நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
Ena achu bro update podunga
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
https://www.google.com/url?sa=t&source=w...7759906100
Like Reply
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 16 - ராசு
[Image: nivv.jpg]
Quote:கதைக்குள் செல்வதற்கு முன் ஒரு நிமிடம்….
யுகாவின் முடிவைப் பற்றி அத்தியாயத்தின் இறுதியில் விளக்கம் கொடுத்திருக்கிறேன். அது வரை கோபப்படாமல் தயவுசெய்து பொறுமையாக படிக்கவும்.

கிருஷ்ணவேணி திடுக்கிட்டு படுக்கையில் எழுந்தமர்ந்தாள்.

உடல் முழுவதும் வியர்த்து வடிந்திருந்தது.
‘ச்சே! என்ன ஒரு கெட்ட கனவு.’
‘ஏன் இப்படி ஒரு கனவு எனக்கு வரவேண்டும்?’
கண்களைச் சுழற்றினாள்.
அவளது அறையில் அவள் படுத்திருக்கவில்லை.
‘வேறு எங்கோ படுத்திருக்கிறேன். அதனால்தான் தேவையில்லாத கனவெல்லாம் வந்திருக்கிறது.’
‘கனவென்றாலும் நிஜம் போல். இது என்ன?’
‘அதுவும் யுகாவுக்கு இப்படி ஆவதுபோல்.’
அவள் பார்வையை சுற்றுமுற்றும் சுழற்றினாள்.
அங்கே அவளையே பரிதாபமாய் பார்த்தபடி சாருமதி அமர்ந்திருந்தாள். அவள் கன்னங்களில் கண்ணீர் கோடுகள்.
“மதிக்கா.” தீனமான குரலில் அழைத்தாள்
அவளிடம் வாய் திறந்து எதையும் கேட்கும் தைரியம் அவளுக்கில்லை.

சாருமதியின் கண்ணீரே எதையோ அவளுக்கு உணர்த்துவது போல் தோன்றியது.

சாருமதி எதையுமே சொல்ல வேண்டியிருக்கவில்லை. வெளியில் இருந்து வந்த ஒப்பாரியே அவளுக்கு உண்மையை உரைத்தது.

கண்களில் கேள்வியுடன் அவள் மீண்டும் சாருமதியைப் பார்த்தாள்.

அவளுக்கு இப்போது பொங்கிய அழுகையைக் கட்டுப்படுத்த முடியவில்லை.

அறையை விட்டு வெளியில் வந்தாள் கிருஷ்ணவேணி. அவளைத் தடுக்கும் எண்ணம் சாருமதிக்கு இல்லை. இன்னும் சிறிது நேரத்தில் யுகாவின் இறுதிப்பயணம் ஆரம்பமாகப்போகிறது.

அதற்குள் அவனைப் பார்க்க வேண்டியவர்கள் பார்த்துவிட வேண்டும். அதுவும் கிருஷ்ணவேணி யுகேந்திரன் மீது எத்தனைப் பிரியம் வைத்திருக்கிறாள் என்று அவளுக்குத் தெரியும்.

கிருஷ்ணவேணி யுகேந்திரன் இருந்த இடத்திற்கு வந்தாள்.

அவன் ஏதோ உறங்குவது போன்றே படுக்கவைக்கப்பட்டிருந்தான்.

வனிதாமணி கதறி அழவில்லை. ஏதோ அரற்றலுடன்தான் படுத்துக்கொண்டிருந்தார்.

அவர் கண்கள் எங்கோ வெறித்துப்பார்த்துக்கொண்டிருந்தன.

‘இப்படியே இருந்தா எப்படிப்பா? ஆக வேண்டியதைப் பார்க்கனும்ல.’

சாருலதாவின் அப்பா மகேந்திரன் அருகில் வந்து கேட்டார்.

அவன் ஏதுமறியாத குழந்தை போன்று மலங்க விழித்தவாறு அவரைப் பார்த்தான்.

“தூக்கு போட்டுக்கிட்டது போலீசுக்கு தெரிய வந்தா உடம்பைக் கூறு போடாம விடமாட்டாங்க. அவனை நல்லபடியா வழியனுப்பி வைக்க வேண்டாமா?”

