஸ்..!! அஞ்சே அஞ்சு நாள்.. எனக்காக..!! அன்னைக்கு என்ன சொன்னிங்க.. எனக்கு புடிச்சதை சொன்னா.. எதுவா இருந்தாலும் வாங்கி தர்றேன்னு சொன்னிங்கள்ல..?? எனக்கு இதுதான் வேணும்.. ப்ளீஸ்த்தான்.. எனக்கு அகழிக்கு போகணும்..!! ப்ளீஸ்.. ப்ளீஸ்.. ப்ளீஸ்..!!”

ஆதிரா குழந்தை மாதிரி கெஞ்சிக்கொண்டே இருக்கவும்.. சிபியின் பிடிவாதம் கொஞ்சம் கொஞ்சமாய் தகர்ந்து கொண்டே சென்றது..!! என்ன சொல்வதென்று புரியாமல் மனைவியின் முகத்தையே பரிதாபமாக பார்த்தான்.. ஒருவித அவஸ்தைக்குள் அவன் ஆட்பட்டுக் கொண்டது அப்பட்டமாக அவனுடைய முகத்தில் தெரிந்தது..!!

ஒரு சில வினாடிகள்..!! அப்புறம் என்ன நினைத்தானோ.. சலிப்பாக தலையை அசைத்தவாறே முகத்தை திருப்பிக் கொண்டான்.. சாவியை திருகி வண்டியை கிளப்பிக்கொண்டே ஆதிராவிடம் சொன்னான்..!!

“அஞ்சு நாள்தான் ஆதிரா.. அதுக்கு மேல ஒரு நிமிஷம் கூட அங்க நீ இருக்க, உன்னை நான் அலோ பண்ண மாட்டேன்..!!”

“தேங்க்ஸ்-த்தான்..!!”

ஆதிரா மகிழ்ந்து கொண்டிருக்கையிலேயே வண்டி சீற்றமாய் கிளம்பியது..!! அகலமாய் மேலேறிய ஊட்டிக்கு செல்லும் சாலையை விடுத்து.. அதிலிருந்து பிரிந்து சற்றே தாழ்வாக கீழிறங்குகிற அந்த குறுகலான பாதையில்.. குலுங்கி குலுங்கி பயணிக்க ஆரம்பித்தது அந்த ஸ்கார்ப்பியோ..!! அத்தனை நேரம் ஆதிரா வெறித்துக் கொண்டிருந்த அந்த மரபோர்டில்.. எழுத்துக்கள் சற்றே சிதிலமடைந்து போய் காட்சியளித்தன..!!
Like Reply
#29
பார்க்கும் இடங்களில் எல்லாம் பச்சை நிறமே பரவிப் படர்ந்திருந்தது.. மலைகளில் முளைத்திருந்த மர, செடி, கொடிகளின் பச்சை..!! சிகரங்கள் அனைத்தும் குளிருக்கு இதமாய் சிகரெட் புகைத்துக் கொண்டிருந்தன.. முகடுகளை சுற்றிலும் அடர்த்தியாய் வெண்பனி மூட்டங்கள்..!! உடலை ஊசியாய் துளைக்கிற ஈரப்பதம் மிக்க குளிர்காற்று.. நாசிக்குள் நுழைந்திட்ட அந்த குளிர்காற்றில் யூகலிப்டஸின் வாசனை..!! பச்சைமலையை பொத்துக்கொண்டு வெள்ளையாய் வெளிக்கொட்டுகிற தூரத்து அருவி.. அந்த அருவியின் சீற்றத்தை இங்குவரை கேட்ட அதன் சப்தத்திலேயே புரிந்துகொள்ள முடிந்தது..!!


OLYMPUS DIGITAL CAMERA

பாறையை செதுக்கி அமைக்கப்பட்டிருந்த தண்டவாளத்தில்.. பாம்பென ஊர்ந்து கொண்டிருந்தது ஒரு தொடர்வண்டி..!! பக்கவாட்டில் குறுகலாய் கிடந்த அந்த தார்ச்சாலையில்.. பனிசூழ பயணித்துக் கொண்டிருந்தது வெண்ணிற ஸ்கார்ப்பியோ..!! கொண்டையூசி வளைவுகள் நிரம்பிய சிக்கலான மலைப்பாதை அது.. கவனத்துடன் நிதானத்தையும் கலந்து காரோட்டிக் கொண்டிருந்தான் சிபி..!! மார்புக்கு குறுக்காக கைகளை கட்டியவாறு.. மலைச்சரிவு மரங்களில் மனதை செலுத்தியிருந்தாள் ஆதிரா..!! குளிருக்கு வெடவெடத்த அவளது தளிர் உதடுகளை எதேச்சையாக பார்த்த சிபி..

“ஸ்வெட்டர் வேணா எடுத்து போட்டுக்கடா..!!” என்றான் கனிவாக.

“இல்லத்தான்.. பரவால.. இன்னும் கொஞ்ச நேரந்தான..??” அமர்த்தலாக சொன்னாள் ஆதிரா.

பத்துநிமிட பயணத்திற்கு பிறகு.. குழலாறு குறுக்கிட்ட அந்த இடத்தில்.. பாதை இரண்டாக பிரிந்து கொண்டது..!! இடது புறம் செல்கிற பாதை அகழிக்கு இட்டுச்செல்லும்.. வலது புறம் திரும்பினோமானால் களமேழி வந்துசேரும்..!! சிபி காரை இடதுபுறம் செல்கிற சாலையில் செலுத்தினான்..!!

ஆதிரா ஜன்னலுக்காக சற்றே தலைசாய்த்து தூரமாக பார்வையை வீசினாள்.. மலையுச்சியை செதுக்கி வடிக்கப்பட்ட சிங்கமுக சிலையொன்று.. இங்கிருந்தே தெளிவாகவும், பிரம்மாண்டமாகவும் காட்சியளித்தது..!! குபுகுபுவென மேனியெங்கும் பற்றிக்கொண்ட நெருப்புடன்.. குறிஞ்சி குதித்து கீழுருண்ட அதே மலையுச்சி..!!

ஐம்பது வருடங்களுக்கு முன்பாக.. குறிஞ்சியின் அட்டகாசத்தை தாங்கமாட்டாத அகழி மக்கள்.. மலையுச்சியில் நரசிம்மருக்கு சிலைவடித்து வணங்க ஆரம்பித்தனர்..!! அப்போது உச்சிமலை என்று அழைக்கப்பட்ட அந்த இடம்.. அதன் பிறகிலிருந்து சிங்கமலை என்று வழங்கப்படுகிறது..!! அந்த சிங்கமலையின் அடிவாரத்தில் சலசலப்புடன் ஓடிக்கொண்டிருந்தது.. குறிஞ்சியை உள்வாங்கிக்கொண்ட குழலாறு..!!

“ஆத்துல தண்ணி ரொம்ப அதிகமா போற மாதிரி இருக்கு.. இல்லத்தான்..??” கேட்ட மனைவிக்கு,

“ம்ம்.. ஆமாம் ஆதிரா.. அப்படித்தான் தெரியுது..!!”

பாதையில் இருந்து பார்வையை எடுக்காமலே பதில் சொன்னான் சிபி..!! சற்று தூரம் சென்றதும்.. குழலாறை கடக்கும் குறுகலான ஆற்றுப்பாலம் வலதுபுறமாக வந்தது..!! சிபி காரின் வேகத்தை வெகுவாகவே குறைத்து.. அந்தப்பாலத்தை நிதானமாக கடந்தான்..!! அதன்மேலும் இரண்டு மைல் தூரம்.. மலைப்பாதையில் மெல்ல மெல்ல மேலேற.. அழகும் அமானுஷ்யமும் கொஞ்சும் அகழி வந்து சேர்ந்தது..!!

நூறு வருடங்களில் அகழி மிகவும் மாறியிருந்தது.. அறிவியல் வளர்ச்சியும், பொருளாதார முன்னேற்றமும் அகழியை மட்டும் விட்டுவைக்குமா என்ன..?? மலைமரங்களுக்கு நடுவே கால் அகற்றி கம்பீரமாக நிற்கும் மூன்று செல்ஃபோன் டவர்கள்.. வீடுகளின் மேற்கூரைகளில் சேட்டிலைட்டுக்கு சமிக்ஞை அனுப்புகிற டிஷ் ஆன்டனாக்கள்.. காய்கறி மார்க்கெட்டுக்கு பக்கத்து சந்தில் ஒரு கணினி மையம் கூட உண்டு..!!

அகழியின் மக்கள்தொகை இப்போது ஆயிரத்தை நெருங்கியிருந்தது..!! புதிய தலைமுறையினர் புகலிடம் தேடி வேலைக்காக வெளியூர் சென்றிருக்க.. அதற்கு முந்தைய தலைமுறையினரே அந்த ஆயிரத்தில் பெரும்பங்கினர்..!! குடிசைகள் வெகுவாக குறைந்து போயிருந்தன.. ஓட்டு வீடுகள் அதிகமாக முளைத்திருந்தன..!! ஊரைச் சுற்றி ஆங்காங்கே தேயிலை தோட்டங்கள்.. ஊருக்கு வெளியே ஒரு தேயிலை தொழிற்சாலையும், ஒரு தடுப்பூசி மருந்து தொழிற்சாலையும்..!! அதுமட்டுமில்லாமல் காளான் வளர்த்தல், கம்பளி நெய்தல் என்று சுயதொழில் செய்வோரும் இருக்க.. அகழி மக்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் எப்போதும் வந்ததில்லை..!!

17

கார் ஊருக்குள் நுழைந்து மெல்ல பயணிக்க ஆரம்பித்த நேரம்.. கார்மேகம் திரண்டிருந்த வானமும் தூறல் போட ஆரம்பித்திருந்தது..!! மதிய நேரத்திலும் மங்கலான வெளிச்சத்திலேயே காணக்கிடைத்தது அகழி..!! நூறு வருடத்துக்கு முந்தைய கரடுமுரடான சாலைகள் எல்லாம்.. இப்போது தரமான தார்ச்சாலைகளாய் மாறிப்போயிருந்தன..!! சாலைக்கு பக்கவாட்டில் அடுக்கடுக்காய் வீடுகள்..!! ஒவ்வொரு வீட்டுக்கு முன்பாகவும்.. வெள்ளெருக்கம் வேரில் செய்யப்பட்ட ஒருவகை பொம்மைகள் தொங்கவிடப் பட்டிருந்தன.. பேய், பிசாசு, காத்து, கருப்பு என எல்லாவற்றையும் அண்டவிடாமல் செய்கிற சக்தி.. அந்த பொம்மைகளுக்கு உண்டென்பது அகழி மக்களின் நம்பிக்கை..!!

உடலுக்கு ஸ்வெட்டரும், தலைக்கு மப்ளருமாக காட்சியளித்தனர் ஊர்ஜனங்கள்.. எல்லோருடைய முகங்களிலும் இயல்பாகவே ஒரு இறுக்கம் குடியிருந்தது.. ஆண்களின் உதடுகளில் சுருட்டு.. பெண்களின் கண்களில் மிரட்சி..!! எதிர்ப்பட்டவர்களில் ஒருசிலர் காருக்குள்ளிருப்பவர்களை அடையாளம் கண்டுகொண்டு வணக்கம் செய்தனர்.. இவர்களும் காருக்குள் இருந்தவாறே அவர்களுக்கு பதில் வணக்கம் வைத்தனர்..!! ஊரைப்பற்றி ஏதேதோ பேசிக்கொண்டே வீட்டை நோக்கி பயணித்தனர்..!!

“புதுசா ஏதோ ஹோட்டல் வந்திருக்கு அத்தான்..!!”

“புதுசுலாம் இல்ல ஆதிரா.. அது ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆச்சு..!!”

அகழியை விட்டு சற்றே ஒதுங்கி.. தன்னந்தனியாக நின்றிருக்கும் தணிகை நம்பியின் மாளிகை வீடு..!! அகலமாகவும், நீளமாகவும் வேயப்பட்ட ஓட்டுக்கூரை.. கடுக்காய், முட்டையின் வெள்ளைக்கருவெல்லாம் கலந்த கலவையை பூசிக்கொண்டு பளபளக்கும் பக்கவாட்டு சுவர்கள்..!! வீட்டை சுற்றி விரவியிருக்கும் பச்சைப் பசேலென்ற புல்வெளி.. அந்த புல்வெளியினூடே வளைந்தோடி வீட்டு முகப்பில் சென்றுமுடியும் சிமெண்ட் சாலை..!! வீட்டுக்கு ஒருபுறம் அமைதியான குழலாறு.. மறுபுறம் ஆளரவமற்ற அடர்ந்த காடு..!! அந்த காட்டுக்குள் மேலேறும் ஒற்றையடிப் பாதையில் நடந்து சென்றால்.. சிங்கமலையின் உச்சியை சென்றடையலாம்..!!

கார் வீட்டை அடைவதற்குள் மழை வலுத்துக் கொண்டது.. காற்றும் பலமாக வீசியடித்தது..!! காம்பவுண்டுக்குள் நுழைந்து, சிமெண்ட் சாலையில் சீறிய காரின் மேற்கூரையில் மழைத்துளிகளின் சடசட சப்தம்..!! கார் வீட்டுக்குள் வந்து நின்றதுமே.. கையில் விரித்து வைத்த குடையும், காற்றில் படபடக்கிற புடவை தலைப்புமாக.. காரை நோக்கி ஓடிவந்தாள் வனக்கொடி.. அவளுக்கு பின்னாலேயே அவளுடைய பதினெட்டு வயது மகள் தென்றலும்..!! காரில் இருந்து ஆதிரா முதலில் கீழிறங்க.. அவள் நனைந்துவிடாமல் சென்று குடைபிடித்தாள் வனக்கொடி..!!

“ஆதிராம்மாஆஆ..!! இப்போ பரவாலயாம்மா உனக்கு.. இந்த பாதகத்தியால உன்னை வந்து பாக்க கூட முடியல..!! எப்படிமா இருக்குற..??” என்று அன்பாக கேட்டாள்.

“நான் நல்லா இருக்கேன்மா.. நீங்க எப்படி இருக்கீங்க..??”

“எனக்கு என்னம்மா.. இருக்கேன்..!!” வனக்கொடி சலித்துக் கொண்டிருக்கையிலேயே, அந்தப்பக்கமாக சிபியும் காரைவிட்டு வெளிப்பட,

“அய்யா.. சிபிக்கண்ணு.. நல்லாருக்கியாய்யா..??” அவனை ஏறிட்டு கேட்டாள் வனக்கொடி.

“ம்ம்.. நல்லாருக்கேன்மா..!!”

“கல்யாணத்தோட கடைசியா பாத்தது.. ஹ்ஹ்ம்ம்ம்..!!! சரி சரி.. சீக்கிரம் உள்ள வாங்க.. நனைஞ்சுற போறீங்க..!! ஹ்ம்.. இந்த மழை சனியன் ஏன்தான் இப்படி பண்ணுதுன்னு தெரியல.. நைட்டு பூரா பெஞ்சுச்சு.. இப்ப மதியமே மறுபடியும் ஆரம்பிச்சிடுச்சு..!!” எரிச்சலாக சொன்ன வனக்கொடி மகளிடம் திரும்பி,

“ஏய் தென்றலு.. டிக்கியை தெறந்து பெட்டிலாம் ரூம்ல கொண்டு போய் வைடி..!!” என்று உத்தரவிட்டாள்.

OLYMPUS DIGITAL CAMERA

அம்மாவின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு.. காரின் பின்பக்கமாக ஓடினாள் தென்றல்..!! சிபியும், ஆதிராவும் வராண்டாவை அடைந்து நிதானமாக நடைபோட.. அவர்களிடம் புலம்பலாக பேசிக்கொண்டே அவர்களுக்கு முன்னால் பரபரப்பாக நடந்தாள் வனக்கொடி..!!

“திடுதிப்புன்னு ஃபோன் பண்ணி வரேன்னு சொன்னதும் எனக்கு கையும் ஓடல காலும் ஓடல.. வீட்ல எல்லாம் அப்படியே போட்டது போட்டபடி கெடந்துச்சு.. நானும் தென்றலும் சேந்து இப்போத்தான் எல்லாத்தையும் ஒதுக்கி சுத்தம் பண்ணுனோம்..!! சமையல் இனிமேத்தான் ஆரம்பிக்கனும்.. நீங்க குளிச்சுட்டு வர்றதுக்குள்ள எப்பிடியாவது ரெடி பண்ணிடுறேன்.. சரியா..?? ரெண்டு புள்ளைகளும் ரெம்ப நாள் கழிச்சு வர்றீக.. ஏதாவது கவுச்சி எடுத்துட்டு வந்து ஆக்கி வைக்கலாம்னா.. வெளியிலயே போமுடியாத மாதிரி இந்த மழை வேற.. ச்சை..!!”

“அதுலாம் ஒன்னும் வேணாம்மா.. சிம்பிளா ஏதாவது பண்ணுங்க போதும்..!!” என்றாள் ஆதிரா.

“ம்ம்.. சாம்பாரும், ரசமும் வச்சுரட்டுமா..?? அப்பளமும், உருளைக்கெழங்கும் பொரிச்சுடுறேன்..!! நாளைக்கு வேணா எதாவது கவுச்சி ஆக்கிக்கலாம்..!!”

“ம்ம்..!!”

“சரி.. நீங்க ரூம்ல போய் குளிச்சு ரெடியாகுங்க.. நான் சமையக்கட்டுக்கு போய் வேலையை பாக்குறேன்..!!”

சொல்லிவிட்டு வேறுபக்கமாக நடந்தாள் வனக்கொடி..!! இரண்டு மூன்று அடி எடுத்து வைத்தவள்.. திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாய் மீண்டும் இவர்கள் பக்கமாக திரும்பி,

“ஆங் ஆதிராம்மா.. கீசரு ரிப்பேரா போச்சும்மா.. வெண்ணி போட்டு பாத்ரூம்ல எடுத்து வச்சிருக்கேன்.. பகுந்து குளிச்சுக்கங்க..!!” என்றாள்.

“ச..சரிம்மா.. நாங்க பாத்துக்குறோம்..!!”

வனக்கொடி சமையல்கட்டிற்கு திரும்ப.. ஆதிராவும், சிபியும் அவர்களது தங்கும் அறைக்கு நடந்தனர்..!! ஆதிராவுக்கு காலில் ஏற்பட்ட வெட்டுக்காயம் இன்னும் முழுமையாக ஆறியிருக்கவில்லை.. அதனால் ஒருவித அவஸ்தையுடனே மெல்ல மெல்ல அடியெடுத்து வைத்தாள்.. சிபியும் அவசரத்தை விடுத்து மனைவிக்கு இணையாகவே நடந்து சென்றான்..!! காருக்குள் இருந்து அவர்களுடைய பெட்டியை கைப்பற்றியிருந்த தென்றல்.. அவர்களுக்கு முன்பாகவே அவர்களது அறைக்கு ஓடினாள்..!!

வீட்டின் உட்புறம் விஸ்தாரமாக விரிந்திருந்தது.. அபரிமிதமான வேலைப்பாடு மிக்க அலங்கார வளைவுகளுடன் அழகுற காட்சியளித்தது..!! இரண்டு அடுக்குகளை கொண்ட உட்கட்டமைப்பு.. இத்தாலியன் மார்பிள் பதிக்கப்பட்ட தரைத்தளம்..!! நான்கு திசை மேற்கூரையும் உட்புறமாக இறங்குகிற இடத்தில்.. நீள்சதுர வடிவில் அகலமான நடுமுற்றம்..!! நீண்ட வராண்டா.. நிறைய அறைகள்.. அந்த அறைகளை மூடியிருக்கும் பெரிய பெரிய கதவுகள்.. அத்தனை கதவுகளுக்குமான சாவிகளை மொத்தமாக எடை போட்டாலே ஒரு கிலோவுக்கு மேல் தேறும்..!!

