Romance ஆண்மை தவறேல் - by Screwdriver
#56
அந்த அறையை விட்டு கிளம்பி அசோக் கீழ்த்தளத்துக்கு வந்தான். முதலில் ஹோட்டலை விட்டு வெளியேறும் எண்ணத்துடன் கார் பார்க்கிங் ஏரியாதான் செல்ல நினைத்தான். அப்புறந்தான் அவனுடைய கண்களில் அந்த ஓவிய கண்காட்சி போர்ட் மீண்டும் பட்டது. உள்ளே சென்று ஒரு முறை ஓவியங்களை பார்வையிட்டு வரலாம் என்று தோன்றியது. ஓரிரு விநாடிகள்தான் யோசித்திருப்பான். ஒரு முடிவுக்கு வந்தவனாய் அந்த ஹாலுக்குள் நுழைந்தான்.



மிகவும் அமைதியாக இருந்தது அந்த ஹால். அதிகமும் இல்லாமல் குறைவும் இல்லாமல் ஆங்காங்கே ஜனங்கள் அந்த அறையை நிறைத்திருந்தனர். அனைவரும் அமைதியாக ஓவியங்களை ரசித்து பார்த்துக் கொண்டிருந்தனர். அசோக்கும் அந்த ஜனங்களுடன் கலந்து கொண்டான். பொறுமையாக ஒவ்வொரு ஓவியமாக ரசித்து ரசித்து பார்வையிட ஆரம்பித்தான்.



அனைத்து ஓவியங்களையுமே அசோக்கிற்கு மிகவும் பிடித்திருந்தது. பார்த்து பார்த்து வியந்தான். அனைத்தும் கேன்வாஸில் தீட்டப்பட்ட ஓவியங்கள். ஒரு கட்டுக்குள் அகப்படாமல் காட்டாற்று வெள்ளம் போல, அந்த ஓவியங்களை வரைந்த ஓவியனின் தூரிகை பலதரப்பட்ட விஷயங்களை தொட்டிருந்தது. ஆன்மிகம் பேசியது.. அரசியலை ஏசியது.. இயற்கையழகை கொட்டியிருந்தது.. ஈழப்படுகொலையை திட்டியிருந்தது.. தாய்மையின் புனிதம் சொன்னது.. தாயகத்தின் பெருமை உரைத்தது..!! வண்ணம், செறிவு, அளிக்க நினைத்த உணர்வு என அனைத்து வகையிலும் பூரணமான ஓவியங்கள்..!!



"பெயிண்டிங்க்ஸ்லாம் பிடிச்சிருக்கா அசோக்..?" பின்னால் இருந்து கேட்ட குரலுக்கு,



"மார்வலஸ்..!!"



என்று உடனடியாய் பதில் சொல்லிவிட்ட அசோக், அப்புறந்தான் தன்னை யார் பேர் சொல்லி அழைப்பது என்று ஆச்சரியமானான். அந்த ஆச்சரியத்துடனே உடனடியாய் திரும்பி பார்த்தான். திரும்பியவன் ஓரிரு வினாடிகள் அதிர்ச்சியில் அப்படியே திகைத்துப் போனான். எதிரே அவன்.. நெற்றிக்கு சந்தனமும்.. கண்களுக்கு கண்ணாடியும்.. உதட்டுக்கு புன்னகையையும் கொடுத்தவாறு.. புருஷோத்தமன்..!!!!



"டேய்.. புருசு..!!!!" அசோக் உற்சாகமாக கத்தினான்.



"அசோக்..!!" புருஷோத்தமனும் முகமெல்லாம் மலர்ச்சியும் சிரிப்புமாய் சொன்னான்.



"எ..எப்படிடா இருக்குற..??"



"நான் நல்லா இருக்கேன் அசோக்.. நீ எப்படி இருக்குற..?"



"நல்லா இருக்கேண்டா..!! சென்னைக்கு எப்போ வந்த..?"



"மூணு வருஷம் ஆச்சு..!!"



"வாட் எ சர்ப்ரைஸ் மேன்..?? பாத்து எவ்வளவு நாளாச்சு..??"



"ம்ம்.. ஒரு ஆறு வருஷம் இருக்குமா..?? காலேஜ் லாஸ்ட் டே அன்னைக்கு பாத்தது.. அப்புறம் கொஞ்ச நாள் ஃபோன்ல காண்டாக்ட் இருந்தது.. அப்புறம் நீ யூ.எஸ் போனப்புறம் அதுவும் கட் ஆயிடுச்சு..!!"



"ம்ம்.. ஆமாண்டா..!! ஐ கான்ட் பிலீவ் திஸ்.. உன்னை இங்க மீட் பண்ணுவேன்னு நான் எதிர்பார்க்கவே இல்ல..!! ஆமாம்.. நீ எப்படி இங்க..??"