அவர் பேசியதும் அதிர்ச்சியுடன் நிமிர்ந்துபார்த்தாள் கிருஷ்ணவேணி.

‘தூக்கு போட்டு யுகா செத்தானா?’

‘தற்கொலையா செய்துகொண்டான்?’

‘அது எப்படி முடியும்?’

‘தற்கொலையே தப்பு என்கிறவன் எப்படி அதை செய்திருக்க முடியும்?’

தனக்குள் முனகியவள் வாய்விட்டும் சொன்னாள்.

“யுகா கண்டிப்பா தற்கொலை செய்திருக்கமாட்டான்.”

“அவனைப் பத்தி தெரிஞ்ச யாருமே அதை ஒத்துக்கமாட்டாங்கதாம்மா. ஆனால் தற்கொலை செய்துக்கிறதுக்காக ரொம்ப நேரம் எடுத்துக்க வேண்டாம்மா. ஒரு வினாடி போதும். அந்த ஒரு வினாடி சாகனும்னு முடிவெடுத்துட்டா வேற எதுவுமே ஞாபகத்துக்க வராது.” சாருமதியின் தந்தை அவளை சமாதானப்படுத்த முயன்றார்.

“இல்லை அங்கிள். என்னால் நம்ப முடியலை.”

“எனக்கும் புரியுதும்மா.”

“நாம போலீஸ்ல சொல்லலாம் அங்கிள்.”

“நீ சின்னப் பொண்ணும்மா. அதான் புரியாம பேசறே? முதல்ல யுகேந்திரன் சாகறதில் யாருக்கு லாபம்னு பார்ப்பாங்க. அப்புறம் அவங்களை கைது பண்ணுவாங்க.”

“அப்படியே செய்யட்டும் அங்கிள். அப்பதான் யுகாவோட சாவுக்கு காரணமானவங்க தண்டிக்கப்படுவாங்க.”

“உனக்கு இன்னும் புரியலையாம்மா. அப்புறம் போலீஸ் மகேந்திரனைத்தான் கைது செய்வாங்க.”

அவள் புரியாமல் அவரைப்பார்த்தாள்.



“ஏன் அங்கிள்?”
“இந்த சொத்துக்கெல்லாம் மகேந்திரனும், யுகேந்திரனும்தான் வாரிசுகள். இப்ப யுகேந்திரன் இல்லைங்கிற நிலைமையில் எல்லாம் மகேந்திரனுக்குத்தான் போகும். இந்த சொத்துக்காக மகேந்திரன்தான் தன் தம்பியைக் கொன்னு தற்கொலைன்னு சொல்லிட்டான்னு போலீஸ் சொல்லும். அவனைக் கைது செய்யும். அவன் தப்பே செய்யலைன்னு நிரூபணமாகி வருவதற்குள் எல்லாம் கடந்து போயிருக்கும். ஏற்கனவே ஒரு பையனை இழந்து தவிக்கிற பெத்தவங்க இன்னொருவனையும் இழக்கனுமா?”
அவள் அதிர்ந்து போனாள்.

‘மகேந்திரன் தன் தம்பியைக் கொன்னான்னு சொல்வாங்களா?’
அவன் தன் தம்பி மேல் எத்தனை அன்பு வைத்திருக்கிறான் என்று எனக்குத் தெரியும். ஆனால் போலீசில் அதை நம்பவில்லை என்றால்.
அவனைக் கைது செய்துவிட்டால்? அதை யுகாவின் ஆத்மா கூட விரும்பாது.

அதற்காக யுகா தற்கொலை செய்துகொண்டான் என்று எப்படி ஏற்றுக்கொள்வது?

அவள் தனக்குள் பேசி முடிவெடுப்பதற்குள் அங்கே யுகேந்திரனின் இறுதிப்பயணம் ஆரம்பமானது.

“அத்தை. நீங்க சொல்லுங்க அத்தை. வேண்டாம்னு சொல்லுங்க அத்தை. யுகா தற்கொலை செய்துக்கிறவனா? அவன் அப்படிப்பட்ட கோழை இல்லை அத்தை.”

அவளது குரல் வனிதாமணியின் செவியை எட்டியதா இல்லையா என்றே தெரியவில்லை.