யானையின் கால்களென ஆங்காங்கே நின்று, அந்த வீட்டை தாங்கிப் பிடிக்கும் மரத்தூண்கள்.. வெளவால்களை அண்டவிடாமல் செய்ய, அந்த தூண்களில் செருகி வைக்கப்பட்டிருந்த ஈச்சங்கீற்றுகள்..!! ‘எல்லாம் பர்மா தேக்கு’ என்று தணிகை நம்பி எப்போதும் பெருமைப் பட்டுக்கொள்கிற ஊஞ்சல், நாற்காலிகள், மேஜைகள், அலமாரிகள், அணிகலன் பெட்டகங்கள்..!! தமிழர் பண்பாட்டின் தனிச்சிறப்பை உணர்த்துகிற மாதிரியான.. சுவற்றோடு பொருந்தியிருந்த எழில்மிகு ஓவியங்கள்..!!

ஆதிராவும், சிபியும் மாடிப்படியேறி அவர்களது அறையை அடையவும்.. அறைக்குள் பெட்டியை வைத்துவிட்டு தென்றல் வெளியே வரவும் சரியாக இருந்தது..!! தென்றலை கண்டுகொள்ளாமல் சிபி அறைக்குள் நுழைய.. ஆதிராவோ அவளைப்பார்த்து ஒரு அன்புப் புன்னகையுடன் கேட்டாள்..!!

“எப்படி இருக்குற தென்றல்..??”

“ந..நல்லா இருக்கேன்கா..!!”

“ஹ்ம்ம்.. பொடவைலாம் கட்டிக்கிட்டு பெரிய மனுஷி மாதிரி ஆயிட்ட..??”

“இ..இல்லக்கா.. சும்மாத்தான்.. இ..இன்னைக்குத்தான் பொடவைலாம்..” தென்றல் வெட்கத்தில் நெளிந்தாள்.
Like Reply
#30
“ஆமாம் கதிர் எங்க போயிருக்காரு.. ஆளை காணோம்..??”

ஆதிரா திடீரென அவ்வாறு கேட்கவும்.. தென்றல் சற்றே திகைத்துப் போனாள்.. தடுமாற்றமாக ஆதிராவை ஏறிட்டு பார்த்தாள்..!! அவளுடைய தடுமாற்றத்தைக் கண்டு நெற்றி சுருக்கிய ஆதிரா,

“எ..என்னாச்சு..??” என்று குழப்பமாக கேட்டுக் கொண்டிருக்கும்போதே,


16

“அ..அண்ணன் இப்போ அகழில இல்லக்கா..!!” தென்றல் அவளுக்கு பதில் சொன்னாள்.

“அப்புறம்..??”

“கோயம்புத்தூர்ல இருக்கான்..!! உங்களுக்கு ஞாபகம் இல்லையா..??”

“இ..இல்ல தென்றல்..!!”

“போய் ஒருவருஷம் ஆச்சுக்கா..!!”

“ஓ..!! கோயம்புத்தூர்ல என்ன பண்றார்..??”

“அ..அங்க ஒரு காட்டன் மில்லுல சூப்பர்வைசரா ஜாயின் பண்ணிருக்கான்..!!”

“வெரிகுட்..!!!! நல்ல வேலையா..??”

“ம்ம்.. நல்ல வேலைக்கா.. நல்ல சம்பளம்..!!”

“ஹ்ம்ம்ம்..!! அப்போ.. கதிருக்கும் வேலை கெடைச்சாச்சு.. அடுத்து.. கூடிய சீக்கிரமே உனக்கு கல்யாணம்தான்னு சொல்லு..!!”

ஆதிரா அவ்வாறு கேலியாக கேட்டுவிட்டு கண்சிமிட்டவும், தென்றலுடைய முகம் வெட்கத்தில் குப்பென சிவந்து போனது.

“ஹையோ.. போங்கக்கா..!!” என்று சிணுங்கியவாறே அந்த இடத்தை விட்டு புள்ளிமானாய் துள்ளி குதித்து ஓடினாள்.

“ஹாஹாஹாஹாஹாஹா..!!”

அவள் ஓடுவதையே மலர்ந்த முகத்துடன் சில வினாடிகள் பார்த்துக் கொண்டிருந்த ஆதிரா.. பிறகு அறைக்குள் நுழைந்தாள்..!!

சிறுவயதில் இருந்தே சிபிக்கென அந்த வீட்டில் ஒதுக்கப்பட்ட அறைதான் அது..!! ஆதிராவும், தாமிராவும் தூங்குகிற அறை கீழ்த்தளத்தில் இருக்கிறது..!! மைசூரிலிருந்து அகழிவரை மலைப்பாதையில் காரோட்டி வந்தது சிபிக்கு களைப்பாக இருந்திருக்க வேண்டும்.. அதனால்தான் அறைக்குள் நுழைந்ததுமே.. ‘ஷ்ஷ்ஷ்ஷப்பாஆஆ’ என்றொரு சலிப்பு மூச்சுடன் மெத்தையில் பொத்தென்று விழுந்திருந்தான்..!! கண்ணிமைகளை மூடி கைகால்களை நீட்டி படுத்திருக்க.. அவனுடைய மார்பு மட்டும் சீராக ஏறி இறங்கிக் கொண்டிருந்தது..!!

சிபியை தொடர்ந்து அறைக்குள் நுழைந்த ஆதிரா ஒருகணம் அப்படியே நின்றாள்.. கட்டிலில் கணவன் கண்மூடி கிடப்பதை, நின்றபடியே சிறிது நேரம் ரசித்தாள்..!! அந்த அறை.. சிபி படுத்திருக்கிற கோலம்.. இடி மின்னலுடன் வெளியே பெய்யும் மழை.. வீசிய காற்றுக்கு படபடக்கும் ஜன்னல் திரைச்சீலை.. மழைக்கு கிளம்பிய மண்வாசனை.. எல்லாமுமாக சேர்ந்து இரண்டாண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த சம்பவத்தின் நினைவுகளை.. ஆதிராவுக்கு மீட்டுக் கொணர்ந்தன..!!

17

இதே மாதிரிதான் அன்றும் வெளியே அடைமழை.. சிபியும் அறைக்குள் இதே போஸில் தூங்கிக்கொண்டிருந்தான்..!! அறைவாசலில் பட்டென தோன்றினாள் அவளுடைய தங்கை தாமிரா.. கைகள் இரண்டையும் பக்கவாட்டில் விரித்து வைத்துக்கொண்டு.. பறவையின் சிறகு மாதிரி அந்த கைகளை அசைத்துக்கொண்டு.. முகத்தில் ஒரு உற்சாகம் கொப்பளிக்க.. குரலில் ஒரு குறும்பு பொங்க.. சத்தமாக ஒரு பாடலை பாடிக்கொண்டே அறைக்குள் ஓடிவந்தாள்.. அவளுக்கு பின்னாலேயே ஆதிராவும்..!! தாமிராவுக்கு எங்கிருந்துதான் இந்த மாதிரி பாடல்கள் கிடைக்குமோ தெரியாது..!!

“மழை வருது மழை வருது நெல்லு அள்ளுங்க..!!
முக்காப்படி அரிசி போட்டு முறுக்கு சுடுங்க..!!”

பாடிக்கொண்டே வந்தவள் கட்டிலை நெருங்கியதும், தனது வலது காலை உயர்த்தி..

“ஏர் ஓட்டுற மாமனுக்கு எண்ணி வையிங்க..!!
சும்மா கெடக்குற மாமனுக்கு சூடு வையிங்க..!!”

என்று கத்தியவாறே, சிபியின் புட்டத்தில் ஓங்கி ஒரு உதை விட்டாள்..!! உடனே சிபி விருட்டென்று விழித்தெழுந்தான்.. எழுந்த வேகத்திலேயே..

“ஏய்ய்ய்ய்.. முட்டக்கோஸு.. என்ன பண்றேன் பாரு உன்னை..!!”

என்று சீறியவாறு, உக்கிரமாகிப்போன முகத்துடன்.. தாமிராவின் தலையில் குட்டு வைப்பதெற்கென.. வீராவேசமாக அவளை விரட்டினான்..!!

“ஹாஹாஹாஹாஹாஹா..!!!!”

கலகலவென சிரித்த தாமிரா சிபியின் பிடியில் சிக்காமல் சிட்டாக பறந்தோடினாள்..!! அப்போது ஏனோ தங்கையின் குறும்பை ஆதிராவால் ரசிக்க முடியவில்லை.. வேறொரு தருணத்தில் அதற்காக அவளை கடிந்தும் கொண்டாள்..!!

“அதென்ன பழக்கம்.. எட்டி உதைக்கிறது..?? ரொம்பத்தான் கொழுப்பு வச்சுப் போச்சு உனக்கு..!!”

“சரிஈஈ.. சரிஈஈ.. விடு..!! இனிமே ஒன்னும் பண்ணல உன் புருஷனை.. போதுமா..??”

சிறுவயதில் இருந்தே சிபியின் மீது ஆதிராவுக்கு இருந்த ரகசிய காதல், தாமிராவும் அறிந்த ஒன்றுதான்.. அதனால்தான் ‘உன் புருஷனை’ என்ற அவளது அந்த கிண்டல்..!! தங்கையின் பதிலில் ஆதிராவுக்கு திருப்தி இல்லை.. ஒருவித எரிச்சல் உணர்வுடன் அவளையே முறைத்துப் பார்த்தாள்..!!

ஆனால்.. இப்போது ஏனோ.. அந்த நிகழ்வின் நினைவு ஆதிராவுக்கு சிரிப்பை வரவழைத்தது..!! எழுந்த சிரிப்பை அடக்க முடியாமல் வாயை பொத்திக்கொண்டு சிரித்தும் விட்டாள்..!!

“ஹாஹாஹாஹாஹாஹா..!!!!”

“என்ன.. என்ன சிரிப்பு..??” இமைகள் திறந்த சிபி, ஆதிராவை பார்த்து கேட்டான்.

“ஒ..ஒன்னும்.. ஒன்னும் இல்ல..!!” ஆதிரா சமாளிக்க முயன்றாள். அப்படியும் முடியாமல் மீண்டும் சிரிப்பை சிந்திவிட்டாள்.

“ஹாஹாஹாஹாஹாஹா..!!”

“ப்ச்.. கேக்குறேன்ல..??”

சற்றே சலிப்பான சிபி இப்போது கட்டிலை விட்டே எழுந்துவிட்டான்.. நடந்து ஆதிராவை நெருங்கினான்..!!

“ஹையோ.. ஒன்னும் இல்லத்தான்..!!”

“இல்ல.. ஏதோ இருக்கு.. சொல்லு..!! சொல்லு ஆதிரா..!!”

18

சிபி வற்புறுத்தவும் ஆதிரா ஒரு பெருமூச்சை உதிர்த்தாள்.. தனக்கு நினைவு வந்த நிகழ்வை அவனுக்கு உரைத்தாள்.. அடக்கமுடியாத ஒரு சிரிப்பை அவ்வப்போது சிந்தியவாறு..!!

“……….. தூக்க கலக்கத்தோட.. மூஞ்சிலாம் அப்படியே செவந்துபோய்.. பின்னாடி கைவச்சு தேச்சுக்கிட்டே.. அவளை நீங்க அடிக்க வெரட்டினது ஞாபகம் வந்துச்சு.. என்னால சிரிப்பை கண்ட்ரோல் பண்ண முடியல..!! ஹாஹாஹாஹாஹாஹா..!!!!” சொல்லிவிட்டு ஆதிரா மறுபடியும் சிரிக்க ஆரம்பிக்க, இப்போது சிபி அவளையே உர்ரென்று முறைத்தான்.

“ம்க்கும்.. இந்த மாதிரி தேவையில்லாத மேட்டர்லாம் நல்லா உனக்கு ஞாபகத்துக்கு வருது.. தேவையான மேட்டர் ஒன்னுகூட ஞாபகத்துக்கு வராதே..??” என்று சலிப்பாகவே கேட்டான்.

“தேவையான மேட்டரா.. அது என்ன தேவையான மேட்டர்..??” ஆதிரா ஒருவித குழப்பத்துடன் திருப்பி கேட்டாள்.

“ஹ்ம்ம்.. நம்ம ஃபர்ஸ்ட்நைட் அன்னைக்கு எவ்வளவு மேட்டர் நடந்துச்சு.. ஐ மீன்.. நம்ம மேரேஜ்கப்புறம் ஒருமாசம் கழிச்சு வந்துச்சே.. அந்த ஃபர்ஸ்ட்நைட்..!! நான் படுத்திருக்குற போஸை பார்த்து அந்த மேட்டர்ல ஏதாவது உனக்கு ஞாபகம் வந்திருக்கலாம்ல..??” சிபி அவ்வாறு குறும்பாக கேட்கவும், இப்போது ஆதிராவின் முகம் அப்படியே நாணத்தில் சிவந்து போனது.

“ஹையோ.. போங்கத்தான்..!! அதுலாம் எதுவும் எனக்கு ஞாபகத்துக்கு வரல..!!” என்று சிணுங்கினாள்.

“எப்படி ஞாபகத்துக்கு வரும்.. அதைப்பத்தி கொஞ்சமாவது நீ யோசிச்சாத்தான..?? ஞாபகம் வரலை சரி.. அட்லீஸ்ட் நான் சொல்றதையாவது நம்பலாம்ல..??”

“நீங்க சொல்றதுலாம் நம்புற மாதிரியே இல்ல.. எல்லாம் பொய் பொய்யா சொல்றிங்க..!!”

“என்னது.. பொய்யா..?? அப்புறம் எப்படி எனக்கு அந்த மச்சத்தைப்பத்தி தெரிஞ்சதாம்..??”

“நீங்க ஏதாவது திருட்டுத்தனமா பாத்திருப்பிங்க..!!”

“நான் ஏன் திருட்டுத்தனமா பாக்கணும்..?? ‘பாருங்கத்தான்.. எவ்வளவு அழகா இருக்கு’ன்னு நீயேதான் பெருமையா காட்டின..!!”

“ச்சீய்ய்ய்..!! போங்கத்தான்.. அப்படிலாம் நான் பண்ணிருக்க மாட்டேன்..!!”

சொல்லும்போதே ஆதிராவுக்கு வெட்கம் பிடுங்கித் தின்றது.. உடல் குறுகிப்போய் தலையை குனிந்துகொண்டாள்..!! சிபியின் கண்களிலோ ஒரு குறும்பு மின்னியது.. உதட்டில் ஒரு கேலிப்புன்னகை..!! நடந்ததெல்லாம் ஆதிராவுக்கு மறந்து போயிருந்ததை தனக்கு சாதகமாக்கிக் கொண்டு அவளை சீண்டிப்பார்த்தான் சிபி..!! இப்போது அவளுடைய இடுப்பில் கைபோட்டு வளைத்து.. தனக்கு நெருக்கமாக அவளை இழுத்து.. ஹஸ்கி வாய்ஸில் கொஞ்சலாக பேசினான்..!!

“நெஜ்ஜ்ஜ்ஜமாடா.. நான் என்ன பொய்யா சொல்றேன்..?? அந்த மச்சத்துல முத்தம் வேணும்னு கேட்டுக்கூட நீ கெஞ்சின.. முத்தம் தந்தப்புறம் என்ன பண்ணின தெரியுமா..?? என் தலையை பிடிச்சு..”

“ஐயோ…!!! போதும்.. நிறுத்துங்க..!! பொய் பொய் எல்லாம் பொய்..!!”

“உண்மை உண்மை 100% உண்மை..!!”

“நான் நம்பமாட்டேன்பா..!!”

“நம்பாட்டி போ.. நீ நம்பலைன்றதுக்காக நடந்ததுலாம் பொய்ன்னு ஆய்டாது செல்லம்..!! நீ என்னென்ன சேட்டை பண்ணுனன்னு எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு..!!”

“நானா..?? நான் என்ன சேட்டை பண்ணுனேன்..??”

“அதிகாலைல.. நாலு மணிக்கு..!!”

“நாலு மணிக்கு..??”

“அல்ரெடி ரெண்டு தடவை.. நான் அப்படியே டயர்டா தூங்கிட்டு இருந்தேன்..!! உனக்கு முழிப்பு வந்துடுச்சு.. முழிப்பு மட்டும் இல்ல.. மேடத்துக்கு மூடும் வந்துடுச்சு..!!” சிபி சொல்லிவிட்டு கண்ணடிக்க,

“நோ நோ.. பொய்..!!” ஆதிரா பதறினாள்.
Like Reply
#31
“யெஸ்.. யெஸ்..!! மூணாவது தடவை நீயாதான் ஆரம்பிச்ச.. என்னை தூங்கவே விடல.. உன் காலை என் தொடை மேல போட்டு.. உன் கையை வச்சு..”

“ச்சீய்ய்ய்..!!!! சத்தியமா அப்படிலாம் நான் பண்ணிருக்கவே மாட்டேன்.. நீங்க பொய் சொல்றீங்க..!!”


16

“ப்ச்.. நான் ஏன்டா பொய் சொல்லப் போறேன்..?? ஹ்ம்ம்.. வேணுன்னா ஒன்னு பண்ணலாமா..??”

“என்ன..??”

“இன்னைக்கும் அதேமாதிரி ட்ரை பண்ணலாம்.. ரெண்டு தடவை பண்ணலாம்.. மூணாவது தடவை யார் கூப்பிடுறாங்கன்னு பாக்கலாமா..??” சிபி கேட்டுவிட்டு இளிக்க, ஆதிரா அவனை செல்லமாக முறைத்தாள்.

“ம்க்கும்.. உங்க ஐடியா இப்போ எனக்கு நல்லா புரியுது..!! ரொம்பத்தான் ஆசை உங்களுக்கு..!!”

என்றவாறே தனது இடுப்பை வளைத்திருந்த கணவனின் கைகளை பட்டென தட்டிவிட்டாள்..!! அவ்வளவு நேரம் பிரகாசமாக இருந்த சிபியின் முகம் இப்போது பொசுக்கென வாடிப்போனது.. ஆதிராவையே ஆசையும் ஏக்கமுமாக பார்த்தான்..!! அந்தப்பார்வையில்.. விளக்கமுடியாத ஒரு விரகதாபம் விஞ்சிப் போயிருந்தது..!! திருமணமாகி இரண்டு மாதங்கள் கழிந்தும்.. ஒரே ஒரு நாள்தான் கட்டிலில் கலந்திருக்கிறார்கள்.. சிபியின் ஏக்கம் மிக இயல்பான ஒன்றுதான்..!! தளர்ந்துபோன குரலில் சலிப்பாக பேசினான்..!!

“ஆமாம்.. ஆசைதான் எனக்கு.. அடக்க முடியல.. என்ன பண்ணலாம்னு நீயே சொல்லு..!! ரெண்டு மாசத்துல ஒரே ஒரு தடவை.. எனக்கு ஆசையா இருக்கு ஆதிரா.. திரும்ப வேணும்னு தோணுது..!! சரி.. பிரச்சினைலாம் ஒருவழியா ஓய்ஞ்சு.. ஊட்டிக்கு ஹனிமூன் போறோம்னு சந்தோஷமா வந்தேன்.. நீ என்னடான்னா இங்க இழுத்துட்டு வந்துட்ட..!! என்னென்ன கற்பனைலாம் வச்சிருந்தேன் தெரியுமா.. இப்போ எல்லாம் கேன்ஸல்..!!”