"ஹாஹா..!! அதை நான் கேக்கனும்டா..!! நீ எப்படி இங்க..??"



"நா..நான்.. இங்க ஒரு.. ஆங்.. பிசினஸ் சம்பந்தமா ஒருத்தரை மீட் பண்ண வந்தேன்.. அப்படியே சும்மா வேடிக்கை பாக்கலாமேன்னு உள்ள வந்தேன்.."



"ஓ..!! பிசினஸ்னா.. அப்பாவோட பிசினஸா..??"



"ம்ம்.. அதேதான்..!! சரி.. நீ இங்க என்ன பண்ணிட்டு இருக்குறேன்னு சொல்லு..!!"



"நானும் பிசினஸ்தான்..!! ஐ'ஆம் ஹியர் ஃபார் செல்லிங் ஆல் தீஸ்.."



"பு..புரியலை.."



"இதெல்லாம் என்னோட பெயிண்டிங்க்ஸ்டா.." புருஷோத்தமன் சொல்ல அசோக் ஆச்சரியத்தில் திளைத்தான்.



"ஹேய்.. வெ..வெளையாடாத.."



"ஹாஹா.. நான் ஏண்டா வெளையாடபோறேன்..? நெஜமாவே இதெல்லாம் நான் வரைஞ்சதுதான்..!!"



"அ..அப்போ.. நீதான் புனிதாவா..?? ரீசண்டா குமுதம் ஆனந்த விகடன்ல..??"



"ம்ம்.. நானேதான்..!!"



"மை காட்.. நீதான் அந்த பாப்புலர் புனிதாவா..??"



"ஹாஹா.. ஆமாண்டா..!!"



"ஓ.. மேன்.. ஐ கான்ட் பிலீவ் திஸ்..!! ஆமாம்.. அது என்ன புனிதா.. உன் புனைப்பேரா..?"



"ஹாஹா.. இல்ல.. என் வொய்ஃபோட பேரு.."



புருஷோத்தமன் சொல்ல அசோக் அடுத்ததாய் ஒரு அதிர்ச்சிக்கு போனான். 'என்ன சொல்கிறான் இவன்..???' என்று ஒருகணம் குழம்பினான். அந்த அதிர்ச்சியும், குழப்பமுமாகவே புருஷோத்தமனிடம் கேட்டான்.



"வொய்ஃபா..?? க..கல்யாணம் ஆயிருச்சா உனக்கு..??"



"ம்ம்.. ஆயிடுச்சே..!! ஒன்றரை வருஷம் ஆகுது..!!"



"எப்படிடா..??"



"எப்படின்னா.. எல்லாருக்கும் மாதிரிதான்..!! இன்விடேஷன் அடிச்சு.. ஊரெல்லாம் கூட்டி.. தாலி கட்டி.. மாலை மாத்தி..!!"



"ஹேய்.. காமடி பண்ணாத..!!"



"பின்ன.. நீ கேக்குறது அப்படித்தான் இருக்குது.."



"அதுக்கில்லடா.. உனக்குத்தான் காதல், கல்யாணம் இதெல்லாம் பிடிக்காதே..?"



"ஓ..!! அ..அது அப்போ.. காலேஜ் படிக்கிறப்போ..!! இப்போ அதுதான் எல்லாம்னு ஆயிட்டேன்..!!" சிரித்தவாறே புருஷோத்தமன் சொல்ல, அசோக்கிற்கு அந்த வார்த்தைகளை நம்ப மிகவும் கடினமாக இருந்தது.



"காதல் ஒரு பாவச்செயல்.. கல்யாணம் ஒரு பெருங்குற்றம்.. அப்டின்லாம் சொன்னியேடா..!!"



"அடப்பாவி.. அதெல்லாம் இன்னுமா ஞாபகம் வச்சிருக்குற நீ..??"



"அதெப்படிடா மறக்குறது..??"



"ம்ம்.. அது அப்போ ஏதோ.. உலகம் புரியாத வயசுல உளருனது..!! வேணுன்னா.. அதை அப்படியே இப்போ மாத்தி சொல்லவா..??"



"எப்படி..??"



"காதல் ஒரு புனிதச்செயல்.. கல்யாணம் ஒரு புண்ணிய வாசல்..!! எப்படி இருக்குது..?? ஹாஹா..!!"



"ஹேய்.. சிரிக்காதடா.. !! சொல்லு.. என்ன நடந்துச்சுன்னு எனக்கு இப்போ தெரிஞ்சாகனும்..!!"



"என்ன தெரிஞ்சாகனும்..??"



"எப்படி நீ இப்படி மாறினேன்னு எனக்கு தெரிஞ்சாகனும்.."