அப்படியே சிலை போன்று அமர்ந்திருந்தார்.

வாய் மட்டும் முணுமுணுத்துக்கொண்டே இருந்தது.

‘நான் உன்னை தனியா விட்டுட்டுப் போயிருக்கக் கூடாது.’

இதைத்தான் அவர் நீண்ட நேரமாக சொல்லிக்கொண்டேயிருக்கிறார்.

யிற்று. எல்லாம் முடிந்து போயிற்று.

வந்திருந்த கூட்டம் எல்லாம் கலைந்து போய் வீட்டில் உள்ளவர்களும் முக்கியமான உறவினர்களும் மட்டுமே எஞ்சியிருந்தனர்.
மதிய வேளையில் தன்னிடம் பேசிவிட்டு வந்தவன் இப்போது இந்த உலகிலேயே இல்லை என்பதை அவளால் நம்பக்கூட முடியவில்லை.
ஒருவேளை நீண்ட நேரமாக இந்தக் கனவு தொடர்கிறதோ?

நான் கண்விழிக்கும்போது யுகா வந்து சிரித்துக்கொண்டே நிற்பானோ?

அப்படி மட்டும் நடந்துவிட்டால் எப்படியிருக்கும்?

நான் இனி யுகாவை விட்டு ஒருகணமும் பிரிய மாட்டேன். அவனைக் கண்போல் பாதுகாப்பேன்.

யுகா. இது கனவாக இருக்க வேண்டும்.

நீ வந்துடுடா. என்னால் நீ இல்லாத நிலையைக் கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை.

அப்படியே புலம்பியபடியே தரையில் சரிந்திருந்தவளை ஒரு மென்மையான கரங்கள் எழுப்பியது.

நிமிர்ந்து பார்த்தாள்.

சாருமதி நின்றிருந்தாள்.

“அக்கா.”

மீண்டும் கதறியழ ஆரம்பித்தாள்.

“கிருஷ்ணா. நீ இப்படியே அழுதுக்கிட்டிருந்தா அத்தையை யார் பார்த்துப்பா. அவங்க வேற என்னவோ மாதிரி நடந்துக்கிறாங்க. நீதான் கூட இருந்து பார்த்துக்கனும்.”

“அத்தை. அத்தைக்கு என்னாச்சு?”

“நம்மாலேயே யுகாவோட மறைவைத் தாங்கிக்க முடியலை. அவங்களால் மட்டும் எப்படி முடியும்?”

சாருமதி கேட்க அந்த உண்மை கிருஷ்ணவேணியைத் தாக்கியது.

வனிதாமணிக்கும் யுகேந்திரனுக்கும் தாய் மகன் என்ற உறவைத் தாண்டியும் ஒருவித நட்புணர்வு இருந்தது. அப்படியிருக்கையில் அவரால் தனது மகனின் இழப்பை எப்படி தாங்கிக்கொள்ள முடியும்?

அவனது வீட்டினர் மட்டுமல்ல.

யாரெல்லாம் அவன் கூட பழகினார்களோ? அவர்கள் யாருக்குமே அவனது இழப்பு வருத்தத்தைத்தான் தரும். அந்த அளவிற்கு மிகவும் அன்பானவன் அவன்.

அவள் எழுந்து வனிதாமணியைக் காண சென்றாள்.

அவர் எங்கோ வெறித்துப்பார்த்தபடி அமர்ந்திருந்தார். வாய் மட்டும்

‘நான் உன்னை தனியா விட்டுட்டுப் போயிருக்கக் கூடாது.’

என்று முணுமுணுத்துக்கொண்டேயிருந்தது.

யுகேந்திரன் தலையை வலிக்கிறது என்று சொல்லி அவரை டீ போட அனுப்பி வைத்துவிட்டு இந்த முடிவிற்கு வருவான் என்று அவர் நினைத்துப் பார்க்கவில்லை.

அவனைப் பிணமாகப் பார்த்த போது அவருக்கு கிடைத்த அதிர்ச்சி எத்தகையது என்று வார்த்தையால் விவரிக்க முடியாது.

“அத்தை.”

