நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#1
from  chilzee 

தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 01 - ராசு 

[Image: nivv.jpg]

நீ என்னப்பா சொல்றே?”
மூத்த முகனின் முகத்தை ஆர்வத்துடன் பார்த்தவாறே அவனது பதிலுக்காக காத்திருந்தார் வனிதாமணி.
மகேந்திரன் என்ன சொல்வது என்று புரியாமல் திகைத்து நின்றான்.
அவனுக்கே அவனது மனம் என்ன எதிர்பார்க்கிறது என்று தெரியவில்லை.
அறைக்குள்ளே நின்றவாறே தாய்க்கு தூண்டுதல் போட்டவாறு இருந்த தம்பி யுகேந்திரன் ஜாடையில் பேசுவது அவனுக்குத் தெரியத்தான் செய்தது.
அவர்கள் இருவரின் ஆர்வம் கண்ட பிறகு அவர்கள் மனம் கோண நடக்க அவனுக்கு மனம் வரவில்லை. அவர்களைச் சுற்றிதான் அவனது வாழ்க்கையே. அப்படியிருக்க அவர்களின் சந்தோஷத்திற்கு அவனால் தடையாக இருக்க முடியாது.
அதற்காக அவர் கேட்பதற்கு எப்படி அவனால் சம்மதம் சொல்ல முடியும்?
அவர் என்ன சாதாரண விசயத்தையா கேட்கிறார்?
தம்பிதான் வயதில் சிறியவன். இன்னும் அனுபவ முதிர்ச்சி இல்லை. அதனால் அவன் ஆசைப்படுகிறான். ஆனால் அம்மாவுக்கு என்னவாயிற்று?
அவருக்கு இந்த சமுதாயத்தில் ஒவ்வொரு விசயத்தையும் எப்படி கண், காது, மூக்கு எல்லாம் வைத்து இல்லாததையும், பொல்லாததையும் பேசுபவர்கள்தான் அதிகம் என்று தெரியாததா என்ன?
“கிருஷ்ணா பாவம்பா. பெற்றவர்களும் இல்லை. அதுதான் கிருஷ்ணா நம்ம வீட்டில் படிப்பு முடியும் வரைக்கும் இருக்கலாம்னு யுகேந்திரன் ஆசைப்படுறான். இதுதான் கடைசி வருடம். ஒரு வருடம்தானே? இருக்கட்டுமா?”
இதுதான் அவனது தாயாரின் வேண்டுகோள்.
அவர் என்மோ சாதாரணமாக கேட்டுவிட்டார்.
ஆனால் அதற்கு என்ன பதில் சொல்வது என்றுதான் அவன் விழித்துக்கொண்டிருக்கிறான்.
அவனருகிலேயே சாருலதாவும் நடப்பதை எல்லாம் கண்டும் காணாத மாதிரி நின்றுகொண்டிருந்தாள்.
அதைக் காணும்போது அவளுக்கு நேரே மகனிடமே கெஞ்ச வேண்டி வந்துவிட்டதே என்று அவருக்கு மனம் சுணங்கியது.
தாயும் மகனும் பேசிக்கொண்டிருக்கின்றனர் என்று கொஞ்சம் கூட இங்கிதம் இல்லாமல் அருகிலேயே நக்கல் சிரிப்போடு நின்று கொண்டிருக்கிறாளே.
அவளை மனதிலேயே கடிந்துகொண்டார்.
அவர் பல்லைக்கடித்துக் கொண்டிருப்பது அவளுக்கும் புரியத்தான் செய்தது. இருந்தும் நமட்டுச் சிரிப்போடு நின்று கொண்டிருந்தாள்.
உள்ளே நின்றிருந்த யுகேந்திரனோ அவளது கழுத்தை நெறித்துவிடும் உத்தேசத்தில் இருந்தான். இதை எல்லாம் இந்த அண்ணன் பார்க்கமாட்டானே?
அவளும் அவனுக்கு நேராக மிகவும் நல்லவளாக நடிக்கிறாளே. எத்தனையோ பேரை சமாளித்து தொழிலை நன்றாக நடத்தி வருகிறான். எதிராளியைப் பார்த்த மாத்திரத்திலேயே எடை போட்டு விடுபவனுக்கு இந்த சாருலதா குடும்பத்தைப் பற்றி மட்டும் ஏன் புரிய மாட்டேங்குது?
பாட்டியின் உறவினர்கள் என்று பேசாமல் இருக்கிறானா? இல்லை அப்பா வருத்தப்படுவாரே என்று யோசிக்கிறானா? அப்பாவின் ஒன்று விட்ட தங்கையின் மகள்தான் சாருலதா. அவனது பாட்டியின் தங்கை பேத்தி.
பாட்டிதான் இல்லை. அவரது உறவினர்களாவது நம்முடன் இருக்கட்டும் என்று முன்பே அப்பா சொன்னதாக அவர்களது அன்னை சொல்லியிருக்கிறார்.
அதனாலேயே அவர்களது வரவை தடுக்க இயலாமல் போய்விட்டது. அதுவும அவர்களது இயல்பை மறைத்து நாடகமாடும் அவர்களின் உண்மையான சுயரூபம் அப்பாவுக்கும் அண்ணனுக்கும் தெரியாலே போய்விட்டது.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.
#2
அவனுக்கும் அவனது தாய்க்கும் இந்த விசயம் தெரிய வந்தது தற்செயலான விசயம்தான்.
அதுவும் இந்த சாருலதாவால்தான் தெரிய வந்தது.
எங்கெங்கோ ஞாபகம் சுற்றி வருவதை உணர்ந்து தன் தலையில் தட்டிக்கொண்டான்.
இப்போது வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தால் அந்த சாருலதா ஏதாவது தில்லுமுல்லு செய்து அண்ணன் மனதில் நஞ்சைக் கலக்கிவிடுவாள்.
இப்போதைக்கு இந்த வீட்டிற்கு கிருஷ்ணா வரவேண்டியது மிகவும் முக்கியம்.
என்ன நடக்கிறது என்று பார்த்தான்.
மகேந்திரன் மட்டும் யோசித்து பதில் சொல்கிறேன் என்று சொல்லிவிட்டால் எதுவுமே நடக்காது என்று இப்போதே தெரிந்துகொள்ள வேண்டியதுதான்.
இந்த சாருலதா அந்த கிருஷ்ணா யாரு என்னன்னு விசாரிக்க ஆரம்பித்து விட்டாள் என்றால் அதன் பிறகு எதையாவது சொல்லி கிருஷ்ணா வரவிடாமல் தடுத்துவிடுவாள்.
அதற்குள் அண்ணன் பதில் சொல்ல வேண்டுமே.

மகேந்திரன் தனது தந்தையின் அறைப்பக்கமாக திரும்பினான்.
“கொஞ்சம் பொறுங்கம்மா. நான் அப்பாவிடம் பேசிவிட்டு வந்து சொல்கிறேன்.”
அதைக் கண்டதுமே மறைமுகமாக அவன் அளித்த சம்மதம் புரிந்து வனிதாமணியும் யுகேந்திரனும் கண் ஜாடையால் தங்கள் மகிழ்ச்சியைப் பரிமாறிக்கொண்டனர்.
அதைக் கண்டதும் அவள் பல்லைக் கடித்தாள்.
“ஆன்ட்டி. இப்படி கண்டவங்களையும் நம்ம வீட்டில் வந்து தங்க சொல்றது அவ்வளவா எனக்கு சரியா தோணலை.”
தன்னிடம் அவர்கள் என்னவோ ஆலோசனைக் கேட்டதாக எண்ணிக்கொண்டு அவளே பதில் சொல்ல யுகேந்திரன் பல்லைக் கடித்தான்.
அதற்கு மேலும் அவனால் அறைக்குள்ளே நிற்க முடியவில்லை. வெளியே வந்து முறைத்தான்.
“கிருஷ்ணா என்னோட ஃப்ரண்ட். அதுவும் பேயிங் கெஸ்டாதான் எங்க வீட்டில் தங்கறதுக்காக அழைச்சுட்டு வருவதற்கு நான் அனுமதி கேட்கறேன்.”
நம்ம வீடு என்று சொன்னதற்காக தான் திருப்பிக்கொடுக்கிறான் என்று புரிந்தது. அதைப் புரியாமல் போனால் அவள் சாருலதா அல்லவே. அதே மாதிரி புரிந்துகொண்டதை வெளிக்காட்டாமல் நடிக்கவும் அவளால்தான் முடியும்.
“இப்ப நான் என்ன சொல்லிட்டேன்னு நீ இவ்வளவு கோபப்படறே யுகேன்?”
“இந்தப் பாருங்க. என் பெயர் யுகேந்திரன். அப்படியே கூப்பிடுங்க. முடிஞ்சா என்கூட பேசாம இருந்தா கூட நல்லதுதான்.”
வனிதாமணி மகனைப் பார்வையால் அடக்கினார்.
அவன் தன் தாய்க்காக பொறுத்தான்.
மகேந்திரன் தந்தையின் அறைப்பக்கமாக செல்லும்போதே அவர் இதற்கு எதுவும் பெரிதாக மறுப்பு எதுவும் சொல்லமாட்டார் என்று தெரியும். அதுவும் அவனது தாய் கேட்டு ஒரு விசயத்தை மறுத்தார் என்று எதுவும் இருந்ததில்லை.

இருந்தும் அவனுக்கு யோசிக்க சற்று நேரம் தேவைப்பட்டது. அப்படி யோசிப்பது அவனது குடும்ப நலனைக் கருத்தில் கொண்டே எனும்போது அதைத் தள்ளிப்போட அவன் விரும்பவில்லை.

அவன் எதிர்பார்த்த மாதிரியே ரவிச்சந்திரனும் பதில் சொன்னார்.

வேறு வழியில்லாமல் கீழே இறங்கி வந்தவன் தன் சம்மதத்தைச் சொல்லிவிட்டு உடனே அலுவலகத்திற்கு கிளம்பிவிட்டான். கூடவே சாருலதாவும் தொற்றிக்கொண்டாள்.

போகும் வழியெல்லாம் தங்களது வசதி வாய்ப்பு பற்றி தெரிந்த பிறகுதான் இந்த பேயிங் கெஸ்ட் வேசமா என்று தோன்றியது.

இந்த இரண்டு வருடங்களாக இல்லாமல் இப்போது மட்டும் ஏன்?

இதற்குதான் தலைப்பாடா அடிச்சிக்கிட்டேன். நமது வசதி வாய்ப்புக்காக நமக்கு நட்பு இருக்கக்கூடாது. அதனால் நீ உன்னைப் பற்றியோ நமது வசதி வாய்ப்பை பற்றியோ யாரிடமும் வாயைத் திறக்கக்கூடாது என்று சொல்லியிருந்தேன்.

அவனுக்கு வேலையே ஓடவில்லை. இன்னும் யுகேந்திரன் அவன் கண்களுக்கு சிறுவனாகத்தான் தோன்றினான்.

அவனது அன்னை சிறுவயதில் அவனைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பை கொடுத்தது கூட அப்படியே நினைவிருக்கிறது. அவனுக்கு எதுவும் கெடுதலாய் நடந்துவிடக்கூடாது.

அன்று மாலை சீக்கிரமே கிளம்பிவிட்டான். வேலை எல்லாம் முடிந்துவிட்டது என்று காரணம் காட்டி மீண்டும் அவனுடன் தொற்றிக்கொண்டாள் சாருலதா. அவன் இல்லாத இடத்தில் அவளுக்கு என்ன வேலை. அவனிடம்தானே அவளது வேலை செல்லுபடியாக வேண்டும். அதற்காகத்தானே தனக்கு வராத வேலை எல்லாம் சிரமப்பட்டு கற்றுக்கொண்டு செய்துவருகிறாள்.
தந்தையின் அறைக்குச் சென்று சொல்லிவிட்டு கிளம்பினான். அவர் அவனது சோர்ந்த தோற்றத்தையே யோசனையுடன் பார்த்துக்கொண்டிருந்தார்.
Like Reply
#3
வீட்டிற்குள் அவர்கள் நுழைந்த போது வீடே இரண்டாகிக் கிடந்தது. அத்தனை வேலையாட்களையும் போட்டு படுத்தி எடுத்துக்கொண்டிருந்தான் யுகேந்திரன்.
அண்ணனைக் கண்டதும் அவனுக்கு ஆச்சர்யமாயிருந்தது.
“அண்ணா. என்ன இத்தனை சீக்கிரமா வந்துட்டே? அம்மா. அண்ணன் வந்துட்டான்.”
வனிதாமணிக்கும் ஆச்சர்யமாயிருந்தது. மகனுக்கு முடியலையோ என்ற கவலையுடன் கையில் தேநீர் கோப்பையுடனே வந்துவிட்டார். அவன் மட்டும் அருந்த மாட்டான் என்று மற்றவர்களுக்குமே எடுத்து வந்து கொடுத்தார்.
“என்னப்பா முடிலையா?”
“நான் பக்கத்தில் இருக்கும்போது அவரைக் கவனிக்காமல் விட்டுருவேனா ஆன்ட்டி?”
மகேந்திரனைப் பதில் சொல்ல விடாமல் தான் முந்திக் கொண்டு சொன்னாள் சாருலதா.
‘அது சரி. நீ நினைத்தது நடக்கிற வரையில் அவனைக் கவனிச்சுதானே ஆகனும்.’