அசோக்கின் முகத்தில் தெரிந்த சீரியஸ்னஸ் பார்த்ததும் புருஷோத்தமன் சற்றே நிதானித்தான். கொஞ்ச நேரம் அசோக்குடைய கண்களையே கூர்மையாக பார்த்தான். ஒருமுறை அந்த ஹாலை சுற்றும் முற்றும் பார்த்தவன், அப்புறம் புன்னகை தோய்ந்த உதடுகளுடன் சொன்னான்.



"வா.. அப்படி வெளில போயிறலாம்.."



அசோக்கும் புருஷோத்தமனும் அந்த ஹாலை விட்டு வெளியே வந்தார்கள். ரிசப்ஷனை கடந்து பக்கவாட்டில் தெரிந்த பாதையில் நடந்தார்கள். ஹோட்டலுக்கு பின்புறமாக இருக்கும் கார் பார்க்கிங் பகுதிக்கு அழைத்து செல்லும் வழி அது. கட்டிடத்தை விட்டு வெளியே வந்ததுமே அசோக்கிற்கு புகைக்க வேண்டும் போலிருந்தது. சிகரெட் பாக்கெட்டை எடுத்தவன், முதலில் புருஷோத்தமனிடம் நீட்டினான்.



"இல்லடா.. நான் சிகரெட் பிடிக்கிறதை விட்டுட்டேன்.." புருஷோத்தமன் மறுக்க,



"நெஜமாவா..??" அசோக் ஆச்சரியமானான்.



"ம்ம்.."



"தம்மு மட்டுந்தானா.. இல்ல.. தண்ணியுமா..??"



"ஹாஹா.. எல்லாம் விட்டாச்சுடா..!!"



"அடப்பாவி..!! தயவு செஞ்சு 'என் பொண்டாட்டி விட சொன்னா.. அதான் விட்டுட்டேன்..'னு மட்டும் சொல்லிடாத.. என்னால தாங்கிக்க முடியாது..!!"



"அப்போ நான் ஏதாவது புதுசா பொய் கண்டுபிடிச்சுதான் சொல்லணும்..!! ஹாஹா..!!"



சொல்லிவிட்டு சிரித்த புருஷோத்தமனையே அசோக் வித்தியாசமாக பார்த்தான். அப்புறம் சிகரெட் பாக்கெட்டில் இருந்து ஒரு சிகரெட் உருவி உதட்டில் பொருத்திக் கொண்டான். அதன் முனைக்கு நெருப்பு வைத்து, ஆழமாக புகையை இழுத்து வெளியே விட்டான். ஒரு ஐந்தாறு வினாடிகள் நீடித்த மௌனத்தை கலைத்தவாறு கேட்டான்.



"சொல்லு புருசு.. அப்படி இருந்த நீ, எப்படி இப்படி மாறுன..?"



அசோக் கேட்க, புருஷோத்தமன் சில வினாடிகள் அமைதியாக இருந்தான். அப்புறம் அவனது பார்வையை வேறெங்கோ திருப்பிக் கொண்டான். கண்ணில் இருந்த கண்ணாடியை கழட்டி, பாக்கெட்டில் இருந்த கர்சீப் எடுத்து அதை துடைத்தவாறே, மெல்லிய குரலில் ஆரம்பித்தான்.



"உலகத்துல மாற்றம்ன்ற விஷயத்தை தவிர வேற எந்த விஷயமும் நிரந்தரம் இல்ல அசோக்..!! மனுஷ வாழ்க்கையும் அந்த மாதிரிதான்..!! ஒவ்வொரு காலகட்டதுலயும் மனுஷங்களும், அவங்க மனசும் மாறிக்கிட்டேதான் இருக்கும்..!!"



"ம்ம்.. தத்துவம்லாம் நல்லாத்தான் இருக்கு..!! உன் மனசு மாறுனதுக்கு காரணம் என்னன்னு சொல்லு புருசு..!!"



"நமக்குள்ள காண்டாக்ட் கட் ஆனப்புறம் எனக்கு என்ன ஆச்சுன்னு உனக்கு தெரியாதுல..?? நாலஞ்சு வருஷம் முன்னாடி.. லைஃப்ல ரொம்ப மோசமான ஸ்டேஜுக்கு போயிட்டேன் அசோக்..!! அரியர்ஸ்லாம் கிளியர் பண்ண முடியலை.. டிக்ரீ கம்ப்ளீட் பண்ண முடியலை.. எங்கயும் வேலையும் கெடைக்கலை..!! ஒரே ஃப்ரஸ்ட்ரேஷன்.. யாரை பாத்தாலும் ஒரே எரிச்சல்..!! தண்ணி தம்மொட ட்ரக்ஸ் பழக்கமும் சேர்ந்துக்கிச்சு.. போதைக்கு அடிமை ஆகி, ஒருமாதிரி.. வெறி புடிச்சவன் மாதிரி ஆயிட்டேன்..!! அம்மா திட்டுவாங்க.. அப்பா அடிப்பாரு.. தங்கச்சி என்னை பாத்தாலே மெரண்டு ஓடுவா..!! ஒருநாள் போதைல.. செலவுக்கு பணம் தரமாட்டேன்னு சொன்ன அம்மா மண்டைல தோசைக்கல்லை எடுத்து அடிச்சுட்டேன்..!! ஹாஹா.. அம்மா தலைல ரத்தத்தோட துடிச்சுட்டு கெடந்தப்போ.. நான் தட்டுல சோறு போட்டு சாப்பிட்டுக்கிட்டு இருந்தேன்..!! நம்ப முடியுதா உன்னால..?? ஹாஹா..!!!"