பரிதாபமாக சொன்ன கணவனை பார்க்க ஆதிராவுக்கு பாவமாக இருந்தது.. அவனுடைய ஏக்கம் புரிந்ததும் இவளுக்குள் அவன் மீது ஒரு இரக்கம் பிறந்தது..!! சிபியின் முகத்தையே ஓரக்கண்ணால் குறுகுறுவென பார்த்தாள்.. பிறகு குரலை குழைவாக மாற்றிக்கொண்டு சிணுங்கலாக சொன்னாள்..!!

“எடம் மட்டுந்தான மாறிருக்கு.. எல்லாம் கேன்ஸல்னு யார் சொன்னது..??”

ஆதிரா சொன்னதன் அர்த்தம் உடனடியாக சிபிக்கு விளங்கவில்லை.. ஒரு சில வினாடிகள் கழித்துதான் புரிந்து கொண்டான்.. உடனே அவனுடைய முகத்தில் மீண்டும் அந்த பிரகாசம்..!!

“ஹேய்ய்ய்.. ஆதிராஆஆ..!!”

என்று கத்தியவாறே மனைவியை ஆசையாக அணைத்துக் கொண்டான்.. ஆதிராவும் இப்போது அவனிடமிருந்து விலகவில்லை.. அவனுடைய அணைப்புக்குள் சுகமாக அடங்கிப் போனாள்..!!

“நைட்டு..!!” என்றாள் கிசுகிசுப்பாக.

“ஏன் அவ்ளோ நேரம் வெயிட் பண்ணனும்..??” சிபி அவளுடைய கழுத்தை முகர்ந்தான்.

“நைட்டு..!!” ஆதிரா நெளிந்தாள்.

“இப்போ லைட்டா பாஸ்ட்ஃபுட்.. நைட் ஹெவியா ஃபுல்மீல்ஸ்.. ஓகேவா..??” சிபி தனது அணைப்பை இறுக்கமாக்க,

“நைட்டூடூடூ..!!!” ஆதிரா கத்தினாள்.

17

கைகளுக்குள் அடங்கியிருந்த மனைவியையே சிபி ஏக்கமாக பார்த்தான்.. பொங்கி வரும் ஆசை வெள்ளத்தை அணைபோட்டு தடுக்கிற நிலை அவனுக்கு..!! ஈரம் மினுக்கிற ஆதிராவின் இதழ்கள்.. தேனில் ஊறிய ஆப்பிள் துண்டங்களாய் அவனுக்கு காட்சியளித்தன..!! அவளுடைய முகத்தை நோக்கி குனிந்தான்.. அந்த ஆப்பிள் துண்டங்களுக்கு தனது அதரங்களை எடுத்து சென்றான்..!! கணவனின் உதடுகளை கைகொண்டு தடுத்த ஆதிரா,

“நைட்டு.. நைட்டு.. நைட்டு..!!” என்று கறாராக சொன்னாள்.

“சரி.. சரி.. சரி..!!!”

நொந்துபோனவனாய் சிபி கத்தினான்.. நீளமாக ஒரு சலிப்பு மூச்சை வெளியிட்டான்.. ஆதிராவை தனது அணைப்பில் இருந்து விடுவித்தான்..!!

“நைட்டே வச்சுக்கலாம்.. பாஸ்ட்ஃபுட் வேணாம்.. ஃபுல்மீல்ஸே சாப்பிட்டுக்குறேன்..!!” செல்லக்கோபத்துடன் சொன்னவன், மெத்தையில் போய் மீண்டும் விழுந்தான்.

“ஹாஹாஹாஹா..!!” ஆதிரா சிரித்தாள்.

“சிரிக்காத.. சீக்கிரம் குளிச்சுட்டு வா..!! அந்தப்பசிக்கு நைட்டுத்தான் சாப்பாடுன்னு சொல்லிட்ட.. வயித்துப் பசிக்காவது கொஞ்சம் குயிக்கா சாப்பிடலாம்..!!” சற்றே எரிச்சலுடன் சொல்லிவிட்டு இமைகளை மூடிக்கொண்டான்..!!

அந்த அறையில் அட்டாச்ட் பாத்ரூம் இல்லை.. கீழ்த்தளத்தில் உள்ள பொது குளியலைறையைத்தான் உபயோகித்துக் கொள்ள வேண்டும்..!! ஜிப் இழுத்து பெட்டியை திறந்த ஆதிரா.. உள்ளிருந்த பூந்துவாலையை எடுத்து தோளில் போட்டுக் கொண்டாள்.. மாற்று உடை, சோப்பு, ஷாம்பெல்லாம் அள்ளிக்கொண்டு அறையை விட்டு வெளியேறினாள்..!! படியிறங்கி கீழே வந்து.. விசாலமான அந்த ஹாலை கடந்து.. அடுத்த முனையில் இருந்த குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்..!!

வெளியாடைகளை களைந்தாள்.. உள்ளாடைகளுடன் நின்றாள்.. கூந்தலை கட்டி வைத்திருந்த ஹேர்பேண்டை உருவி கையிலெடுத்தாள்.. விரல்கள் கோர்த்து முடியை பிரித்து விட்டுக் கொண்டாள்..!! வனக்கொடி பிடித்து வைத்திருந்த வெந்நீருடன் குளிர்நீர் கொஞ்சம் கலந்து.. மிதமான வெப்பத்துக்கு குளிநீரை மாற்றினாள்.. சற்றே உயரமான அந்த முக்காலியில் அமர்ந்து, நிதானமாக நீராட ஆரம்பித்தாள்..!!

உடலுக்கு சோப்பு போட்டு முடித்தவள்.. முகத்துக்கும் நுரை சேர்க்க நினைக்கையில்தான்..

“க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்..!!!”

அறைக்கு வெளியில் இருந்து ஏதோ சப்தம் கேட்டது..!! புருவத்தை நெரித்த ஆதிரா சோப்பு போடுவதை நிறுத்தி வைத்துவிட்டு.. தனது காதுகளை சற்றே கூர்மையாக்கி கவனமாக கேட்டாள்..!!

“க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்..!!!”

18

அந்த சப்தம் சன்னமான டெசிபலில் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருந்தது..!! அது என்ன சப்தம் என்று அவளால் இனம்காண முடியவில்லை.. ஒரு சில வினாடிகள் யோசித்தாள்.. பிறகு புத்தியில் எதுவும் உறைக்காமல் போகவும், அந்த சப்தத்தை அலட்சியம் செய்துவிட்டு குளியலை தொடர்ந்தாள்..!!

குளித்து முடித்து வேறு உடை அணிந்துகொண்டாள்.. தலையில் சுற்றிய டவலுடன் பாத்ரூமில் இருந்து வெளியே வந்தாள்..!! இப்போது அந்த சப்தம் இன்னும் தெளிவாகவே கேட்டது..!!

“க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்..!!!”

ஹாலில் இருந்த ஊஞ்சல் ஆளில்லாமல் அசைந்து கொண்டிருந்தது..!! உத்தரத்தில் இருந்து தொங்கும் இரட்டை ஊஞ்சல்கள் அவை.. தாங்குவதற்கு தடிமனான இரும்புச்சங்கிலி.. அமர்வதற்கு உராய்வற்ற மரப்பலகை.. இரண்டு பேர் ஒரே நேரத்தில் தனித்தனியாக அமர்ந்து ஆடலாம்.. அதில் ஒன்று மட்டுந்தான் இப்போது..

“க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்..!!!”

என்ற சப்தத்துடன் அசைந்துகொண்டிருந்தது.. யாரோ இத்தனை நேரம் அதில் அமர்ந்து ஆடிவிட்டு, இப்போதுதான் இறங்கிச் சென்ற மாதிரி..!!

ஆதிரா அந்த ஊஞ்சலையே சற்று குழப்பமாக பார்த்துக் கொண்டிருந்தபோதுதான்.. அவளுடைய நாசியை குப்பென்று அந்த வாசனை தாக்கியது.. மனதை மயக்குகிற மாதிரி ஒருவித சுகந்த நறுமணம்.. அவளுடைய நாசியில் புகுந்து, மூளைவரை பாய்ந்து, கண்கள் லேசாக செருகுமாறு, மெலிதான ஒரு கிறக்கத்தை அவளுக்கு ஏற்படுத்தியது அந்த வாசனை..!!

ஆதிராவுக்கு மிகவும் பழக்கப்பட்ட வாசனைதான் அது.. ஆனால் சட்டென்று அவளால் அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை..!! எங்கிருந்து அந்த வாசனை வருகிறது என்று அப்படியும் இப்படியுமாய் தலையை திருப்பி திருப்பி பார்த்தாள்.. ஊஞ்சல் எப்படி தானாக அசைந்து கொண்டிருக்கிறது என்று வேறு உள்ளுக்குள் ஒரு கேள்வி.. எந்த முடிவுக்கும் வர முடியவில்லை அவளால்..!!

ஒருசில வினாடிகள்.. பிறகு.. ‘தென்றல் வந்து கொஞ்ச நேரம் ஊஞ்சல் ஆடியிருப்பாளாக இருக்கும்.. அவள் ஏதாவது வாசனை திரவியம் பூசியிருப்பாளாக இருக்கும்..’ என்று அவளாகவே ஒரு முடிவுக்கு வந்து.. மெல்ல மாடிப்படியேற ஆரம்பித்தாள்..!!
Like Reply
#32
அகழிக்கு வந்திருந்தது ஆதிராவின் மனதில் ஒரு உற்சாகத்தை தந்திருந்தது.. ஊர் ஊராய் சுற்றிவிட்டு வீட்டை வந்தடைந்ததும் உருவாகுமே, அது மாதிரியானதொரு உணர்வு..!! நடந்ததெல்லாம் மறந்து போயிருந்த காரணத்தினால்.. என்னதான் ஒருவருடமாக வாழ்ந்த வீடானாலும்.. மைசூர் வீட்டை அவளதுவீடாக கருதுவதில் அவளுக்கு ஒரு தயக்கம் இருக்கவே செய்தது..!! அவள் பிறந்து வளர்ந்த இந்த அகழி வீட்டைத்தான்.. அவளுடைய ஆழ்மனம் ‘தனது வீடு’ என்று அவளுமறியாமல் நம்பியது..!! சிபி குளிக்க கிளம்பியபிறகு தனது கூந்தலை உலர்த்தியவள்.. சிறுவயது நினைவுகளில் அப்படியே சிறிது நேரம் ஆழ்ந்திருந்தாள்..!!


10

சிபியும் குளித்துவிட்டு வந்து வேறு உடை மாற்றிக்கொண்டதும்.. மதிய உணவுக்காக இருவரும் மாடியினின்று கீழே இறங்கி வந்தார்கள்..!! பயணக்களைப்பு பசியை கிளறி விட்டிருந்தது இருவருக்கும்.. வனக்கொடி அருகில் இருந்து பரிமாற, வயிறார இருவரும் உணவருந்தினார்கள்..!! அப்பளத்தை கடித்துக்கொண்டே ஆதிரா வனக்கொடியிடம் சொன்னாள்..!!

“நாங்க வந்திருக்குறது அப்பாவுக்கு இப்போதைக்கு தெரிய வேணாம்மா.. தெரிஞ்சா தேவை இல்லாம டென்ஷன் ஆவாரு..!!”

“ம்ம்.. புரியுது ஆதிராம்மா.. நான் சொல்லல.. ஆனா ஏதாவது..”

“பின்னாடி அப்பாக்கு தெரிஞ்சு உங்களை ஏதாவது சொல்வாரோன்னு நெனைக்காதிங்க.. அப்படி ஏதாவது பிரச்சினையானா அதை நாங்க பாத்துக்குறோம்.. சரியா..??”

“ச..சரிம்மா..!!”

“ஹ்ம்ம்.. எனக்கென்னவோ இங்க ஒரு அஞ்சாறு நாள் இருக்கணும்னு ஆசைம்மா.. அதான்..!! ஒருவருஷம் நடந்ததுலாம் மறந்து போச்சுன்றதை என்னால ஏத்துக்க முடியல.. எப்படியோ போகட்டும்னு அப்படியே என்னால வாழ முடியல..!! நான் பழைய மாதிரி நார்மலுக்கு வரணும்.. மறந்ததுலாம் திரும்ப ஞாபகம் வர்றதுக்கு, இந்த அஞ்சாறு நாள் எனக்கு ரொம்ப உதவியா இருக்கும்னு தோணுது..!! பாக்கலாம்..!!”

ஆதிரா சொல்ல வனக்கொடி அவளையே பரிதாபமாக ஒரு பார்வை பார்த்தாள்.. அப்புறம் அப்படியே திரும்பி சிபியையும் அதே பார்வை பார்த்தாள்..!! பிறகு.. நீளமாக ஒரு பெருமூச்சை உதிர்த்தவள்.. கனிவான குரலில் ஆதிராவிடம் சொன்னாள்..!!

“ஹ்ஹ்ம்ம்ம்ம்.. எல்லாம் நல்லபடியா நடக்கும் ஆதிராம்மா.. நீ ஒன்னும் கவலைப்படாத..!! உன் நல்ல மனசுக்கு எந்த கொறையும் வராதும்மா..!!”

“சரிம்மா.. என் கதையை விடுங்க.. கதிர்க்கு வேலை கெடைச்சிருக்குறதா தென்றல் சொன்னா..!!”

“ஆ..ஆமாம்மா..!! கோயமுத்தூர்ல இருக்கான் இப்போ..!!”

“என் கல்யாணத்துக்கு கூட வரல போல.. ஆல்பம் பார்த்தேன்.. அதுல ஆளையே காணோம்..!!”

“வரணும்னுதான்மா அவனுக்கும் ஆசை.. கடைசி நேரத்துல லீவு கெடைக்கலை போல..!!”

“ஓஹோ.. அகழிக்காவது வர்றாரா இல்லையா..??”

“ம்ம்.. வருவான்மா..!! போன மாசம் கூட வந்துட்டு போனானே..!! இன்னும் ரெண்டு நாள்ல திரும்ப வருவான்னு நெனைக்கிறேன்.. திருவிழா வேற வருதுல..??”

“ஓ.. சரி சரி.. வரட்டும் வரட்டும்.. எனக்கும் அவரை பாக்கணும் போல இருக்கு.. பார்த்து ரொம்ப நாள் ஆயிட்ட மாதிரி ஒரு ஃபீல்..!! ஹ்ம்ம்.. அப்புறம்.. இன்னொன்னு சொல்லனும்னு நெனைச்சேன்..”

“சொல்லும்மா..!!”

“நாளைக்கு காலைல நீங்க எங்கயும் வெளில போறிங்களா..??”

“இல்லம்மா.. எங்கயும் போகல.. இங்கதான் இருப்பேன்.. ஏன் கேக்குற..??”

“காலைல நான் உங்களுக்கு ஒரு வேலை வச்சிருக்கேன்..!!”

“என்ன வேலை..??”

“என்கூட சிங்கமலை வரைக்கும் வரணும்..!!”

11

ஆதிரா கேஷுவலாக சொல்ல, வனக்கொடியின் முகம் பட்டென ஒரு இருட்டுக்கு போனது.. உடனடியாக எந்த பதிலும் சொல்லாமல் ஒருவித தடுமாற்றத்தில் உழன்றாள்..!!

“என்னம்மா.. ஒன்னும் சொல்ல மாட்டேன்றிங்க..?? வர்றீங்களா..??” ஆதிரா திரும்ப கேட்கவும்,

“ம்ம்.. வ..வர்றேன்மா..!!” திணறலாக சொன்னாள் வனக்கொடி. இப்போது ஆதிரா சிபியிடம் திரும்பி,

“இப்போ.. ஈவினிங் உங்களுக்கு நான் ஒரு வேலை வச்சிருக்கேன்..!!” என்றாள்.

“எ..என்ன..??” அவ்வளவு நேரம் அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்த சிபி குழப்பமாக கேட்டான்.

“என்கூட மாமா வீடு வரைக்கும் வரணும்..!!” ஆதிரா சொல்ல, இப்போது சிபியின் முகம் சட்டென்று இருண்டு போனது.

“நா..நானா..?? நா..நான் வரல ஆதிரா..!!” என்றான் தளர்வான குரலில்.

“ப்ளீஸ்த்தான்.. மாமா உடம்பு சரியில்லாம இருக்காரு.. அகழி வரை வந்துட்டு அவரை பாக்கலைன்னா நல்லாருக்காது.. போய் பாத்துட்டு வரலாம்.. ப்ளீஸ்..!!”

“உன்னை போகவேணாம்னு நான் சொல்லலையே.. நான் வரலைன்னுதான் சொன்னேன்..!! நீ.. நீ மட்டும் போயிட்டு வா ஆதிரா..!!”

“இல்லத்தான்.. கல்யாணத்துக்கப்புறம் மொதமொறையா அங்க போறேன்.. தனியா போறதுக்கு ஒருமாதிரி இருக்கு.. நீங்களும் வந்தா நல்லாருக்கும்.. ப்ளீஸ்த்தான்.. வாங்க..!!”

ஆதிரா கெஞ்ச, சிபிக்கு வேறு வழியிருக்கவில்லை.. ஒருசில வினாடிகள் தயக்கத்துக்கு பிறகு, மனைவியின் விருப்பத்துக்கு இசைந்தான்..!!

“சரி ஆதிரா.. போலாம்.. சாப்பிடு..!!”

மதிய உணவின்பிறகு சிறிதுநேரம் ஓய்வெடுத்துவிட்டே ஆதிராவும் சிபியும் கிளம்பினார்கள்.. மாலை நேரத்தில் மழை சற்று ஓய்ந்திருந்தது..!! அகழியின் ஒருமூலையில் தணிகைநம்பியின் வீடு இருக்கிறதென்றால்.. அதன் இன்னொரு மூலையில் இருக்கிறது ஆதிராவின் மாமா மருதகிரியின் வீடு.. அவளுடைய அம்மா பூவள்ளியின் பிறந்தகம்..!! தணிகைநம்பியோ பூவள்ளியோ அந்த வீட்டுக்கு சென்று பதினைந்து வருடங்கள் ஆகப்போகின்றன..!! ஆதிராவுக்கு பத்து வயது இருக்கையில்.. மருதகிரியின் வீட்டில் நடந்த ஒரு சுபகாரியத்தின்போது.. மரியாதைக் குறைச்சல் என்று தணிகைநம்பி ஆரம்பித்த ஒரு பிரச்சினை.. விரைவிலேயே விரிசல் பெருசாக்கிப் போய் பேச்சு வார்த்தை இல்லாமல் போயிற்று..!! ஆனால்.. ஆதிராவோ தாமிராவோ அந்த வீட்டுக்கு செல்ல எந்த தடையும் எப்போதும் இருந்ததில்லை..!!

ஊருக்கு வெளியே இருக்கிற தடுப்பூசி மருந்து தொழிற்சாலை மருதகிரிக்கு சொந்தமானதுதான்.. அதுமட்டுமில்லாமல் ஊட்டிக்கருகே பெரிய ரப்பர் தோட்டமும் உண்டு..!! முடக்குவாதம் வந்து மருதகிரி இப்போது படுத்த படுக்கையாகிவிட.. முகிலன், நிலவன் என்கிற அவருடைய இரண்டு மகன்கள்தான் அதையெல்லாம் கவனித்துக் கொள்கிறார்கள்..!! மருதகிரியின் வீட்டுக்கு வர சிபி தயங்கியதற்கு காரணம் இருக்கிறது.. சிறுவயதில் இருந்தே சிபிக்கும் மருதகிரியின் மகன்களுக்கும் ஏழாம் பொருத்தம்.. பெற்றோர் இல்லா பிள்ளை, மாமா வீட்டை அண்டிப் பிழைப்பவன் என்று அவர்களுக்கு எப்போதுமே இவனைக்கண்டால் ஒரு இளக்காரம்..!!