மனதிற்குள்ளேயே கருவிக்கொண்டாள்.
“இன்னிக்கு வேலை சீக்கிரம் முடிஞ்சுடுச்சும்மா. அதான் சீக்கிரம் வந்துட்டேன். ஆமா. யுகேன். என்ன வீட்டையே தலைகீழா புரட்டிப்போட்டிருக்கே? இந்த மாதிரி வேலை எல்லாம் நீ செய்ய மாட்டியே?”
நாளைக்கே கிருஷ்ணாவை அழைத்து வரலாம்னு இருக்கேன் அண்ணா. அதான் கிருஷ்ணாவுக்குப் பிடித்த மாதிரி இப்ப மாத்தறேன். அப்புறம் நாங்க ரெண்டு பேரும் சேர்ந்தே செய்வோம். கிருஷ்ணாவுக்கு வீடு நீட்டா இருந்தாதான் பிடிக்கும்.”
‘வீடே இல்லாத அந்த கிருஷ்ணாவுக்கு நீட்டான வீடுதான் பிடிக்குமா? அப்படிப்பட்டவனை நாம பார்த்தே ஆகனும். இன்னிக்கு வீட்டுக்கு போக வேண்டாம்.’
முடிவெடுத்தவள் அதை செயலாற்றுவது போல்
“அத்தான். நாளைக்கு முக்கியமான வேலை இருப்பதாக சொன்னீங்கள்ல. அதனால் நானும் இங்கேயே தங்கிடுறேன். அப்பதான் நாம சேர்ந்து போக வசதியா இருக்கும்.”
யாருடைய சம்மதத்தையும் கேட்காமல் விருந்தினர் அறைக்கு சென்றுவிட்டாள்.
அவளுக்கு இங்கே தங்குவதற்கு ஏதாவது சாக்கு கிடைத்தால் போதும். அட்டைப் போல் ஒட்டிக்கொள்வாள். பல்லைக்கடித்தவாறே தன் வேலையைத் தொடர்ந்தான் யுகேந்திரன்.
அன்றைய இரவு உணவுக்குப் பிறகு தனது அறைக்கு வந்தவன் சன்னல் கதவை மூட எத்தனிக்கையில் தோட்டத்தில் மகேந்திரன் உலவுவது தெரிந்தது.
அவனும் சென்றான்.
“என்னண்ணா? தூக்கம் வரலையா?”
“என்னவோ மாதிரி இருந்துச்சு. அதான் காற்று வாங்க வந்தேன். ஆமா நீ தூங்கலையா?”
“தூங்கத்தான் போனேன். உன்னைப் பார்த்ததும் வந்தேன்.”
“இன்னும் கல்லூரி திறக்க ஒருவாரம் இருக்கே? அதற்குள் உன் ஃப்ரண்டை வரச் சொல்லிட்டியா?”
குரலில் எந்த உணர்வையும் வெளிப்படுத்தாது கேட்டான்.
“ஆமா அண்ணா. யாருமேயில்லாத ஹாஸ்டலில் எத்தனை நாள்தான் இருக்கிறது? அதான் உன் சம்மதம் கிடைச்ச உடனே வரச்சொல்லிட்டேன்.”
தனது சம்மதம் கிடைக்காவிட்டால் என்ன செய்திருப்பான்?
ஏதாவது ஒரு வகையில் முயன்று சம்மதம் பெற்றிருப்பான்.
“நம்ம வசதி வாய்ப்பு பற்றி கிருஷ்ணாவுக்கு தெரியுமா?”
மீண்டும் குரலில் எதையும் வெளிக்காட்டாத தன்மை.
“அதெல்லாம் தெரியும் அண்ணா.”
பதில் சொன்ன தம்பியை முறைத்துப்பார்த்தான்.
“ஐயோ அண்ணா. நல்லா பழகிய பிறகுதான் சொன்னேன். நீ கிருஷ்ணாவை நம்பலாம்.”
“சரி போ. தூங்கு. இன்னிக்கு உனக்கு அதிகமான வேலையாச்சே.”
அக்கறையுடனே சொன்னான்.
அவன் தயக்கத்துடனே சென்றான்.

றுநாள் காலை.

சீக்கிரமே கண் விழித்துவிட்ட யுகேந்திரன் குளித்துக் கிளம்பி நேரே சமையல் அறைக்குச் சென்றான்.

அவனைக் கண்டதும் ஒரு கிண்டல் சிரிப்பை உதிர்த்தார் வனிதாமணி.

“போம்மா.”

வெட்கமுடன் தாயுடன் செல்லச் சிணுக்கம் கொண்டான்.

அவர் அவனது தலையைக் கலைத்துவிட்டார்.

அவர் முகம் உடனே சிந்தனையில் ஆழ்ந்தது.

“என்னாச்சும்மா?”

“நீ பாட்டுக்கு கிருஷ்ணான்னு மட்டும் சொல்லி அனுமதி வாங்கச் சொல்லிட்டியே.”

“ஆமா. அவனுக்கு அக்கறை இருந்தா அவனே விசாரிச்சுக்கட்டும்னுதான் அப்படி சொன்னேன். அவன்தான் கிருஷ்ணாவோட குடும்பம் பற்றியோ கிருஷ்ணாவைப் பற்றியோ விசாரிக்கலையே. பெரிய இவன் மாதிரி நம்ம செல்வ நிலைமைப் பற்றி சொன்னியான்னு மட்டும்தான் கேட்டான். ஏம்மா. நானும்தான் கேட்கறேன். எல்லாருமே பணக்காரங்ககிட்ட பழகினா பணத்திற்காக மட்டும்தான் பழகுவாங்களா? ஏன் எல்லாரையும் சந்தேகத்தோடு பார்க்கிறான்?” மனம் தாளாமல் புலம்பினான்.

“சரி சரி புலம்பாம போ.”

“உனக்கு மூத்த மகனைப்பற்றி குறை கூறினாலே ஆகாதே.”

“டேய் அரட்டை. கிருஷ்ணா வருவதற்கு நேரமாச்சே. போன் செய்து விசாரிக்கலாமான்னுதான் உன்னை போகச் சொன்னேன்.”

உடனே அவன் முகம் மலர்ந்தது.

“இதோ பார்க்கிறேன்மா.”

அவன் சொன்ன வினாடி வீட்டு வாசலில் டாக்சி வந்து நின்றது.

அர்த்தத்துடன் தன் அன்னையைப் பார்த்துவிட்டு வாசலுக்கு ஓடினான்.

அவனது ஓட்டத்தை பார்த்துக்கொண்டே மாடியிலிருந்த இறங்கிய மகேந்திரனின் கண்களில் வாசலில் டாக்சியை அனுப்பிவிட்டு சிரித்துப் பேசிக்கொடிருந்த இருவரும் பட்டனர்.

கடைசியில் அவன் பயந்த மாதிரியே நடந்துவிட்டதே.

அவன் முகம் இறுகியது.






தொடரும் . . .
Like Reply
#4
Super bro continue. Eagerly waiting for next update
[Image: 7f3eac9b49640ff18c05914fa2810247.png]
Like Reply
#5
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 02 - ராசு

[Image: nivv.jpg]

ம்மா. கிருஷ்ணா வந்தாச்சு. நீங்க ஆரத்திய எடுத்துட்டு வர்றீங்களா?”

“ஏய் அதெல்லாம் எதற்கு?

பதிலுக்கு கிருஷ்ணா மறுப்பது தெரிந்தது.

“இதோ வர்றேன்ப்பா.”

வனிதாமணி ஆலம் சுற்றுவதற்காக தட்டை எடுத்துக்கொண்டு வாசலுக்கு விரைந்தார்.

மகேந்திரனுடன் வந்த சாருலதாவின் முகத்தில் எதிர்பாராத அதிர்ச்சி. யுகேந்திரன் என்னவோ கிருஷ்ணா என்றதும் அவனுடன் படிக்கும் பையன்தான் என்று நினைத்திருந்தாள். அதற்கு நேர்மாறாக ஒரு அழகான சிறு வயது பெண் வந்து நின்றதும் அவளுக்கு பயங்கர அதிர்ச்சிதான்.

“ஏய் நீ தள்ளிப்போடா.” என்று தன் இளைய மகனைக் கடிந்தவாறே அவளுக்கு மட்டும் ஆலம் சுற்றினார் வனிதாமணி.

“அம்மா. எனக்கும் சேர்த்து ஆரத்தி எடுக்க வேண்டியதுதானே?”

குறைபட்டுக்கொண்டான் யுகேந்திரன்.

“அதற்குள் என்னடா அவசரம்? அதற்கு இன்னும் காலம் இருக்கிறதே?”

“ஒவ்வொரு வீட்டில் ஒரு அழகான பொண்ணோட வந்தால் சாதாரணமா செய்யறதுதானே?”

“எத்தனை வீட்டில் போய் பார்த்தியாம்? வயசுக்கேத்த பொறுப்பு இன்னும் வரலை. அதற்குள் ஆசையைப் பாரு.”

செல்லமாய் மகனது முதுகில் தட்டினார். ஆலத்தை சுற்றிய பிறகு அருகிருந்த வேலைக்காரப் பெண்ணிடம் தாம்பாளத்தைக் கொடுத்து அதை கொட்டிவிட்டு வரச்சொன்னார்.
அவள் அதை வாங்கிக்கொண்டு வெளியே சென்றாள்.
நீ உள்ளே வாடாம்மா.”

“முதல்ல என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க அத்தை.”

சொன்னவாறே வனிதாமணியின் காலில் விழுந்தாள் கிருஷ்ணவேணி.

“நல்லாயிருடாம்மா.”

மனம் நெகிழ அவளை ஆசிர்வதித்து தலையை வருடினார். அப்படியே அவளது தோளைத் தொட்டுத் தூக்கிவர் அணைத்துக்கொண்டார்.

“உள்ளே வாடாம்மா.”

வார்த்தைக்கு வார்த்தை வாடா போடா என்று வனிதாமணி கிருஷ்ணாவை அழைக்க அழைக்க சாருலதாவிற்கு மனம் பொறுமியது. என்றாவது ஒருநாள் தன்னை இப்படி செல்லமாய் அழைத்திருக்கிறாரா? என்று யோசித்துப் பார்த்தாள். என்றுமே வனிதாமணி இப்படி ஒருநாள் கூட செய்ததில்லை.

ஒரு வேண்டாத விருந்தாளியாய்தான் தன்னை நடத்துகிறார்கள் என்று புரிந்து என்ன செய்ய? ரோசப்பட்டு வராமலா இருக்க முடியும்? அப்புறம் இத்தனை சொத்தையும் யாருக்கோ தாரை வார்த்துக்கொடுக்க வேண்டியதாகிவிடும்.

சொத்து இல்லாமல் தங்களால் வாழ முடியுமா?

அது மட்டும் முடியாது என்று அவளுக்கு நிச்சயமாய் புரிந்தது.

‘அதுவும் அந்தக் கிழவியும் சின்னப்பயலும் செய்வதற்கு நான் இந்த அளவிற்கு ஆத்திரப்பட வேண்டுமா?’

‘மாமாவும் மகேந்திரன் அத்தானும் இதுவரைக்கும் எதுவுமே சொல்லவில்லையே. அப்ப அவங்க சொல்ற வரைக்கும் காத்திக்கிட்டிருக்க போறியா?’

‘அதுவும் இந்த கிருஷ்ணாவும் அந்த யுகேந்திரனும் சேர்ந்து கூடிய சீக்கிரமே அப்படி சொல்ல வைத்து விடுவார்கள்.’

‘அவர்கள் வீட்டு பையனைக் காட்டிலும் மாமா என்னை பெரிதாக நினைக்கப்போவதில்லை. அதற்குள் ஏதாவது குட்டையைக் குழப்பிவிடவேண்டும்.’

‘இந்த கிருஷ்ணா எதற்காக வந்திருக்கிறாள்? அவளும் யுகேந்திரனும் நேசிக்கிறார்களோ? அதற்கு அடித்தளமாகத்தான் அவளை இங்கே அழைத்து வந்திருக்கிறானோ?’

‘அப்படி இருந்துவிட்டால் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. மகேன் அத்தானை நான் கல்யாணம் செய்துகொண்டுவிட்டால் அவனை அப்படியே தனிக்குடித்தனம் என்ற பெயரில் வெளியே அனுப்பிவிடலாம். அப்புறம் அவனை ஒதுக்குவது என்ன முடியாத காரியமா?’
மனதிற்குள் என்னென்னவோ திட்டங்கள். இதெல்லாம் நடக்குமா? என்று அவள் யோசிக்கவேயில்லை.
Like Reply
#6
‘நடந்தால் நன்றாக இருக்கும். இந்த அக்கா சாருமதி மட்டும் என்னைப்போல் இருந்திருந்தால் எனக்கு இந்த சிரமம் வந்திருக்குமா? நேரிடையாக சொல்லிக்கூட அவள் புரிந்துகொள்ளவில்லையே. புரிந்துகொள்ளவில்லையா? இல்லை புரிந்துகொள்ள மறுக்கிறாளா?’

மனதிற்குள்ளேயே தன் கூடப்பிறந்த சகோதரியை தாளித்துக்கொட்டினாள்.

“இரண்டு பேரும் ஒன்றாக உள்ளே வருவதைப் பார்த்தால் எனக்கு என்னவோ சந்தேகமாக உள்ளது அத்தான். மூத்தவர் நீங்க வீட்டில் இருக்கும்போதே தனக்குப் பொண்ணை வீட்டுக்கு அழைத்துட்டு வந்துட்டானே இந்த யுகேந்திரன்.”
அவன் காதைக் கடித்தாள். அவர்கள் உள்ளே நுழையப்போகும் அந்த தருணத்தில் என்ன செய்யப்போகிறார்கள் என்றவாறு வாசலையேப் பார்த்தான் மகேந்திரன்
“கிருஷ்ணா. வலது காலை எடுத்து வைத்து உள்ளே வா.”