விரக்தியாக சிரித்தவாறே புருஷோத்தமன் கேட்க, அசோக்கிற்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. வாயில் வழியும் புகையுடன் அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றிருந்தான். அவனுடைய அமைதியை பார்த்த புருஷோத்தமன் அவனே தொடர்ந்தான்.



"வீட்ல எல்லாம் என்னை கை கழுவிட்டாங்க அசோக்.. இனி இவன் அவ்வளவுதான்னு முடிவே பண்ணிட்டாங்க.. என்னை வீட்டுக்குள்ள சங்கிலில கட்டி போட்டுட்டாங்க.. எல்லாம் சூனியமா தெரிஞ்சப்போதான் அவ வந்தா..!! புனிதா..!!!! பாவப்பட்ட என் வாழ்க்கையை புனிதமாக்க வந்தா..!! அவ எனக்கு தூரத்து சொந்தம்.. சின்ன வயசுல இருந்தே அவளுக்கு என் மேல பிரியம்.. ஹாஹா.. காலேஜ் படிக்கிற டைம்ல.. அவ ஒரு நாள் வெட்கப்பட்டுக்கிட்டே எங்கிட்ட ஐ லவ் யூ சொன்னப்போ.. அவ கன்னம் பழுக்குற அளவுக்கு பளார்னு அறைஞ்சிருக்கேன்..!! ஒருவேளை.. அதனாலதான் அவளுக்கு என்னை ரொம்ப பிடிச்சதோ என்னவோ..?? என் மேல அன்பு காட்டுனா.. பரிவு காட்டுனா..!! சாப்பாடு ஊட்டுவா எனக்கு.. நான் பொளேர்னு கன்னத்துல அறைவேன்.. அடிவாங்கிட்டு அடுத்த வாய் சோறு நீட்டுவா..!! ரொம்ப பொறுமை அவளுக்கு.. பொறுமைன்னு கூட சொல்ல முடியாது.. வைராக்கியம்.. என்னை ஒரு நல்ல மனுஷனா மாத்தி காட்டுறேன்னு வைராக்கியம்..!!"



"ம்ம்ம்.."



"ட்ரீட்மன்ட் கூட்டி போவா.. எப்போவும் என் கூடவே இருந்து என்னை கவனிச்சுக்குவா.. வெளி உலகத்தை காட்டி நல்லா உத்துப்பாருன்னு சொல்வா..!! கொஞ்சம் கொஞ்சமா நான் மாற ஆரம்பிச்சேன் அசோக்.. அவ என்னை மாத்துனா.. காதல்னா என்னன்னு எனக்கு புரிய வச்சா.. எப்படி வாழணும்னு என்னை உணர வச்சா..!! இந்த பெயிண்டிங்ஸ்.. இந்த திறமை எனக்குள்ள இருக்குறதே அவதான் எனக்கு கண்டு பிடிச்சு கொடுத்தா..!! நான் என் வொய்ஃப் பேர்ல ஓவியம் வரையுறதுல ஒரு காரணம் இருக்குது.. இன்னைக்கு எல்லாரும் என்னை ஆஹா ஓஹோன்னு பாராட்டுறாங்க.. கை தட்டுறாங்க..!! ஆனா.. அந்த பாராட்டுக்கு பின்னால ஒருத்தி பட்ட வேதனை இருக்குது.. அந்த கைதட்டுக்கு பின்னாடி ஒருத்தியோட கண்ணீர் இருக்குது.. இன்னைக்கு நான் ஒரு மனுஷனா உன் முன்னாடி நிக்கிறேன்னா.. அதுக்கு பின்னாடி அவ என் மேல வச்சுருக்குற காதல் இருக்குது..!! புனிதா.. ஷீ இஸ் மை வொய்ஃப்..!!"



சொல்லும்போதே புருஷோத்தமனின் குரலில் ஒரு அதீத பெருமிதம் ஒலிப்பதை அசோக்கால் உணர முடிந்தது. புருஷோத்தமன் சொல்லி முடிக்க, அசோக் ஒரு சில வினாடிகள் அமைதியாக இருந்தான். புருஷோத்தமனின் முகத்தையே சலனமில்லாமல் பார்த்தவன், அப்புறம் உதட்டில் மெலிதான புன்னகையுடன் கேட்டான்.