கிருஷ்ணவேணி அழுகுரலில் அழைக்க அவர் நிமிரவேயில்லை. தனியுலகத்தில் இருந்தார்.



சாருமதி அவள் தோளைத் தொட்டாள்.
“கிருஷ்ணா. யுகா உனக்கு மிகப்பெரிய கடமையைக் கொடுத்துட்டுப் போயிருக்கான். நீதான் இந்த வீட்டை பழைய படி மாத்தனும்.”
Like Reply
அதன் பிறகு சிறிது நேரம் கழித்து அவள் தன் வீட்டிற்குச் சென்றுவிட்டாள்.

சாருலதா மட்டும் அங்கேயே தங்கிவிட்டாள்.
கிருஷ்ணவேணி வனிதாமணியோடவே முடங்கிவிட்டதால் அவள்தான் வீட்டு வேலைக்காரர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லி பார்த்துக்கொண்டிருக்கிறாள்.
னது அறையில் அமர்ந்திருந்த மகேந்திரனுக்கு இன்னமும் தன் தம்பியின் மறைவு அதிர்ச்சியானதாகத்தான் இருந்தது.

அவனை விளையாட்டுப்பிள்ளையாகத்தான் அவன் எண்ணியிருந்தான். அவன் இப்படி ஒரு காரியத்தைச் செய்துவிட்டுப்போவான் என்று அவனால் நம்பக்கூட முடியவில்லை.

ஏன் அப்படிச் செய்தான்?

அன்று பார்க்கும்போது கூட தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டவன் மாதிரியே தெரியவில்லை. என்னவோ தூங்குவது போன்றேதான் தெரிந்தது.

தூக்கிலிட்டு இறந்தால் அவர்கள் முகம் எந்த அளவிற்கு கோரமாக இருக்கும் என்று அவன் அறிந்திருந்தான்.

அந்த அடையாளங்கள் எதுவுமே இல்லாமல் முகத்தில் அந்தக் குழந்தைத்தனம் மாறாமல் படுக்கவைக்கப்பட்டிருந்த யுகேந்திரனின் முகம்தான் கண்ணுக்கு முன்னே வந்து நிற்கிறது.

‘இந்த முடிவிற்கு நீ போகும் முன் எங்களைப் பற்றியெல்லாம் நினைத்துப்பார்க்கவில்லையா யுகா? உன்னைப் பெரிதாக பாதித்த விசயம் எது? நீ என்னிடம் சொல்லியிருந்தால் அதை எப்பாடு பட்டாவது கொண்டு வந்து உன்னிடம் சேர்த்திருப்பேனே?’

அவனால் வேலையில் ஈடுபடவே முடியவில்லை.

தலையில் கையை வைத்து அப்படியே சோர்ந்து படுத்துவிட்டான்.

வரமாட்டேன் என்று சொன்னவனை சாருலதாதான் கட்டாயப்படுத்தி அவனை அலுவலகத்திற்கு அழைத்து வந்தாள்.

“வேண்டாம். இனி யாருக்காக சம்பாதிக்க வேண்டும். எனக்குப் பிடிக்கலை.”
“அத்தான் நீங்க சொல்றது சரிதான். இது மாமா கஷ்டப்பட்டு சம்பாதிச்ச சொத்து. நான் அதுக்காக மட்டும் சொல்லலை. நம்மளை நம்பி எத்தனை குடும்பங்கள் இருக்கு? அவங்களை நடுரோட்டில் விடமுடியுமா? நீங்க புதுசா ஒன்னும் சேர்க்க வேண்டாம். ஏற்கனவே உள்ளதை மட்டும் காப்பாத்துங்க போதும். இந்த நிலைமையில் மாமாவை வரச்சொல்றது நல்லாயிருக்காது. அத்தை கூட மாமா இப்ப இருக்கிறது ரொம்ப அவசியம்.”
அவள் இத்தனைப் பேசிய பிறகுதான் அவன் கிளம்பி வந்ததே.

அவனது சிந்தனையை தொலைபேசியின் சத்தம் கலைத்தது.