“ஏய் ரொம்ப ஓவரா பண்ணாதேடா.” அவன் முதுகில் தட்டினாள்.
“முதன் முதல்ல நம்ம வீட்டுக்கு வர்றே. நான் சொல்றதைச் செய்யேன்.”
கெஞ்சலாகக் கேட்டான்.

“சரி. உன்னோட ஒரே பாசத்தொல்லையாப் போச்சு. சின்னப்பிள்ளை மாதிரி அடம் பிடிக்கிறே.”

அவனைக் கடிந்துகொண்டே வலதுகாலை எடுத்து வைத்து உள்ளே நுழைந்தாள் கிருஷ்ணவேணி.

அவள் பின்னேயே அவனும் வந்தான்.

அதைக் கண்ட பிறகுதான் மகேந்திரனால் சரியாக மூச்சு விட முடிந்தது. ஏனோ நிம்மதியாக உணர்ந்தான். இவள் வந்த முதல் நாளே இப்படி படுத்தி வைக்கிறாளே. இனி வரும் நாட்கள் எப்படி கழியப்போகின்றனவோ?

இருவரும் ஒரே வீட்டில் வேறு இருக்கிறார்கள். கண் முன்னே இருக்கும்போது கொஞ்சம் கண்காணிக்கலாம். என்று தன் மனதைத் தைரியப்படுத்திக்கொண்டான்.

“ஹாய் சாருக்கா. எப்படியிருக்கீங்க?”

அவள் தன்னைத்தான் கேட்கிறாள் என்று புரிந்துகொள்ளவே அவளுக்கு சிறிது நேரம் பிடித்தது. அதுவும் அந்த யுகேந்திரன் அழைத்து வந்தவள் தன்னை மதித்துப்பேசுவாள் என்றே நினைக்கவில்லை. அவனை மாதிரியே திமிர் பிடித்தவளாகத்தான் இருப்பாள் என்று நினைத்திருந்தாள்.

“சாரு.”

அருகில் நின்றிருந்த மகேந்திரன் அவளை சுயநினைவிற்கு கொண்டு வர முயற்சித்தான்.

“அத்தான்.” என்று குழைவாக அழைத்தாள்.
அதைக்கேட்ட யுகேந்திரன் பல்லைக் கடித்தான்.
Like Reply
#7
கிருஷ்ணவேணி கேட்டதற்கு பதில் சொல்லாமல் தன் அண்ணனிடம் குழைவாகப் பேசுகிறாளே?

“வாம்மா.”
தன் அறையை விட்டு வெளியில் வந்த ரவிச்சந்திரன் அவளை வரவேற்றார்.
“நல்லாயிருக்கீங்களா மாமா? என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க.” என்றவாறே அவரது காலில் விழுந்தாள்.
“நல்லாயிரும்மா.”
மனதார வாழ்த்தினார்.
அடுத்து மகேந்திரன்தான். யுகேந்திரன் அண்ணனைப் பார்த்து கிருஷ்ணவேணியைக் கூப்பிடுமாறு சைகை செய்தான். எங்கே அண்ணன் அவளை அழைக்காமல் போய்விடுவானோ? அவனுக்குப் பிடித்தமின்மையை அவள் கண்டுகொள்வாளோ?
“வா…வாங்க.” என்று ஒருவாறு அவளை அழைத்துவிட்டான்.
“அண்ணா. அவளை ஏன் மரியாதையா கூப்பிடறே? நானே அவளை வா போன்னுதான் கூப்பிடுறேன். என்னை விட சின்னவள். வாபோன்னே கூப்பிடேன்.”
“சரி. சரி. அப்படியே கூப்பிடுறேன்.” முகம் கடுக்க சொன்னான்.
“வாங்க. நேரமாயிடுச்சு. சாப்பிடலாம்.”
வனிதாமணி அழைத்தார்.
அனைவரையும் அமரச் சொல்லிவிட்டு வனிதாமணி பரிமாற தயாரானார்.
“ம்கூம். அத்தை நீங்களும் உட்காருங்க. சேர்ந்தே சாப்பிடலாம்.”
கிருஷ்ணவேணி அழைத்தாள்.
“இல்லம்மா. நான் அப்புறமா சாப்பிட்டுக்கிறேன்.”
“அதெல்லாம் இல்லை. தனியா உட்கார்ந்து சாப்பிடறது எத்தனை கொடுமை தெரியுமா?”
“எனக்குப் பழகிப்போச்சும்மா.”
“இல்லை. நானும் உங்க கூடத்தான் சாப்பிடுவேன்.”
“நீ இன்னிக்குதாம்மா இங்கே வந்திருக்கே. இன்னிக்கு நீயும் மத்தவங்க கூட உட்கார்ந்து சாப்பிடு. நாளையில் இருந்து நாம சேர்ந்து சாப்பிடுவோம்.”
அதைக் காதிலேயே வாங்கிக்கொள்ளாமல் அவள் எழுந்துவிட்டாள். அவள் பின்னேயே யுகேந்திரனும் எழுந்துவிட்டான்.
“ஆன்ட்டி. எங்களுக்காவது சாப்பாடு எடுத்து வைப்பீங்களா? நான் நேத்து இங்கே தங்கினதுக்கே காரணம் இன்னிக்கு காலையில் முக்கியமான வேலை இருக்குன்னு அத்தான் சொன்னார். அதனால்தான். இல்லையா அத்தான்.”
“ஆமாம்.” அவன் வேண்டாவெறுப்பாகப் பதில் சொன்னான்.
“சரிப்பா. நீங்க மூன்று பேரும் சாப்பிட்டு கிளம்புங்க. நாங்க வீட்டில்தான் இருக்கோம். மெதுவா சாப்பிட்டுக்கிறோம்.”
என்றவாறே அவர்களுக்குப் பரிமாற ஆரம்பித்தார் வனிதாமணி.
அவர்கள் சாப்பிட்டுவிட்டு கிளம்பினர்.

“அப்பாடா.” என்று பெருமூச்சு விட்டார் வனிதாமணி.
“நாம இப்ப சாப்பிடலாமா அத்தை.”
Like Reply
#8
“வாடாம்மா சாப்பிடலாம்.”

மூவரும் சாப்பிட ஆரம்பித்தனர். சிறியவர்கள் இருவரின் கலகலப்பில் நேரம் போனதே தெரியவில்லை வனிதாமணிக்கு.
ரவிச்சந்திரன் தன்னுடைய காரில் ஏறிக்கிளம்ப மகேந்திரனின் காரில் ஏறி முன்சீட்டில் ஏறி அமர்ந்தாள் சாருலதா.
மகேந்திரன் அமைதியாக வந்தான். என்றுமே அவன் கலகலப்பாகப் பேசியதில்லை. அவன் மட்டும் யுகேந்திரன் போல் கொஞ்சம் ஜாலியானவனாக இருந்திருந்தால் எனக்கு இந்த அளவு கஷ்டம் இல்லையே.

ஏக்கப் பெருமூச்சு விட்டாள்.

ஆனால் யுகேந்திரன் ஜாலியான பேர்வழியாக இருந்தும் அவர்களுக்கு என்ன பிரயோஜனம்?

தனது தாயிடம் பிரியமானவனாக இருந்து தொலைத்ததால் அவரிடம் போய் சொல்லிவிட்டானே. அதன் பிறகுதான் அவளால் முன்போல் இங்கே வந்து செல்ல முடியல்லை. ஆராயும் நோக்கோடு தான் அவளைப் பார்க்கிறார் வனிதாமணி.

அப்படி என்ன செய்துவிட்டாள். முறைப்பையன் என்று பேசியதை தன் தாயிடம் போட்டுக்கொடுத்துவிட்டான்.

மகேந்திரனின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்க்க முயற்சி செய்தாள். ஆனால் அவன் வேறு ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான்.

அப்படியே திரும்பிவிட்டாலும் என்ன செய்துவிடப்போகிறான்.

தன்னுடைய வேலையைப் பற்றி மட்டும்தான் பேசுவான்.

நானும் வேற வழியில்லாமல் அதைப்பற்றியேதான் பேச வேண்டியிருக்கிறது.

என்னைக்குதான் எனக்கு விடிவுகாலம் பிறக்கப்போகிறதோ?

சாப்பிட்டு முடித்த பின்னர் தன் பின்னேயே வந்த கிருஷ்ணவேணியை அன்றுதான் வீட்டுக்கு வந்திருப்பதால் ஓய்வு எடுக்கச் சொன்னார் வனிதாமணி.

“இல்லே அத்தே. இத்தனை நாட்களும் விடுதியில் ஓய்வாகத்தானே இருந்தேன். நீங்க நகருங்க. இன்னிக்கு நாங்க சமைக்கிறோம்.”

“உனக்கு சமைக்க தெரியுமா?”

அவர் ஆச்சர்யத்தோடு கேட்டார்.

“அம்மா. இப்பதானே நாங்க சமைக்கப்போறோம்னு சொன்னா. எல்லாம் என்னோட நளபாகத்தை நம்பிதான் அவள் பேசியது. நாம சமைச்சோம்னா நல்லா வக்கனையா சாப்பிடுவா.”

“பாருங்க அத்தே.”

செல்லமாய் சிணுங்கினாள்.

“பிள்ளையை ஏன்டா கிண்டல் செய்யறே?”

அவளுக்காக அவனை திட்டினார் வனிதாமணி.
“இந்த அம்மாவுக்கு நான் கூடவே இருந்தும் என்ன பிரயோஜனம்? எப்பவுமே நான் கண்ணுக்குத் தெரிய மாட்டேன். எப்பவும் மூத்த மகனுக்கு வக்காலத்து வாங்கி பேசும். இன்னிக்கு உனக்கு. என்னிக்குமே என்னைக் கண்டுக்கிட்டதில்லை.”

டேய் அம்மா உங்க ரெண்டு பேரையும் என்னிக்குமே பிரித்துப்பார்த்ததில்லை.”


“அம்மா. உன் மனசாட்சியை தொட்டு சொல்லு. நீ உன் பெரிய மகனைப் பற்றி பெரிதா நினைக்கலை. என் கூடவே இருந்தாலும் நீ அவனைப் பத்திதானே கவலைப்படுவே.”

“அப்படி ஏன் நினைக்கிறே? அவன் தன்னைப் பத்தி யோசிக்காம அடுத்தவங்களைப் பத்தி யோசிக்கிறான். அவன் என்னிக்காவது உனக்கு ஒரு அண்ணனா நடந்திருக்கிறானா? அப்பாவுக்கு அடுத்த ஸ்தானத்தில்தானே அவன் உன்னைக் கவனிச்சிக்கிறான்.”

“அதுதான்மா எனக்குப் பிடிக்கலை. அவன் என்ன என்னைவிட ஒரு ஐந்தாறு வயது மூத்தவனா இருப்பானா? ஒரு அண்ணனா தோழனா இருந்திருந்தா எப்படியிருந்திருக்கும்? எப்பப்பாரு என்னவோ வயசானவன் மாதிரியே நடந்துக்கிறது? பெரிய ரிஷிகுமாரன் மாதிரி நடந்துக்கிறான்.”

“போடா அரட்டை. என் பையன் பொறுப்பை எடுத்துக்கிட்டதுனால்தான் உங்கப்பா இந்த வயதில் கொஞ்சம் நிம்மதியா இருக்கார்.”

“பார்த்தியா கிருஷ். கொஞ்ச நேரத்தில் என் பையன்னு அம்மா அவனைத்தானே சொன்னாங்க. அப்புறம் முதல்ல என்கிட்டே சண்டைக்கு வந்தாங்க.”

“டேய் யுகா. போதும் அத்தைக்கிட்டே எதுக்கு தேவை இல்லாம வம்பு செஞ்சுக்கிட்டிருக்கே?”

“போச்சுடா. நீயும் அவங்க பக்கம் சேர்ந்துட்டியா? என் பக்கம் கொஞ்சம் பலமாக்கனும்னு உன்னை அழைச்சுட்டு வந்தேன். நீயும் கட்சி மாறிட்டியா?”

அவன் தனதறைக்குச் சென்றான்.

“அத்தை. நீங்க ஒன்னும் தப்பா நினைக்காதீங்க. அவனுக்கு அவனோட அண்ணன் தன்னோட இயல்பா பழகலைன்னு ஒரு வருத்தம் இருந்துட்டேயிருக்கு. அதான் வேணுமின்னே வம்பிழுக்கிறான்.”

“எனக்கும் தெரியும்மா.”



“இப்பக்கூட தன் அண்ணனை நினைச்சுதான் உன்னை அழைச்சுட்டு வந்திருக்கான்.”
“சொன்னான் அத்தே.”
Like Reply
#9
நீயும்தான் அவளைப் பார்த்தேல்ல. எனக்கு என்னவோ அவளைக் கண்டாலே பயமா இருக்கு. அவ மட்டும் என் மகனைத் திருமணம் செய்துக்கிட்டா அப்புறம் அவன் எங்களுக்கு இல்லை. நாங்க இந்த வீட்டையே மறந்துடவேண்டியதுதான்.”

“அது எப்படி அத்தே? உங்க பையன் ரொம்ப பாசமானவராச்சே?”
“அதே பாசம் எங்களுக்கும் இருக்கில்லையாம்மா. அவனுக்காக நாங்களே எல்லாத்தையும் விட்டுட்டு போற மாதிரி செஞ்சிடுவா.”
“இப்பதான் நானும் வந்துட்டேன்ல. ஒரு கை பார்த்துடுவோம். ஆமா. நான் வர்றதைப் பத்தி அவளுக்குத் தெரியும்தானே? அப்புறம் ஏன் அப்படி பார்த்தாள்?”