"ஸோ.. நீ மாறிட்ட..??"



"ஹாஹா.. வேற என்ன பண்ண சொல்ற..?? எனக்காக இவ்வளவு பண்ணினவ என்கிட்டே இருந்து எதிர்பார்த்தது என்ன தெரியுமா..??"



"என்ன..??"



"எதுவுமே இல்ல..!!!! அவ என் மேல காட்டின அன்புக்கு பின்னாடி எந்த சுயநலமும் இல்ல..!! ஆனா அவ மனசுல இருந்த ஆசை.. எனக்கு மனைவி ஆகணும்னு..!! அந்த ஆசையை நான் புரிஞ்சுக்கிட்டேன்.. நிறைவேத்தி வச்சேன்.. இப்போ அவளுக்கு ஒரு நல்ல புருஷனா நடந்துக்குறேன்.. அவ்ளோதான்..!!"



"உ..உனக்கு இந்த மாற்றம் பிடிச்சிருக்கா புருசு..?"



"என்ன கேள்வி இது அசோக்..?? என்னை பாத்து பயந்தவங்க எல்லாம்.. எதிர வந்தா சிரிக்கிறாங்க.. கை குலுக்குறாங்க.. பைத்தியக்காரன்னு சொன்னவங்க எல்லாம் பாராட்டுறாங்க.. எல்லாத்துக்கும் மேல.. 'எங்கயாவது போய் செத்து தொலைடா..!!'ன்னு சொன்ன அம்மா.. 'சாப்பிட்டு வேலையை பாக்க கூடாதாப்பா..??'ன்னு பாசமா கேக்குறாங்க.. ஒரு மனுஷனுக்கு இதைவிட என்ன வேணும்..??"



"ம்ம்ம்.. சரிதான்..!!"



அசோக்கிற்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை. ஆறு வருடங்களில் புருஷோத்தமன் இந்த அளவுக்கு மாறிப் போயிருப்பான் என்று அவன் எதிர்பார்த்திரவே இல்லை. ஒரு பெண் அவனை மாற்றி மனைவியும் ஆகியிருக்கிறாள் என்பதை நம்ப முடியவில்லை. அசோக் அந்தமாதிரி பேச்சிழந்து போய் நின்றிருக்க, இப்போது புருஷோத்தமன் ஆரம்பித்தான்.



"சரி.. வந்ததுல இருந்து என்னை பத்தியே கேட்டுட்டு இருக்குற..? உன்னை பத்தி ஒண்ணுமே சொல்லலை..?" புருஷோத்தமன் புன்னகையுடன் கேட்க, அசோக்கும் இப்போது மெலிதாக புன்னகைத்தான்.



"ஹ்ஹ.. என்னை பத்தி என்ன இருக்கு..?"



"உனக்கு லைஃப்லாம் எப்படி போகுது..??"



"ரொம்ப சந்தோஷமா போகுது.. எந்த பிரச்னையும் இல்ல..!! பிசினஸ் நல்லா போயிட்டு இருக்கு.. வருஷ வருஷம் டர்ன் ஓவர் அதிகமாகிட்டே போகுது..!!"



"ம்ம்.. கல்யாணம் ஆயிடுச்சா..??"



"ஆ..ஆயிடுச்சு..!!"



"வாவ்.. எப்போ..??"



"இ..இப்போதான்.. ஒரு ரெண்டு மாசம் இருக்கும்.."



"அப்படியா..?? ரொம்ப சந்தோஷம்..!! வாழ்த்துகள்டா அசோக்..!!"



"தேங்க்ஸ்டா..!! அ..அப்புறம்.. பொண்ணு யாருன்னு உனக்கு தெரியாதே..?" அசோக் குறும்பு புன்னகையுடன் கேட்க,



"யாரு..??" புருஷோத்தமன் ஆர்வமாக கேட்டான்.



"நந்தினி..!!"



"ஹேய்.. நெஜமாவா..??"



"ம்ம்.. எஸ்.."



"அடப்பாவி..!! உன்னை யாரும் லவ் பண்ண மாட்டான்னு சொன்ன பொண்ணையே, லவ் பண்ண வச்சிட்டியா..?? கில்லாடிதான் நீ..!!"



"ஹாஹா.. இல்லடா.. அது நீ நெனைக்கிற மாதிரி நடந்த மேரேஜ் இல்ல.. வேற மாதிரி.. அரேஞ்ட்..!!"



"ஓ.. குட்.. குட்..!! ம்ம்ம்.. அப்புறம்.. எப்படி இருக்குறா.. சுள்ளான்..??" கேட்டுவிட்டு புருஷோத்தமன் சிரிக்க,



"ஹாஹா.. நல்லா இருக்குறா..!!" அசோக்கும் சிரித்தான்.