அவனுக்கு எடுக்க வேண்டும் என்று தோன்றவில்லை. இவன் எடுக்கவில்லை என்றால் சாருலதா எடுக்க வாய்ப்புள்ளது. இதை இணைப்பு அவளது அறையிலும் உண்டு. அவளே எடுக்கட்டும் என்று பேசாமல் விட்டான்.

யாரும் எடுத்தபாடு இல்லை. மீண்டும் ஒலிக்க ஆரம்பித்துவிட்டது.

ஒருவேளை சாருலதா அவன் எடுப்பான் என்று விட்டுவிட்டாளா?

இல்லை. அவள் தனது அறையில் இல்லாமல் எங்காவது சென்றுவிட்டாளா?

சற்றே எரிச்சலுடன் தானே எடுத்தான்.

மறுபக்கம் பேசியது சாருலதாவின் தாய்.

சாருலதாவும் எடுத்துவிட்டாள். அவள் எடுத்தது தெரிந்து வைக்கவேண்டும் என்று நினைத்தவன் செயலாற்றும் முன் தங்கள் குடும்ப விசயம் அடிபடிவே யோசனையோடு வைக்காமல் காத்திருந்தான். தவறு என்று புரிந்தது. ஆனால் அதில் தனக்குத் தேவையான செய்தியொன்று இருப்பதாக அவனுக்குத் தோன்றியது.

“இன்னும் எத்தனை நாள்மா நீ அங்கேயே இருக்கப்போறே?”

“என்னை என்னம்மா பண்ணச் சொல்றே? எல்லாரும் யுகேந்திரனோட இழப்பைத் தாங்கிக்க முடியாம தவிச்சுக்கிட்டு இருக்காங்க. இன்னைக்குத்தான் அத்தானை கம்பெனிக்கு அழைச்சுட்டு வந்துருக்கேன். எனக்கு மனசாட்சி உறுத்துதும்மா.”

“நீ என்ன பண்ணே?”

“அன்னிக்கு கிருஷ்ணா ஒத்துக்கலைன்னு யுகேந்திரன் அத்தனை வருத்தத்தோட சொன்னான். நான் அப்ப அவன் தவறான முடிவிற்குப் போவான்னு நினைக்கலை. அப்ப மட்டும் நான் அப்படி நினைச்சிருந்தா அவனை தனியா விட்டுருக்க மாட்டேன். அத்தானை அனுப்பி வச்சிருப்பேன். இல்லைன்னா, அத்தைக்கிட்டயாவது அவனைத் தனியா விடவேணாம்னு சொல்லியிருப்பேன்.”

“அதுக்கு நீ என்ன பண்ணுவே? உன்னை இந்த அளவிற்கு புலம்ப வச்ச அவ இன்னும் என்ன பண்றா? போக வேண்டியதுதானே?”

“அவ தான்மா அத்தையைப் பார்த்துக்கிறா?”



“செய்யறதை எல்லாம் செஞ்சுட்டு இப்ப என்னவாம் அவளுக்கு? அவளால்தானே எல்லாமும். அவ மட்டும் யுகேந்திரனுக்கு நல்ல பதிலை சொல்லியிருந்தா அவன் ஏன் இந்த மாதிரி தவறான முடிவை எடுக்கப் போறான்? அவன்தான் அவ அந்த வீட்டுக்கு வர காரணமானவன். அவனே இப்ப இல்லைங்கிறப்ப, அவ எதுக்கு இன்னும் இங்க இருக்கனும்?”
“அம்மா. பேசாம இரும்மா. அவளை யுகா அழைச்சுட்டு வந்திருக்கான். அவளை எப்படி மத்தவங்க அனுப்ப முடியும்?”
“ஒரு வருடம் படிப்பு முடியற வரைக்கும்னுதானே அவன் சொன்னான். அதுவும் நல்லபடியா முடிஞ்சுடுச்சே. இன்னமும் என்னாவாம் அவளுக்கு?”

“அவளும் பாவம்தான்மா. அவளுமே யுகேந்திரனோட இந்த முடிவை எதிர்பார்த்திருக்க மாட்டா. அவன் இப்படி செய்ததற்கு அவ என்ன செய்வா? பாவம்மா அவ.”
“நீ அவளுக்காக பரிஞ்சு பேச வேண்டாம். அவளால்தான் இன்னிக்கு உன் மாமாவோட குடும்பமே இப்படி இருக்கிறதுக்கு காரணம்.”
“எனக்கும் புரியுதும்மா. அதுக்காக நான் என்ன பண்றது?”