“நாங்க ரெண்டுபேரும் கிருஷ்ணான்னு மட்டும்தான் சொன்னோம்.”

“அதைத்தானே மத்த ரெண்டுபேருக்கிட்டேயும் சொல்லியிருப்பீங்க?”

“இல்லம்மா. உங்க மாமாவுக்கு தெரியும்.”

“அப்ப யுகேனோட அண்ணாவுக்கு தெரியாதுதானே?”

அவர் யோசனையானார். நேரடியாக கிருஷ்ணா என்பது ஒரு பெண் என்று இருவருமே அவனிடம் சொல்லவில்லை. அப்புறம் எப்படி அவன் அவளைக் கண்டதும் சாருலதாவைப் போல் அதிர்ச்சியடையாமல் இருந்தான்.

அதன் பிறகும் எப்படி கிருஷ்ணா என்றுவிட்டு ஒரு பொண்ணை வீட்டுக்கு அழைத்து வரலாம் என்று சண்டையும் போட்டானில்லை.

சாதாரணமாக கோபத்தையாவது வெளிக்காட்டியிருக்கலாம். அதையும் செய்யவில்லை. அப்ப கிருஷ்ணவேணியை அவனுக்கு முன்னமே தெரியுமா?

இப்போது யோசிக்கையில் அவனுக்கு தெரிந்திருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.

அவளுக்கான அறையை ஏற்பாடு செய்யச் சொல்வதற்காக அவர் வேலையாளை அழைத்தபோது அவரிடம் வந்தவன் ஊரு உலகத்தில் மத்தவங்க தப்பா பேச இடம் கொடுக்கக்கூடாது என்றவன் அவர்களுக்கு தப்பு செய்யற வாய்ப்பைத் தராமல் நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றிருந்தான். அப்போதைக்கு அவன் சொன்னதை மட்டும் ஏற்று அவனுக்கு எதிர்த்த மாதிரி இருந்த அறையைத்தான் ஏற்பாடு செய்திருந்தார் அவர். இப்போதைக்கு யோசிக்கும்போது வருவது பெண்தான் என்று அவனுக்குத் தெரிந்திருக்குமோ என்று தோன்றியது.

“ஏம்மா. நீ என் மகனை இதற்கு முன்னரே பார்த்திருக்கியா? நீதான் கிருஷ்ணவேணின்னு அவனுக்குத் தெரியுமா?”
“நான் அவரை முன்னமே பார்த்திருக்கேன் அத்தை. ஆனால் நான்தான் கிருஷ்ணவேணின்னு தெரியுமான்னு எனக்கு தெரியலை. அன்னிக்கு யுகா என்னை அறிமுகப்படுத்தி வைக்கலை.”

“சரி. என்னவோம்மா. அவன் மனசில் என்ன இருக்குன்னு நமக்கு எப்படித் தெரியும்? சரி வா இந்தச் சின்னப்பயலைப் போய் சமாளிப்போம்.”


அதே நேரத்தில் அலுவலகத்தில் மகேந்திரனுக்கு வேலையே ஓடவில்லை. வேலை என்று பெரிதாக தன்னை அழைத்து வந்துவிட்டு எதுவும் கொடுக்காமல் இருக்கிறானே? ஒருவேளை வீட்டைப் பற்றிய யோசனையோ? அந்த கிருஷ்ணவேணியைப் பற்றி தான் போட்டுக்கொடுத்தது பற்றி யோசிக்கிறானோ?

யோசிக்கட்டும் யோசிக்கட்டும். அவளை வீட்டை விட்டு துரத்தட்டும்.

தனக்குள்ளேயே கருவிக்கொண்டாள்.

மகேந்திரன் எண்ணத்தில் முழுவதும் வீட்டு ஞாபகம்தான்.

அவனுக்கு கிருஷ்ணவேணின்னு சொன்ன உடனேயே அவள் யாரென்று புரிந்துவிட்டது.

அவளைச் சென்ற வருடம் அவர்களது கல்லூரி நாள் விழாவில்தான் சந்தித்தான். அவனை அங்கே சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்கள்.

அவர்களது கல்லூரியில் அவனை வரவேற்றதே அவள்தான்.

அவனை பூங்கொத்து கொடுத்து வரவேற்றபோது அவள் முகத்தில் அப்படி ஒரு புன்னகை. கூடச் சேர்ந்து சிரிக்க அழைக்கும் குழந்தையின் சிரிப்பைப் போல. தன்னைக் கண்டதும் மலர வைக்கும் ஒரு மலரின் மென்மையைப் போல. அவனுக்கு எதனுடன் ஒப்பிடுவது என்று புரியவில்லை.

இருந்தாலும் எப்போதும் இருக்கும் ஜாக்கிரதை உணர்வுடன் அவளைப் பார்த்தான். அவள் சிரிப்பதை பார்த்தால் அவளுக்கு தான் புதியவனாக இருப்பேன் என்பது போல் தெரியவில்லை.

அவளுக்குத் தன்னை யார் என்று தெரிந்திருக்கிறது என்று அவனுக்குத் தோன்றியது.

அதற்கேற்றாற் போல் அவள் அவனது சகோதரனை நாடிச் சென்று அவனைப் பார்த்தவாறே ஏதோ பேசுவது தெரிந்தது.

அப்போது கூட அவள் பெயர் என்னவென்று தெரியாது.

அதன் பிறகு பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கு அவனைப் பரிசுகள் கொடுக்கச் சொன்னார்கள். அப்போது பல போட்டிகளில் வென்று பரிசினை அவள்தான் அள்ளிச்சென்றாள்.

அப்போது அவளைப் பெயர் சொல்லி அழைத்தபோது அவனது மனதில் பதிந்துவிட்டது. ஏனென்று இன்னும் புரியவில்லை.

அதன்பிறகு கலைநிகழ்ச்சியில் அவளது பரதமும் அரங்கேறியது. அவள் நன்றாகவே ஆடினாள்.

இருந்தும் அவன் மனதில் அவள் மேல் இனம் புரியாத கோபம்.

அப்படி வாங்கிச் சென்ற பரிசில்களை எல்லாம் சந்தோசத்துடன் தன் சகோதரனிடம் அவள் கொடுத்து மகிழ்வது கண்டு அவனுக்குப் பொறுக்கவில்லை.

இவளைப் போன்ற பெண்கள் தன் தம்பி போன்ற ஆண்மகன்களை தங்கள் பின்னால் சுற்றவிட்டுவிட்டு எல்லாப் பரிசினையும் தாங்களே அள்ளிக்கொள்கிறார்கள்.

என்று தேவை இல்லாமல் கரித்துக்கொட்டினான்.

உலகம் தெரியாமல் தம்பி அவளிடம் மாட்டிக்கொண்டானோ? என்று கவலையாய் இருந்தது.

இதோ இன்று காலையில் கூட தங்கள் வீட்டு வாசலில் இருவரும் எப்படிச் சிரித்துப் பேசினார்கள்.

இதில் இந்த அம்மாவும் கூட சேர்ந்துவிட்டார்.

அவரை ஜாடையாக எச்சரித்தது வீணாகிப்போயிற்று.
கண்ணை மூடிய போது அவன் கண்களுக்குள் வந்து ஆட்டம் காட்டினாள் கிருஷ்ணவேணி. அவன் தலையைப் பிடித்துக்கொண்டான்.
Like Reply
#10
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 03 - ராசு

[Image: nivv.jpg]

ன்று தன்னால் வேலை பார்க்க முடியும் என்று மகேந்திரனுக்குத் தோன்றவில்லை. வீட்டில் தம்பி என்ன சிறுபிள்ளைத்தனம் செய்து வைத்திருக்கிறானோ என்று அதே யோசனையாக இருந்தது.

உண்மையில் தம்பியைக் கண்காணிக்கத்தான் தான் வீட்டிற்கு செல்ல விரும்புகிறோமோ? இல்லை அதற்கு வேறு காரணம் ஏதாவது இருக்கிறதா? என்று தன்னைத்தானே சந்தேகம் கொண்டான்




அவனுக்குப் பதில் கிடைக்கவில்லை.


அவன் மனம் என்ன நினைக்கிறது என்று அவனுக்கேப் புரியாதபோது அவன் மற்றவர்களிடம் என்ன கூற முடியும்?



அந்த கிருஷ்ணவேணியின் சிரிப்பைக் கண்டு தானே கதிகலங்கிப்போயிருக்கையில் உலகம் புரியாத தம்பி என்ன செய்வான். சிரித்து சிரித்தே மயக்கிவிடுவாள்.



அம்மாதான் கூட இருக்கிறாரே என்ற தைரியம் வரவில்லை.



அவரோ தம்பிக்கு மேல் அவளைக் கண்டு மயங்கிக்கிடக்கிறார்.



அவருக்கு எப்போதுமே தனக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கவில்லையே என்ற ஏக்கம் உண்டு. அவனே சிறு வயதில் கண்டிருக்கிறான்.



அவனுக்கு அடுத்து உருவான குழந்தை குறை பிரசவத்தில் பிறந்து இறந்துவிட்டது. அதுவும் ஆசைப்பட்ட மாதிரி பெண் குழந்தை. அப்போதே அவருடைய உடல்நிலை மிகவும் சீர்கேடானது. அத்துடன் அவர் மனம் தேறி வரவும் நீண்ட நாட்களானது.



அதன் பிறகு யுகேந்திரன் உண்டானதற்கு வனிதாமணியின் பிடிவாதம்தான் காரணம்.



அப்போதும் பெண் குழந்தை பிறக்கவில்லையே என்ற ஏக்கம் மட்டும் அவரது மனதில் இருந்து மறையவில்லை.



அதனால்தான் அந்த கிருஷ்ணவேணியைக் கண்டதும் அவரது மனம் இளகிவிட்டதோ?



அப்படியே பார்த்தாலும் இந்த சாருமதி பெரும்பாலும் நமது வீட்டிலேயேதானே குடியிருக்கிறாள்.



அவள் மீது அப்படி ஒரு பாசம் இருந்த மாதிரி தெரியலையே?



கண்டிப்பாக அவளது நடத்தையைக் கண்ட பிறகு தன் அன்னைக்கு அவள் மீது பாசம் பிறக்க வாய்ப்பில்லை என்று அவனுக்கு நிச்சயமாய் தோன்றியது.



உடனே வீட்டிற்குப் போக வேண்டும் என்று எண்ணினான்.



இருந்தும் அன்றைய வேலைப்பளு அவனை நகரவிடவில்லை. இதில் அந்த சாருலதா வேறு தொதொணத்தபடியே இருந்தாள்.



தங்கள் வீட்டில் என்ன நடந்தால் அவளுக்கு என்ன என்று கூட கோபத்தில் அவனுக்கு எரிச்சலாய் வந்தது.



ஏதோ வேலையில் கொஞ்சம் சூட்டிகையாய் இருக்கிறாள் என்று கூடவே வைத்திருக்க வேண்டியதாயிருக்கிறது. இல்லை என்றால் அவளுக்கு எல்லாம் வேலை கொடுக்க முடியுமா?



சொந்தக்காரி என்பதற்காக வேண்டுமானால் முக்கியமான இந்த வேலையைத் தவிர வேறு ஏதாவது வேலை கொடுத்திருக்க முடியும்.



தான் இப்போது வீட்டிற்கு கிளம்பினால் அவளும் தன்னுடன் தொற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது.

ஏனோ இன்று அவன் வீட்டிற்கு போகும்போது அவளை அழைத்துச் செல்ல மனம் வரவில்லை. அதனால் முடிக்க வேண்டிய வேலைகளை பார்க்க ஆரம்பித்தான்



அத்துடன் எத்தனை நாட்கள்தான் தானே தம்பியைக் கூடவே இருந்து காப்பாற்ற முடியும்? அவனும் வளர்ந்துகொண்டுதானே வருகிறான்.



தன்னைக் காப்பாற்றிக்கொள்ளும் தைரியம் வரவேண்டும். வந்துதான் தீரவேண்டும்.



இத்தனை நாட்கள் சாருமதி செய்தது எல்லாம் தப்பாக தெரியாத போது இப்போது மட்டும் ஏன் அவள் தப்பாகத் தோன்றுகிறாள்?



இந்த கிருஷ்ணா வந்து என்னையும் மாற்றிவிட்டாளா?



அதன் பிறகு அவன் வீட்டைப் பற்றி அவன் யோசிக்கவில்லை. யோசிக்கவும் நேரமில்லை.



கேந்திரன் மாலை வீட்டிற்கு வரும்போது வீடே அமைதியாய் இருந்தது. அவனுக்கு ஆச்சர்யம் தாளவில்லை.



அவனோடே ரவிச்சந்திரனும் வந்துவிட்டார்.



“வாங்க. என்ன இன்னிக்கு சீக்கிரம் வந்துட்டீங்க? கொஞ்சம் இருங்க. குடிக்க ஏதாவது கொண்டு வர்றேன்.”



அவர்களை வரவேற்ற வனிதாமணி சமையல் அறைக்குள் சென்றார்.



சொன்ன மாதிரியே சிறிது நேரத்தில் அவர்கள் இருவருக்கும் தேநீர் கொண்டு வந்துகொடுத்தார்.



மகேந்திரன் பார்வை இங்கும் அங்கும் அலைபாய்ந்தது.



வீட்டில் தம்பியும் அந்தப் பொண்ணும் இருப்பதற்கான எந்த அறிகுறியும் இருக்கிற மாதிரி தெரியவில்லை.