மருதகிரியின் வீட்டுக்கு காரில் சென்றடைய பதினைந்து நிமிடங்கள் ஆகின..!! தணிகை நம்பியின் வீட்டைவிட இன்னுமே கம்பீரமான, செல்வசெழிப்பான மாளிகை வீடு.. பிரிட்டிஷ் கட்டிடக்கலையின் நுணுக்கத்துடன் கட்டமைக்கப்பட்ட கல் பங்களா..!! இரண்டாள் உயரத்திற்கு வீட்டை சுற்றிய மதில் சுவர்.. அதனினும் அதிக உயரத்தில் அகலமான, அலங்காரமான மர வாயில்.. அந்த மர வாயிலில் ஆங்காங்கே தொங்கிய சின்னசின்ன பொம்மைகள்.. வெள்ளெருக்கம் வேரில் செய்யப்பட்ட விதவிதமான மாந்திரீக பொம்மைகள்..!!

காரில் வந்தவர்களை அடையாளம் கண்டுகொண்ட காவலாளி கேட்டை திறந்துவிட்டான்.. வீட்டு முகப்புக்கு ஓடிய சாலையில் காரை செலுத்தினான் சிபி..!! தணிகைநம்பியின் வீட்டை போல செடிகொடிகளோ, புல்வெளிகளோ இல்லை.. விஸ்தாரமான வெற்று முற்றம்தான்..!! பச்சை கற்பூரம், கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது எல்லாம் அரைத்து கலந்த பொடியை.. நீரில் கலந்து அந்த முற்றம் எங்கும் தெளித்திருக்க.. ஒரு இனிய நறுமணம் அந்த பிரதேசத்தை நிறைத்திருந்தது..!! தீயசக்திகள் எவையும் வீட்டை அணுகக்கூடாது என்பதற்காகத்தான் இதெல்லாம்..!!

12

ஆதிராவும் சிபியும் வீட்டுக்குள் நுழைகையில்.. உள்ளே நடுஹாலில் நடந்துகொண்டிருந்த கலசபூஜையும் அதற்காகத்தான்..!! செங்கற்களால் அணைகட்டப்பட்ட அடுப்பில் நெருப்பின் ஜூவாலை.. அடுப்பை சுற்றி சந்தனப்பொட்டு வைத்துக்கொண்ட ஐந்து வெண்கல பாத்திரங்கள்.. ஐந்திலும் ஐவகை இலைகள் மிதக்கிற தூய நீர்.. கலசம் என்று அழைக்கப்படுகிற பஞ்ச பாத்திரங்கள்..!! மேலும்.. துளசி, மஞ்சள், எலுமிச்சை, குங்குமம் என்று பூஜைக்கு தேவையான இன்னபிற இத்யாதிகள்..!!

கொசகொசவென முகமெல்லாம் தாடி மீசையுமாய், முதுகில் புரள்கிற நீளக்கூந்தலுமாய் இருந்த ஒரு ஆள்தான் பூஜை செய்துகொண்டிருந்தார்.. ஏதோ ஒரு புரியாத பாஷை மந்திரங்களை சொல்லிக்கொண்டே நெய்யள்ளி தீயில் வார்த்துக் கொண்டிருந்தார்..!! வெள்ளை வேஷ்டியும் வெற்று மார்புமாக அவர் முன்பு அமர்ந்திருந்தனர் முகிலனும், நிலவனும்.. அவர்களுக்கு அருகே அவர்களது தாய் அங்கையற்கண்ணியும், முகிலனின் மனைவி யாழினியும்..!! நிலவனுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை..!! முகிலனும், நிலவனும் பட்டதாரிகளானாலும் ஆவி, அமானுஷ்யங்களில் அதிக நம்பிக்கையுண்டு.. அதற்கான மாந்திரீக அணுகுமுறையிலும் நிறையவே ஈடுபாடு உண்டு..!!

ஆதிராவும், சிபியும் உள்ளே நுழைந்ததும்.. சகோதரர்கள் இருவரும் ஒருமுறை இவர்களை ஏறிட்டு பார்த்தனர்..!! ஓரிரு வினாடிகள்.. அவ்வளவுதான்..!! பிறகு மீண்டும் அந்தப்பக்கமாக திரும்பி.. மந்திரங்களை திரும்ப உச்சரித்து.. பூஜையில் தங்கள் கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர்..!! அங்கையற்கண்ணியும், யாழினியும்தான் சிரித்த முகத்துடன் எழுந்து ஓடி வந்தார்கள்..!!

“ஆதிராஆஆ.. வா வா..!! எத்தனை நாளாச்சு பாத்து..?? எப்படிமா இருக்குற..?? எப்போ வந்த..?? அப்பா, அம்மாலாம் நல்லா இருக்காங்களா..?? எப்படி சொல்லாமக் கொள்ளாம வந்து நிக்கிறா பாரேன்..??” என்று அன்பொழுக வரவேற்றனர்.

அவர்களுடைய கேள்விகளுக்கெல்லாம் சிரித்த முகத்துடன் பதில் சொன்னாள் ஆதிரா..!! பிறகு.. பூஜை பற்றி ஆதிரா கேட்க, அங்கையற்கண்ணி பதில் சொன்னாள்..!!

“மாசமாசம் நடக்குற பூஜைதான்மா.. குடும்பத்துக்கு எதும் கெடுதல் வந்துடக்கூடாதுன்னுதான்.. குறிஞ்சி வேற இப்போ உச்சத்துல ஆடுறா..!! அவனுகளை பத்தித்தான் தெரியும்ல.. பூஜைன்னா யார்ட்டயும் பேசக்கூட மாட்டானுக.. நீ தப்பா எடுத்துக்காத..!!”

“இ..இல்ல அத்தை.. தப்பா எடுத்துக்கல..!!”

இதமான குரலில் சொன்ன ஆதிரா, அப்புறம் மாமாவை பற்றி விசாரித்தாள்.. அவரை பார்க்கவேண்டும் என்றாள்..!!

“ஆதிராவை நான் மேல கூட்டிட்டு போறேன் யாழினி.. நீ இங்க இருந்து பூஜைக்கு தேவையானதுலாம் கவனிச்சுக்க..!!”

மருமகளை பணித்துவிட்டு அங்கிருந்து முன்நடந்தாள் அங்கையற்கண்ணி.. அவளை பின்தொடர்ந்தனர் ஆதிராவும், சிபியும்..!!

மாடிப்படியேறி மருதகிரியின் அறையை அடைந்தனர்..!! கோணிக்கொண்ட வாயுடனும், கொக்கிபோல் வளைந்த கையுடனும் படுக்கையில் கிடந்தார் மருதகிரி.. அவரைக்காண ஆதிரா வந்திருப்பதை அறிந்து அகமகிழ்ந்து போனார்..!! வாயிலிருந்து எச்சில் வந்த அளவிற்கு வார்த்தை வரவில்லை அவருக்கு.. சைகையாலேயே ஆதிராவை பற்றியும் அவளுடைய குடும்பத்தை பற்றியும் விசாரித்தார்..!! ஆதிராவும் மிகப் பொறுமையாக அவருக்கு பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.. சிபிதான் அந்த சூழ்நிலைக்கு சற்றும் சம்பந்தமில்லாதவனாய் எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்..!!

பிறகு அங்கையற்கண்ணி சிறிதுநேரம் ஆதிராவுடன் தனியே பேசிக்கொண்டிருந்தாள்.. ஆதிராவுக்கு நேர்ந்த விபத்தைப் பற்றி கேட்டறிந்து கொண்டாள்.. தற்போதைய உடல்நல தேற்றத்தை பற்றியும் விசாரித்து தெரிந்து கொண்டாள்..!!

“மைசூர் வந்து உன்னை பாக்கனும்னு போல இருந்துச்சு ஆதிரா..!! வந்தவளை உங்கப்பா எதும் சொல்லிருவாரோன்னு ஒரு பயம்.. இவனுகளும் அதெல்லாம் ஒன்னும் வேணாம்னு சொல்லிட்டானுக..!!”

“ஹ்ம்ம்.. புரியுது அத்தை.. பரவால.. அதனால என்ன..??”
[+] 1 user Likes ju1980's post
Like Reply
#33
Eagerly Waiting bro intha ooru marmangal onona velita varattum Athira and sibi and yarukkum ethuvum agama.
Like Reply
#34
Super duper update
Like Reply
#35
(24-04-2022, 04:52 AM)omprakash_71 Wrote: Super duper update

Thanks bro...
Like Reply
#36
பேச்சு பிறகு பின்னோக்கி சென்றது.. தாமிராவை இழந்துவிட்டதற்காக கண்ணீர் சிந்தினாள் அங்கையற்கண்ணி.. குடும்பப்பகையை நினைத்து கவலை தொனிக்க பேசினாள்..!!


13

“எப்போவோ நடந்ததை நெனச்சுக்கிட்டு இப்போவும் முறுக்கிக்கிட்டு இருக்காரே உன் அப்பா..!! முகிலனுக்கு உன்னை கட்டிவச்சாவாவது பகையெல்லாம் தீரும்னு நெனச்சோம்.. அதான் பொண்ணு கேட்டும் வந்தோம்.. முடியவே முடியாதுன்னு ஒத்தைக்கால்ல நின்னுட்டாரு..!! வள்ளியவும் ஒன்னும் குத்தம் சொல்ல முடியாது.. அவளுக்கு ஆசை இருந்தாலும் புருஷனை மீறி என்ன பண்ணிட முடியும்..?? ஹ்ம்ம்.. எப்போத்தான் எல்லா பிரச்சினையும் தீந்து, ஒத்துமையா நிம்மதியா இருப்போம்னு தெரியல..!!!”

அங்கையற்கண்ணியின் புலம்பலை கேட்டுமுடித்து.. அவளுக்கு ஆறுதல் எல்லாம் சொல்லிமுடித்து.. அங்கிருந்து சிபியை கூட்டிக்கொண்டு கிளம்பினாள் ஆதிரா..!! கீழிறங்கி வந்தபோது பூஜையும் முடிந்திருந்தது..!! சட்டை பட்டனை மாட்டிக்கொண்டே எதிர்ப்பட்ட முகிலன்..

“என்னடா.. நல்லாருக்கியா..??” என்று முறைப்பாக கேட்டான் சிபியை பார்த்து.

“சாப்ட்டு கெளம்பலாம்ல..??” என்று சம்பிரதாயமாக கேட்டான் ஆதிராவிடம்.

“இல்ல.. இன்னொரு நாள் சாப்பிடுறோம்.. வனக்கொடி சாப்பாடு ரெடி பண்ணிருப்பாங்க..!!”

என்று நாகரிகமாக மறுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார்கள் சிபியும் ஆதிராவும்.. காரை கிளப்பி தங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தார்கள்..!!

அன்றிரவு உணவருந்தி முடித்த சிறிதுநேரத்திலேயே.. சிபி பிஸியாகிப் போனான்..!! அவனுடைய மைசூர் அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்திருக்க.. செல்ஃபோனை எடுத்துக்கொண்டு வராண்டாவிற்கு சென்றிருந்தான்..!! கையை இப்படியும் அப்படியுமாய் அசைத்து.. கன்னடமும், ஆங்கிலமும் கலந்து பேசிக்கொண்டிருந்தான்..!!

கணவனுக்காக காத்திருந்த நொடிகள் ஆதிராவுக்கு அலுப்பை ஏற்படுத்த.. ஹாலில் கிடந்த மரத்தாலான சாய்விருக்கையில் வந்தமர்ந்தாள்.. ரிமோட் எடுத்து டிவியை ஆன் செய்தாள்..!! ஓடிய சேனலில் விருப்பம் இல்லாதவளாய், வேறு சேனல் மாற்ற ரிமோட் பட்டனை அழுத்தினாள்.. சேனல் மாறவில்லை.. அதே சேனலே தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது..!! ஆதிரா இப்போது கட்டைவிரலால் பட்டனுக்கு அதிக அழுத்தம் கொடுத்தாள்.. பலனேதும் இல்லை.. அதே சேனல்..!! வலதுகையால் ரிமோட்டை இறுகப்பற்றி.. இடது உள்ளங்கையில் அதை ‘பட்.. பட்.. பட்.. பட்..’ என்று நான்கு முறை ஓங்கி தட்டினாள்..!! மீண்டும் டிவிக்கு முன்பாக ரிமோட்டை நீட்டி.. சேனல் மாற்றும் பட்டனை அழுத்தி பார்த்தாள்.. சேனல் மாறுவதாக இல்லை..!!

“ப்ச்..!!”

சலிப்பை உதிர்த்தவள் பவர் பட்டனை வெறுப்புடன் அழுத்த.. பட்டென ஆஃப் ஆகிக்கொண்டது டிவி..!! ஆதிரா ஒருசில வினாடிகள் டிவி திரையையே எரிச்சலாக முறைத்தாள்.. பிறகு ரிமோட்டை விசிறி எறிந்துவிட்டு, இருக்கையில் இருந்து எழுந்துகொண்டாள்..!! நடந்து வாசலுக்கு சென்று வராண்டாவை ஒருமுறை எட்டி பார்த்தாள்.. சிபி இன்னும் சீரியஸான டிஸ்கசனில் இருந்தான்..!! ‘என்ன செய்யலாம்?’ என்று ஒருகணம் யோசித்தவள்.. பிறகு திரும்பி மாடிக்கு படியேற ஆரம்பித்தாள்..!!

அறைக்குள் நுழைந்ததுமே அவளுடைய கையிலிருந்த செல்ஃபோன்..

“விர்ர்ர்ர்ர்… விர்ர்ர்ர்ர்… விர்ர்ர்ர்ர்…!!!”

என்று அதிர்வுற்று சப்தம் எழுப்பியது.. உள்ளங்கையில் உதறலை ஏற்படுத்தியது..!! ஆதிரா டிஸ்ப்ளே எடுத்து பார்த்தாள்.. அந்த செல்ஃபோனில் சேகரிக்கப்படாத ஒரு எண்ணிலிருந்து அழைப்பு வந்துகொண்டிருந்தது..!! ‘யாராக இருக்கும்..?’ என்று நெற்றி சுருக்கியவள்.. பிறகு காலை பிக்கப் செய்து காதில் வைத்துக் கொண்டாள்..!!

“ஹலோ..!!”

ஆதிரா நிதானமாக சொல்ல.. அந்தப்பக்கம் ஒரே நிசப்தம்..!! யாரோ கால் செய்துவிட்டு பேசாமல் அமைதியாக இருந்தது போல் தோன்றியது..!! சற்றே எரிச்சலுற்ற ஆதிரா..

“ஹலோ..!!” என்று குரலை உயர்த்தி கத்தினாள். இப்போது அடுத்தமுனையில் அந்த வினோத ஒலி..!!

“க்க்ர்ர்க்க்…க்க்கர்ர்ர்க்க்க்க்… க்க்கர்ர்ர்க்க்க்க்… க்க்ர்ர்க்க்…!!!!”

14

சரியாக அலைதிருத்தப்படாத வானொலி கரகரக்குமே.. அந்த மாதிரியான ஒரு கரடுமுரடான சப்தம்.. காதுகளுக்கு உகாத ஒரு இரைச்சல் சப்தம்..!! மனிதரின் குரல் மாதிரியே அது இல்லை.. ஏதோ காட்டுவிலங்கு மூச்சிரைப்புடன் குறட்டையிடுவது மாதிரி..!!

“ஹலோ..!!”

“க்க்ர்ர்க்க்… க்க்கர்ர்ர்க்க்க்க்… இன்.. க்க்கர்ர்ர்க்க்க்க்… கண்… க்க்ர்ர்க்க்… க்க்கர்ர்ர்க்க்க்க்…!!!!”

அந்த சப்தம் ஆதிராவிடம் ஏதோ சொல்ல முயன்றது போலிருந்தது.. ஆனால்.. ஒலித்த எந்த வார்த்தைகளையும் ஆதிராவால் புரிந்து கொள்ள முடியவில்லை..!! குழப்பரேகை ஓடுகிற முகத்துடன் செல்ஃபோனையே சிறிதுநேரம் வெறித்து பார்த்தாள்.. பிறகு படக்கென காலை கட் செய்தாள்.. மெத்தையில் செல்ஃபோனை விட்டெறிந்தாள்..!!

“ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..!!!”

நீளமாக ஒரு மூச்சு விட்டவள், நடந்து சென்று அலமாரியை திறந்தாள்.. அடுக்கி வைக்கப்பட்டதிலிருந்து ஒரு உடையை தேர்வு செய்தாள்.. அணிந்திருந்ததை அவிழ்த்துவிட்டு அந்த இரவு உடைக்கு மாறினாள்..!!

அறையின் அடுத்த மூலையில் இருந்த ஜன்னலை அடைந்தாள்..!! ஜன்னல் திரையை விலக்கி.. சற்றே தலையை எக்கி.. கீழ்த்தள வராண்டா மீது பார்வையை வீசினாள்.. கணவனை கண்களால் தேடினாள்..!! சிபியை அங்கே காணவில்லை.. வெறிச்சோடி கிடந்தது வராண்டா..!! ‘எங்கே சென்றிருப்பான்?’ என்று எக்கி எக்கி அவள் பார்க்க..

“ஊஊஊஊஊஊஊஊ..!!!”

என்று காட்டுக்குள் ஒரு ஓநாய் ஊளையிட்ட சப்தம் இங்குவரை கேட்டது..!! ஆதிரா கண்களை மெல்ல சுழற்றி.. வீட்டுக்குப் பின்புறமிருந்த காட்டுப்பக்கமாக பார்வையை செலுத்தினாள்..!! கரியப்பிக்கொண்ட மாதிரி காட்சியளித்த அடர்காட்டுக்குள்.. ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெள்ளையாய் மசமசப்பு வெளிச்சம்.. அங்கிருந்து ஏதோ புகைமூட்டம் கிளம்புவதுபோல ஒரு தோற்றம்..!! அந்தக்காட்சி அவளுடைய முதுகுத்தண்டில் ஒரு ஜிலீர் உணர்வை ஏற்படுத்திக் கொண்டிருக்கையிலேயே..

“ப்பே…..!!!!!!!!!!!!!!!!!” அவளுக்கு பின்பக்கமாக வந்த சிபி, அவளது காதுக்கருகே பெரிதாக கத்தினான்..!!

“ஆஆஆஆஆஆ..!!” பக்கென அதிர்ந்த ஆதிரா பயத்தில் அலறினாள்.

“ஹாஹாஹாஹா..!!” சிபியோ எளிறுகள் தெரிய சிரித்தான்.

“போங்கத்தான்.. நான் பயந்தே போயிட்டேன்..!!” ஆதிரா செல்லமாக சிணுங்கினாள்.

“ச்சும்மாடா.. வெளையாட்டுக்கு..!! ரொம்ப பயந்துட்டியா..??”

“ஆமாம்..!!”

“ஸாரி ஸாரி ஸாரி..!!”

“ம்ம்.. பரவால.. விடுங்க..!! என்னாச்சு.. ரொம்ப நேரமா கால்..??”

“அதுவா..?? ஊட்டில இந்த வாரம் ஹார்ஸ் ரேஸ் ஆரம்பிக்குதாம்.. அதைப்பத்தி எங்க மேகஸின்ல ஒரு ஆர்ட்டிக்கில் வரப்போகுதாம்..!! மைசூர்ல இருந்து நாளான்னிக்கு ஒரு டீம் ஊட்டிக்கு வர்றாங்க.. ‘நீ அங்கதான இருக்குற.. அப்படியே போய் ஜாய்ன் பண்ணிக்கிறியா..’ன்னு கேட்டாங்க.. ஒரேநாள் வேலைதான்..!!”