“நீதான் உன் அத்தானுக்குப் புரியற மாதிரி எடுத்துச் சொல்லி அவளை வீட்டை விட்டு அனுப்பற வழியைப் பார்க்கனும். அவ போயிட்டான்னா வீடு விளங்கிடும்.”

அதன் பிறகு நடந்த உரையாடலை கேட்க அவனுக்கு மனமில்லை.

அன்று கிருஷ்ணவேணி கதறி அழுதது கண் முன்னே வந்தது.

யுகேந்திரன் தற்கொலை செய்திருக்க மாட்டான் என்று எத்தனை நிச்சயமாக சொன்னாள்.

ஆனால் அவனது மரணத்திற்கு அவளது மறுப்புதான் என்று கொஞ்சமாவது எண்ணியிருப்பாளா?

வீட்டிற்குச் சென்ற உடன் தன் தந்தையிடம் சொல்லி அவளை ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று எண்ணிக்கொண்டான்.

வீட்டிற்குள் நுழையவே மகேந்திரனுக்குப் பிடிக்கவில்லை.

அவன் எப்போது வீட்டிற்குள் நுழைந்தாலும் யுகேந்திரன் கண்ணில் படுவான். தன் தாயின் மடியில் படுத்து வம்பிழுத்துக்கொண்டிருப்பான்.

அவன் இல்லை என்றால் அவனைக்கண்டதும் அவனுக்குப் பருகுவதற்கு என்று எதையாவது எடுத்துக்கொண்டு வனிதாமணி வந்து நின்றிருப்பார்.

இப்போது அத்தகைய காட்சி எதுவும் நேரப்போவதில்லை.
வீட்டிற்குள் நுழைந்தவனுக்கு அவனது தாயார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விசயம் தெரிந்தது.
இதை ஏன் முன்னமே சொல்லவில்லை என்று கோபப்பட்டான்.

அவன் இன்றுதான் அலுவலகத்திற்குச் சென்றிருப்பதால் அவன் மெதுவாகத் தெரிந்துகொள்ளட்டும் என்று அவனது தந்தை சொல்லியிருந்தார்.

அவன் உடனே மருத்துவமனைக்கு விரைந்தான். அவனோடு சாருலதாவும் விரைந்தாள்.

“பயப்படறதுக்கு ஒன்னுமில்லைப்பா.”

அவனைக் கண்டதும் ரவிச்சந்திரன் வந்து ஆறுதலாகக் கூறினார்.

யுகேந்திரன் இறந்ததில் இருந்தே அவர் உணவு எடுத்துக்கொள்ளவில்லை.

வாய் விட்டு கதறி அழுதிருந்தால் அவரது துக்கம் குறைந்திருக்கும். அவர் அப்படி செய்யவும் இல்லை.

மருத்துவமனையில் யாராவது ஒருவர்தான் இருக்க வேண்டும் என்ற நிலையில் கிருஷ்ணவேணி தான் இருப்பதாகச் சொல்லிவிட்டாள்.

அதனால் மற்றவர்கள் கிளம்பிவிட்டனர்.

அன்றைய இரவு மகேந்திரனுக்கு உறக்கமே வரவில்லை.

உடனே தனது தாயைக் காண வேண்டும் என்று மனம் தவித்தது.

கிளம்பிவிட்டான்.

அவனை அந்த நேரத்தில் எதிர்பார்த்திராத கிருஷ்ணவேணி அதிர்ந்து போனாள். இருந்தும் ஒன்றும் சொல்லாமல் ஒதுங்கி நின்றாள்.

அவன் தன் தாயின் அருகில் வந்தான்.

“அம்மா.”

அழும் குரலில் அழைத்தான்.

அது அவரது செவியை எட்டியதோ இல்லையோ? எந்த சலனமும் இல்லை.