வந்த அன்றே ஊர் சுற்ற அழைத்துச் சென்றுவிட்டாளா?







இனி அவன் உருப்பட்ட மாதிரிதான்.



“எங்கே அவங்க ரெண்டு பேரும்?”



அவன் கேட்க நினைத்ததை தந்தை கேட்டதும் தாய் என்ன சொல்லப்போகிறார் என்று ஆவலுடன் கவனிக்க ஆரம்பித்தான்.




“பின்னாடி நீச்சல் குளத்தருகே இருக்காங்க.”
சிரித்தவாறே சொல்லிக்கொண்டு தனது வேலையைப் பார்க்க சென்றுவிட்டார்.
Like Reply
#11
இதில் சிரிக்க என்ன இருக்கிறது என்ற எரிச்சலுடன் தனது அறைக்குச் சென்றான். உடை மாற்றி கீழே சென்றான்.

வந்த அன்றே அவனைக் கூத்தடிக்க நீச்சல் குளத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டாளா? இந்த அம்மா அதை பெருமையாக வேறு சொல்லிக்கொள்கிறார்களே?
அவனுக்குக் கோபமாக வந்தது. மனம் கேட்காமல் நீச்சல் குளத்திற்கு சென்றான்.
அங்கே குளத்தில் யாரையும் காணவில்லை.
மனம் சற்றே ஆறுதலடைந்தது.
ஆனால் அம்மா அவர்கள் அங்கேதானே நிற்பதாக கூறினார்கள்.
அவனது கேள்விக்கு விடையாக கிருஷ்வேணியின் குரல் கேட்டது. கூடவே யுகேந்திரனின் குரலும் கேட்டது. பார்த்தால் அவர்கள் இருவருடன் தோட்டக்கரனும் இருந்தான்.
மூவரும் தோட்டத்தை சீர்படுத்தும் வேலையில் ஈடுபட்டிருந்தனர். தம்பியை அப்படி பார்க்கும்போது அவனுக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.
அரைக்கால்சட்டையும் கையில்லா பனியனும் அணிந்துகொண்டு யுகேந்திரன் சுறுசுறுப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தான்.
அத்துடன் தோட்டக்காரனும் அவள் ஏவுவதை எல்லாம் செய்துகொண்டிருந்தான்.
‘மகாராணி மற்றவர்களை ஏவிவிட்டு என்ன செய்கிறார்களாம்?’
மனதிற்குள்ளேயே கருவிக்கொண்டு தேடிப்பார்த்தான்.

அவளும் சும்மா இருக்கவில்லை.

சுடிதாரின் ஷாலை குறுக்காகப் போட்டுக்கொண்டு கீழே முடிச்சிட்டிருந்தாள்.

அவளால் முடிந்த பூந்தொட்டிகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்தாள். அத்துடன் மற்ற இருவரையும் வேலை வாங்கிக்கொண்டிருந்தாள்.

தோட்டம் ஓரளவு சீராகியிருந்தது.

அவர்களைப் பற்றி தவறாக நினைத்ததற்காக மனதிற்குள்ளேயே மன்னிப்பு கேட்டுக்கொண்டான்.

யுகேந்திரன் அவனைப் பார்த்துவிட்டான்.

“ஹாய் அண்ணா. இங்கே வா.”

அவனும் அவர்கள் அருகே சென்றான்.

“என்ன இன்னிக்கு இத்தனை சீக்கிரம் வந்துட்டே? அத்துடன் என்னை தேடி வந்திருக்கே? பார்த்தியா? ஐயா எத்தனை வேலை செய்யறேன்னு?”

பீற்றிக்கொண்டான்.

“இத்தனை நாட்கள் இந்த வேலை எல்லாம் செய்ததில்லையே? இன்னிக்கு இது என் தம்பிதானா என்று சந்தேகம் எனக்கு சந்தேகமாக இருக்கிறது.”

“சரி. போதும் இன்னிக்கு வேலை பார்த்தது. வாங்க போகலாம்.”

அதற்கு மேல் அவர்களும் வேலை பார்க்க விருப்பமில்லாமல் வீட்டிற்குள்ளே வந்தனர்.

வனிதாமணி சூடாக பலகாரம் செய்து வைத்திருந்தார்.

அவர்கள் தங்கள் அறைக்குச் சென்று கைகால் கழுவிவிட்டு வந்து சாப்பிட அமர்ந்தனர்.

கலகலப்பான சூழ்நிலையாக இருந்தது. அனைவரும் பேசிக்கொண்டு இருக்க மகேந்திரன் மட்டும் அமைதியாக இருந்தான்.
அது கிருஷ்ணவேணிக்கு என்னவோ போல் இருந்தது.
Like Reply
#12
ஏற்கனவே யுகேந்திரன் தனது அண்ணனைப் பற்றி சொல்லியிருக்கிறான்தான். அவனுக்கு தான் அங்கே வந்தது பிடிக்கவில்லையோ என்ற சந்தேகம் அவள் மனதில் உறுத்தியது.

ஆனாலும் யுகேந்திரன் அந்த அளவிற்கு கேட்டுக்கொண்ட பிறகுதான் அவள் அவர்கள் வீட்டில் தங்க சம்மதித்ததே. அவனது தாயோ சொல்ல வேண்டாம். என்று அவள் ஒருத்தி இருக்கிறாள். மகனது தோழி என்று தெரிந்ததோ அன்றிலிருந்தே அவள் மேல் பிரியத்தைக் கொட்டுபவர்.
அவரும் மிகவும் ஆர்வமாக இருந்ததால்தான் அவள் இங்கே வரச்சம்மதித்ததே.
ரவிச்சந்திரனும் அவளைத் தன் குடும்பத்தாரோடு பார்த்திருக்கிறார். அப்போது அவளைப் பற்றி யார் என்ன என்று கூட தெரியாமல் அவளிடம் பிரியமாக நடந்தகொண்டிருக்கிறார்.
மகேந்திரன் என்றுமே தனது மனதை வெளிக்காட்டிக்கொள்ளமாட்டான் என்று அவர்கள் பேச்சிலிருந்தே தெரிந்தது.
இருந்தும் அவனும் மற்றவர்கள் போல் தன்னுடன் பிரியமாகப் பேச வேண்டும் என்று ஆசையாக இருந்தது.

தனது குடும்பத்தாரைப் பற்றிய நினைவுகள் கலங்களாகத்தான் தெரிகின்றது. இப்போது கூட இருக்கும் உறவினர்களோ அவளிடம் உண்மையான பாசம் வைத்தவர்கள் கிடையாது. அவளுக்கு என்னவானாலும் அவர்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைத்தால் போதும்.
அவள் உண்மையான பாசத்திற்காக ஏங்கும்போதுதான் யுகேந்திரனின் நட்பு கிடைத்தது.
அவனுக்கு அவளிடம் இருந்து வேறு எதுவும் தேவை இருக்கவில்லை. அவனுக்கும் உண்மையான அன்புதான் தேவையாய் இருந்தது.

படிப்பை முடிக்கப் போகும் இந்த ஒரு வருடத்திற்குள்ளாவது தான் ஒரு சந்தோசமான சூழ்நிலையில் இருந்தாக வேண்டும்.
அப்போதுதான் படிப்பை முடித்த பிறகு தான் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளை சந்திக்கும் வலு கிடைக்கும்.

கண்ணீரைத் துடைத்துக்கொண்டாள்.

அவளுக்கு பெரும்பாலும் அழுவது பிடிக்காது. ஆனால் சில நேரங்களில் அளவுக்கு அதிகமான அன்பைத் தாங்கிக்கொள்ள முடிவதில்லை.
“என்னம்மா கிருஷ்ணா? உனக்கு இங்கே பிடிச்சிருக்கா?”
“ரொம்ப பிடிச்சிருக்கு மாமா.”
“ஆமா. இப்ப உள்ள பிள்ளைங்க எல்லாம் ஆன்ட்டி அங்கிள்னு கூப்பிடறதைதான் பெருமையா நினைக்கிறாங்க. நீ என்னன்னா அத்தை மாமான்னு கூப்பிடறே?”
“நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்த பொண்ணு மாமா. அத்தோட அத்தை கண்டிப்பா என்னை ஆன்ட்டின்னு கூப்பிடாதேன்னு சொல்லிட்டாங்க.”
“அப்ப நீ அவளை முதன் முதல்ல இன்னிக்குதான் பார்க்கிறேன்னு நினைச்சேன். அப்படியில்லையா?”
“இல்லை மாமா. அத்தை எங்க கல்லூரிக்கு வரும்போது பார்த்திருக்கிறேன். அப்புறம் கோயிலுக்கு வரும்போது யுகா அழைச்சுட்டு வந்திருக்கான். அப்பதான் என்கிட்டே சொல்லியிருக்காங்க.”
“அப்பதான் என்னோட போனில் பேச வைச்சிருக்காங்களா?”
“ஆமா மாமா.”
மகேந்திரனுக்கு தான் என்னமோ தனிமைப்படுத்தப்பட்ட மாதிரி தோன்றியது. ஒரு சின்னப் பெண் விசயத்தில் தன்னை தனிமைப்படுத்திவிட்டார்களே.
இப்போது அவள் இங்கே வந்து தங்க வேண்டும் என்று சொன்ன போது கூட அவள் ஒரு பெண் என்று தன்னிடம் கூறவில்லை. தான் மட்டும் அந்த கல்லூரி நாள் விழா அன்று அவள் யார் என்று தெரிந்துகொண்டிருக்கவில்லை என்றால் அந்த சாருமதி மாதிரி தனக்கும் அதிர்ச்சியாகதான் இருந்திருக்கும்.


என்னை ஏன் அந்நியப்படுத்தி விட்டார்கள். நான் அவர்களிடம் எந்த அளவிற்கு பாசமாக இருக்கிறேன். என் பாசம் அவர்களுக்குப் ஏன் புரியாமல் போயிற்று.


‘ச்சே. எல்லாம் இந்த கிருஷ்ணாவால்தான் உண்டாயிற்று. இத்தனை நாட்கள் இல்லாமல் நான் இப்படி எல்லாம் யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.’

“போய் குளித்துவிட்டு வாங்க. சாப்பிடலாம்.”

வனிதாமணி கூறினார்.

“ஆமாம்மா. எனக்கு இன்னிக்கு ரொம்ப பசி.”

யுகேந்திரன் கூறியபடியே தனது அறைக்கு ஓடினான்.

கிருஷ்ணவேணி எந்த அறைக்குச் செல்லப்போகிறாள் என்று பார்த்தவாறு நின்றிருந்தான் மகேந்திரன்.

அவள் நேரே அவனது எதிர் அறைக்குள் சென்று நுழைந்தாள்.

“அம்மா. அவள் ஏன் அங்கே போகிறாள்?”

“நீதானேப்பா சொன்னே, பார்க்கிறவங்க குறை சொல்ற அளவுக்கு விட்டுடக் கூடாதுன்னு. யுகா சின்னப் பையன். நீ கொஞ்சம் பொறுப்பா அவங்களைப் பார்த்துப்பேன்னுதான் அவளை அந்த அறையில் தங்க வைத்தேன்.”

அவன் எந்தப் பதிலும் சொல்லாமல் தனதறைக்குச் சென்றான்.

தாய் தன் மீது வைத்த நம்பிக்கையை நினைத்து சந்தோசப்படுவதா வருந்துவதா? என்று அவன் மேலேயே சந்தேகம் கொண்டான்.

குளித்துவிட்டு வெளியில் செல்ல கதவைத் திறந்த போது எதிர் அறையும் திறந்தது. அவள் என்ன மாதிரி கோலத்தில் வந்து நிற்கப்போகிறாளோ? என்று அவன் பயந்த மாதிரி இல்லாமல் எளிமையான கைத்தறி சுடிதார் அணிந்து கதவைத் திறந்தாள்.

அவர்கள் இருவர் மட்டுமே அந்த இடத்தில் இருந்தனர்.

வேறு யாரும் இல்லை. மரியாதை நிமித்தம் அவள் அவனைப் பார்த்து சிரித்தாள்.
அந்த சிரிப்பு அவனுள் ஏதோ மாற்றத்தை உண்டு பண்ணியது. அவன் அவளையேப் பார்த்துக்கொண்டிருந்தான்.

Like Reply
#13
நன்றாக இருக்கிறது நண்பா. அடுத்து என்ன ஆயிற்று
Like Reply
#14
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 04 - ராசு

[Image: nivv.jpg]

றையை விட்டு வெளியில் வந்த மகேந்திரன் எதிர் அறையில் ஏதாவது அரவம் தெரிகிறதா என்று நோட்டம் விட்டுக் கொண்டிருக்கும்போதே அந்தக் கதவு திறந்தது.

அவள் என்ன மாதிரி மயக்கும் கோலத்தில் வந்து நிற்கப் போகிறாளோ என்ற பயத்துடன் நின்றவன் நிம்மதிப் பெருமூச்சு விட்டான்.


கிருஷ்ணவேணி ஒரு எளிய கைத்தறி சுரிதார் அணிந்து கதவைத் திறந்தவாறு வெளியில் வந்தாள்.


வந்தவள் சும்மா இருந்திருக்கக் கூடாதா?



அவனைப் பார்த்து ஒரு புன்னகையை வேறு சிந்தினாள்.



சாதாரணப் புன்னகையா அது?



தடுமாறிப்போனான். அவள் இன்னமும் அவனது முகத்தையேதான் பார்த்துக்கொண்டிருந்தாள்.



