பாட்டி
#1
நான் அப்போது புளியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனக்கு அம்மாவும் அப்பாவும் இல்லாததால் பாட்டி நாகம்மாளின் ஆதரவில் இருந்தேன். சமாதானபுரத்தில் இருந்து ஜெபபுரவிளைக்கும், புளியூருக்கும் போகும் வழியில் இடதுபுறம் உள்ள பெரிய தென்னந் தோப்புக்குள் இருக்கும் பழைய மோட்டார் ரூம்தான் எங்களின் வீடு. அதற்கு அடுத்து எப்போதும் வற்றாத பெரிய கிணறு இருக்கும். தண்ணீரும் கொஞ்சம் உப்பு கலந்துதான் இருக்கும்.
தென்னந்தோப்பின் காவலே நானும் பாட்டியும்தான். தினமும் தென்னை மரங்களுக்குத் தண்ணீர் விடுவதும், மரத்தில் இருந்து விழும் தேங்காய்களைப் புதிய மோட்டார் ரூமில் கொண்டு போடுவதுமே எங்கள் வேலை. தோப்புக் காவலுக்கு ஆள் வேண்டுமே என்று தோப்புக்குச் சொந்தக்காரர் பாட்டியையுயும், என்னையும் பழைய மோட்டார் ரூமில் தங்க வைத்திருந்தார். மாசம் நூறு ரூபாய் சம்பளமாகப் பாட்டிக்குக் கொடுப்பார்.
பார்க்கும் எல்லோருக்கும் அது மோட்டார் ரூம். ஆனால் எனக்கும் பாட்டிக்கும் அதுதான் வீடு. தென்னை மட்டைகள் மேலே இருந்து கீழே விழும்போது எங்கள் வீட்டு ஓட்டின் மேல் அடிக்கடி விழுவதால் பாதி ஓடுகள் உடைந்தே இருக்கும். அதனால் வெயிலும், மழையும், தென்னை ஓலைகளுக்கு நடுவே ஊடுருவி வரும் நிலா வெளிச்சமும் வீட்டுக்குள் அன்றாட விருந்தாளிகளாக வந்துவிடும். செம்மண் கொண்டு கட்டப்பட்ட சுவர் என்பதால் சுண்ணாம்பு போய் உள்சுவர் எட்டிப் பார்க்கும். தோப்பில் உள்ள மண் மிருதுவான பொடி மணல். அதனால் செருப்பு போடாமல் நடந்தாலும் பாதத்துக்கு சுகமாக இருக்கும். எனக்கும் பாட்டிக்கும் செருப்பு கிடையாது. அதனால் நடக்கும் பாதையைப் பாட்டி நன்றாகப் பெருக்கிப் போட்டிருப்பாள்.
எங்களுக்கு ரேஷன் கார்டோ, அரசின் எந்தச் சலுகைகளோ கிடையாது. சாப்பாட்டுக்கு ரேஷன் அரிசிதான். பாட்டி தென்னை ஓலை ஈக்கலை நன்றாகச் சீவி, துடைப்பமாகக் கட்டி புளியூர் ரேஷன் கடைக்காரருக்குக் கொடுப்பாள். அதனால் அவர் ரேஷன் கடையின் தரையில் சிந்திக் கிடைக்கும் அரிசியை அள்ளி எடுக்க அனுமதிப்பார். அதுதவிர அரிசி லோடு என்றைக்கு வரும் என்கிற தகவலையும் சொல்வார். அரிசி லோடு வரும்போது, லாரியில் அதிகமாக அரிசி சிந்திக் கிடக்கும். லாரி லோடு மேன்களுக்கும் ஒரு புது ஈக்கல் துடைப்பத்தைப் பாட்டி கொடுப்பாள். அதனால் லோடு மேன்கள் லாரியில் சிந்திக் கிடக்கும் அரிசியைக் காலால் வழித்துப் போடுவார்கள். பாட்டி தனது முந்தானையால் மடி ஏந்தி வாங்குவாள். முருகன் என்கிற லோடுமேன் வந்தால் மட்டும் அரிசி குடோனில் சிந்திக் கிடக்கும் அரிசியை ஒரு கவரில் கட்டிக் கொண்டு வந்து கொடுப்பான். இந்த அரிசியைக் கொழித்து, தூசி எடுத்து, பொங்கி பாட்டியும் நானும் சாப்பிடுவோம்.
Like Reply
Do not mention / post any under age /rape content. If found Please use REPORT button.


Messages In This Thread
பாட்டி - by Rukuktp - 05-08-2019, 09:14 PM
RE: பாட்டி - by Rukuktp - 05-08-2019, 09:17 PM
RE: பாட்டி - by raj47770 - 06-08-2019, 08:38 AM
RE: பாட்டி - by Deepakpuma - 06-08-2019, 09:48 AM
RE: பாட்டி - by Dharshan77 - 06-08-2019, 09:57 AM



Users browsing this thread: 1 Guest(s)