“அம்மா. நீங்க என்னிக்குமே என்னைவிட யுகாகிட்ட பாசமா நடந்துக்குவீங்க. நான் அப்ப அதைப் பெரிசா எடுத்துக்கலை. அவனுக்கு விட்டுக்கொடுத்தேன். ஆனால் இப்ப என்னால் முடியாதும்மா. நீங்க எனக்கு வேணும். எனக்காக எழுந்து வாங்கம்மா. எனக்கு உங்க மடியில் படுக்கனும். நான் இத்தனை நாளா அனுபவிக்காத பாசத்தை எல்லாம் உங்ககிட்ட பார்க்கனும். இப்பயும் அவனைப் பெரிதா நினைச்சு அவன்கிட்ட போக துடிக்கிறீங்களாம்மா. அதை அவன் விரும்ப மாட்டான்மா. நான் அப்ப அவனுக்கு விட்டுக்கொடுத்த மாதிரி இப்ப அவன் எனக்கு உங்களை விட்டுக்கொடுத்துடுவான்மா. தயவுசெய்து எனக்காக எழுந்து வாங்கம்மா.”

மேலும் புலம்பியபடியே அவரது மடியில் தலையை வைத்துக்கொண்டான்.

அதைப் பார்த்துக்கொண்டிருந்த கிருஷ்ணவேணிக்கும் கண்கள் கண்ணீரைச் சொறிந்தன.

அப்போது வனிதாமணியைக் கண்ட அவள் கண்கள் ஆச்சர்யத்தால் விரிந்தது.

அவர் அப்போது தனது மகனைத்தான் பார்த்துக்கொண்டிருந்தார்.

இதுவரைக்கும் கண்விழிக்காமல் இருந்தவர் கண்விழித்துவிட்டார்.



“சார். அத்தை உங்களைப் பார்க்கிறாங்க.”
சந்தோசக் கூச்சலிட்டாள்.
அவனும் சந்தோசத்துடன் நிமிர்ந்துபார்த்தான்.

அவர் கண்களில் எந்த சலனமும் இல்லை.
மகனை வெறித்துப்பார்த்தவர் கையை நீட்டினார்.
அவனும் தனது கையை அவர் கைகளில் ஒப்புவித்தான்.

கிருஷ்ணவேணியின் கையைப் பற்றி இருவரது கையையும் இணைத்தார்.

அவர் தலை ஒருபக்கமாக சாய்ந்தது.

“டாக்டடடடடர்..”

அவனது கத்தலில் வந்து பார்த்த மருத்துவர் அவர் மயக்கத்தில்தான் இருக்கிறார் ஆபத்து ஒன்றுமில்லை என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார்.

அவன் தன் கையைப் பார்த்தான். இன்னும் அவன் கை கிருஷ்ணவேணியின் கையைப் பற்றியிருந்தது.

‘அம்மா ஏன் அவளது கையைப் பற்றி என்னிடம் ஒப்படைத்தார்?’

கேள்வி அவனுக்குள் எழுந்தது.

Quote:முதலில் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். யுகாவின் மரணம் கனவாகத்தான் இருக்க வேண்டும் என்று உங்களில் நிறைய பேருக்கு விருப்பம். அதை என்னால் நிறைவேற்ற மூடியாமல் போய்விட்டது.
இந்தக் கதையை நான் எழுத ஆரம்பித்ததே யுகேன் கதாபாத்திரத்தின் முடிவை எண்ணித்தான். அவன் சீக்கிரம் நம்மிடம் இருந்து போய்விடுவான் என்றுதான் அவனை கொஞ்சம் துறுதுறுப்பாக உலவ விட்டேன். உங்களுக்கு மட்டுமல்ல. எனக்கும் மிகவும் பிடித்தவனாக அவன் மாறிப்போனான்.
இந்த கதை உருவாக முக்கியமான காரணம் ஒரு பள்ளியிறுதி மாணவனின் தற்கொலைதான்.
நான் அந்த துக்க வீட்டிற்குச் சென்றிருந்தேன்.