அவளுக்கு பதிலுக்குப் புன்னகைக்க வேறு வேண்டுமா?



பதிலுக்கு அவனிடம் எந்த சலனமும் இல்லை. வெறித்துப்பார்த்தவன் அவள் அருகில் சென்றான்.



“இந்தப் பாரு. இந்த வேலை எல்லாம் என்கிட்ட வச்சுக்க வேணாம். உன் மயக்குற வேலை எல்லாம் என் தம்பியோட நிறுத்திக்கோ. அவனுக்கும் இன்னும் கொஞ்சம் நாளில் உண்மையை புரிய வச்சிடுவேன். அவனுக்கும் மயக்கம் தெளிஞ்சுடும். அதற்குப் பிறகு உனக்கு இந்த வீட்டில் இடமில்லை.”



முகத்தைக் கடுகடுவென வைத்துக்கொண்டு சொன்னவன் அவசர அவசரமாக கீழே இறங்கிப்போய்விட்டான்.



கீழே வந்த பிறகு ஒரு சின்னப் பெண் தனது வீட்டில் வந்திருந்துகொண்டு தன்னையே தப்பித்து ஓட வைப்பது போல் நடக்குமாறு செய்துவிட்டாளே?



அதற்கும் அவள் மீதே குற்றம் சாட்டினான்.



அவளுக்கு என்னவோ போல் இருந்தது.



ஒரு மரியாதைக்காகதான் அவள் அவனைக் கண்டதும் சிரித்ததே.



அதற்காக எப்படி பேசிவிட்டான். அவன் மேல் எத்தனை மரியாதை வைத்திருந்தாள்.



அவனது வீட்டில் தங்கியிருக்கிறோம். அத்துடன் அவன் வீட்டைச் சார்ந்தவர்கள் எல்லாம் அவளை வேற்றாளாகப் பார்க்காததால் அவனையும் அவளால் அந்நியனாக நினைக்க முடியவில்லை.



அதுவும் யுகேந்திரனுக்கு அவனது அண்ணன் என்றால் உயிர். அவனுக்கும் அப்படித்தான் என்று யுகேந்திரன் அடிக்கடி சொல்லிக்கொண்டேயிருப்பான்.



அத்துடன் அவன் பேச்செடுத்தாலே தனது குடும்பம், அண்ணன் என்றுதான் இருக்கும். அவர்களை எல்லாம் பார்ப்பதற்கு முன்பே அவர்கள் மீது ஒருவித பாசம் அவளுக்கு உண்டாகியிருந்தது.



மகேந்திரன் சிறிய வயதிலேயே தொழிலில் பெரிய அளவில் சாதித்திருப்பது வேறு அவன் மேல் ஒருவித மரியாதையை உண்டு பண்ணியிருந்தது.



அவன் தன்னை அலட்சியப்படுத்தி பேசிவிட்டு சென்றது அவளுக்கு என்னவோ போலிருந்தது.



தான் அந்த வீட்டிற்கு வந்திருக்கக்கூடாதோ என்ற கவலை உண்டானது.



அவன் மீது ஏற்படும் ஒரு கசப்பு, பாசமாக இருக்கும் மற்றவர்களிடம் காட்டிவிட்டால் என்னாகும்?



வழக்கம்போல் கல்லூரி விடுதியிலேயே இருந்திருக்கலாமோ?



விரக்தியாய் நினைத்தாள்.



நினைவு தெரிந்த நாட்களிலேயே அவளுக்கு விடுதி வாசம் ஆரம்பமாகிவிட்டது. அதுதான் அவளுக்கு நிம்மதியையும் தந்தது.



மற்ற குழந்தைகள் தங்கள் குடும்பத்தோடு நேரம் செலவிடும்போது அவளுக்கு மிகவும் ஏக்கமாக இருக்கும்.
பிறகு ஏக்கப்படுவதால் தேவையில்லாத வருத்தம்தான் ஏற்படுகிறது என்று புரிந்த பிறகு வருத்தப்படுவதை விட்டுவிட்டு அந்த நேரத்தில் ஏதாவது கற்றுக்கொள்ள ஆரம்பித்தாள்.
Like Reply
#15
அந்த கற்றுக்கொள்ளல் மனம் வேறு எந்த பக்கமும் திரும்பாது அவளுக்கு நிம்மதியைத் தந்தது.

மற்றவர்கள் எதையோ எதிர்பார்த்து பழகுகிறார்கள் என்று தெரிந்த பிறகு தனது நட்பு வட்டத்தை கவனத்துடன் கையாண்டாள். தன்னைப் பற்றிய எதையும் மற்றவர்களிடம் பகிர யோசித்துதான் செய்வாள்.
அவளை யோசிக்க விடாமல் நட்பு கொள்ள செய்தது யுகேந்திரன் மட்டும்தான்.
அவளது வட்டத்தை விட்டு அவளை வெளிக்கொணர்ந்தவன் அவனே.
அவனது கலகலப்பு இப்போது அவளையும் தொற்றிக்கொண்டது. அவனுடன் பழக ஆரம்பித்த இந்த இரண்டு வருடங்கள்தான் அவள் தன் வயதுப்பெண்ணுக்குரிய சூட்டிகையுடன் இருப்பதே.

இப்போதும் அவனது அந்த அன்புதான் அவளை இந்த வீட்டில் வந்து இருக்க வைத்திருக்கிறது.
அவளைப் பற்றி புரிந்தவன் இந்த ஒரு வருடமாவது அவள் குடும்பத்தில் இருக்கும் சந்தோசத்தை அனுபவிக்க வேண்டும் என்று அவள் மறுத்தும் விடாமல் அவனது அன்னையிடமும் பேசி அவளை இங்கே வரவழைத்துவிட்டான்.
அதுவும் வனிதாமணியின் அன்பு அவளுக்கு தனது பெற்றோரை நினைவுபடுத்தியது.

அவர்கள் இருந்திருந்தால் தனக்கு இந்த நிலைமை வந்திருக்காதே என்று இப்போது நினைக்கும்போது அவளை அறியாமல் கண்ணீர் வழிந்தது.
அவளுக்கு தாயன்பின் சுவையை ருசிக்க மனம் விரும்பியது. அதனால் இங்கே கிளம்பி வந்துவிட்டாள்.
மகேந்திரன் அப்படி பேசிவிட்டு சென்ற பிறகு கீழே செல்ல மனம் இல்லாமல் மீண்டும் அறைக்குள் நுழைந்தவள் கட்டிலில் அமர்ந்துதான் இதை எல்லாம் யோசித்துக்கொண்டிருந்தாள்.

அவளது அன்பிற்கு மகேந்திரன் பூசிய வர்ணம் அவளது மனதைக் காயப்படுத்தியது.

கீழே உணவு மேசைக்கு வந்த மற்றவர்கள் அவளுக்காக காத்திருந்தனர்.

மற்றவர்களை அவள் வேண்டுமென்றே காக்க வைக்கிறாள் என்று அதுவேறு அவள் மீது அவனுக்கு கோபத்தை வரவழைத்தது.

ஒருவேளை தான் நடந்துகொண்டதை நினைத்து வருத்தப்படுகிறாளோ என்று யோசித்தான்.

‘நான் ஏன் அப்படி நடந்துகொண்டேன். என்ன? என்னைப்பார்த்து சிரித்தாள். அதற்கு சின்னதாக பதில் புன்னகையை கொடுக்காமல் இப்படி தேள் கொடுக்காய் என்னை பேச வைத்தது எது? அவளைப் பார்க்கும்போது எல்லாம் ஏதோ ஒருவித பயம் என்னை ஆட்டுவிக்கிறதே? தொழிலில் மற்றவர்கள் என்னைக் கண்டு ஆடிப்போய் இருக்கிறார்கள். என்னை ஒருத்தி ஆட்டி வைக்கிறாளே.’

“என்ன யுகா? இன்னும் கிருஷ்ணாவைக் காணலை.”

அன்னையின் குரல் அவனது சிந்தனையைக் கலைத்தது.

“இதோ பார்க்கிறேம்மா.”

சொன்ன யுகேந்திரன் இரண்டிரண்டு படிகளாகத் தாவிச் சென்றான்.

“ஏய் மெதுவா போடா.”
பின்னேயே வனிதாமணி கத்தினார். அதற்குள் அவன் சென்றுவிட்டான்.

இன்னும் சின்னப்பிள்ளை மாதிரியே நடந்துக்கிறான்.”


வனிதாமணி சிரித்தார். ரவிச்சந்திரனும் சிரித்துக்கொண்டார்.

தம்பி இந்த வேகத்தை படிப்பிலும், தொழிலிலும் காட்டியிருந்தால் இந்நேரம் முன்னேறியிருப்பான் என்று அவனுக்குத் தோன்றாமலில்லை.

“கிருஷ். என்னடா பண்றே? அங்கே எல்லாரும் உனக்காக காத்துக்கிட்டிருக்காங்க. நீ இங்கேயே இருந்தா எப்படி சாப்பிடறது?”

கேட்டுக்கொண்டே வந்தவன் அவளது கண்களில் கண்ணீரைக் கண்டதும் பதறிப்போனான்.

“என்னாச்சுடா? ஏன் அழறே?”

அவன் கேட்ட பிறகுதான் தான் அழுதிருக்கிறோம் என்ற உணர்வு வந்தது.

அவசர அவசரமாக கண்களைத் துடைத்துக் கொண்டவள் “நான் அழலையே” என்றாள்.      

“அப்புறம் என்ன கண்ணில் தூசி விழுந்துடுச்சா?”

அவனிடம் இருந்து எதையும் மறைக்க முடியாது. அவளைப் பற்றி நன்கு உணர்ந்தவன் அவன்.

“அம்மா, அப்பா நினைவு வந்துருச்சு.”

அவனுக்கு அவளைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. ஒரே நேரத்தில் இரண்டு பேரையும் இழந்துவிட்டு உண்மையான அன்பிற்காக ஏங்கிக் கொண்டிருக்கிறாள். அவளது சொந்தங்களும் புறக்கணித்துவிட்டனர்.

அவளைத் தோளோடு சேர்த்தணைத்துக்கொண்டான்.

“அம்மா அப்பா நினைவு வந்தா அழனுமாடா? நீ அழுதா அவங்க ஆத்மா எத்தனை வருத்தப்படும்.”

வருத்தப்படாமல் அவங்களோடு இருந்த சந்தோசமான தருணங்களை நினைவுபடுத்திக்கொள் என்றும் அவனால் தேற்ற முடியவில்லை.

அவளுக்கு நினைவு தெரியும் முன்னே அவர்கள் இந்த உலகை விட்டு மறைந்துவிட்டார்கள்.

அவன் வந்து தேற்றியதும்  ஏற்கனவே பெற்றோர் இருந்திருந்தால் என்று தனது நிலையைப் பற்றி வருந்திக்கொண்டிருந்தவள் இப்போது அந்த ஏக்கம் மனதைத் தாக்க அவளை அறியாமல் அழ ஆரம்பித்துவிட்டாள்.

“ப்ளீஸ்டா. அழாதே.”

அவளது துயரத்தை தனதாக உணர்ந்து தேற்றும் தோழனின் தேறுதல் வார்த்தைகள் அவளை ஆறுதல் படுத்தின.

அத்துடன் அவளுக்காக அனைவரும் கீழே சாப்பிடாமல் காத்திருக்கிறார்கள் என்று சொன்னதும் அவளுக்கு நினைவு வந்தது.

அவன் இதற்காகவும் தன்னை தவறாக நினைக்கப்போகிறான். வேண்டுமென்றே அவர்களைக் காக்க வைத்ததாக எண்ணுவான்.



அவனுக்காக இல்லை என்றாலும், பெரியவர்கள் என்ன பாவம் செய்தார்கள். அத்தை காலையில் இருந்து வீட்டில் உழைக்கிறார் என்றால், மாமா தனது தொழிலைக் கவனித்துவிட்டு வந்திருக்கிறார்.
அவர்கள் இருவரும் நேரத்தில் சாப்பிட்டு ஓய்வு எடுக்க வேண்டும். அத்துடன் யுகேந்திரன் பசி தாங்க மாட்டான். அவன் சாப்பாட்டு பிரியன் வேறு.
Like Reply
#16
ஒருத்தன் தன்னைக் காயப்படுத்தியதற்காக தான் மற்றவர்களை கஷ்டப்படுத்த வேண்டுமா?

தன்னை ஒருவாறாக தேற்றிக்கொண்டவள் முகத்தை துடைத்துக்கொண்டு எழுந்தாள்.
“டேய் சாப்பாட்டு ராமா. உண்மையைச் சொல்லு. மத்தவங்க எனக்காக காத்திருக்காங்கன்னு கூப்பிட வந்தியா? இல்லை உனக்கு பசி தாங்கலையா? நான் வரலைன்னா உனக்கு அத்தை சாப்பாடு கிடையாதுன்னு சொன்னாங்களா?
அவளது கேலிக்குரலைக் கேட்டதும்தான் அவன் இலகுவானான்.

அவன் முகத்தில் தெளிவைக் கண்டதும் அவள் மனம் நிம்மதியுற்றது.

அதற்காகதான் அவள் அப்படி பேசியதே.

எழுந்து குளியல் அறைக்குள் சென்று முகத்தை கழுவிக்கொண்டு வந்தாள்.

வந்தவள் முகத்தில் எந்த ஒப்பனையும் போடாமல் பொட்டை மட்டும் வைத்துக்கொண்டு “வா போகலாம்” என்றாள்.

இருவரும் அவளது அறையை விட்டு வெளியில் வந்தனர்.

யுகேந்திரன் தனது தோழியைப் பெருமையுடன் பார்த்தான்.