“ஓ.. நீங்க என்ன சொன்னிங்க..??”

“முடியாதுன்னு சொன்னேன்.. ட்ரை பண்ணுன்னு சொன்னாங்க.. சரி ட்ரை பண்றேன்னு சொல்லிருக்கேன்..!!”

“போகணுமா..??” ஆதிரா கவலையாக கேட்டாள்.

“வேணாமா..??”

“ப்ளீஸ்த்தான் போகாதிங்க.. இங்கயே இருங்க..!!”

15

“ஓ..!! இங்கயே இருந்தா என்ன கெடைக்குமாம்..??” சிபியிடம் பட்டென ஒரு குறும்பு.

“என்ன வேணும்..??” புரிந்தும் புரியாத மாதிரி கேட்டாள் ஆதிரா.

“அது..!!”

“எது..??”

“அப்போ நீ சொன்னதுதான்..!!”

“நான் என்ன சொன்னேன்..??” ஆதிராவும் விடுவதாய் இல்லை.

“ம்ம்..?? நைட்டு.. நைட்டு.. நைட்டு..!!!” மதியம் ஆதிரா சொன்ன அதே பாவனையுடன் சிபி சொல்லிவிட்டு குறும்பாக கண்சிமிட்ட,

“ச்சீய்ய்ய்..!!!” ஆதிரா அழகாக வெட்கப்பட்டாள்.

நாணத்தில் தலைகுனிந்தவளை அப்படியே கைகளில் அள்ளிக்கொண்டான் சிபி.. ஆதிராவும் அவனது செயலுக்கு மறுப்பேதும் தெரிவிக்கவில்லை.. அவனுடைய முகத்தை பார்க்க கூசியவள், தலையை மட்டும் தாழ்த்திக் கொண்டாள்..!! ஒரு பூங்கொத்தைப் போல அவளை மென்மையாக மெத்தையில் கிடத்தினான் சிபி.. ஆசையாக அவள் மீது கவிழ்ந்து, அவளது கழுத்துப்பகுதியில் முகம் புதைத்தான்.. உஷ்ணமாக ஒரு மூச்சுவிட்டான்..!!

“ஹ்ஹ்ம்ம்ம்ம்ம்..!!!”

கூச்சத்தில் நெளிந்த ஆதிரா உடலை முறுக்கி துள்ளினாள்.. சிபி சமநிலை இழக்க, அவனுடன் சேர்ந்து மெத்தையில் புரண்டாள்..!! இப்போது அவன் மல்லாந்திருக்க.. இவள் அவன் மார்பில் மாலையாய் தவழ்ந்திருந்தாள்..!! எழ முயன்றவள் நகரமுடியாதபடி சிபி அவளை இறுக்கி அணைத்துக் கொண்டான்..!! விரகத்தை மனதில் வைத்துக்கொண்டு விலக முயன்றால் என்னவாகும்..?? தனது முயற்சியில் தோற்றுப்போய் அவனுடைய நெஞ்சிலேயே முகம் புதைத்துக் கொண்டாள் ஆதிரா..!! சிபியின் கரமொன்று நீண்டு.. இரவு விளக்கு தவிர மற்ற விளக்குகளை அணைத்தது..!!

ஆடை களைந்தார்கள்.. அங்கம் கலந்தார்கள்.. ஆனந்தக்கடலில் மூழ்கி திளைத்தார்கள்.. அதன் ஆழம் வரை சென்று திரும்பியதும் அப்படியே அயர்ந்து போனார்கள்..!! எது யாருடைய உடல் என்று பிரித்தறிய முடியாதமாதிரி.. ஒருவரை ஒருவர் பிண்ணிப் பிணைந்துகொண்டு.. எப்போது உறங்கினோம் என்பதை அறியாமலே ஆழ்தூக்கத்தில் ஆழ்ந்து போனார்கள்..!!

அடித்துப் போட்டமாதிரி அவர்கள் இருவரும் மாடியில் அவ்வாறு தூங்கிக்கொண்டிருக்க.. கீழ்த்தளத்தில் இருந்த இரட்டை ஊஞ்சல்களில் ஒன்று மட்டும்.. இப்படியும் அப்படியுமாய் தனியாக ஆடிக்கொண்டு கிடந்தது..!!

“க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்.. க்கிர்ர்ர்ர்ர்க்க்..!!!”

அதன் சப்தம் மேலே இருப்பவர்களுக்கு கேட்டிருக்க வாய்ப்பில்லை..!!

அடுத்தநாள் காலை ஏழுமணி.. அகழியை தழுவியிருந்த வெண்பனி..!! இழுத்துப் போர்த்திய கம்பளிக்குள் இன்னுமே உறக்கத்தை தொடர்ந்திருந்தான் சிபி.. அதற்குள்ளாகவே குளித்துமுடித்து வீட்டிலிருந்து கிளம்பியிருந்தாள் ஆதிரா..!! வீட்டுக்கு பின்புறமாக புதர் அடர்ந்துகிடந்த அந்த ஒற்றையடிப்பாதையில்.. வனக்கொடி முன்னால் நடக்க, ஆதிரா அவளை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தாள்..!!

“பார்த்துவா ஆதிராம்மா.. முள்ளுஞ்செடியுமா மண்டிக் கெடக்கு..!!”

வனக்கொடியின் கையில் ஒரு நீளப்பிரம்பு.. தன்னால் முடிந்த அளவிற்கு புதரை விலக்கி பாதையை எளிதாக்கி.. ஆதிராவுக்கு சிரமமில்லாமல் பார்த்துக் கொண்டாள்..!! அதிகாலைக் குளிருக்கு சால்வை போர்த்தியிருந்த ஆதிரா.. ஒற்றைக்கையை மட்டும் வெளியே நீட்டி, செடிகொடிகளை புறந்தள்ளி, மலைப்பாதையில் மெல்ல மெல்ல மேலேறினாள்..!!

“சொல்லுங்கம்மா.. அன்னைக்கு என்ன நடந்துச்சு..??” ஆதிரா கேட்கவும், அதற்காகத்தான் காத்திருந்த மாதிரி வனக்கொடி மெல்ல ஆரம்பித்தாள்
Like Reply
#37
“தலைல நீர் கோத்துக்கிட்டு சளியும், இருமலுமா கெடந்தா தென்றலு.. நாலு நாள்ல ஆளே தேஞ்சு போய்ட்டா ஆதிராம்மா..!! சரி.. வெள்ளைநொச்சி இலையை புடுங்கியாந்து.. அரைச்சு ஆவி புடிச்சா சரியாப்போவும்னு நெனச்சேன்..!! இந்தா.. இப்படியே கெழக்கால எறங்குனமுன்னா நெறைய மூலிகைச்செடி கொத்துக்கொத்தா வளந்து கெடக்கும்.. அங்கதான் போய் இவ்வளவு வெள்ளைநொச்சி இலையை புடுங்கி எடுத்தாந்தேன்..!! வீட்டுக்குப்போய் அரைச்சு குடுக்கனும்னு தென்றலு நெனைப்பாவே வந்துட்டு இருந்தப்பதான்.. காட்டுக்குள்ள தனியா நடந்துபோன நம்ம தாமிராவை திடீர்னு பாத்தேன்..!!”


10

“தலைல நீர் கோத்துக்கிட்டு சளியும், இருமலுமா கெடந்தா தென்றலு.. நாலு நாள்ல ஆளே தேஞ்சு போய்ட்டா ஆதிராம்மா..!! சரி.. வெள்ளைநொச்சி இலையை புடுங்கியாந்து.. அரைச்சு ஆவி புடிச்சா சரியாப்போவும்னு நெனச்சேன்..!! இந்தா.. இப்படியே கெழக்கால எறங்குனமுன்னா நெறைய மூலிகைச்செடி கொத்துக்கொத்தா வளந்து கெடக்கும்.. அங்கதான் போய் இவ்வளவு வெள்ளைநொச்சி இலையை புடுங்கி எடுத்தாந்தேன்..!! வீட்டுக்குப்போய் அரைச்சு குடுக்கனும்னு தென்றலு நெனைப்பாவே வந்துட்டு இருந்தப்பதான்.. காட்டுக்குள்ள தனியா நடந்துபோன நம்ம தாமிராவை திடீர்னு பாத்தேன்..!!”

“………………………” வனக்கொடி சொல்வதையே ஆதிரா அசைவின்றி கேட்டுக்கொண்டிருந்தாள்.

“இந்தா.. இந்த எடத்துலதான் தாமிரா போயிட்டு இருந்துச்சு.. நான் அதோ அங்க நின்னு பாத்துட்டேன்..!!”

“ம்ம்..!!”

“பாத்ததுமே என் மனசுக்கு எதோ சரியாப்படல.. இந்த நேரத்துல இந்தப்பொண்ணு எதுக்கு இந்தப்பக்கம் போகுதுன்னு..!!”

“………………………”

“அதுமில்லாம நம்ம தாமிரா மூஞ்சில ஒரு சத்தே இல்லம்மா.. எதையோ பாத்து பயந்த புள்ள மாதிரி மூஞ்சி வெளிறி போயிருந்துச்சி..!!” சொன்ன வனக்கொடி தானும் தனது முகத்தை பயந்தமாதிரி மாற்றிக்கொண்டாள்.

“ம்ம்..!!”

“தாமிரா தாமிரான்னு சத்தம் குடுத்து பாத்தேன்..!! தாமிரா திரும்பியே பாக்கல.. ஏதோ வசியம் வச்ச மாதிரி அப்படியே அசையாம போயிட்டு இருந்துச்சு..!!” – வனக்கொடியின் கண்கள் இப்போது அகலமாக விரிந்துகொண்டன.

“ஓ..!!”

“எனக்கு இப்போ வயித்துல புளி கரைக்க ஆரம்பிச்சிருச்சு.. தாமிரா தாமிரான்னு கத்திக்கிட்டே பின்னாடி ஓடுனேன்..!!”

சொல்லிக்கொண்டே இப்போதும் வனக்கொடி திடுதிடுவென ஓட ஆரம்பிக்க.. ஆதிராவும் சுதாரித்துக்கொண்டு, காலில் வெட்டுக்காய வேதனையுடன் அவள் பின்னால் ஓடினாள்..!!

“இங்க.. இந்த எடத்துல வச்சு தாமிராவை புடிச்சுட்டேன்.. கையை புடிச்சுட்டு எங்க போறன்னு கேட்டேன்..!! வெடுக்குன்னு வெட்டுனாம்மா ஒரு வெட்டு.. அவ்வளவுதான்.. நான் தடுமாறி அப்படியே கீழ விழுந்துட்டேன்..!!” விழுக்கென்று துள்ளி மரத்தில் சரிந்து காட்டினாள் வனக்கொடி.

“எந்திரிச்சு தாமிராம்மான்னு கத்துறேன்.. தாமிரா இப்போ வேகமா ஓட ஆரம்பிச்சுட்டா.. நானும் எந்திரிச்சு அவ பின்னாடியே ஓடுனேன்..!!”

வனக்கொடி அந்த குறுகிய மலைப்பாதையில் மீண்டும் ஓட ஆரம்பித்தாள்..!! மிரட்சி அப்பிய விழிகளுடன், நெஞ்சுக்கூடு தடக் தடக்கென அடித்துக்கொள்ள ஆதிராவும் அவளுடன் ஓடினாள்..!! தடதடவென ஓடிய வனக்கொடி திடீரென பிரேக்கடித்து நிற்க.. ஆதிராவும் மூச்சிரைக்க அவளுக்கருகே வந்து நின்றாள்..!!

“இந்த எடத்துல வர்றப்போ தூரத்துல தாமிராவை காணோம்.. பட்டுன்னு மாயமா மறைஞ்சு போயிட்டா..!! எனக்கு ஒன்னும் புரியல.. மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க இங்கயே கொஞ்ச நேரம் தனியா நின்னுட்டு இருந்தேன்..!!” – ஆதிராவும் வனக்கொடியுமே இப்போது அதேமாதிரிதான் நின்றிருந்தார்கள்.

“எனக்கு இப்போ நல்லா புரிஞ்சு போச்சு.. இது குறிஞ்சியோட வேலைதான்னு.. நம்ம புள்ளையை அவ கொண்டு போயிடக் கூடாதுன்னு நெனச்சேன்.. உசுரை கைல புடிச்சுட்டு திரும்ப ஓடுனேன்..!!”

சரிவான அந்த மலைப்பாதையில் மீண்டும் ஒரு ஓட்டம்.. கைகளை விரித்து வைத்துக்கொண்டு வனக்கொடி ஓட, இழுத்துப் போர்த்திய சால்வையுடன் அவள் பின்னே ஓடினாள் ஆதிரா..!! சிங்கமலை உச்சியை அடைந்ததும் வனக்கொடி நின்றாள்.. ஓரிரு வினாடிகளுக்கு பிறகு ஓடிவந்தடைந்த ஆதிராவிடம் தஸ்புஸ்சென்று மூச்சிரைப்பு.. அவளுடைய மார்புகள் இரண்டும் குபுக் குபுக்கென்று மேலும் கீழும் ஏறி இறங்கின.. காலில் வேறு விண்ணென்று ஒரு வலி..!!

“இங்க வந்து நின்னு பாத்தப்போ.. என் நெஞ்சே வெடிச்சுற மாதிரி அப்படியே பக்குன்னு இருந்தது.. நான் கண்ணுல கண்ட காட்சி அப்புடி..!!”

11

“எ..என்ன பாத்திங்க..??”

“நம்ம தாமிராவை காணோம்.. அந்த பாதகத்தி குறிஞ்சிதான் தலையை விரிச்சு போட்டு அங்க நின்னுட்டு இருந்தா.. அவ மூஞ்சியே முழுசா தெரியல.. அப்படியே முடி மறைச்சு கெடந்துச்சு.. ‘உஸ்ஸ்.. உஸ்ஸ்’ ன்னு கோவமா மூச்சு விட்டுட்டு என்னையே உத்துப்பாத்தா.. எனக்கு கொலை நடுங்கிப்போச்சு ஆதிராம்மா..!!”

“………………………”

ஆதிரா பேச்சுமூச்செல்லாம் அடங்கிப்போய் நின்றிருந்தாள்.. ஆவேசம் கொப்பளித்த வனக்கொடியின் முகத்தையே மிரண்டுபோய் பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

“மலைல இருந்து குறிஞ்சி குதிக்கப் போறான்னு எனக்கு தெரிஞ்சுச்சு.. அவ குதிச்சுட்டா நம்ம புள்ள நமக்கு இல்லைன்னு என் புத்திக்கு புரிஞ்சுச்சு..!! எனக்கு எப்படித்தான் அப்படி ஒரு வேகம் வந்துச்சோ.. ‘வேணாம்… நில்லு…’ன்னு கத்திக்கிட்டே ஓடுனேன்..!!”

சொல்லிக்கொண்டே வனக்கொடி மலைவிளிம்பை நோக்கி விடுவிடுவென ஓடினாள்.. ஆதிரா அதிர்ந்துபோய் அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்..!!

“அப்படியே பாய்ஞ்சு போய் குறிஞ்சி மேல விழுந்து அவளை புடிச்சேன்..!!”

வனக்கொடி இப்போது பொத்தென்று தரையில் விழுந்து உருண்டாள்.. சற்று தள்ளி விழுந்திருந்தால் மலையுச்சியில் இருந்தே கீழே விழுந்திருப்பாள்..!! தரையில் விழுந்தவள் சிலவினாடிகள் அப்படியே கிடக்க.. ஆதிரா உடலெல்லாம் ஒரு வெடவெடப்புடன் அப்படியே அசையாமல் நின்றிருந்தாள்..!! வனக்கொடி இப்போது மெல்ல தலையை உயர்த்தி.. ஆதிராவை திரும்பி பார்த்தாள்..!! அவளுடைய கண்களில் இப்போது கண்ணீர் தாரை தாரையாய் ஓடிக் கொண்டிருந்தது.. முகமும், உதடுகளும் துக்கத்தில் கிடந்தது துடித்தன..!! விசும்பலான குரலில் சொன்னாள்..!!

“குறிஞ்சி என் கைல மாட்டல ஆதிராம்மா.. காணாம போயிட்டா..!! எட்டிப்பாத்தா.. அவ அங்கிதான் ஆத்தை நோக்கி பறந்து போயிட்டு இருந்துச்சு..!!”

“………………………”

“நம்ம தாமிராவை என்னால காப்பாத்த முடியல.. இந்தப்பாவியால உன் தங்கச்சியை காப்பாத்த முடியல ஆதிராம்மா..!!”

வனக்கொடி குலுங்கி குலுங்கி அழ ஆரம்பிக்க.. அதை எதிர்பாராத ஆதிரா திகைத்துப் போனாள்.. ஓடிச்சென்று வனக்கொடியை வாரி அணைத்துக் கொண்டாள்..!!

“அழாதிங்கம்மா..!! ஐயோ.. அழாதிங்க ப்ளீஸ்..!!”

“காட்டுக்குள்ள தெசை தப்பி போயிட்டேன்மா.. கொஞ்சம் அசந்துட்டேன்..!! நான் மட்டும் சரியான நேரத்துக்கு வந்திருந்தா.. நம்ம தாமிராவை காப்பாத்திருக்கலாம் ஆதிராம்மா..!! தப்பு பண்ணிட்டேன்.. தப்பு பண்ணிட்டேன்..!!” ஆதிராவின் மார்பில் முகம் புதைத்து அழுதாள் வனக்கொடி.

“ஐயோ.. என்னம்மா இது.. விடுங்க..!! உங்க மேல எந்த தப்பும் இல்லம்மா.. அழாதிங்க.. கண்ணை தொடைச்சுக்காங்க.. ப்ளீஸ்..!!” அவளை தேற்றினாள் ஆதிரா.

அதன்பிறகு அந்த இடத்தில் சிறிது நேரம் நிசப்தம்தான்..!! வனக்கொடியின் அழுகை கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.. ஆதிராவும் அவள் நிதானத்திற்கு வருவதற்காகத்தான் காத்திருந்தாள்..!! வனக்கொடி இயல்புக்கு திரும்பியதும்.. ஆதிரா அந்தக் கேள்வியை அவளிடம் கேட்டாள்..!!

“அப்போ.. தாமிராவையும் குறிஞ்சியும் ஒண்ணா சேர்த்து நீங்க பாக்கல.. தனித்தனியாத்தான் பாத்திங்க..!!”

“ஆ..ஆமாம்மா.. ஏன் கேக்குற..??”

“அப்புறம் எப்படி அவதான் தாமிராவை கொண்டு போயிருக்கனும்னு உறுதியா சொல்றிங்க..??”

“அவ இல்லனா அப்புறம் வேற யாரு..??”

வனக்கொடி அவ்வாறு திருப்பி கேட்க.. அவளுக்கு என்ன பதில் சொல்வதென்று ஆதிரா இப்போது தடுமாறினாள்..!! உறுதியான வாதம் எதையும் அவளால் முன்வைக்க முடியாமல் போனதால்.. அப்படியே அமைதி காக்க முடிவு செய்தாள்..!!

“ஒன்னும் இல்லம்மா.. விடுங்க..!!” என்று அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள்.

12

தரையில் அமர்ந்திருந்த இருவரும் மெல்ல மேலெழுந்து கொண்டார்கள்..!! வனக்கொடி ஏதோ ஒரு சூனியத்தை வெறித்துக்கொண்டிருக்க.. ஆதிரா மட்டும் அந்த இடத்தை சுற்றி பார்வையை சுழற்றினாள்..!!