வீடு முழுவதும் கூட்டம் நிறைந்திருந்தும் துக்க வீட்டிற்கான எந்த அடையாளமும் இல்லை. நீங்கள் கிராமத்தில் இருந்தவராய் இருந்தால் அறிவீர்கள். துக்கம் விசாரிக்க வருபவர்கள் பேருக்கு கதறி அழுது ஒப்பாரி வைத்துவிட்டு அந்தப் பக்கம் நகர்ந்ததும் அக்கம் பக்கம் அமர்ந்திருப்பவர்களோடு கதையளக்க ஆரம்பித்துவிடுவர்.
அந்த மாதிரி சூழல் அங்கே இல்லை. மாறாக அனைவர் முகத்திலும் சோகம் அப்பியிருந்தது. ஒரே ஒரு தீனக்குரல் மட்டும் புலம்பலாய் கேட்டுக்கொண்டேயிருந்தது. அது அவனது தாயின் குரல்.
பிரேதப் பரிசோதனை முடிந்து அவனது உடல் வந்ததுதான் தாமதம், அதுவரைக்கும் அடக்கி வைத்திருந்த துக்கத்தை அத்தனை கூட்டமும் கதறித் தீர்த்தது. அதில் நானும் ஒருத்தி.
நான் அந்த மாணவனை அறிந்ததில்லை. அவனுடன் பழகியதில்லை.
இருந்தும் அந்த துக்க நிகழ்ச்சி என்னுள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.
என்னை உறங்கவிடாமல் செய்தது. அதுதான் இந்தக் கதையின் வெளிப்பாடு.
அதனால்தான் யுகாவின் முடிவை என்னால் மாற்ற முடியவில்லை.
நான் எப்போதுமே கதையின் முடிவை எண்ணிவிட்டுதான் அதை நோக்கி கதையை நகர்த்துவேன்.
அவன் மீண்டும் நமது நினைவலைகளில் வருவான். அவனை எண்ணாமல் மகேந்திரனோ கிருஷ்ணவேணியோ இருக்க முடியாது. அதனால் அவன் மீண்டும் வருவான்.
நீங்கள் எல்லோரும் இதை கதையாகப் பாராமல் என் கதாபாத்திரங்களோடு ஒன்றிப்போனது எனக்கு மகிழ்ச்சிதான்.
நிறைய பேருக்கு கோபம்.
இனி இந்தத் தொடரை படிக்கவேப் போவதில்லை என்றும் சொல்லியிருக்கீங்க.
உங்களுக்கு வேறு வேலையில்லையா? கதைக்குக் கதை யாரையாவது போட்டுத் தள்ளிக்கிட்டேயிருக்கீங்க? அப்படின்னும் கோபப்படறீங்க.
வெறுமனே நன்றின்னு சொல்லி எங்ககிட்டயிருந்து தப்பிக்க கூடாதுன்னு சொன்னதால் நான் யாருக்குமே சென்ற அத்தியாயத்தில் நன்றி சொல்லவில்லை.
வனிதாமணியின் முடிவை இந்த அத்தியாயத்தில் எழுத இருந்த நான் உங்களின் கோபம் கண்டு அவரை விட்டுவிட்டேன். ஆனாலும் யுகாவின் முடிவிற்காக நான் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். கோபப்படாமல் தொடர்ந்து படித்து ஆதரவு தாருங்கள்.
பொழுதுபோக்கிற்காகப் படிக்கும்போது அதில் எதற்கு சோகத்தைத் திணிக்கிறீர்கள். கொஞ்சம் நேர்மறை எண்ணங்களை கொடுங்களேன் என்று நீங்கள் கேட்டது நூறு சதம் சரியானது. இனி அதற்கேற்றவாறு தர முயற்சி செய்கிறேன்.
எந்த விதத்திலாவது உங்களை காயப்படுத்தியிருந்தால்? மீண்டும் ஒரு முறை எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்போதும் உங்களுக்கு சரியான விளக்கத்தைதான் கொடுத்திருக்கிறேனா என்பது எனக்கு சந்தேகம்தான்.
நன்றி.
Like Reply
Oh......sad..... waiting for the next
Like Reply
நண்பா யுகாவின் இழப்பு என்னையும் பாதித்தது. ஆனால் யுகா கிருஷ்ணாவிடம் என்ன கேட்டான்? ஏன் அவ்வாறு செய்தான் என்று முழுமையான விளக்கம் கொடுங்கள்
Like Reply




Users browsing this thread: 25 Guest(s)