அவன் சிரித்துக் கொண்டிருக்கும்போதுதான், வைப்ரேட்டரில் கிடந்த புருஷோத்தமனின் செல்போன் பதறியது. அவன் எடுத்து பேசினான்.



"சொல்லும்மா.. எங்க இருக்குற..?"



"..................................."



"ஓ.. வந்தாச்சா..?? அங்கேயே வெயிட் பண்ணு.. ஒரு நிமிஷத்துல வந்துர்றேன்..!!"



"..................................."



"இங்கதான்மா இருக்குறேன்.. இதோ வந்துர்றேன்..!!"



காலை கட் செய்த புருஷோத்தமன், அசோக்கை ஏறிட்டான். புன்னகையுடன் சொன்னான்.



"என் வொய்ஃப் வந்தாச்சு..!!"



"வொய்ஃபா..?? அவங்க இந்த நேரத்துல.. இங்க..??" அசோக் குழப்பமாய் கேட்டான்.



"ஓ.. உனக்கு தெரியாதுல..? எக்ஸிபிஷன் இன்னைக்கு லாஸ்ட் டே..!! இன்னும் கொஞ்ச நேரத்துல எனக்கு சின்னதா ஒரு பாராட்டு விழா..!! அதுக்காகத்தான் என் வொய்ஃப் வந்திருக்குறா..!!"



"ஓஹோ..??"



"வா அசோக்.. என் வொய்ஃபை உனக்கு இன்ரோட்யூஸ் பண்ணி வைக்கிறேன்..!!"



புருஷோத்தமன் அவசரமாய் முன்னால் நடக்க, அசோக் அவனை பின்தொடர்ந்தான். அந்த குறுகலான பாதையில் நடந்து ரிஷப்ஷனை அடைந்தார்கள். ரிஷப்ஷன் பகுதியை அடைந்ததுமே, அங்கே அசோக் கண்ட காட்சி அவனுக்கு உச்சபட்ச அதிர்ச்சியை கொடுத்து அப்படியே உறைய வைத்தது.



வெளியே போர்டிகோவில் நின்றிருந்த அந்த கார் நின்றுகொண்டிருந்தது. காருக்கு அருகே அந்த வீல்சேர். அந்த வீல் சேரில் பட்டுப்புடவையை சுற்றிக்கொண்டு, பால்நிறத்தில் சிரித்துக்கொண்டு அந்தப் பெண் அமர்ந்திருந்தாள். புனிதா..!!!! 'கால்கள் செயலிழந்து போய்.. எல்லோரையும் போல எழுந்து இயல்பாக நடக்க முடியாத நிலையில் இருந்த அந்தப் பெண்தான் புருஷோத்தமனின் மனைவியா..??' அதிர்ச்சி மேல் அதிர்ச்சியை உள்வாங்கி அசோக் திகைத்துக் கொண்டிருக்கும்போதே, புருஷோத்தமன் புனிதாவை நெருங்கினான்.



"எங்க போயிட்டீங்க.. இவ்ளோ லேட்டு..?" புனிதா செல்ல கோவத்துடன் கேட்டாள்.



"ஃப்ரண்ட் வந்திருந்தாங்கம்மா.. பேசிட்டு இருந்தேன்..!!"



"ஃப்ரண்டா..? யாரு..?"



"இவர்தான்.. பேர் அசோக்.. என் காலேஜ் மேட்.. ஹாஸ்டல்ல நானும் இவரும் ஒரே ரூம்தான் !! ஆறு வருஷத்துக்கு அப்புறம் இன்னைக்குத்தான் மீட் பண்ணுறோம்..!!"



"ஓ.. அப்படியா..??" என்று வியந்த புனிதா அசோக்கிடம் திரும்பி,



"வணக்கம்ண்ணா..!!" என்று கைகூப்பினாள் கள்ளம் கபடம் இல்லாத புன்னகையுடன்.



"இவதான் அசோக்.. என் வொய்ப் புனிதா..!!" புருஷோத்தமன் அறிமுகம் செய்து வைக்க, அசோக்கும் தடுமாற்றமாய் புனிதாவுக்கு வணக்கம் சொன்னான்.



"சரி.. வா.. உள்ள போகலாம்.." சொன்ன புருஷோத்தமன் புனிதாவை கைகளில் தூக்கிக்கொள்ள முயன்றான்.



"ஐயோ.. விடுங்க.. நான் நடந்து வர்றேன்.." என்றாள் புனிதா வெட்கத்துடன்.



"பரவால்லம்மா.. வா.. நான் தூக்கிட்டு போறேன்..!!"