பாறையைக் குடைந்து செதுக்கப்பட்ட ராட்சதவடிவ சிங்கமுக சிலை ஒருபுறம்.. பாதாளத்தில் வீழ்த்திவிடும் சரேலென்ற மலைச்சரிவு மறுபுறம்.. பச்சைபச்சையாய் சுற்றிலும் அடர்ந்த காட்டு மரங்கள்..!! கோயில் என்று சொல்வதற்கான எந்த தனித்துவ அடையாளங்களும் அந்த இடத்தில் காணப்படவில்லை.. குங்குமத்தில் தோய்க்கப்பட்ட நான்கைந்து எலுமிச்சம் பழங்கள் சிலைக்கு அடியில் வீழ்ந்து கிடந்தன.. சிலைக்கு முன்புறம் கற்பாளங்களால் எழுப்பப்பட்ட ஒரு உயரமான மேடை.. அந்த மேடையின் அடிப்பாகத்தை சுற்றியிருந்த ஒரு சிவப்புத்துணி.. மேடையின் மேற்புறத்தில் காய்ந்தவிறகுகளின் உதவியுடன் எரிகிற ஜோதி.. மேடைக்கு வலப்புறமாக நட்டுவைக்கப்பட்டிருந்த ஒரு சூலாயுதம்.. அவ்வளவேதான்..!!

ஆதிராவுக்கு அந்த இடத்தை பார்க்க பார்க்க.. அவளும் தாமிராவும் அந்த இடத்துக்கு முன்பு வந்து சென்ற ஏதேதோ நினைவுகள் எல்லாம்.. அவளுடைய மனத்திரையில் குழப்பமாக ஓடின.. அந்த குழப்பத்தை தாங்கமுடியாதவளாய் படக்கென தலையை உதறிக்கொண்டாள்..!!

அவ்வாறு உதறி ஒரு நிதானத்துக்கு வந்தபோதுதான்.. ஆதிரா அதை உணர்ந்தாள்.. அந்த இடத்தை நிறைத்திருந்த அந்த இனிய வாசனையை.. நேற்று குளித்துவிட்டு வந்தபோது குப்பென்று நாசியில் ஏறிய அதே வாசனை..!! நாசியில் புகுந்து.. நாடி நரம்பெல்லாம் ஓடி.. மனதை கொள்ளை கொள்கிற அற்புத வாசனை..!! தனக்கு பழக்கமான வாசனைதான் என்று நேற்று நினைத்தாளே.. அவளுக்கு அந்த வாசனை அறிமுகமான இடமே இதுதான்..!! அந்த வாசனையை அறிந்துகொண்டதுமே அவளுடைய கண்களில் ஒரு மிரட்சி.. உடலில் ஒருவித நடுக்கம்..!! கலவர முகத்துடன் அப்படியே வனக்கொடியிடம் திரும்பி..

“அ..அம்மா.. இது.. இ..இந்த வாசனை.. என்ன வாசனை இது.. எ..எங்க இருந்து வருது..??” என்று திணறலாக கேட்டாள். உடனே நாசியை சற்று கூர்மையாக்கிய வனக்கொடி,

“இதுவா..?? இது மகிழம்பூ வாசனைம்மா.. மகிழமரம் அந்தா வளர்ந்திருக்கு பாரு.. அதுல இருந்துதான் இவ்வளவு வாசனை வருது..!! வாடிப்போனாலும் வாசம்போகாத ஒரே பூ.. மகிழம்பூதான் ஆதிராம்மா.. வாசத்துக்கு பேர்போனது..!!” என்று இயல்பாக சொன்னாள்.

வனக்கொடி கைகாட்டிய திசையில் பார்வையை வீசினாள் ஆதிரா.. மகிழம்பூ மரத்தின் மேற்புறம் அங்கே காட்சியளித்தது..!! மலைச்சரிவில் வேரூன்றி.. மேல்நோக்கி உயரமாக வளர்ந்து.. மலைவிளிம்பில் தனது கிளைக்கைகளை படரவிட்டிருந்தது அந்த மகிழமரம்..!! மரத்தின் மேற்புறத்தில் பச்சைபச்சையாய் இலைகள்.. கொத்துக்கொத்தாய் வெள்ளைப்பூக்கள்.. மஞ்சள் மஞ்சளாய் மகிழம்பழங்கள்..!!

“இ..இது.. இந்த மகிழமரம்.. நம்ம வீட்டுக்கு பக்கத்துல இந்த மரம் இருக்குதா..??” ஆதிராவிடம் இன்னுமே ஒரு தடுமாற்றம்.

“இல்லையே.. நம்ம வீட்டுப் பக்கத்துல மகிழமரம் எதுவும் இல்லையே..!! ஏன்மா கேக்குற..??”

வனக்கொடி குழப்பமாக ஆதிராவிடம் திரும்ப கேட்டாள்.. அதை கேட்கும்போதே ஆதிராவின் இதயத்தில் குபுகுபுவென ஒரு கொந்தளிப்பு..!! பதில் எதுவும் சொல்லத் தோன்றாதவளாய்.. அந்த மகிழமரத்தையே மிரட்சியாகப் பார்த்தாள்..!!
Like Reply
#38
அகழி வந்து ஒருநாள் கூட ஆகவில்லை.. அதற்குள்ளாகவே ஆதிராவின் மனதில் ஒரு கலக்கம் உருவாகி இருந்தது.. அவளுடைய மனம் ஒருவித குழப்பத்தில் உழல ஆரம்பித்திருந்தது..!! அகழி வருவதற்கு முன்பாக.. குறிஞ்சிதான் தாமிராவை கொண்டுபோய் விட்டாள் என்று கூறப்பட்டதை.. அவளால் அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்ள முடியாமலிருந்தது..!!


10

ஆனால் இப்போது.. வனக்கொடி தான்கண்ட காட்சியினை மலையுச்சியில் வைத்து அவளுக்கு விவரித்தபிறகு.. வீட்டுக்குள் வீசிய அதே வாசனையை இந்த சிங்கமலையிலும் நுகரநேர்ந்தபிறகு.. ஆதிராவின் மனதில் சற்று ஆழமாகவே குறிஞ்சி இறங்கியிருந்தாள்.. குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தாள்..!! மனதில் இருந்த குழப்பத்தை வெளியில் சொல்ல ஆதிரா விரும்பவில்லை.. அதேநேரம், அந்த குழப்பத்திற்கான விடையை தெரிந்துகொள்கிற ஆர்வமும், அவளுக்குள் இப்போது மூண்டிருந்தது..!! குழப்பத்தையும் ஆர்வத்தையும் மனதுக்குள் போட்டு மூடியவள்.. வனக்கொடியிடம் திரும்பி வறண்ட குரலில் சொன்னாள்..!!

“நேரமாச்சும்மா.. கெளம்பலாம்..!!”

“ம்ம்.. சரி ஆதிராம்மா.. கெளம்பலாம்..!! சிபித்தம்பி வேற எந்திரிச்சிருக்கும்னு நெனைக்கிறேன்..!!”

ஆதிராவும் வனக்கொடியும் சிங்கமலையில் இருந்து வீட்டுக்கு புறப்பட்டார்கள்.. சரிவாகவும் சறுக்கலாகவும் இருந்த அந்த குறுகியபாதையில் மிகப்பொறுமையாக இறங்கினார்கள்.. ஆதிரா முன்னால் நடக்க, அவள் பின்னே வனக்கொடி..!!

ஆதிராவின் கால்கள் நடைபோட்டுக் கொண்டிருந்தாலும்.. அவளுடைய மனம் வேறெதையோ அசைபோட்டுக் கொண்டிருந்தது.. அந்த மனம் முழுதையும் அவளுடைய தங்கையே இப்போது ஆக்கிரமித்திருந்தாள்..!! ஆதிராவும் தாமிராவும் சிறுமிகளாக இருந்தபோது.. இந்த மலைப்பாதையிலும், அந்த காட்டுமரங்களுக்கு இடையிலும்.. இருவரும் ஓடித்திரிந்து விளையாடியதெல்லாம் இப்போது ஆதிராவின் ஞாபகத்திற்கு வந்தன..!!

அடர்ந்த மரங்களும் அதிகாலைப் பனியும் செறிந்திட்ட அந்த மலைப்பாதையில்.. ஆதிரா இப்போது நடந்துசெல்ல.. அவளுக்கு எதிரே உதயமானாள் சிறுமி தாமிரா..!! எட்டுவயது குட்டிப்பெண்ணாய்.. பட்டுப்பாவாடை கட்டிக்கொண்டு.. ரெட்டைஜடை போட்டுக்கொண்டு.. கைவிரல்களை விரித்து ஆட்டிக்கொண்டு.. கண்ணிமைகளை வெடுக்கென வெட்டிக்கொண்டு.. மழலைக்குரலில் பாட்டொன்றை பாடிக்கொண்டு..!!

“ஆக்குபாக்கு வெத்தலபாக்கு தாம்தூம் தஸம்..!!”

தங்கை பற்றிய நினைவுடனே நடந்து சென்ற ஆதிராவுக்கு.. எட்டுவயது தாமிரா நிஜமாகவே எதிரேதோன்றி பாடுவது போல ஒரு மாயத்தோற்றம்..!!

“தஸ்ஸைதூக்கி மேலபோட்டா செட்டியார்வீட்டு நண்டு..!!”

பாடலுடன் சேர்த்து நளினமாக ஆடிக்கொண்டே.. அந்த மலைப்பாதையில் ஆதிராவை வழிநடத்தி கூட்டிச்செல்வது போல ஒரு மருட்சி..!!

“நண்டைதூக்கி மேலபோட்டா நாகரத்ன பாம்பு..!!”

அழகாக கைவிரல்களை ஆட்டிஆட்டி குட்டித்தாமிரா பின்னோக்கி நடந்து செல்ல.. ஆதிரா அவளுடைய முகத்தை ஏக்கமாக பார்த்துக்கொண்டே முன்னோக்கி நடந்தாள்..!!

“பாம்பைதூக்கி மேலபோட்டா பஞ்சவர்ணக் கிளி..!!”

பச்சரிசி பல்வரிசை மின்ன காந்தச்சிரிப்பு சிரித்தாள் தாமிரா..!! தளர்வாக நடைபோட்ட ஆதிராவின் உதடுகள் இப்போது தடதடத்தன.. ‘தாமிராஆஆ’ என்று ஒருவித ஆதங்கத்துடன் முணுமுணுத்தன..!! நெஞ்சைப் பிசைவது மாதிரியாய் அவளுக்குள் ஒரு உணர்வு..!!

“கிளியைதூக்கி மேலபோட்டா கிருஷ்ணனோட கொண்டை..!! ஹாஹாஹாஹா.. ஹாஹாஹாஹா..!!” பாடிமுடித்த தாமிரா கலகலவென கைகொட்டி சிரித்தாள்.

“தாமிராஆஆஆ..!!”

வாய்விட்டே அழைத்துவிட்ட ஆதிரா, கைநீட்டி வேறு தங்கையின் மாயவுருவை பிடிக்க முயன்றுவிட்டாள்..!! அவளுடைய கைக்குள் அகப்படாமல் தாமிரா பட்டென்று மறைந்துபோக.. அடுத்தகணமே நிஜவுலகுக்கு வந்து ஆதிரா திருதிருவென விழித்தாள்..!!

11

“ஆதிராம்மாஆஆ.. என்னம்மா ஆச்சு..??” பின்னால் நடந்து வந்த வனக்கொடி, பதற்றத்துடன் வந்து ஆதிராவின் தோள்பற்றினாள்.

“ஒ..ஒன்னும்.. ஒன்னும் இல்லம்மா..!! ஏ..ஏதோ.. பழைய ஞாபகம்..!! வா..வாங்க.. போலாம்..!!”

தடுமாற்றமாகவும் சமாளிப்பாகவும் சொன்ன ஆதிரா.. தாமதம் சிறிதும் செய்யாமல் விடுவிடுவென முன்னால் நடந்தாள்..!! அவள் செல்வதையே ஓரிரு வினாடிகள் திகைப்பாக பார்த்த வனக்கொடி.. பிறகு ஓடிச்சென்று அவளுடன் இணைந்துகொண்டாள்.. ஆறுதலாக ஆதிராவின் கையை பற்றிக்கொண்டாள்.. இப்போது இருவரும் சேர்ந்து நடைபோட்டார்கள்..!! வனக்கொடி அவ்வாறு வந்து கைபற்றிக்கொண்டது, ஆதிராவுக்கு இதமாக இருந்தது.. அவளுடைய மனதில் மெலிதாக ஒரு நிம்மதி பரவியது..!!

வீட்டை நெருங்க சற்று தொலைவு இருக்கையிலேயே.. தோட்டத்தில் நின்றிருந்த சிபி இவர்களது பார்வையில் பட்டான்.. கூடவே.. அவனுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்த திரவியமும்..!! திரவியம் தணிகைநம்பியின் தொழில்முறை நண்பர்.. வயதில் அரைச்சதம் அடித்தவர்..!! தென்றல் இருவருக்கும் தேநீர் தயாரித்து கொடுத்திருக்கவேண்டும்.. இருவருடைய கையிலும் வெண்ணிற பீங்கான் கோப்பை..!!

அகழியில் தணிகைநம்பிக்கு சொந்தமாக ஒரு டீ எஸ்டேட் இருக்கிறது.. அதுவல்லாமல், திரவியத்தின் மேலாண்மையிலும் மேற்பார்வையிலும் இயங்குகிற டீ பேக்டரியிலும் கணிசமான ஒரு முதலீட்டுப்பங்கு அவருக்குண்டு..!! ஆதிராவின் குடும்பம் மைசூருக்கு புலம்பெயர்ந்தபிறகு.. அவர்களுடைய மாளிகைவீட்டை பராமரிக்கிற பொறுப்பு வனக்கொடிக்கு வழங்கப்பட்டது போல.. தணிகைநம்பியின் பிற சொத்துக்களை நிர்வகிக்கிற பொறுப்பு திரவியத்திற்கு வந்துசேர்ந்திருந்தது..!! தணிகைநம்பி அவ்வப்போது அகழி வந்து, ஓரிரு நாட்கள் தங்கியிருந்து, கணக்குவழக்கு பகுப்பாய்வதோடு சரி..!! மற்றபடி.. தணிகைநம்பியின் சொத்துக்கள் அனைத்தையும் முழுக்கட்டுப்பாட்டில் வைத்திருப்பது..

“என்னம்மா.. காலங்காத்தாலேயே காட்டுக்குள்ள போய் சுத்திட்டு வர்றீங்க..??” என ஆதிராவைப் பார்த்து இதமான புன்னகையுடன் கேட்ட இந்த திரவியம்தான்..!!.

“ஒ..ஒன்னும் இல்ல அங்கிள்.. சும்மா.. சிங்கமலை வரை போயிருந்தோம்..!! நீங்க எப்ப வந்தீங்க..??”

“வந்து அரைமணி நேரம் ஆச்சுமா.. காலைலயே உன்கையால சூடா ஒரு காபி குடிக்கலாம்னு நெனச்சு வந்தேன்.. கடைசில வழக்கம்போல தென்றல் போட்ட டீயையே குடிக்கவேண்டியதா போய்டுச்சு..!! டயர்டா தூங்கிட்டு இருந்த உன் புருஷனையும் தட்டியெழுப்புற மாதிரி ஆய்டுச்சு..!! காலங்காத்தாலேயே வந்து கடுப்பை கெளப்புற இந்த அடியேனை மன்னிச்சுக்கங்க ரெண்டுபேரும்….!! ஹாஹா..!!” சொல்லிவிட்டு வசீகரமாக ஒரு சிரிப்பு சிரித்தார் திரவியம்.

“நாங்க அகழி வந்திருக்கிறது உங்களுக்கு எப்படி தெரியும் அங்கிள்..??”

ஆதிரா திடீரென அவ்வாறு கேட்க, திரவியத்தின் சிரிப்பு பட்டென்று நின்று போனது.. அவருடைய நெற்றிப்பரப்பில் சுருக்கக் கோடுகள்..!! அவளிடம் இருந்து அந்த கேள்வியை அவர் எதிர்பார்க்கவில்லை என்பது.. திகைத்துப் போய் பார்த்த அவருடைய முகத்திலேயே தெளிவாக தெரிந்தது..!!

“அ..அது.. நம்ம வனக்கொடிதான்..”

என்று தடுமாற்றமாக அவர் இழுக்க, ஆதிரா உடனே திரும்பி வனக்கொடியை கேள்வியாக பார்த்தாள்..!! திரவியத்திடம் காணப்பட்ட அதே திகைப்பு, இப்போது வனக்கொடியிடமும்..!! ஆதிராவுக்கு அவள் சொன்ன பதிலிலும் அவருடைய அதே தடுமாற்றம்..!!

“அ..அது.. நேத்து மரகதம்மாவை மார்க்கெட்ல பார்த்தேன்மா.. அ..அப்படியே பேச்சுவாக்குல நீங்க ஊருக்கு வந்திருக்குறதையும் சொல்லிட்டேன்..!! சொல்லக்கூடாதுன்னு ஒன்னும் இல்லையே..??”

மரகதம் என்பது திரவியத்தின் மனைவி..!! வனக்கொடியின் முகத்தில் காணப்பட்ட அந்த அவஸ்தையை.. ஆதிரா ஓரிரு வினாடிகள் சலனமில்லாமல் பார்த்தாள்..!! பிறகு..

“இ..இல்லம்மா.. அப்படிலாம் ஒன்னும் இல்ல..!! ஹ்ம்ம்ம்ம்.. சரி.. நீங்க போய் டிஃபன் ரெடி பண்ணுங்க.. போங்க..!!” என்று அவள் அமர்த்தலாக சொன்னதும்,

“சரிம்மா..!!” வனக்கொடி அங்கிருந்து நகர்ந்தாள்.



“நீங்களும் இருந்து சாப்பிட்டு போங்க அங்கிள்..!!” ஆதிரா அவ்வாறு புன்னகையுடன் சொல்ல, திரவியம் இப்போது இயல்புக்கு வந்தார்.

“இல்லம்மா.. சாப்பிடுறதுக்குலாம் எனக்கு டைம் இல்ல.. ஃபேக்டரிக்கு கெளம்பனும்..!! திருவிழா வருது.. ஃபேக்டரியை வேற ரெண்டு நாள் க்ளோஸ் பண்றோம்.. சம்பளத்தை முன்னக்கூட்டியே குடுக்கனும்னு லேபர்ஸ்லாம் கேட்ருக்காங்க.. பணம் பட்டுவாடா பண்ணனும்.. நெறைய வேலை இருக்கு..!! அடுத்தவாரத்துல ஒருநாள் வந்து பொறுமையா உன்கையால சாப்பிடுறேன்..!!”

“அடுத்தவாரமா.. அடுத்தவாரம் நாங்க இருக்க மாட்டோமே அங்கிள்..?? அஞ்சுநாள்தான எனக்கு டைம் குடுத்திருக்காரு என் வீட்டுக்காரர்..!!” ஆதிரா சலிப்பாக சொல்ல, திரவியம் சிரித்தார்.

“ஹாஹா..!! ஏன்பா சிபி.. கூட நாலுநாள் இருந்துட்டு போகலாம்ல..??” என்று சிபியிடம் திரும்பி கேட்டார்.

“என்ன ஸார் நீங்களும்..?? இந்த அஞ்சுநாள் இங்க வந்ததே மாமாக்கு தெரியாது.. தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவார்..!! இதுல இன்னும் நாலுநாளா..?? சான்ஸே இல்ல..!!” சிபி நிதானமாகவே பதில் சொன்னான்.