அவர்கள் இருவரின் நட்பைப் பார்த்து பொறாமைப்படும் மாணவர்கள் ஏராளம்.

பெண்களே பார்த்து பொறாமைப்படும் அளவிற்கு அவள் மிக அழகாய் இருந்தாள். ஆனால் அதை நினைத்து என்றுமே அவள் கர்வப்பட்டதில்லை,

இப்போதும் வெறும் பொட்டிட்டு நிற்கும்போதும் தேவதையாய் தெரியும் அவளைக் கண் கொட்டாமல் பார்த்தான்.

அவளுக்கே ஒரு மாதிரி இருந்தது.

“ஏய் என்னடா அப்படி பார்க்கிறே?”

“சைட் அடிக்கலாமா என்றுதான்.”

அவன் சொல்ல அவள் அவனது முதுகில் மொத்தினாள்.

“ஏய். எனக்கு வலிக்கலையே. வலிக்கலையே.”

என்று பழிப்பு காட்டினான்.

இருவரும் சிரித்துக் கொண்டே படியிறங்கினர்.

இது எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த மகேந்திரனின் முகம் கடுத்தது.

எங்கே தான் சொன்னவற்றை நினைத்து அவள் வருந்திக்கொண்டு இருக்கிறாளோ என்று கொஞ்சம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான்.

அது தவறு என்று இப்போது அவர்கள் கூத்தடித்துக்கொண்டு வரும் விதத்தைப் பார்த்தாலே தெரிகிறதே?

அவள் நல்லவளாக இருந்திருந்தால் உரைத்திருக்கும். தான் சொன்னதற்கு இந்நேரம் அவள் மூட்டை கட்டிக் கிளம்பியிருக்க வேண்டும்.

அவள் பணத்திற்கு அடிபோட்டு வந்தவள்தானே? அவள் எல்லாவற்றையும் தூசி தட்டுவது போல் தட்டிவிட்டு இதோ வந்துவிட்டாளே.

“வாம்மா.”

பெரியவர்கள் இருவரும் அவளை அழைத்தனர்.

“என்னாச்சு கிருஷ்ணா? இத்தனை நேரம் என்ன பண்ணே?”

வனிதாமணி கேட்டார்.

அவள் என்ன சொல்வது என்று திகைத்தாள். அழுதுகொண்டு இருந்தேன் என்றா சொல்ல முடியும்?

அவளைத் திட்டியவனுக்கு கொண்டாட்டமாக இருக்குமே. அத்துடன் பெரியவர்கள் இருவரும் மனம் வருந்துவார்கள்.

“அம்மா. என்னம்மா நீங்கள். ஒரு பொண்ணா இருந்துக்கிட்டே இந்தக் கேள்வியைக் கேட்கறீங்களே?”

யுகேந்திரன் தோழியின் சங்கடத்தைப் போக்க இடையில் புகுந்தான். அவன் எதையாவது சொல்லி சமாளித்துவிடுவான் என்ற நம்பிக்கையில் அவனது முகத்தையேப் பார்த்தாள் கிருஷ்ணவேணி.

மகேந்திரனும் என்ன கூத்து நடக்கப்போகிறது என்றுதான் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

“அப்படி என்னடா பொல்லாத கேள்வியைக் கேட்டுட்டேன்?”

செல்லக் கோபத்துடன் சின்ன மகனிடம் கேட்டார்.

“ஒரு பொண்ணுன்னா ஒரு இடத்திற்கு கிளம்புவதற்கு எத்தனை நேரம் எடுத்துக்கொள்வாள்? அவள் மேக்கப் போட்டுக்கொண்டு வரவேண்டாமா?”

வனிதாமணி அவனது காதைப் பிடித்து திருகினார்.

“அது என்னடா? மேக்கப்னா பொண்ணுங்க மட்டும்தானா? நீங்க எல்லாம் செய்யவே மாட்டீங்களா?”



“அம்மா. நீ மட்டும் இதற்கு விதிவிலக்கும்மா. நான் உன்னை சொல்லலைம்மா. எனக்கு ஏற்கனவே சிறுகுடலை பெருங்குடல் தின்ற மாதிரி பசிக்குது. இப்ப சாப்பிட விடும்மா.”
கெஞ்சலாகக் கேட்டான்.

Like Reply
#17
“போனாப் போயிட்டு போறே போ. இத்தனை நாள் நான் மட்டும்தான் உங்ககிட்ட மாட்டிக்கிட்டு முழிச்சுக்கிட்டு நின்னேன். இப்ப என் கட்சியோட பலம் அதிகமாயிடுச்சு. என்னோட கிருஷ்ணா இருக்கா.”

“சரிம்மா. இனி நானும் தாய்க்குலம் கட்சிதாம்மா.”
என்று சரணடைந்த பின்னேதான் அவனை சாப்பிட விட்டார் வனிதாமணி.
மற்ற மூவரும் அமைதியாக சாப்பிட்டனர்.

வனிதாமணி கிருஷ்ணவேணியைப் பார்த்தார். அவருக்கு சந்தேகம் வந்தது.

வனிதாமணி சின்ன மகனைப் பார்த்து என்ன என்று சைகையில் கேட்க அவன் பிறகு சொல்வதாக சைகை செய்தான்.

மகேந்திரனும் இதை எல்லாம் கவனிக்கத்தான் செய்தான். அவனுக்குப் பக்கத்தில் வனிதாமணி அமர்ந்திருந்தார்.

அவனுக்கு எதிரேதான் யுகேந்திரன் அமர்ந்திருந்தான். அவனுக்குப் பக்கத்தில் கிருஷ்ணவேணி. அவன் அவளுக்கென்று அந்த நாற்காலியை இழுத்துப்போட்டதால் வேறு வழியின்றி அவளும் அதிலேயே அமர்ந்துவிட்டாள்.

மகேந்திரன் ஜாடையாக கிருஷ்ணவேணியைப் பார்த்தான். அவள் உணவிலேயே கவனமாக இருந்தாள்.

அவள் கண் ஓரத்தில் சிவப்பாக தெரிந்தது. ஒருவேளை அழுதிருப்பாளோ? யுகேன் அவளை சமாதானப்படுத்தி அழைத்து வந்ததால்தான் தாமதமாகிவிட்டதோ?

நான் கொஞ்சம் ஓவராக அவளை திட்டிவிட்டேனா?

அவன் சாப்பிட்டு முடிப்பதற்குள் கிருஷ்ணவேணியை இரண்டு மூன்று முறை பார்த்துவிட்டான். யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்ற நினைப்பில் அவன் செய்துகொண்டிருக்க இதை நாடகத்தை எல்லாம் யுகேந்திரன் கவனித்துவிட்டான்.

மாலை வரை எந்த கவலையும் இல்லாமல் தன்னோடு உற்சாகமாக வேலை  செய்துகொண்டிருந்த அவள் திடீரென்று அழுவானேன்?

அண்ணன்தான் அவளை ஏதோ சொல்லியிருக்க வேண்டும். அது தாங்காமல்தான் அவள் அழுதிருக்கிறாள்.
சரியாக காரணத்தை ஊகித்துவிட்டான்.
Like Reply
#18
அவனிடம் சண்டை போடுவதில் பயனில்லை. பிறகு போட்டுக்கொடுத்துவிட்டாள் என்று அதற்கும் கிருஷ்ணாவைத்தான் தவறாக நினைப்பான்.

ஆனாலும் அவன் நல்லவன். கிருஷ்ணாவைப்பற்றிய உண்மை தெரிந்தால் அவள் மனம் வருந்துமாறு பேசமாட்டான். அவனுக்கு இரக்க குணம் உண்டு. அதை மற்றவர்கள் தவறாக பயன்படுத்திக்கக் கூடாது என்பதற்காக தன்னைச்சுற்றி கடுமையான வேலி ஒன்றை உருவாக்கியிருக்கிறான்.
ஆனால் கிருஷ்ணாவுக்கு தன்னைப் பற்றி மற்றவர்களிடம் கூறுவது பிடிக்காது. அவனே அத்தனை பழகியும் இப்போதுதான் வாயைத் திறந்து சொல்லியிருக்கிறாள்.
அண்ணனோடு பழக்கம் வேறு கிடையாது.
இந்த நிலையில் அவனிடம் உண்மையைச் சொல்ல அவனுக்கு மனம் வரவில்லை. அவன் கொஞ்சம் அவளிடம் பழகிப்பார்க்கட்டும். அவளைப் புரிந்துகொள்வான். அதன் பிறகு அவனிடம் உண்மையைச் சொல்லலாம். கண்டிப்பாக அவனிடம் சொல்லித்தானே ஆக வேண்டும்.
அவள் இந்த வீட்டில் வந்து வாழப்போகிறவள். அதற்கு அடித்தளமாகத்தானே அவளை இங்கே கொண்டு வந்திருக்கிறான்.
அன்புக்கு ஏங்கும் கிருஷ்ணாவை இனி சுயநலம் படைத்த அவளது சொந்தங்களுக்கு இடையில் விட அவனுக்கு மனமில்லை. இனியாவது அவள் சந்தோசமாயிருக்க வேண்டும்.
அவனால் அவளுக்கு சந்தோசத்தை கொண்டு வர முடியும்.
இது வரைக்கும் அவன் தனது விருப்பத்தை அவளிடம் தெரிவிக்கவில்லை.
பரிட்சை முடியும் வரையில் அவளது மனதில் சலனத்தை ஏற்படுத்த விரும்பவில்லை.
அம்மாவிடம் மட்டும் அவன் தன் விருப்பத்தை தெரிவித்திருக்கிறான்.
அதற்கு முன்பே வனிதாமணிக்கு கிருஷ்ணாவை ஏனோ பிடித்துப்போய்விட்டது. அதுவும் மகன் தன் விருப்பத்தை சொன்னதும் முதலில் திகைத்துப் பிறகு சந்தோசப்பட்டார். அப்போதே அவளைத் தங்கள் வீட்டுப் பெண்ணாக நினைக்க ஆரம்பித்துவிட்டார்.
அதனால்தான் அவள் முதன் முதலில் வீட்டிற்கு வரும்போது ஆரத்தி எடுத்ததும், வலது காலை எடுத்து வைத்து வரச்சொன்னதும்.
இதை ஏதும் அறியாத கிருஷ்ணவேணி அவர்கள் சொன்னபடியே செய்தாள்.
இப்போது அந்த நினைப்பு வர அன்பு பொங்க வாத்சல்யத்துடன் அவன் கிருஷ்ணவேணியைப் பார்த்தான்.
அதைக் கண்டுவிட்ட மகேந்திரனின் முகத்தில் அவள் தான் நினைத்து வந்தததை சாதித்துவிட்டாள் என்ற கோபம் படர்ந்தது.

அவளை எப்படியாவது தங்களுடைய வாழ்க்கையில் இருந்து அகற்ற வேண்டும் என்று நினைத்தான்.
அதற்கு நேர்மாறாக யுகேந்திரனோ அவள் முறைப்படி தங்கள் வீட்டிற்கு வரும் நாள் எப்படி இருக்கும் என்று கற்பனைக்கு உள்ளானான். அப்போது அவளது முகத்தில் வரும் சுடர் ஒளியைக் காண ஆவல் கொண்டான்.

அது போல் அவள் என்றும் சந்தோசமாக இருக்க வேண்டும். அப்படி அவளை சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டியது தனது கடமை என்று எண்ணினான்.


வனிதாமணி மனமோ மகனையும் அவளையும் மணக்கோலத்தில் கற்பனை செய்து பார்த்தது.

மூத்த மகன் என்ன செய்வானோ என்ற கவலையும் இருந்தது. அவனும் இளையவன் மாதிரி இருந்திருக்கக்கூடாதா?

தனது மனதில் உள்ளதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தங்களைத் தவிக்க விடுகிறானே என்று வேதனைப்பட்டார்.

விலகியிருப்பதால் அவரால் மகன் என்ற உரிமையில் பேச முடியவில்லை.

ஏக்கப் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவர் இப்போது தன்னால் முடிந்த காரியமாய் திரும்பவும் மகனின் மணக்கோலத்தை ரசிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு தனது பேரக்குழந்தைகளை கொஞ்சுவது போன்றும் அவரது கற்பனை விரிந்தது.

அவர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை. நாம் ஒன்று நினைக்க தெய்வம் வேறு நினைக்கும் என்று.
இந்த இடத்தில் விதி சிரித்தது என்று சொல்லலாமா?
Like Reply
#19
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 05 - ராசு

[Image: nivv.jpg]

சாப்பிட்டு முடித்தவுடன் கிருஷ்ணவேணியை அறைக்கு ஓய்வெடுக்கச் சொல்லி அனுப்பினான் யுகேந்திரன்.

“கிருஷ், இன்னிக்கு நீ ரொம்ப சோர்வா இருக்கே. நீ போய் அறையில் ஓய்வெடுத்துக்கோ. நான் அப்புறமா வந்து பார்க்கிறேன்.”


அவளுக்கும் இப்போது அதுதான் சரி என்று பட்டது. தலையாட்டிவிட்டு சென்றுவிட்டாள்.


வனிதாமணிக்கு சமையல் மேசையை ஒதுங்கவைப்பதற்கு உதவி செய்தான். அவர் மறுத்தாலும் அவன் கேட்கப்போவதில்லை.



மகனை வாஞ்சையுடன் பார்த்தவாறே தானும் வேலையைத் தொடர்ந்தார்.