புருஷோத்தமன் புனிதாவை தனது கைகளில் அள்ளிக்கொண்டான். புனிதா அவனது கழுத்தை சுற்றி தனது கைகள் இரண்டையும் மாலையாக கோர்த்துக் கொண்டாள். மனைவியை ஏந்திக்கொண்ட புருஷோத்தமன் அசோக்கிடம் திரும்பி சொன்னான்.



"பங்க்ஷன் ஒரு அரை மணி நேரந்தான் அசோக்.. அப்புறம் டின்னரும் ஏற்பாடு பண்ணிருக்காங்க.. நீ இருந்து.. பங்க்ஷன் முடிஞ்சதும் எங்க கூட டின்னர் சாப்பிட்டுதான் கெளம்பனும்.."



"ஆமாண்ணா.. வெயிட் பண்ணுங்க ப்ளீஸ்.." புருஷனோடு சேர்ந்து புனிதாவும் அசோக்கிடம் கெஞ்சும் குரலில் சொல்ல,



"ம்ம்.. ஓகே.. இ..இருக்குறேன்..!!" அதிர்ச்சி முழுதும் விலகாதவனாகவே அசோக் சொன்னான்.



அப்புறம் புருஷோத்தமனின் பாராட்டு விழா முடிந்து, அவர்களுடன் அமர்ந்து ஒன்றாக டின்னர் சாப்பிட்டுவிட்டே அசோக் கிளம்பினான். ஹோட்டலில் இருந்து அவன் கிளம்பியபோது இரவு ஒன்பதரை ஆகிவிட்டது. புருஷோத்தமனும், புனிதாவும் ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து விலகாமலே, அசோக் ஈஞ்சம்பாக்கம் நோக்கி காரை செலுத்திக் கொண்டிருந்தான். அவனுடைய மனதில் என்னென்று புரியாத ஒருவகை குழப்பம்..!! ஸ்டியரிங் பிடித்திருந்தவன் அவ்வப்போது தன் தலையை திருப்பி, தனக்கு பக்கத்து சீட்டில் இருந்த அந்த பொருளை பார்த்துக் கொண்டான்.



பாராட்டு விழாவில் இறுதியில் புருஷோத்தமன் பேசிய வார்த்தைகள் அசோக்கின் காதுகளில் திரும்ப திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தன.



"இன்னைக்கு என் திறமைக்கு கிடைச்சிருக்குற இவ்வளவு பெரிய அங்கீகாரம்.. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு.. ரொம்ப பெருமையா இருக்கு..!! உங்க எல்லாருக்கும் ஒரு விஷயம் சொல்லணும்.. என்னோட ஒவ்வொரு ஓவியங்களுக்கும் பின்னாடி.. ஒரு உயிருள்ள ஓவியத்தோட விலை மதிப்பில்லாத தியாகம் ஒளிஞ்சிருக்கு.. அந்த ஓவியம் என் மனைவி புனிதாதான்..!! என்னோட எல்லா வெற்றிக்கும் காரணம் என் மனைவிதான்.. அவ இல்லைன்னா.. இன்னைக்கு நான் இங்க உங்க முன்னாடி இல்ல..!! ஐ'ஆம் வெரி வெரி ப்ரவுட் ஆஃப் மை வொய்ஃப்..!! அவ எனக்கு கெடைச்சதுக்கு நான் ரொம்ப ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்..!! தேங்க்ஸ் புனிதா.. தேங்க்ஸ் ஃபார் கமிங் இன் மை லைஃப்..!!"



'இப்படி ஒரு மனிதன் மாறிப் போவானா..?? இவன் சொன்ன வார்த்தைகளை வேதவாக்காக எடுத்துக் கொண்டு நான் என் வாழ்க்கை பாதையை நிர்ணயித்திருக்கிறேன்..!! இவன் என்னடாவென்றால்..?? இது எப்படி சாத்தியம்..??' குழம்பிய அசோக் மீண்டும் விழிகளை சுழற்றி, பக்கத்து இருக்கையில் இருந்த அந்த பொருள் மீது பார்வையை வீசினான்.



இப்போது அசோக்கிற்கு வேறு சில வார்த்தைகள் காதில் ஒலித்தன. அவர்களோடு அமர்ந்து அவன் டின்னர் சாப்பிடும்போது, அந்த புனிதா வெள்ளந்தியாக அசோக்கிடம் சொன்ன வார்த்தைகள்.