“ஹ்ம்ம்.. அகழி வந்தது அப்பாக்கு தெரியாதாம்மா..??” திரவியம் இப்போது ஆதிராவின் கண்களை கூர்மையாக பார்த்து கேட்டார்.

“தெ..தெரியாது அங்கிள்..!!”

“ஓ.. அதுக்காகத்தான் வனக்கொடியை அப்படி மொறைச்சியா..?? நீங்க வந்திருக்குறதை எங்க நான் உன் அப்பாட்ட சொல்லிடுவேனோன்னு..??”

“ஐயோ.. அப்படிலாம் இல்ல அங்கிள்..!!” ஆதிரா பதற்றமாக மறுத்தாள்.

“ஹாஹா.. பரவாலம்மா.. எனக்கு தெரியும்..!! ஹ்ம்ம்ம்ம்.. சரி.. நான் உன் அப்பாட்ட இதுபத்தி மூச்சு விடல.. போதுமா..??”

“தேங்க்ஸ் அங்கிள்..!!”

“பட்.. என்னை பொறுத்தவரை.. எதையும் மறைச்சு பண்றது அவ்வளவு நல்லதில்லைன்னு தோணுது.. நீங்களே அவர்ட்ட சொல்லிடுறது பெட்டர்..!!”

“சொல்லலாம் அங்கிள்.. ஆனா அப்பா புரிஞ்சுக்கமாட்டாரு.. தேவையில்லாம பயப்படுவாரு.. உடனே மைசூர் கெளம்பி வான்னு சொல்லிடுவாரு..!! எனக்கு இங்க ஒரு அஞ்சாறு நாளாவது இருக்கணும்னு ஆசை அங்கிள்..!!”

“எனக்கு புரியுதும்மா..!! ஆனா.. உன் அப்பாவைப் பத்திதான் உனக்கே நல்லா தெரியுமே.. அவருக்குத்தான் பொய் சொன்னாலே பிடிக்க மாட்டேன்னுதே..?? பொய் சொல்லிட்டோம்னு தெரிஞ்சா மனுஷனுக்கு அவ்வளவு கோவம் வருது..!!”

“தெரியும் அங்கிள்..!!”

“ரெண்டுமாசம் முன்னாடி பிசினஸ்ல ஒரு பெரிய சிக்கல்.. நாமளே சமாளிச்சிடுறது நல்லதுன்னு அவர்ட்ட ஒரு பொய் சொல்ற மாதிரி நெலமை.. வேறவழியில்லாம சொல்லிட்டேன்.. கடைசில என்னாச்சு தெரியுமா..?? போனதடவை அவர் அகழிக்கு வந்திருக்குறப்போ எனக்கும் அவருக்கும் பெரிய சண்டையே வந்துடுச்சு.. உனக்குத்தான் தெரியும்ல..??” திரவியம் இயல்பாக கேட்க,

“ம்ம்..!!” அவர் எதைப் பற்றி கேட்கிறார் என்று தெரியாமலே தடுமாற்றமாக சொன்னாள் ஆதிரா.

“ஹ்ம்ம்.. நான் ஏதோ அவரை ஏமாத்தி பணத்தை சுருட்டுற மாதிரி நெனச்சுட்டு இருக்காரு.. என்ன சொன்னாலும் நம்ப மாட்டேன்றாரு..!! எல்லாத்துக்கும் காரணம் என்னன்னா நான் சொன்ன அந்த பொய்தான்..!! அதுக்குத்தான் சொல்றேன்..!!”

“புரியுது அங்கிள்.. பாத்துக்குறோம்..!! இன்னும் நாலைஞ்சு நாள்தான..?? மைசூர் போனதும் மொதவேலையா எல்லாத்தையும் சொல்லிடுறேன்..!!”
Like Reply
#39
ஆதிரா இப்போது சிபியிடம் திரும்பி,

“என்னங்க.. காலைல போலீஸ் ஸ்டேஷனுக்கு கால் பண்ணனும்னு சொன்னனே.. பண்ணுனிங்களா..??” என்று கேட்டாள்.

“இல்லடா.. இன்னும் பண்ணல..!! எழுந்ததே இப்போத்தானே..??” சிபி சொல்லிக்கொண்டிருக்கையிலேயே,


22

“போ..போலீஸ் ஸ்டேஷனுக்கா..?? போலீஸ் ஸ்டேஷனுக்கு எதுக்குமா..??” என்று திரவியம் இடையில் புகுந்து கேட்டார்.

“ஒன்னுல்ல அங்கிள்.. தாமிரா கேஸ்ல இம்ப்ரூவ்மன்ட் பத்தி தெரிஞ்சுக்கத்தான்..!!”

“என்னம்மா நீ..?? இன்னுமா தாமிரா பத்திலாம் யோசிச்சுட்டு இருக்குற.. இன்னுமா அவ கெடைப்பான்ற நம்பிக்கை உனக்கு இருக்கு..?? வனக்கொடி உன்கிட்ட எதும் சொல்லலையா..??”

“சொன்னாங்க அங்கிள்..!! ஆனா.. அவங்க சொன்னதை அப்படியே நம்பிட்டு சும்மா இருக்க என்னால முடியல..!! தாமிரா கெடைப்பாளா மாட்டாளான்லாம் நான் யோசிக்கல.. ஆனா.. அவளுக்கு உண்மையில என்ன நடந்துச்சுன்னு உறுதிபண்ணிக்க ஆசைப்படுறேன்.. அவ்வளவுதான்..!!”

ஆதிரா தீர்க்கமாக சொல்ல.. அவளுடைய கண்களையே சிறுது நேரம் கூர்மையாக பார்த்தார் திரவியம்..!! பிறகு நீளமாக ஒரு பெருமூச்சை உதிர்த்தவர்.. கவலை தொனிக்கிற குரலில் ஆரம்பித்தார்..!!

“ஹ்ம்ம்ம்ம்..!! பார்த்துக்கோமா.. தாமிராவை நெனைச்சு ஏற்கனவே நீ ஒருவருஷம் ரொம்ப கஷ்டப்பட்டுட்ட..!! திரும்ப அதேநெலமைல உன்னை பாக்குறதுக்கு.. எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு.. அதான் சொன்னேன்..!! உனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிருக்கு.. சிபி மாதிரி ஒரு நல்லபையன் புருஷனா கெடைச்சிருக்கான்.. இந்த அகழி, குறிஞ்சி, தாமிரா.. இதெல்லாம் மறந்துட்டு நிம்மதியா..”

“என்னால அப்படி இருக்க முடியல அங்கிள்..!!”

“புரியுதுமா..!! தாமிரா போனது எங்களுக்குலாம் பழகிப்போச்சு.. பழசாய்டுச்சு..!! ஆனா.. உனக்கு அப்படி இல்ல.. உன்னை பொறுத்தவரை அது ரொம்ப புது விஷயமா இருக்கு..!! உன்னோட ஆதங்கத்துக்கும் வேகத்துக்கும் அதுதான் காரணம்..!! ஹ்ம்ம்ம்ம்.. நடந்ததை ஏத்துக்குற பக்குவம் கூடிய சீக்கிரமே உனக்கு வரணும்னு, அந்த ஆண்டவனை நான் வேண்டிக்கிறேன்..!!”

“தேங்க்ஸ் அங்கிள்..!!”

“ஹ்ம்ம்ம்ம்..!! எனிவே.. நீங்க இன்னைக்கு ஸ்டேஷன் போனாலும் இன்ஸ்பெக்டரை மீட் பண்ண முடியாது..!!”

“ஏன்..??”

“அவர் ஊர்ல இல்ல..!!”

“உ..உங்களுக்கு எப்படி தெரியும்..??”

“ஹாஹா.. எனக்கு எல்லாம் தெரியும்மா..!! நீ ஊருக்கு வந்திருக்கிறதை வனக்கொடி சொன்னமாதிரி.. அவர் ஊர்ல இல்லைன்றதையும் அவரேதான் சொன்னாரு..!! ஆக்சுவலா நானும் இன்னைக்கு வேற ஒருவிஷயமா ஸ்டேஷன் போறதா இருந்தேன்.. காலைலதான் அவரே ஃபோன் பண்ணி விஷயத்தை சொன்னாரு..!! நாளைக்கு இருப்பாரு.. நாளைக்கு போய் பாருங்க..!!”

“ச..சரி அங்கிள்.. நாங்க அப்போ நாளைக்கே போறோம்..!!”

“சரிம்மா.. எனக்கும் டைமாச்சு.. நான் அப்படியே கெளம்புறேன்..!!”

“ஓ..!! ஓகே அங்கிள்..!!”

“புதுசா கல்யாணமான புள்ளைகளுக்கு விருந்து வைக்கனும்னு மரகதம் ஆசைப்படுறாம்மா.. சொல்ல சொன்னா.. சொல்லிட்டேன்..!! இருக்குற நாலஞ்சு நாள்ல ஒருநாள், எங்க வீட்டுப்பக்கமும் கொஞ்சம் எட்டிப்பாருங்க.. சரியா.. ஹாஹாஹாஹா..!!”

23

“ஹஹா.. கண்டிப்பா அங்கிள்.. வர்றோம்..!!”

திரவியத்தை வழியனுப்பி வைத்துவிட்டு ஆதிராவும் சிபியும் வீட்டுப்பக்கமாக திரும்பி நடந்தார்கள்..!! இருவரும் வீட்டுத் தாழ்வாரத்தை அடைந்து நடைபோடுகையில்.. ஆதிரா சிபியிடம் மெல்ல கேட்டாள்..!!

“அப்பாவுக்கும் அங்கிளுக்கும் என்ன பிரச்சினை அத்தான்..?? எதுக்கு சண்டை போட்டாங்க..??”

“எனக்கும் முழுசா எதும் தெரியாது ஆதிரா..!! மாமா போனதடவை அகழிலருந்து மைசூர் வந்ததும்.. இதைப்பத்தி சொல்லி பொலம்பிட்டு இருந்தாரு..!! நீயுந்தான் அப்போ கூட இருந்த.. இப்போ உனக்கு மறந்திருக்கும்னு நெனைக்கிறேன்..!!”

“ஆ..ஆமா.. எனக்கு இப்போ ஞாபகம் இல்ல..!!”

“ஹ்ம்ம்..!! கம்பனி அக்கவுண்ட்ஸ்ல ஏதோ மிஸ்மாட்ச் போல.. திரவியம் அங்கிள் ஏமாத்துறதா மாமாவுக்கு ஒரு டவுட்.. அவ்வளவுதான் எனக்கு தெரியும்..!!”

“ம்ம்ம்ம்..!! ரெண்டு பேரும் எவ்வளவு க்ளோஸா இருப்பாங்க.. அவங்களுக்குள்ள சண்டைன்னா என்னால நம்பவே முடியல..!!”

“என்னாலயுந்தான் ஆதிரா..!! ரெண்டு பேரும் சண்டை போட்டாங்கன்னு தெரிஞ்சு மனசுக்கு கொஞ்சம் கஷ்டமா இருந்தது..!! பட்.. என்ன பண்றது.. பிசினஸ்ல இந்த மாதிரி மிஸ்-அண்டர்ஸ்டாண்டிங் வர்றது சகஜம்தான்.. கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாயிடும்னு நம்புவோம்..!!”

“ம்ம்..!!”

பேசிக்கொண்டே இருவரும் ஹாலுக்குள் நுழைந்தார்கள்.. அவ்வாறு நுழைந்ததுமே ஆதிராவின் பார்வையை அந்தப்பொருள் வசீகரித்தது..!! ஹாலின் ஒருமூலையில் அந்த மூன்றடி உயர மரஅலமாரி.. அதன்மேலே அழகுற வீற்றிருந்த, முன்பு தாமிரா ஆசையாக பராமரிக்கிற, இப்போது வனக்கொடியின் கடமையாகிப் போய்விட்ட, வண்ணமீன்கள் நீந்துகிற அந்த கண்ணாடி மீன்தொட்டி.. அதனருகே தங்கநிற ஜிகினாத்தாளை சுற்றிக்கொண்டு காட்சியளித்த அந்த அன்பளிப்பு அட்டைப்பெட்டிதான் ஆதிராவின் கவனத்தை கவர்ந்த அந்தப்பொருள்..!!

“எ..என்னத்தான் இது.. கிஃப்ட் பாக்ஸ்லாம்..??”

“அதுவா.. அது திரவியம் அங்கிள் கொண்டுவந்தது.. நமக்கு ஏதோ ப்ரசன்ட்டாம்..!!”

“ஓ.. என்ன இருக்கு அதுக்குள்ள..??”

“ஹஹா.. எனக்கு தெரியலம்மா.. நீயே பிரிச்சுப்பாரு..!!”

சிரிப்புடன் சொல்லிவிட்டு சிபி அங்கிருந்து நகர, ஆதிரா அந்த ஜிகினா பெட்டியை திரும்பி பார்த்தாள்..!! அவ்வாறு பார்க்கும்பொழுதே.. ஆறேழு வருடங்களுக்கு முன்பாக.. அதே இடத்தில் காட்சியளித்த.. இதே திரவியம் வாங்கிவந்திருந்த அந்த அன்பளிப்புப்பெட்டி.. இப்போது ஆதிராவின் மனக்கண்ணில் தோன்றியது.. பழைய நினைவொன்றில் மூழ்க ஆரம்பித்தாள்..!!

திரவியத்தின் ஒரே மகன் அப்போதே அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டிருந்தான்..!! மனைவியுடன் அமெரிக்கா சென்று அவனை பார்த்து திரும்பிய திரவியம்.. இந்தியா வருகையில் அப்படியே தணிகை நம்பிக்கென அன்பளிப்பாக ஒரு பொருளை வாங்கி வந்திருந்தார்..!! அந்தப்பொருளும் இந்தமாதிரிதான் மினுமினுப்புத்தாள் சுற்றப்பட்டு இதே இடத்தில் வைக்கப்பட்டிருந்தது..!!

“என்ன வாங்கிட்டு வந்திருக்கான்னு தெரியல.. நீங்களே பிரிச்சு பாருங்க..!!”

தணிகைநம்பியும் சிபி மாதிரியே சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்..!! பாவாடை சட்டையில் இருந்த தாமிராவும், ரெட்டை ஜடை போட்டிருந்த ஆதிராவும்.. ஆவலாக அந்தப்பெட்டியை நோக்கி ஓடினார்கள்.. ஆசையாக அதன் உறையை கிழித்து எறிந்தார்கள்.. ஆர்வமாக அதனுள்ளே பார்வையை வீசினார்கள்..!! உள்ளே அந்த புத்தம்புது நோக்கியா செல்ஃபோன்..!!

24

ஆதிரா அப்போது கல்லூரியில் இரண்டாமாண்டு பயின்று கொண்டிருந்தாள்.. தாமிரா உயர்நிலைப்பள்ளியில் இறுதியாண்டு..!! அப்போதெல்லாம் செல்ஃபோன் புரட்சி ஏற்பட்டிருக்காத சமயம்.. அகழியிலும் செல்ஃபோன் வைத்திருந்தவர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு.. அவையும் கருப்புவெள்ளை திரையும், கனமான எடையும் கொண்ட செங்கற்கட்டிகளாகவே இருக்கும்..!! ஆதிராவும், தணிகைநம்பியும்கூட அப்போது அந்தமாதிரி ஆளுக்கொரு செல்ஃபோன்கள் வைத்திருந்தனர்.. தாமிராவிடம் அதுவும் கிடையாது..!!

திரவியம் அமெரிக்காவில் இருந்து வாங்கி வந்திருந்த இந்த புது செல்ஃபோனோ.. கலர் டிஸ்ப்ளேயுடன் கவர்ச்சியாக காட்சியளித்தது.. ஸ்லைட் வடிவமைப்புடன் ஸ்டைலாக பளபளத்தது.. FM, MP3 சப்போர்ட் எல்லாம் உண்டு.. முன்னொன்றும் பின்னொன்றுமாக இரண்டு கேமராக்கள் உண்டு..!! ஆதிராவுக்கும் தாமிராவுக்கும் அந்த மாதிரியொரு சூழலிலும் பருவத்திலும்.. அந்த செல்ஃபோனைப் பார்த்து ஒரு ஈர்ப்பு வந்ததில் ஆச்சர்யம் எதுவுமில்லை..!!

“வாவ்..!! சூப்பரா இருக்குதுக்கா.. அப்பாட்ட சொல்லிட்டு இதை நானே வச்சுக்கப் போறேன்..!!”

“ஹேய் ப்ளீஸ்டி.. நான் வச்சுக்குறேன்டி.. நீ என் செல்ஃபோனை எடுத்துக்கோ.. ஓகேவா..??”

“ஐயே.. உன் ஓட்டை ஃபோன் யாருக்கு வேணும்..?? எனக்கு இதுதான் பிடிச்சிருக்கு.. என் ரேஞ்ச்க்குலாம் இதுதான் சூட் ஆகும்..!!”

“ப்ச்.. நீ இதை வச்சு என்ன பண்ணப்போற..?? நானாவது சாங்க்ஸ்லாம் கேட்பேன்..!!”

“ம்க்கும்.. காலேஜ்ல போய் நல்லா ஸீன் போடுவேன்னு சொல்லு..!! உனக்கு சாங்க்ஸ்னா எனக்கு கேமரா.. நம்ம ஊரோட அழகைலாம் அப்படியே சுட்டுத்தள்ளப்போறேன்..!!”

“சொன்னா கேளுடி.. அக்காக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. ப்ளீஸ்..!!”

“தேவையில்லாம கெஞ்சிட்டு இருக்காத.. நான் முடிவு பண்ணிட்டேன்.. எனக்குத்தான் இது..!!”

தாமிரா அலட்சியமாக சொல்ல, ஆதிரா அவளையே எரிச்சலாக முறைத்தாள். பிறகு,

“போடி.. நான் அப்பாட்டயே கேட்டுக்குறேன்..!!”

என்றுவிட்டு அவசரமாக அப்பாவின் அறைக்கு விரைந்தாள்.. ஓரிரு வினாடிகள் கழித்தே சுதாரித்துக்கொண்ட தாமிராவும் அவளுக்கு பின்னால் ஓடினாள்..!! முதலில் யார் சென்று அப்பாவிடம் முறையிடுவது என்று இருவருக்கும் போட்டி.. மாடிப்படிகளில் ஒரு ஓட்டப்பந்தயம்..!! மூச்சிரைக்க ஓடிச்சென்று தணிகைநம்பியிடம் இருவரும் முறையிட்டார்கள்.. அவரோ தாமிராவுக்குத்தான் சாதகமாக பேசினார்..!!

“தாமிராவே வச்சுக்கட்டும்மா.. அவகிட்டத்தான ஃபோனே இல்ல..!!”

“அதான் என் ஃபோனை அவளுக்கு தர்றேன்னு சொல்றேன்ல..??”

“போடி.. எனக்கு இந்த ஃபோன்தான் வேணும்..!!”

மல்லுக்கு நின்றனர் இருவரும்..!! மகள்களின் கூச்சலில் எரிச்சலான தணிகைநம்பி,

“அடடடடா.. சின்னப்புள்ளைங்க மாதிரி சண்டை போடாதீங்க..!!” என்றவர் ஆதிராவிடம் திரும்பி,

“இங்கபாரு ஆதிரா.. உன் தங்கச்சி சரின்னு சொன்னான்னா நீ வச்சுக்கோ.. இல்லன்னா அவகிட்டயே குடுத்திடு.. அவ்வளவுதான்.. போங்க ரெண்டு பேரும்.. வேலை இருக்கு எனக்கு..!!”