மனதிற்குள் அவன் ஏதோ தன்னிடம் தனியே பேச விரும்புவது புரிந்தது. அதனால்தான் கிருஷ்ணவேணியை அறைக்கு அனுப்பியதிலிருந்து அவளைப் பற்றிய எதையோதான் பேசப் போகிறான் என்று உணர்ந்துகொண்டார். இப்போது பேசுவதென்றால் அவள் அழுத காரணத்தை சொல்லப்போகிறானோ?



அவளுக்கு இங்கே என்ன பிரச்சினை?



“என்ன யுகா? கிருஷ்ணா எதுக்கு அழுதா?”



அவன் அவரை வியப்புடன் பார்த்தான்.



“அப்படி என்ன கேட்டுட்டேன்னு நீ என்னை அப்படிப் பார்க்கிறே?”



“எப்படிம்மா? நான் என்ன சொல்ல வர்றேன்னு சொல்றதுக்கு முன்னாடியே கேட்கறே?”



“நான் உன் அம்மாடா?”



அவர்கள் சமையல் அறையில் இருந்தாலும் ஒரு கண்ணை சாப்பாட்டு அறையில் வைத்தான். அவன் எதிர்பார்த்ததுபோல் அங்கே மகேந்திரன் அமர்ந்து இருந்தான். இவர்களைக் கவனிக்காதது போல் வேறு ஏதோ வேலை இருப்பது போல் செல்லை நோண்டியவாறே இருந்தவனைக் கண்டதும் தாங்கள் பேசுவதைக் கேட்பதற்காகதான் அமர்ந்திருக்கிறான் என்று புரிந்தது.

அவன் நல்லவன்தான். அதனால்தான் கிருஷ்வேணியை அழ வைத்துவிட்டு இப்போது அவளைப் பற்றி தெரிந்துகொள்ள ஒட்டுக்கேட்கும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறான்.

அவள் ஏன் அழுதாள்?”


“வேற என்னம்மா? அவளுக்கு அவளுடைய பெத்தவங்க நினைப்பு வந்துடுச்சு.”



“பாவம்டா அவ. பறிகொடுக்கக் கூடாத வயதில் பெற்றோரை இழந்துவிட்டு சுயநலமிக்க சொந்தங்களுக்கு இடையில் அவள் இத்தனை தூரம் வளர்ந்ததே பெரிது.”



“ஆமாம்மா. அப்பப்ப அவ பெற்றோர் நினைவு வந்துடும். அப்ப அவளை அறியாமலே கலங்க ஆரம்பிச்சிடுவா. போட்டோவில் மட்டுமே பார்த்து வளர்ந்த பெற்றோரை நினைக்கும்போது அவங்க இருந்திருந்தால் இந்த நிலைமை எனக்கு வந்திருக்காதேன்னுதானே அவ மனசு கலங்கும். அப்படிப்பட்ட நினைவில் ஒதுங்கிப்போனவளை நான்தான் கட்டாயப்படுத்தி என்னோட நட்பா பழக வைச்சேன். அவ தேவதைம்மா. அவ சந்தோசமா இருக்கனும்.”



“இருப்பா. அவளை இனி நாம அழாம பார்த்துப்போம். இப்ப நீ போ.”



“சரிம்மா. நீயும் கொஞ்சம் ஓய்வெடு.”



அவர் தனது அறைக்கு போய்விட்டார். அவன் மெல்ல தன் சகோதரனின் அருகில் வந்தான்.



“என்னண்ணா? சாப்பிட்ட உடனே வேலை வந்துடுச்சா? அறைக்குக் கூட போகாம இங்கேயே உட்கார்ந்து செய்ய ஆரம்பிச்சிட்டியே?”



திடீரென்று தம்பியின் குரலைக்கேட்டதும் திடுக்கிட்டுத் திரும்பினான் மகேந்திரன்



தன் பதிலுக்காக எதிர்பார்த்து நிற்பவனிடம் என்ன.பதில் சொல்வது என்று விழித்தான்.



அவன் அசட்டுத்தனமாக சிரிப்பது கண்டு தனக்குள் சிரித்துக்கொண்டான் யுகேந்திரன்.



கிருஷ்ணவேணி பெற்றோரை இழந்தவள் என்று அவனுக்குத் தெரியச் செய்தாயிற்று. இனி என்னதான் அவள் மேல் கோபம் இருந்தாலும் அந்த பரிதாபத்திலாவது அவளை ஏதாவது சொல்லாமல் இருப்பான்.
அப்படி அந்த பரிதாபத்தினால்தான் அவளை அவன் ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும் என்று இல்லை. அவளைப் பற்றி புரிந்துகொண்டாலே போதும். அவன் மாறிவிடுவான். கட்டாயம் அவன் மாறித்தான் ஆக வேண்டும்.
Like Reply
#20
“சரி. களைப்பா இருக்கு. நான் வர்றேண்ணா.”

சொன்னவாறே யுகேந்திரன் தனது அறைக்குச் சென்றுவிட்டான்.
மகேந்திரனின் மனம் அவனை இடித்துரைத்தது. சிறிவனான யுகேந்திரன் தன்னை விட பெரியவனாய் மாறிவிட்ட ஒரு பிரமிப்பு.
பெற்றோரை இழந்து வாடும் ஒரு சின்னப்பொண்ணை தன் வார்த்தைகளால் நோகடித்துவிட்டேனே என்று தன்னையே நொந்துகொண்டான்.

தனது அறைக்குச் சென்றவன் எதிர் அறையைப் பார்த்தான். அது சாத்தியிருந்தது. அவளைப் பார்த்தாலும் எப்படி மன்னிப்புக்கேட்பது? அவனது சுயமரியாதை அவளிடம் இறங்கிப் போவதில் அவனுக்கு விருப்பமில்லை. அப்போதிருந்தே மற்றவர்களிடமிருந்து விலகியிருந்தே பழகிவிட்டதால் சட்டென இறங்கிப்பழக முடியவில்லை.
அறைக்குள் நுழைந்து படுத்தவனுக்கு உறக்கம் எளிதில் வரவில்லை.
காலையில் எழுந்த உடனே மீண்டும் அவளது நினைப்புதான் அவனுக்குள். குளியல் அறைக்குள் சென்று புத்துணர்வுடன் வெளியில் வந்தான்.

காலைப் பானத்திற்காக அறையை விட்டு வெளியில் வந்தவனின் பார்வை தானாக எதிர் அறைக்குப் போனது.
அப்போது அறைக்கதவு திறந்தது. ஆவலுடன் நிமிர்ந்தவனின் முகம் கூம்பியது. அவள் நிமிர்ந்தே பாரவில்லை. வேண்டுமென்றே தவிர்த்துவிட்டுதான் செல்கிறாள் என்று புரிந்தது.
ஒரு பெண்ணின் பார்வைக்காக தான் காத்திருக்கிறோமா என்ற நினைவு அவனை வெட்கப்பட வைத்தது. அதுவும் தம்பி விருப்பப்பட்டு அழைத்து வந்த பெண்.

கீழே சென்றான். அங்கே அவள் தம்பியுடன் கலகலப்புடன் பேசிக்கொண்டிருந்தாள். எப்படியோ அவள் மனம் தேறிவிட்டாள். அத்துடன் தான் அவளைத் திட்டியதைப் பற்றியும் யாரிடமும் சொல்லவில்லை. அப்படி சொல்லியிருந்தால் அவன் தன்னிடம் சண்டைக்கு வந்திருப்பான்.

அப்போது அவள் நல்லவளாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.

நல்லவளாய் இருந்தால் தேவலாம். இல்லை என்றால் அவள் மேல் இத்தனைப் பாசம் வைத்திருக்கும் தம்பி ஏமாந்து போய்விடுவான். இந்த வீட்டின் செல்லப்பிள்ளை.

அவனைக் கண்டதும் அவள் இருக்கையை விட்டு கிளம்பிவிட்டாள்.

“யுகா. கொஞ்சம் தோட்டத்தில் நடந்துட்டு வர்றேன்.”

“ஏய். இது என்ன பழக்கம்?”

அவள் புரியாமல் பார்த்தாள்.

“என்னை விட்டுட்டு நீ மட்டும் போறே? இரு நானும் வர்றேன்.”

இருவரும் இணைந்து நடப்பதை பார்த்துக்கொண்டு இயலாமல் அமர்ந்திருந்தான் மகேந்திரன்.

தன்னைக் கண்டுவிட்டுதான் அவள் எழுந்து சென்றுவிட்டாள் என்று அவனுக்குப் புரிந்தது.

யுகேந்திரன் அவளிடம் ஏதேதோ பேசிக்கொண்டே வந்தான். அவள் அவனைப் பிரியத்துடன் பார்த்தான். ஒரு வார்த்தை கூட அவன் அவளது கவலையை நினைவு படுத்துவது போல் பேசவில்லை,

நடந்தது போதும் என்று அவன் சோர்ந்து போய் சொல்லும் வரையில் நடந்தனர்.

“போடா சோம்பேறி.” என்று அவன் முதுகில் தட்டினாள்.

இருவரும் உள்ளே நுழைந்தனர்.

“என்ன இரண்டு பேரும் வந்துட்டீங்களா? போய் குளிச்சுட்டு வாங்க. சாப்பிடலாம்.”

வனிதாமணி கூற இருவரும் தலையாட்டிவிட்டு சென்றனர்.

மகேந்திரனும் ரவிச்சந்திரனும் கிளம்பி வந்துவிட அவர்களுக்கு நேரமாகிவிட்டது என்று அவர்களுக்கு காலை உணவைக்கொண்டு வந்து கொடுத்தார்.
இரவு உணவு மட்டும்தான் அவர்கள் அனைவரும் சேர்ந்து சாப்பிட முடியும். அதுவும் யுகேந்திரன் விடுமுறை நாட்களில் தாமதமாகத்தான் கிளம்பிவருவான். அவனுக்கும் உணவு கொடுத்துவிட்டுதான் அவர் சாப்பிடுவார். வீட்டில் மற்ற வேலைகளுக்கு ஆட்கள் இருந்தாலும் சமையல் மட்டும் அவர்தான் செய்வார்.

யுகேந்திரன் குளித்துவிட்டு வர அவனிடம் சொல்லிக்கொண்டு இருவரும் சென்றுவிட்டனர்.


அவன் போய் கிருஷ்ணவேணியை அழைத்து வந்தான்.

“அம்மா. இன்னிக்கு காலையில் என்ன சாப்பாடு?”

“தோசை.”

“அய். அப்ப நான்தான் தோசை சுட்டுத்தருவேன்.”

என்ற அறிவிப்புடன் சமையல் அறைக்குள் நுழைந்தான்.

அவள் செல்வதற்குள் அவன் தன் வேலையை ஆரம்பித்துவிட்டான்.

பின்னேயே வந்த வனிதாமணி தானும் அடுப்பை பற்ற வைத்து இன்னொரு தோசைக்கல்லை வைத்து தோசை ஊற்ற ஆரம்பித்தார்.

“என்னத்தை? அவன்தான் ஊத்தித்தர்றேன்னு சொல்றானே? நீங்களும் ஏன் தோசை ஊத்தறீங்க?”

“எனக்குப் பயம்மா. அதுதான்,”

“பயமா? எதுக்குத்தே?”

“அவன் தோசை ஊத்தினான்னா நான் சாப்பிட்டுக்கிட்டே இருப்பேன். அந்த பயத்தில்தான் நானே ரெண்டு தோசை ஊத்திச் சாப்பிட்டுவிடலாம்னு வந்துட்டேன்.”

“ஹேய் யுகா. நீ அவ்வளவு நல்லாவா தோசை ஊத்துவே?”

“இன்னிக்குத்தான் பார்க்கப் போறியே?”

அவன் சட்டைக் காலரை பெருமையுடன் இழுத்துவிட்டுக்கொண்டான்.

“கிழிச்சான்மா. ஒரு தோசையை அரை மணி நேரம் ஊத்துவான். மெல்லிசா ஊத்தி அதில் கால் லிட்டர் நல்லெண்ணெய் ஊற்றி, மொறு மொறுன்னு வர்ற வரைக்கும் நாம எவ்வளவு  கெஞ்சினாலும் எடுத்துத் தர மாட்டான். அதற்குள் முதல்ல சாப்பிட்ட தோசை செரித்திருக்கும். பிறகு இன்னொரு தோசை சாப்பிட்டு அரை மணி நேரம் காத்திருக்கனும். பின்னே நான் சாப்பிட்டுக்கிட்டேதானே இருக்கனும்.”

அவர் சொன்ன விதத்தில் அவளுக்குச் சிரிப்பு வந்தது.



எந்த அளவுக்கு அவனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.

அவன் முதுகில் தட்டினாள். அவன் அசடு வழிய சிரித்தான். அம்மா திடீரென்று காலை வாரி விடுவார் என்று அவன் நினைக்கவில்லை.

“நகரு. இன்னிக்கு நான் தோசை ஊத்தித் தர்றேன். பெரிசா பீத்திக்கிட்டு வந்துட்டான். அத்தை நீங்க இருங்க. நான் செய்யறேன்.”


அவள் தோசை ஊற்றிக்கொடுக்க அங்கிருந்த மேடையில் இருந்த காலியான இடத்தில் ஏறி அமர்ந்துகொண்டே தட்டில் அவள் கொடுத்த தோசையை உண்டான்.
வனிதாமணியும் அங்கேயே அமர்ந்துவிட்டார். கலகலவென எதை எதையோ சின்னவர்கள் பேசிக்கொண்டேயிருக்க வனிதாமணி அதை ஆவலுடன் பார்த்துக்கொண்டே சாப்பிட்டார்
Like Reply




Users browsing this thread: 1 Guest(s)