"இவரு எல்லாம் ரொம்ப ஓவரா சொல்றாருண்ணா.. நான் என்ன அப்படி பெருசா பண்ணிட்டேன்..?? ஏதோ கொஞ்சம் ஆறுதலா பேசுவேன்.. பசில இருக்குறப்போ சாப்பாடு போடுவேன்.. அவரோட மைண்டை டைவர்ட் பண்ண ட்ரை பண்ணுனேன்.. அவ்ளோதான்..!! அவருக்கே மாறணும்னு ஆசை இருந்திருக்கு.. அதான் சீக்கிரமே அந்த ஸ்டேஜ்ல இருந்து வெளில வந்துட்டாரு..!! அப்புறந்தான் எனக்கும் ரொம்ப நிம்மதியா இருந்தது..!! ஆனா.. இவரு அதுக்கப்புறமும் என்னை கொஞ்ச நாள் காய விட்டாரு பாருங்க.. ஹாஹா.. என்னால மறக்கவே முடியாது.. இவருக்கு ரொம்பத்தான் கொழுப்பு..!! மனசுல இருக்குறதை எங்கிட்ட சொல்லவே இல்லண்ணா.. நல்லா சிரிச்சு பேசுவாரு.. பிரியமா நடந்துப்பாரு.. ஆனா என் மேல இருக்குற லவ்வை சொல்லவே இல்ல.. எனக்கு ஒரே கொழப்பமா இருக்கும்.. நானா சொல்றதுக்கும் எனக்கு தயக்கம்.. ஏற்கனவே சொன்னப்போதான் அறைஞ்சிட்டாரே..? இவரே 'ஐ லவ் யூ..' சொல்லிட மாட்டாரான்னு ஏங்குவேன்..!! ஆனா.. இவரு மொத மொதல்லா இவரோட காதலை எங்கிட்ட எப்போ சொன்னாரு தெரியுமா..?? எனக்கு ஆக்சிடன்ட்ல ரெண்டு காலும் போய்.. ஹாஸ்பிட்டல்ல படுத்து கெடக்குறப்போ.. அழுதுட்டே சொல்றாரு.. 'ஐ லவ் யூ'ன்னு..!! யாருண்ணா சொல்வாங்க அப்படி..?? இவங்க வீட்டுல கூட கொஞ்சம் யோசிச்சாங்க.. ஏன்.. நான் கூட வேணாம்னு அழுது புரண்டு ஒரு வழி பண்ணுனேன்..!! ஆனா.. இவர் யார் பேச்சையும் கேட்காம, ஒத்தைக்கால்ல நின்னு.. ரெண்டு காலும் இல்லாத என் கழுத்துல தாலி கட்டுனாரு..!! யாருண்ணா செய்வாங்க அப்படி..?? நான்தாண்ணா இவர் கெடைக்க ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்..!!"



புருஷோத்தமனும், புனிதாவும் உதிர்த்த வார்த்தைகள் திரும்ப திரும்ப அசோக்கின் நினைவுக்கு வந்து போயின. அவனது மூளையில் பலவித குழப்ப அதிர்வுகளை ஏற்படுத்தி சென்றன. திருவான்மியூரில் சிக்னலுக்காக காரை நிறுத்தி காத்திருந்த போது, அசோக் மீண்டும் தன் தலையை திருப்பி பக்கத்து இருக்கையை பார்த்தான்.



பக்கத்து இருக்கையில் கவர் பிரிக்கப்பட்டு அந்த ஓவியம் இருந்தது..!! சற்றுமுன் புருஷோத்தமன் அசோக்குக்கு பரிசாக அளித்த அவனே வரைந்த ஓவியம்..!! புதுமணப்பெண் ஒருத்தி, உடலெங்கும் ஜொலிக்கும் நகைகளுடன், தலையில் சூடிய மல்லிகையுடன், புகுந்த வீட்டில் விளக்கேற்றுவது மாதிரியான ஓவியம் அது..!! விளக்கில் இருந்து கிளம்பிய வெளிச்சத்தை விட, அந்தப்பெண்ணின் முகத்திலும் சிரிப்பிலும் இருந்து கிளம்பிய வெளிச்சம், அந்த வீட்டையே ஒளிமயமாக்கிக் கொண்டிருக்க, பின்னணியில் இருந்த குடும்பத்தினர் அனைவரும் மகிழ்ச்சியில் சிரித்துக் கொண்டிருந்தனர்..!!


அந்த ஓவியத்தை பார்க்க பார்க்க, அசோக்கின் மனதுக்குள் ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு.. காரணம் தெரியாத குழப்பம்..!! ஓவியத்தில் இருந்த பெண்ணின் முகம் பட்டென்று மாறி.. அந்த இடத்தில் நந்தினியின் முகம் தோன்ற.. தோன்றியதும் அசோக்கை பார்த்து விஷமமாக புன்னகைக்க.. அசோக் உடனடியாய் தன் பார்வையை அந்த ஓவியத்தில் இருந்து விலக்கிக் கொண்டான்..!!
[+] 4 users Like Its me's post
Like Reply


Messages In This Thread
RE: ஆண்மை தவறேல் - by Screwdriver - by Its me - 27-05-2020, 02:05 PM



Users browsing this thread: 5 Guest(s)