என்று தனது இறுதிமுடிவை சொன்னார். ஆதிராவின் முகம் இப்போது பட்டென வாடிப்போனது. தாமிராவை பரிதாபமாக ஏறிட்டாள்.

“ப்ளீஸ்டி..!!”

என்று கடைசியாக ஒருமுறை கெஞ்சிப்பார்த்தாள்..!! ஏக்கமும், ஏமாற்றமும் கொப்பளித்த அக்காவின் முகத்தைப் பார்க்க, தாமிராவுக்கு இப்போது பாவமாக இருந்தது..!! அப்படியே உருகிப்போனாள்.. அத்தனை நேரம் அந்த செல்ஃபோன் மீது அவள் வளர்த்திருந்த ஆசையும் அவளுடன் சேர்ந்து உருகிக் கரைந்தது..!! ஆதிராவையே ஓரிரு வினாடிகள் சலனமில்லாமல் பார்த்த தாமிரா.. பிறகு உதட்டில் ஒரு குறும்புப்புன்னகையை கசியவிட்டவாறு, கைகள் இரண்டையும் முகத்திற்கு முன்பாக உயர்த்தி, கைகளின் இடைவெளியில் கண்சிமிட்டியவாறு கேட்டாள்..!!

“Game or Shame..??”

தாமிரா அவ்வாறு கேட்டதுமே ஆதிராவின் முகத்தில் சட்டென ஒரு மலர்ச்சி.. இதுவரை நடந்த அனைத்து போட்டிகளையும் அவள்தான் வென்றிருக்கிறாள் என்கிற தைரியத்தில் பிறந்த மலர்ச்சி அது..!!

“Game..!!!!” என்று உற்சாகமாக கத்தினாள்.

பழைய நினைவுகளில் இருந்து மீண்ட ஆதிரா.. இப்போது கையிலிருந்த இந்த கிஃப்ட்பாக்ஸை திறந்து பார்த்தாள்..!! உள்ளே ஒரு நகைப்பெட்டி இருந்தது.. இதயவடிவிலான இரட்டை பதக்கங்கள்.. தங்கத்தால் வார்க்கப்பட்ட தளப்பரப்பு.. அதன்மேல் பதிக்கப்பட்ட சிறுசிறு சிவப்பு கற்கள்.. அழகாக ஜொலித்தன இரண்டு பதக்கங்களும்..!! கணவன் மனைவி இருவரும் ஆளுக்கொன்றாய்.. அவர்களது கைச்சங்கிலியிலோ கழுத்து சங்கிலியிலோ.. இணைத்துக் கொள்கிற மாதிரியான இரட்டை பரிசுப்பொருட்கள்..!! ஆதிராவுக்கு மிகவும் பிடித்திருந்தது.. கணவனிடம் அவற்றை காட்டுகின்ற ஆர்வத்துடன்..
“என்னங்க..” என்றழைத்தவாறே படிக்கட்டை நோக்கி நடந்தாள்.
Like Reply
#40
அன்று மதிய உணவு அருந்திய பிறகு.. ‘ஒரு குட்டித்தூக்கம் போடப்போறேன்’ என்றுவிட்டு படுக்கையில் விழுந்த சிபி.. மாலை நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை.. ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்து போயிருந்தான்..!! புத்தகம் புரட்டிக்கொண்டிருந்த ஆதிராவுக்கு போரடிக்கவே.. வெளியில் சற்று உலாவி வரலாம் என்ற எண்ணத்துடன்.. படியிறங்கி ஹாலுக்குள் பிரவேசித்தாள்.. வாசல் திறந்து வீட்டினின்று வெளிப்பட்டாள்..!!


13

ஐந்துமணிதான் ஆகியிருக்கும்.. அதற்குள்ளாகவே வெளியே இருள்கவிழ்ந்து வெளிச்சம் குறைந்திருந்தது.. வளிமண்டலத்தில் பரவியிருந்த பனிப்படலம் தெளிவாகவே பார்வைக்கு புலப்பட்டது..!! சுற்றிலும் பச்சைப்பசேலென புல்வெளியும், குற்றுச்செடிகளும்.. சிலுசிலுவென வீசிய காற்றில் ஜில்லென்று ஒரு குளிர்ச்சி..!! சூழலில் ஒரு அடர் நிசப்தம்.. அந்த நிசப்தத்தை கிழிக்கிற மாதிரி.. அவ்வப்போது சீரான இடைவெளியில் ஒலித்த தூரத்து இரும்புப்பட்டறையின் சம்மட்டி சப்தம்..!!

“டங்ங்ங்.. டங்ங்ங்.. டங்ங்ங்..!!”

புல் வளர்ந்திருந்த மண்சரிவில் இறங்கி.. வீட்டுக்கு முன்பாக ஓடிய குழலாற்றை அடைந்தாள் ஆதிரா..!! உறுமீன் வருவதற்காய் காத்திருந்த இரண்டு கொக்குகள்.. ஆதிராவின் உருவம் கண்டதும் சிறகடித்து பறந்தோடின..!! ஆற்றங்கரையின் ஒரு ஓரத்தில் போடப்பட்டிருந்த.. மரத்தாலான சாய்விருக்கையில் வசதியாக அமர்ந்து கொண்டாள்..!! அமைதியாக ஓடிக்கொண்டிருந்த குழலாற்றை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்..!!

“வா வா வா.. குறிஞ்சி ஆத்துக்குள்ளதான் படுத்திருக்கா.. கூப்பிடுறா உன்னை.. ஓடி வா..!! ஹாஹாஹா..!!”

ஆதிராவின் காதுகளுக்குள் தாமிராவின் குரலும்,சிரிப்பும் க்றீச்சிட்டன.. நெற்றியில் ஒரு சுருக்கமெழ, இமைகளை இறுக்கி மூடிக்கொண்டாள்..!! ஒருசில வினாடிகளுக்கு பிறகு விழிகளை திறந்தவள்.. தூரமாக ஆற்றின் அடுத்தகரையில் தெரிந்த அந்த உயரமான மரத்தை பார்த்தாள்..!! மூளைக்குள் மீண்டும் தாமிராவின் நினைவுகள் முளைவிட்டன..!!

ஆதிராவும் தாமிராவும் செல்ஃபோனுக்காக சண்டையிட்டுக்கொண்ட அன்று.. சிறிது நேரத்தில் இந்த ஆற்றங்கரையில்தான் இருவரும் வந்து நின்றிருந்தனர்..!!

“இங்க எதுக்குடி கூட்டிட்டு வந்திருக்குற..??” ஆதிரா தங்கையிடம் கேட்டாள்.

“கேம் ஆடுறதுக்குத்தான்..!!” தாமிரா கேஷுவலாக சொன்னாள்.

“இங்கயா.. இங்க என்ன கேம்..??”

“ஹ்ம்ம்.. அதோ.. அந்த மரம் தெரியுதுல..??”

“ஆமாம்..!!”

“அதைப்போய் மொதல்ல யார் தொடுறாங்களோ.. அவங்களுக்குத்தான் அந்த செல்ஃபோன்..!!”

14

“அ..அதையா.. அதை எப்படி..??”

“ம்ம்ம்ம்..?? ஆத்துல நீந்தி அந்தக்கரைக்கு போய் தொடணும்..!!”

தாமிரா கூலாக சொல்ல, ஆதிராவிடம் பட்டென ஒரு பதட்டம்..!! குழலாற்றின் அடிப்பரப்பில்தான் குறிஞ்சி துயில் கொண்டிருக்கிறாள் என்பது அகழிமக்களின் அமானுஷ்ய நம்பிக்கை.. அதனால் ஏற்பட்டதுதான் ஆதிராவின் அந்த பதட்ட மும்..!!

“ஐயையோ.. ஆத்துல எறங்கனுமா.. நா..நான் மாட்டேன்பா..!!”

“ஏன்.. ஆத்துல எறங்கினா என்னவாம்..??”

“எறங்க மாட்டேன்னா எறங்க மாட்டேன்.. அவ்வளவுதான்..!! நீ வே..வேற ஏதாவது கேம் இருந்தா சொல்லு..!!”

“ஹாஹா.. பயந்தாங்கொள்ளி பயந்தாங்கொள்ளி.. தொடைநடுங்கி.. புள்ளப்பூச்சி..!!”

“ப்ச்.. பயம்லாம் ஒன்னும் இல்லடி..!!”

“அப்புறம் என்ன..?? வா..!! அந்த குறிஞ்சியா நாமளான்னு இன்னைக்கு ஒரு கை பாத்துடலாம்..!!” கண்சிமிட்டிய தாமிரா இப்போது ஸ்கர்ட்டை கழட்டி வீசி, ஷார்ட்சுடன் நின்றாள்.

“வேணான்டி..!!” ஆதிரா கெஞ்சினாள்.

“செல்ஃபோன் வேணும்னா வா.. ஷேம் ஷேம்னு நான் கேலி பண்ணனும்னா இங்கயே நில்லு..!!” சொன்ன தாமிரா, அக்காவின் பதிலுக்கு காத்திராமல் ஆற்றை நோக்கி ஓடினாள்.

“ஹேய்.. நில்லுடிஈஈ..!!” ஆதிரா கையுயர்த்தி கத்தினாள்.

“வா வா வா.. குறிஞ்சி ஆத்துக்குள்ளதான் படுத்திருக்கா.. கூப்பிடுறா உன்னை.. ஓடி வா..!! ஹாஹாஹா..!!”

சிரித்துக்கொண்டே ஓடிப்போய் ஆற்றுக்குள் தொப்பென்று விழுந்தாள் தாமிரா..!! செல்ஃபோன் கவர்ச்சியால் துணிச்சல் பெற்ற ஆதிராவும்.. இப்போது செருப்பை உதறி வீசிவிட்டு ஓடினாள்.. அவசரமாய் ஓடி ஆற்றுநீரை கிழித்துக்கொண்டு விழுந்தாள்..!!

அழகு உருக்கொண்ட ஆறறிவு மீன்களாக.. அக்காவும் தங்கையும் ஆற்றில் நீச்சலடித்தனர்..!! தூரத்தில் தெரிந்த மரத்தை கூர்மையாக பார்த்தவாறே தீவிரமாக கால்களை உதைத்தாள் ஆதிரா.. பக்கவாட்டில் தெரிந்த அக்காவை அன்பொழுக பார்த்தவாறே சோர்வாக கைகளை வீசினாள் தாமிரா..!! ஆதிராவுக்கு சந்தேகம் வராதமாதிரி, தாமிரா மெல்ல மெல்ல தனது வேகத்தை குறைத்துக்கொள்ள.. ஆதிராவே முதலில் அடுத்தகரை ஏறினாள்.. ஏறியவேகத்தில் ஓடிச்சென்று அந்த மரத்தை தொட்டாள்..!!

“ஹைய்ய்ய்..!! நான் ஜெயிச்சுட்டேன்ன்ன்.. எனக்குத்தான் அந்த செல்ஃபோன்ன்ன்..!!” குழந்தையாய் குதுகளித்தாள் அக்கா.

“ச்ச.. இந்தவாட்டியும் நீயே ஜெயிச்சுட்ட.. போடீ..!!” போலியாக சலித்துக்கொண்டாள் தங்கை.

வீட்டுக்கு திரும்பிய ஆதிரா.. மிக உரிமையாக சென்று அந்த செல்ஃபோனை கைப்பற்றிக்கொண்டாள்..!! அன்றிரவு படுக்கையில் விழுந்து நெடுநேரமாகியும்.. அந்த செல்ஃபோன் பட்டன்களையே திரும்ப திரும்ப அழுத்திக் கொண்டிருந்தாள்..!! ஆதிராவின் முகத்தில் காணப்பட்ட அந்த சந்தோஷமும், பூரிப்பும்.. அதைவிட பலமடங்காக அவளுக்கு அருகே படுத்திருந்த தாமிராவின் மனதுக்குள்..!!

ஆதிராவுக்கு அந்த செல்ஃபோனை மிகவும் பிடித்துப் போனது.. எந்த நேரமும் அதை கையில் தூக்கிக்கொண்டே அலைவாள்.. பத்திரமாக பார்த்துக்கொள்வாள்..!! ஆறு வருடங்களாகி அந்த செல்ஃபோன் அரதப்பழசாகிப் போனபிறகும்கூட.. அதையேதான் தொடர்ந்து உபயோகித்துக் கொண்டிருந்தாள்..!! தாமிராவின் தந்திரத்தால் ஆதிராவிடம் அந்த செல்ஃபோன் மீது ஏற்பட்ட பற்றுதலும், உரிமையுணர்வும்தான் அதற்கு காரணம்..!!

ஆற்றங்கரையில் அமர்ந்து தங்கையின் நினைவுகளில் ஆதிரா மூழ்கியிருந்த சமயத்தில்தான்.. எங்கிருந்து வந்ததென்றே தெரியாமல் திடீரென அவளுக்கெதிரே வந்துநின்றது அந்த முயல்..!! கையில் ஏதோ ஒரு சிவப்புநிற பழத்தை வைத்துக்கொண்டு.. எதிரேயிருந்த ஆதிராவையே குறுகுறுவென பார்த்தது..!! வெள்ளை வெளேரென்ற மேனி வண்ணத்துடன்.. புஸுபுஸுவென்று மிருதுவான தேக ரோமத்துடன்.. மிக அழகாக நின்றிருந்தது அந்த முயல்..!! அதைப் பார்த்ததுமே ஆதிராவின் மனதுக்குள் ஒரு ஐந்துவயது குழந்தை பிறப்பெடுத்தாள்..!!

15

“ஹாய்ய்ய்ய்..!!!”

என்று மலர்ந்த முகத்துடன் அழைத்துக்கொண்டே, எட்டி அந்த முயலை பிடிக்க முயன்றாள்.. அவளுடைய பிடியில் சிக்காமல் அந்த முயல் வெடுக்கென்று ஓடியது.. சிறிது தூரம் ஓடிச்சென்று திரும்பி நின்று இவளை பார்த்தது.. கையில் இருந்த பழத்தை கொறித்தது..!! இப்போது ஆதிராவுக்குள் ஒரு குழந்தைத்தனமான குறுகுறுப்பு.. அந்த முயலை பிடித்து கொஞ்சவேண்டும் என்று ஒருவித உந்துதல்..!! இருக்கையில் இருந்து எழுந்து அந்த முயலை நோக்கி சென்றாள்.. இவள் நெருங்கவும் அந்த முயல் ஓட்டமெடுக்க ஆரம்பித்தது.. புல்வெளி சரிவில் ஏறி தாவித்தாவி ஓடியது.. ஆதிராவும் அவசரமாக மேலேறினாள்..!!

சமவெளியை அடைந்த முயல் வீட்டை நோக்கி குதித்தோடியது.. சற்றும் சளைக்காத ஆதிரா அதன்பின்னே தொடர்ந்து ஓடினாள்..!! பச்சை பசலேன்ற புல்நிலம்.. அதில் தாவித்தாவி ஓடுகிற வெண்முயல்.. அம்முயலை விரட்டி பின்செல்கிற ஆதிரா..!! முயலின் ஓட்டத்துக்கு ஆதிராவால் ஈடுகொடுக்க முடியவில்லை.. முந்திச்சென்ற முயல் படியேறி வீட்டுக்குள் நுழைந்துவிட்டது..!! அதைப்பார்த்த ஆதிராவிடம் ஒரு சிறிய ஆச்சரியம்.. ஒருகணம் தயங்கிநின்றவள் பிறகு மீண்டும் ஓடினாள்.. படியில் ஏறி வாசற்கதவை அகலமாக திறந்தாள்.. உள்ளே பார்வையை வீசினாள்..!!

அவ்வளவு பெரிய வீட்டில்.. ஆங்காங்கே மரத்தூண்கள் நிற்கிற விஸ்தாரமான அந்த ஹாலின் மையத்தில்.. தனியாக, தூரமாக காட்சியளித்தது அந்த முயல்..!! இரண்டு கால்களை தரையில் ஊன்றி.. இரண்டு கால்களை மேலே தூக்கி வைத்துக்கொண்டு.. வீட்டு வாசலை உர்ரென பார்த்தவாறே நின்றிருந்தது..!! ஆதிரா வாசலில் வந்து நின்றதுமே.. என்னவோ இவளுடைய வருகைக்காகத்தான் காத்திருந்தமாதிரி.. மீண்டும் வீட்டுக்குள் விருட்டென ஓட ஆரம்பித்தது..!! ஆதிராவும் இப்போது மார்புகுலுங்க அதன் பின்னால் ஓடினாள்..!!

“ஹேய்ய்ய்…!!! நில்லு..!!!!!”

வாய்விட்டே கத்தினாள்..!! உள்ளே ஓடிய முயல்.. வீட்டின் இன்னொரு மூலையில் இருந்த அந்த அறையை அடைந்தது.. குறுகலாக தெரிந்த கதவிடுக்கின் வழியாக அறைக்குள் புகுந்துகொண்டது..!!

ஆதிரா மூச்சிரைக்க அந்த அறைமுன் வந்து நின்றாள்.. இரண்டு கைகளாலும் கதவினை உட்புறமாக தள்ளினாள்..!!

“க்க்கிர்ர்ர்ர்ர்ர்ர்..!!!” என்ற சப்தத்துடன் கதவு திறந்துகொண்டது.

அது ஏதோ பழைய பொருட்களை அடைத்துவைக்கிற அறை.. உள்ளே ஒரே இருட்டாக இருந்தது.. காற்றில் ஒரு புழுங்கல் நெடி..!! ‘இதுக்குள்ள ஓடிப்போயிடுச்சே இந்த முயலு.. ச்ச..’ என்று சலிப்பை உதிர்த்தாள் ஆதிரா..!! அறைக்குள் நுழைந்தவள் சுவற்றில் கைவைத்து தேய்த்து மின் ஸ்விட்ச்சை அழுத்தினாள்.. இருட்டு அகலவில்லை.. விளக்கு எரியவில்லை.. ஃப்யூஸ் ஆகியிருக்கவேண்டும்..!! ‘என்ன செய்வது’ என்று அவள் ஒருகணம் யோசித்துக் கொண்டிருக்கும்போதே.. வாசலுக்கருகே நின்றிருந்த பெட்டகத்தின் மேலிருந்த அந்த தீப்பெட்டி அவளுடைய பார்வையில் பட்டது..!!

“ச்சரக்க்க்…!!”

தீப்பெட்டி திறந்து ஒரு தீக்குச்சி கிழித்து பற்றவைக்க.. அறைக்குள் இப்போது சிறிய அளவில் ஒரு வெளிச்சம்..!! அந்த வெளிச்சத்துடனே மெல்ல அறைக்குள் அடியெடுத்து வைத்தாள் ஆதிரா..!! மசமசப்பான வெளிச்சத்திலேயே அந்த முயலை அப்படியும் இப்படியுமாய் தேடினாள்.. அது ஏதாவது இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொள்ளக்கூடாதே என்கிற கவலை வேறு..!! இருட்டுக்குள் தட்டுத்தடுமாறி அவள் நடந்துகொண்டிருக்க.. படக்கென அவளது முகத்துக்கு முன்னே அந்த மரச்சிலையை தோன்றவும்.. பக்கென ஒருகணம் அதிர்ந்துபோனாள்.. அதே நேரம் தீக்குச்சி வேறு தீர்ந்து அவளுடைய விரலைச்சுட..

“ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்..!!”

கையை வெடுக்கென உதறினாள்.. எரிகிற விரலை வாயில் வைத்து எச்சில் பூசிக்கொண்டாள்..!!
Like Reply




Users browsing this thread: 17 Guest(s)